Monday, August 17, 2015

மதுவிலக்கும் தனி நபர் சுதந்தரமும்

மது விலக்கு என்று பெரும்பாலானோர் பேசுவது நாட்டில் ஒரு துளி மதுகூட இருக்கக்கூடாது; மது உற்பத்தி செய்யப்படக்கூடாது; மது அருந்துவதே தடை செய்யப்படவேண்டும், மது அருந்துவோர் குற்றவாளிகளாகக் கருதப்படவேண்டும் என்பதுபோல இருக்கிறது.

இது தனி நபர் சுதந்தரத்தைக் கடுமையாகத் தாக்குகிறது.

அமெரிக்காவில் 1920 முதல் 1933 வரை மதுவிலக்கு அமலில் இருந்தது. அப்போதுகூட மது விற்பது மட்டும்தான் தடை செய்யப்பட்டது. மது அருந்துவது அல்ல. ஒருவர் சொந்தமாக மதுவை உருவாக்கிக் குடிக்க முடிந்தது. 1920-க்குமுன் வாங்கிச் சேகரித்துவைத்திருந்த மதுவை ஒருவர் குடிக்க முடிந்தது. மதக் காரணங்களுக்காக அல்லது மருத்துவக் காரணங்களுக்காக சரியான உரிமத்துடன் ஒருவர் மதுவகைகளை சட்டபூர்வமாகக் கடைகளில் வாங்கிக்கொள்ள முடிந்தது.

இன்று நாம் பெரும்பாலும் எதிர்க்கவேண்டியது வரைமுறையின்றி அரசு இலக்கு வைத்து மது விற்பதை மட்டுமே. அரசு மது விற்பனையிலிருந்து வெளியேற வேண்டும். மது விற்பனை தனியாரிடம் தரப்படவேண்டும். ஆனால் விற்பனை உரிமங்கள் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டு, எத்தனை கடைகள், எந்தெந்த இடங்களில் இருக்கலாம் என்பது ரெகுலேட் செய்யப்படவேண்டும்.

கள் இறக்குவது, பழவகைகளிலிருந்து மது தயாரிப்பது போன்றவை ஊக்குவிக்கப்படவேண்டும். அதிக ஆல்கஹால் கொண்ட ஆலை சாராயத்துடன் ஒப்பிடும்போது இவை பன்மடங்கு மேலானவை.

ஒருவேளை மது விற்பது தடை செய்யப்பட்டாலும், சொந்தமாகத் தயாரித்து மது அருந்துவது குற்றமாகக் கருதப்படக்கூடாது. சொந்தத் தோட்டத்தில் உள்ள தென்னை, பனை மரங்களிலிருந்தோ அல்லது திராட்சையிலிருந்தோ மதுவகைகளைத் தயாரித்து அருந்துவதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கவேண்டும். சொந்தமாக வீட்டில் சீமை சரக்கு தயாரித்து அருந்துவதற்கும் உரிமை வேண்டும்.

7 comments:

  1. வணக்கம் Sir,
    மது எந்த ஒரு வடிவில் எடுத்துகொண்டாலும் அது ஒரு குடும்பம் சார்ந்த, சமுதாயம் சார்ந்த சீர்கேடாகவே இருக்கும். (ஒருவேளை மது விற்பது தடை செய்யப்பட்டாலும், சொந்தமாகத் தயாரித்து மது அருந்துவது குற்றமாகக் கருதப்படக்கூடாது. சொந்தத் தோட்டத்தில் உள்ள தென்னை, பனை மரங்களிலிருந்தோ அல்லது திராட்சையிலிருந்தோ மதுவகைகளைத் தயாரித்து அருந்துவதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கவேண்டும். சொந்தமாக வீட்டில் சீமை சரக்கு தயாரித்து அருந்துவதற்கும் உரிமை வேண்டும்) இது போன்று செய்தாலும் வீட்டில் குடித்து விட்டு வீதியில் வாகனம் ஓட்டி பிறர் உயிரையும், தன்னுயிரையும் மாய்ப்பர். சாலையில் ஒருவர் எச்சில் துப்பினால் மற்றோர் முகம் சுழிப்பதை போல். மது அருந்தியவரை மிகவும் கேவலமாகப் பார்க்கும் எண்ணம் எல்லோருக்கும் ஏற்படவேண்டும். அப்போது குடித்துவிட்டு பொது இடங்களில் நடமாடமாட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. குடிக்காமலேயே தெருவில் மோசமாக வண்டி ஓட்டுவோரை என்ன செய்கிறோம்? வீட்டில் குடித்துவிட்டு தெருவில் ரகளை செய்யவேண்டும் என்று வருவோர் குறைவு. மது அருந்துவோரை சமூகம் எப்படிப் பார்க்கவேண்டும் என்பது சட்டத்துக்கு உட்பட்ட ஒன்றல்ல; அது அறம் மற்றும் மதிப்பீடுகள் சம்பந்தப்பட்ட ஒன்று. அது காலாகாலத்துக்கும் மாறிக்கொண்டே இருக்கும். நான் பேச விழைவது தனி மனித சுதந்தரம் ஒன்றை மட்டுமே. இந்த தனி மனித சுதந்தரம் பிறருடைய சுதந்தரத்தைப் பாதித்தால் அதற்கான தண்டனைகளத் தரவேண்டும். ஆனால் பிறர் சுதந்தரம் பாதிக்கப்படும் என்ற ஊகத்தை மட்டும் வைத்துக்கொண்டு தனி மனித சுதந்தரத்தைப் பறிப்பது நியாயமற்ற செயல்.

