Monday, February 12, 2007

காவிரி நீர் பிரச்னை

காவிரி நதிநீர் ஆணையம் கொடுத்த தீர்ப்பை யாருமே ஏற்கப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. பகிர்ந்து வாழும் மனப்பான்மை தனி மனிதர்களுக்கு இடையே இருக்கக்கூடும். ஆனால் திடமான அரசியல் உறுதி இல்லாத மாநிலங்கள், கட்சிகள், தலைவர்களுக்கிடையே நதிநீரையோ அல்லது குறைவாக உள்ள வளங்களையோ பகிர்வது இயலாத காரியம் என்று தோன்றுகிறது.

சென்ற முறை போல் அல்லாமல் இம்முறை தமிழர்கள் தாக்கப்படுதல், கொலை என்றெல்லாம் கர்நாடகத்தில் நடக்கவில்லை என்பது ஆசுவாசம் தரும் செய்தி. ஆந்திராவிலிருந்தும் மஹாராஷ்டிரத்திலிருந்தும் காவல்துறையை வரவழைத்து அமைதி காக்கவேண்டிய நிலை கர்நாடக மாநிலத்தைத் தலைகுனியச் செய்யும் செய்தி. எந்தவிதமான பிரச்னைகள் இருந்தாலும் மொழிச் சிறுபான்மையினரின் இருப்பைக் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் செயலைச் செய்வதன்மூலம் கன்னடர்கள் தங்கள் அறவுணர்ச்சியையும் அறிவையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள்.

குறைதீர்ப்பு ஆயங்கள் வழங்கும் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் மேல்முறையீடு செய்யமாட்டோம் என்றும் இரண்டு பக்கங்களும் உறுதியளித்தால் அன்றி இதுபோன்ற டிரிப்யூனல்களை அமைப்பது உபயோகமற்றது என்றே தோன்றுகிறது.

-*-

நதிநீர்ப் பங்கீடு குறித்து கன்னட - தமிழ், தெலுங்கு - தமிழ், மலையாள - தமிழ் மக்களிடையே பிரச்னைகள் உள்ளன. ஆனால் இந்த மூன்றில் கன்னட - தமிழ் மக்களிடையேயான பிரச்னை ஆழமானது.

மலையாளமோ தெலுங்கோ தமிழ் மொழியுடன் போட்டிபோட, சண்டையிட முயற்சி செய்வதில்லை. ஆனால் தமிழ் 'செம்மொழி' என்று அறிவிப்பு வந்தவுடனேயே போட்டிபோட்டுக்கொண்டு கன்னடத்தையும் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கர்நாடகத்தில் எழுந்தது.

தமிழ் சினிமாப் படங்கள் தெலுங்கிலும் தெலுங்குப் படங்கள் தமிழிலும் மொழிமாற்றி, டப் செய்யப்பட்டு ஓடுவது சர்வசாதாரணம். கேரள மக்கள் தமிழ்ப் படங்களை விரும்பிப் பார்ப்பதில்லை என்றே நினைக்கிறேன். அவர்களுக்கு என்று ஒரு திரைப்பட பாரம்பரியம் உண்டு. ஆனால் தமிழ் சினிமா அவர்களை எந்தவிதமான நெருக்கடிக்கும் இழுத்துச் சென்றதில்லை.

கர்நாடகத்திலோ தமிழ் சினிமாவை (ஹிந்தி சினிமாகூட) காண்பிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. தமிழ் சினிமாவை டப் செய்து அங்கு திரையிட முடியாது. பல தமிழ்ப் படங்கள் மீண்டும் கன்னடத்தில் முழுவதுமாக உருவாக்கப்பட்டு ஓடும்.

கன்னட மக்கள் தங்கள் அரசியல்வாதிகள் தங்களுக்குத் தேவையானவற்றை மத்திய அரசிடம் இருந்து பெறுவதில் ஒற்றுமை காட்டுவதில்லை என்று நினைக்கிறார்கள். தமிழக அரசும் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதன்மூலமாகத் தம் மாநிலத்துக்கு வேண்டியவற்றை சலுகையாகப் பெற்றுவிடுகிறார்கள் என்று கன்னட மக்கள் நினைக்கிறார்கள்.

காவிரிப் பிரச்னையை முன்னிட்டு 1991-ல் நடந்த கலவரத்தின்போது பல தமிழர்கள் கன்னட வெறியர்களால் கொல்லப்பட்டனர். பலர் உடைமைகளை இழந்தனர். அதன்பின் 2002-இல் உச்ச நீதிமன்ற ஆணைக்குப் பின்னும் கர்நாடகம் தண்ணீர் தர மறுத்தது மட்டுமின்றி அப்பொழுதும் கலவரங்கள் ஏற்பட்டு தமிழ்ப் படங்கள் ஓடும் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

1991-க்குப் பிறகு இந்தியாவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி காரணமாக மக்களுக்கு ஓரளவுக்கு நாகரிக உணர்வு அதிகமாகியுள்ளது. ஆனாலும் உள்ளூரத் தேங்கிக் கிடக்கும் காட்டுத்தனம் தெருவில் தலைவிரித்தாடுகிறது. போக்குவரத்தை பாதிப்பது, பொதுச்சொத்துக்கும் தனிச்சொத்துக்கும் சேதம் விளைவிப்பது இன்றும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்துக்கு வாகனப் போக்குவரத்து, சரக்கு லாரிகள் செல்வது தடையில் உள்ளது. ஏதாவது பிரச்னை என்றால் தமிழ்ப் படங்கள், தொலைக்காட்சி சானல்கள் உடனடியாக நிறுத்தப்படுகின்றன.

இந்திய மாநிலங்களுக்கு இடையே எப்பொழுதும் பிரச்னைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அவற்றை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்படும் வகையில் தீர்க்க வேண்டியுள்ளது.

கேரள தமிழ்நாடு அரசுகளுக்கு இடையே நீர்ப்பங்கீட்டுப் பிரச்னை எந்த அளவுக்கு இருந்தாலும் கேரளாவில் வாழும் தமிழ்ச் சிறுபான்மையினர்மீது அடிதடி தாக்குதல் ஏதும் நிகழ்வதில்லை. அதே நிலை கர்நாடகத்திலும் ஏற்பட வேண்டுமென்றால், கர்நாடக மக்கள் அதிகக் கல்வி அறிவு பெற மத்திய அரசு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யலாம். ஒரு சில மாநிலங்கள் காட்டுமிராண்டித்தனத்தில் மூழ்கிக் கிடக்கும்வரையில் இந்தியாவுக்கு முழுமையான கதிமோட்சம் கிடையாது.

Tuesday, February 06, 2007

ஜெர்ரி மெக்வயர் & குரு

குரு படத்தைப் பற்றி அதிகம் ஜவ்வு இழுக்க விரும்பவில்லை. 'சினிமாவை சினிமாவாகப் பார்க்கணும்', 'அனுபவிக்கணும், ஆராயக்கூடாது', 'எல்லாத்தையும் சொன்னா ஆறு மணி நேரம் ஆகும்', 'சில விஷயங்களைச் சொன்னா நம்ம மக்களுக்குப் புரியாது' என்றெல்லாம் சொல்பவர்களிடம் நான் விவாதிக்கப் போவதில்லை.

மிக அதிகமாகப் படிக்கப்படும் இதழ் ஒன்றில் பத்தி எழுதும் மிக முக்கியமான எழுத்தாளர் ஒருவர் சர்வதேசத் தரத்தில் செய்யப்பட்ட ஒரே படம் இதுதான் என்கிறார். கொஞ்சம் மேவரிக்கான ஓர் எழுத்தாளர் மணிரத்னம் கையில் முத்தமிட வேண்டும் என்கிறார்.

என் சிற்றறிவுக்கு இவையெல்லாம் கொஞ்சம் ஓவராகப் படுகிறது.

ஜெர்ரி மெக்வயர் என்றொரு படம் - 1996-ல் வந்துள்ளது. கஷ்டமான சப்ஜெக்ட். ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் பற்றி. விளையாட்டு வீரப் பிரபலங்களை மார்க்கெட் செய்யும், நிர்வகிக்கும் நிறுவனம். (சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி போன்றவர்கள் மாதிரி.) அதில் வேலை செய்யும் ஜெர்ரி மெக்வயர் என்பவர் பிரபலங்களை நிர்வகிப்பதில் சில மாற்றுக்கருத்துகளை முன்வைக்கிறார். அதாவது லாபம் என்பதை மட்டுமே முன்வைக்காமல் தாங்கள் நிர்வகிக்கும் விளையாட்டு வீரர்களை மனிதர்களாக மதித்து, குறைவான விளையாட்டு வீரர்களை மட்டுமே நிர்வகிப்பதற்காக எடுத்துக்கொண்டு, அவர்களது தனி வாழ்க்கையிலும் விளையாட்டிலும் நேர்மறையானதொரு மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்பதுதான் அது.