      Delete
  2. கள் இறக்குவதை தடை செய்தது பெரிய முட்டாள்தனம்.
    சொந்தமாக வீட்டில் சீமை சரக்கு தயாரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. திராட்சை ஒயின் ஓகே.

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் குடிப்பதற்கு என்று தயாரிக்கும் மது எப்படிப்பட்ட மதுவாக இருந்தால் என்ன? :-) பார்லி, அரிசி, கோதுமை என்று எதைவேண்டுமானாலும் நொதிக்கவைத்து மது தயாரித்துக்கொள்ளட்டுமே. அதை டிஸ்டில் செய்து டிஸ்டில் செய்து, ஆல்கஹால் அளவை அதிகரித்துக்கொள்ளட்டுமே. பியர், விஸ்கி, ஒயின் எதுவானாலும் எனக்கு ஓகே. அவரவர் திறமையைப் பயன்படுத்தி அவரவர் தயாரித்து தான் குடிக்கலாம், அல்லது விருந்தினர்களுக்கு இலவசமாகக் கொடுக்கலாம். விற்பனையை மட்டும்தான் அரசு தடை செய்ய உரிமை உள்ளது. இதுதான் என் வாதம்.

      Delete
  3. முருகன் கண்ணன்Mon Aug 17, 07:08:00 PM GMT+5:30

    உங்களுடைய பெரும்பாலான கருத்துக்களுடன் உடன்படுகிறேன், தனியார் மயமாக்கலைத் தவிர. அது உங்களின் வலதுசாரி கொள்கைகளால் உந்தப்பட்ட கருத்து. அரசாங்கம் மது விற்பனையை எடுத்துக்கொள்வதற்கு முன்பு (90களில்) தனியாரிடம்தான் இருந்தது. நீங்கள் சொல்வது போல உரிமங்கள் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டன, ஆனால், அது சரியாக வேலை செய்யவில்லை. பல முறைகேடுகள். அரசாங்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானம் வரவில்லை. தனியார்களின் விதிமீறல்களைக் கவனிக்க சட்டத்துறைக்கும் வலுவில்லை வணிகவரித்துறைக்கும் வலுவில்லை. இந்த கோளாறுகளால்தான் இது அரசாங்கமயமாக்கப்பட்டது. அரசாங்கம் இதில் வரும் வருவாயை வெகுவாக நம்ப ஆரம்பித்தப் பிறகு, வீதிக்கு இரண்டு கடைகளை திறக்க ஆரம்பித்தது.
    அரசாங்கம் முதலில் இதன் வருவாயை ஓட்டு வங்கியைப் பலப்படுத்துவதற்கு (இலவசம்) உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். பின்பு படிப்படியாக கடைகளின் எண்ணிக்கையையும் நேரத்தையும் குறைக்கவேண்டும். வயது வரைமுறையை கண்டிப்பாக ஒவ்வொரு கடைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். வயது வரைமுறைகளை மீருகின்ற தனியார்களும், கடைப்பணியாளர்களும் உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும். கள் ஒரு விவசாயப்பயிர் போல பாவிக்கப்பட்டு அதன் கொள்முதல் அரசாங்கத்தால் முறைப்படுத்தப்பட்டு தரக்கட்டுப்பாட்டுடன் அரசாங்கக் கடைகளில் விற்கவேண்டும். அதிக ஆல்கஹால் உள்ள மதுக்களுக்கு சிகரெட்டுகள் போல அதிக வரி விதிக்கவேண்டும்.
    இப்படியெல்லாம் செய்தாலே மதுவிற்பனை குறையும் என்பது என் நம்பிக்கை.
    மதுவிலக்கு முழுதும் அமல்படுத்துவதால் கள்ளச்சாராயமும் கடத்தலும்தான் பெருகும்.

    ReplyDelete
  4. பொன்.முத்துக்குமார்Mon Aug 17, 08:14:00 PM GMT+5:30

    நம்மூரில் மதுவிலக்கும் வராது, அரசும் மது விற்பனையிலிருந்து வெளியேறப்போவதில்லை. இன்னும் நமது சமூகத்துக்கோ அரசுக்கோ அந்தளவுக்கு சொரணை வந்துவிடவில்லை. எனவே பத்ரி, அஞ்சற்க :)

    ReplyDelete
  5. பெரும்பாலான மக்கள் மதுவை எதிர்க்கவில்லை. ஜனநடமாட்டம் மிகுந்த இடங்களில் மதுக் கடைகள் இருப்பதைத் தான் எதிர்க்கிறார்கள் என்று தோன்றுகிறது. சற்றே ஒதுக்குபுறமான இடங்களில் மதுக்கடைகள் இருந்தால் பரவாயில்லை என்றே நினைப்பதாகத் தோன்றுகிறது.
    மதுவிலக்கு என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம். எனினும் மதுஅருந்துவதை நான் ஆதரிப்பதாகக் கருதி விட வேண்டாம். மது அருந்தாமல் இருப்பதே நல்லது. மதுவிலக்கை அமல் படுத்தினால் கள்ளச் சாராயம் பெருகும். கிரிமினல் பெருந்தலைகள் நிறைய சம்பாதிப்பர். மது கடத்தல் நடக்கும். இதையெல்லாம் தடுக்கப் போலீஸ் படை போதாது. மனசாட்சி இல்லாத அதிகாரிகள் சம்பாதிப்பார்கள். மது விற்பனை நேரத்தைக் குறைக்கலாம். குடித்து விட்டு கலாட்டா செய்பவர்களை தண்டிக்கலாம். குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களின் லைசென்சுகளை ரத்து செய்யலாம். அவ்வளவு தான் சாத்தியம்

    ReplyDelete