இந்தக் கொள்கையை முன்வைத்ததற்காகவும் வேறு சில தனிப்பட்ட வேறுபாடுகள் காரணமாகவும் வேலையை இழக்கிறார் ஜெர்ரி. அவர் சொல்வது என்ன என்று புரியாத நிலையிலும்கூட சில வாசகங்களால் உந்தப்பட்ட டாரதி என்னும் சாதாரண (கொஞ்சம் அசடான) காரியதரிசியும் தன் வேலையை உதறிவிட்டு ஜெர்ரியுடன் சேர்கிறார்.

ஜெர்ரி தன் குறிக்கோளை நிலைநாட்டக் கடுமையாக உழைக்கிறார். ஒரு செலிபிரிட்டி கிடைப்பதற்குள் திண்டாட்டம். கொள்கைமீதான நம்பிக்கை தடுமாறுகிறது. ஆனால் கடைசியில் ஹாலிவுட் சினிமாக்களுக்கே உரித்தான உச்சகட்டம், எல்லாம் சுபமாக முடிகிறது. தேவையான காதல், செக்ஸ் காட்சிகள், கொஞ்சம் கொஞ்சம் ஹ்யூமர் என்று எல்லாமே உண்டு. அதாவது சராசரி வணிகப்படம்தான். கலைச்சேவை எல்லாம் அல்ல. நல்ல எண்டெர்டெயின்மெண்ட் கதை, அதே சமயம் ஜல்லி அடிப்பது கிடையாது. அதிகம் தெரியாத நீங்கள்கூட அமெரிக்கன் ஃபுட்பால் விளையாட்டு, அதில் விளையாடும் வீரர்களில் ஈகோ, ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங், ஸ்போர்ட்ஸ் ஏஜெண்ட்கள் இயங்கும் முறை என்று அத்தனையையும் - அதாவது கதைக்கு ஆதாரமான சூழலை முழுவதுமாக அறிந்து கொள்ளலாம்.

நடுநடுவே காதல், கோபம், வெறுப்பு, பாசம், அன்பு என்று தேவையான அளவுக்கு பிற மேட்டர்களையும் அள்ளித் தெளித்திருப்பார்கள்.

இதேமாதிரி குருவை எடுத்திருக்க முடியாதா? நிச்சயமாக முடியும். செய்யவில்லை.

குருவின் ஆதாரக் கதை கிராமத்திலிருந்து வந்த இளைஞன் அந்த 50-60களின் லைசென்ஸ், கோட்டா, பெர்மிட் ராஜில் சாதனை புரிந்தான் என்பதுதான் என்கிறார்கள். ஆனால் லைசென்ஸ், கோட்டா, பெர்மிட் ராஜ் என்பது எத்தகையது என்பது ஒரு கணத்தில்கூட விவரிக்கப்படவில்லை. இந்தக் கதைக்கு முக்கியமான சோஷலிச அரசு, அதன் அதிகாரிகள், மந்திரிகள், கொள்கை முடிவுகளை எடுப்பவர்கள் (திட்டக் கமிஷன்) ஆகியோர் படத்தில் எங்குமே வருவதில்லை. ஒரு சீனில் வரும் நியாயமான மந்திரி மிரட்டப்படுகிறாரா (பிளாக்மெயில்?) என்பதும் விளக்கமாகச் சொல்லப்படவில்லை.

இந்தச் சூழலில் இயங்கிய பிற நிறுவனங்கள் என்ன செய்தார்கள், என்ன செய்யவில்லை, குரு எதைத் திறமையாகச் செய்தார், யாரைவிடத் திறமையாகச் செய்தார் என்று சொல்லப்படவில்லை. சொல்லப்போனால் குருவின் ஓயாத பேராசை (Undying Ambition) என்ன என்பதுகூட படத்தைப் பார்க்கும்போது எனக்கு விளங்கவில்லை. 'இன்னமும் நாலு தொழிற்சாலை கட்டுவோம்' போன்ற பாமரத்தனமான ஸ்டேட்மெண்ட் மட்டும்தான் காதில் விழுகிறது.

பாலியெஸ்டர் சங்கதிதான் குருவின் வளர்ச்சிக்கு ஆதாரம் என்றால் அது ஏன், எப்படி என்று சொல்லப்படுவதில்லை. எந்த விதத்தில் அன்றைய இந்தியாவில் ரேயான் முதலிய செயற்கை இழைகள் மக்கள் மனத்தில் இடம் பிடித்தன என்று சொல்லப்படுவதில்லை. (இன்று ரேயானை சும்மா கொடுத்தால்கூட யாரும் வாங்கி தைத்துப் போட்டுக்கொள்ள மாட்டார்கள். இன்றைய ஃபேஷன் பருத்தி. ஏன் அன்று ரேயானுக்கு அவ்வளவு மவுஸு என்று தெரியுமா?) குரு செய்ததை வேறு யாரும் செய்திருக்க முடியாதா?

செங்கல் செங்கல்லாக ஷக்தி நிறுவனத்தைக் கட்டுவதைக் காண்பிக்கச் சொல்லி நான் கேட்கவில்லை. ஜெர்ரி மெக்வயர் தன் கொள்கை சரியானதுதான் என்று காண்பிக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியுள்ளது என்பதுதான் அந்தக் கதை எனும்போது அதற்குத் தேவையான டிரீட்மெண்ட் அந்தப் படத்தில் வருகிறது அதேபோல 30,000 ரூபாய் பணத்துடன் மும்பைக்கு வந்த குரு எப்படி பிரம்மாண்டமான நிறுவனத்தைக் கட்டினார் என்பதுதான் இந்தக் கதை என்றால் எப்படி என்பது திரைக்கதையில் கட்டாயம் காண்பிக்கப்படவேண்டும்.

"Guru represents the “new” emerging India of that era that was still mired deeply in conservative, laidback systems." குருதான் புதிய இந்தியாவின் பிரதிநிதி என்பது எனக்கு பயத்தைத் தருகிறது. அந்த பயத்தை மட்டும்தான் நான் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

மற்றபடி சரியான ரிசர்ச் செய்யப்படாமல் பல இடங்களில் லாரி லாரியாக ஜல்லி கொட்டி நிரப்பியிருக்கிறார்கள். ஜஸ்டிஸ் டிபார்ட்மெண்ட் என்ற ஒன்று இந்தியாவில் இருப்பதாக எனக்குத் தெரியாது. ஒரு நிறுவனம் தவறு செய்திருந்தால் அதைப் பல தளங்களில் விசாரிக்க முடியும். பங்குச் சந்தை அளவில் ஊழல் என்றால் செபி, வருமான வரியில் தில்லுமுல்லு என்றால் வருமான வரித்துறை, ஆயத்தீர்வையில் பஜனை என்றால் செண்ட்ரல் எக்ஸைஸ், அந்நியச் செலாவணியில் அல்லது ஏற்றுமதி/இறக்குமதியில் திருட்டுத்தனம் என்றால் ரிசர்வ் வங்கி அல்லது கஸ்டம்ஸ் - மொத்தத்தில் நிதியமைச்சரின் கையின்கீழ் வரும். அவர் ஏன் விசாரணைக் கமிஷன் அமைக்கிறார் என்று யாராவது கேட்டுச் சொன்னால் சரி.

எல்லா நாள்களும் ரகசிய விசாரணையும் கடைசியில் ஒரு கிளைமாக்ஸ் காட்சிக்காக டிவி கேமராக்கள் முன்னிலையில் விசாரணையும் என்பது புதுமையாக நாம் யாருமே கேட்டிராத, கண்டிராத செய்தியாக இருக்கிறது. நம்மூர் சினிமாவில் மட்டும்தான் புருஷன் பொண்டாட்டி மட்டும் விசாரணை போது தாங்களே வாதாடுவார்கள். வக்கீல்கள் தேவையே கிடையாது.

நிறுவனங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளுக்கு பதில் சொல்வது பங்குதாரர்களின் வேலை கிடையாது. நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் - CEO அல்லது மேனேஜிங் டைரக்டர், ஃபைனான்ஸ் டைரக்டர், கம்பெனி செக்ரட்டரி, அல்லது நிறுவனத்தின் போர்ட் 'ஆத்தரைஸ்' செய்யும் பிரதிநிதிகள், வக்கீல்கள்... ஆனால் குருவின் மனைவி "ஹோல்டிங் கம்பெனியில் 50% பங்குதாரர்" என்ற ஒரே காரணத்தால் விசாரணையின்போது உடன் இருக்க அனுமதிக்கப்படுகிறார். அப்படியானால் ஷக்தி நிறுவனத்தின் எந்த ஷேர்ஹோல்டரும் அந்த விசாரணையின்போது உடன் இருக்கலாம்! அப்படியானால் லட்சக்கணக்கான (வாங்க்கெடே ஸ்டேடியம் முழுக்க நிரம்பக்கூடிய) பங்குதாரர்களும் உள்ளே இருக்கலாம்!

இப்படி சின்னச் சின்னதாக, பெரிது பெரிதாக என்று ஓட்டைகளைக் காண்பித்துக்கொண்டே போகலாம். ஆனால் இதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் சர்வதேசத் தரத்தில் படம், கைக்கு முத்தம், விரலுக்கு மோதிரம், இதோ ஆஸ்கார் விருது என்று பேசி நம்மை நாமே தாழ்த்திக்கொள்வது கேலிக்கூத்து.

இந்தப் படத்தைப் பார்க்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. எல்லோரும் சந்தோஷமாகப் போய்ப் பாருங்கள். ஆனால் இந்திய சினிமா போகவேண்டிய தூரம் அதிகம் என்று தெரிந்துகொண்டே பாருங்கள். சாதாரண ஹாலிவுட் வணிக சினிமாவை எட்டிப்பிடிக்கவே நாம் பல லட்சம் மைல்களைக் கடக்கவேண்டும்.

Monday, February 05, 2007

குரு, திரு, Ethical Business

குரு படம் பார்த்தேன். அபத்தமாக எடுக்கப்பட்ட படம். கதையும் இல்லை. திரைக்கதையும் மோசம். ஆடிக்கு ஒன்று, அமாவாசைக்கு ஒன்று என்று சினிமா எடுக்கும் மணிரத்னம், ஒட்டுமொத்தமாக நிறுத்திவிடலாம்.

படம் திருபாய் அம்பானி கதையிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் கிழித்தெடுக்கப்பட்ட துணிக்கந்தல்களை சீமை சரக்குடன் ஒட்டவைக்கப்பட்டது. இந்தப் படத்தை மார்க்ஸியப் பார்வையில் விமர்சித்து எழுதும் அளவுக்கு எனக்கு புத்தி கிடையாது. அதற்கு (தகவல் பிழைகளைத் தவிர்த்துவிட்டு!) இந்த மாத உயிர்மையைப் படிக்கவும்.

பொதுவாக இந்திய சினிமாக்காரர்கள் எந்த ஒரு தொழில்முனைவரையும் அவர் எழுப்பும் தொழிலுக்குப் பின்னால் உள்ள உழைப்பையும் ஒழுங்காகக் காட்டியதில்லை. பாடி முடிக்கும்போது பால்கார அண்ணாமலை பத்து மாடி பங்களாவுக்குச் சொந்தக்காரராக மாறியிருப்பதுபோலத்தான் மணிரத்னத்தின் குரு சில போட்டோக்கள் எடுத்துமுடிக்கப்படும்போது பல யூனிட்டுகள் உள்ள தொழிற்சாலையைக் கட்டிமுடித்திருக்கிறார்.

குருவிடம் என்ன திறமை உள்ளது, தொலைநோக்குப் பார்வை உள்ளது, யாரிடமும் இல்லாத எதைக்கொண்டு அவர் தன் சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார் என்று எங்குமே விளக்குவதில்லை. ஒரு காட்சியமைப்பில்கூட அவரது ஸ்மார்ட்னெஸ் வெளிப்படுவதில்லை. 'இல்லை' என்ற சொல்லைத் தன் காது கேட்காது என்பதைத்தவிர குருவிடம் வேறு பொன்மொழிகள் கிடையாது.

கடினமான உழைப்பு என்பது வேறு, சட்டப்பூர்வமான, நியாயமான தொழில் நடத்துவது வேறு என்பதை மணிரத்னம் எங்கும் வேறுபடுத்திக் காட்டுவதில்லை.

-*-

சோசியலிசம் பேசப்பட்ட சுதந்தரத்துக்குப் பிறகான இந்தியாவில் கோட்டா, உரிமங்கள் போன்ற கட்டுப்பாடுகள் இருந்தன. கோட்டா என்றால் ஒரு தொழிற்சாலை இந்த அளவுக்குத்தான் பொருள்களைத் தயாரிக்கலாம் என்று அரசு அனுமதி தரும். அந்த அளவோ அல்லது அதற்குக் குறைவாகவோதான் ஒரு தொழிற்சாலை பொருள்களைத் தயாரிக்கலாம். உதாரணத்துக்கு ஓர் இரும்புத் தொழிற்சாலைக்கு 5 டன் உருக்கை மட்டுமே தயாரிக்கும் உரிமம் அளிக்கப்பட்டிருந்தால் அதற்கு ஒரு துளி மேல் தயாரிக்கக்கூடாது. மீறிச் செய்தால் குற்றம். பல துறைகளில், உரிமம் இல்லாமல் பொருள்களைத் தயாரிக்க முடியாது. இதைத்தான் லைசென்ஸ், கோட்டா, பெர்மிட் ராஜ் என்று ராஜாஜி தாக்கினார். இவ்வாறு பல தொழில்துறைகளையும் மத்திய அரசு தன் கிடுக்கிப் பிடியில் வைத்திருந்தது.

இந்தக் காலகட்டத்தில் எப்படியாவது ஆட்சியில் இருப்பவர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு லைசென்ஸ், பெர்மிட் அல்லது அதிகமான கோட்டாவைக் கையகப்படுத்தியவர்கள் நிறையப் பணம் செய்தார்கள்.

சிலர் கோட்டாவைமீறி உற்பத்தி செய்தனர். அப்படி உற்பத்தி செய்த அதிகமான பொருள்களை கள்ளச் சந்தையில் ரசீது இல்லாமல் தள்ளிவிட வேண்டும். அதன்விளைவாக இரண்டு கணக்குகளை வைத்திருக்கவேண்டும். கள்ளத்தனமாக விற்கும் பொருளுக்கு ஆயத்தீர்வை (excise duty) கட்ட வேண்டாம். அந்த வருமானத்தை கணக்கில் வைக்காததால் அந்த வருமானத்துக்கு வரி கட்டவேண்டாம். இப்படிச் சம்பாதிக்கும் கள்ளப் பணத்தை பிற கெட்டவேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக மேற்கொண்டு லைசென்ஸ் பெற அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க உபயோகிக்கலாம்.

தனியார் நிறுவனங்கள்மீது கடும் காழ்ப்புணர்வைக் கொண்ட சோசலிச சிந்தாந்திகள் வேறு சில கட்டுப்பாடுகளையும் நிறுவனங்கள்மீது விதித்திருந்தனர். IPO - பங்குச்சந்தையில் பங்குகளை வெளியிடுவதைத் தீர்மானிக்க என்றே ஒரு துறை இருந்தது. அந்தத் துறையின் அதிகாரிகள் ஒரு நிறுவனம் பங்குச்சந்தைக்குச் செல்ல அனுமதிக்கலாமா, கூடாதா, அனுமதித்தாலும் ஒரு பங்குக்கு என்ன விலை இருக்கவேண்டும், எவ்வளவு பங்குகளை வெளியிடலாம், யார் அவற்றை வாங்கலாம் என்று அனைத்தையும் தீர்மானம் செய்தார்கள். Book building route என்று எதுவும் கிடையாது. இந்தத் துறை அதிகாரி தீர்மானம் செய்வதுதான் பங்கின் விலை. சந்தை நாசமாகப் போகட்டும்!

ஒரு நிறுவனம் லாபம் சம்பாதித்தால் பங்கு ஒன்றுக்கு எவ்வளவு டிவிடெண்ட் (பங்காதாயம்) கொடுக்கலாம் என்பதையும் அரசே தீர்மானித்து உச்ச வரம்பு வைத்திருந்தது! நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர், பிற முழுநேர டைரக்டர்கள் எவ்வளவு சம்பாத்தியம் பெறலாம் என்றும் உச்சவரம்பு விதிக்கப்பட்டிருந்தது.

நிறுவனங்களுக்கான வருமான வரி விகிதம் (corporate tax) மிகக் கடுமையாக இருந்தது. சம்பாதித்த லாபத்தில் 90% வரை (ஆமாம்!) வரியாகக் கட்டவேண்டிய நிலை இருந்தது.

அடுத்ததாக ஏற்றுமதி, இறக்குமதி. ஒரு பொருளை, கருவியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய ஒன்று அனுமதி தேவை, இரண்டு அந்நியச் செலாவணி தேவை, மூன்று அந்த இறக்குமதியின் மேலான சுங்க வரியைக் கட்டவேண்டும். பல நேரங்களில் சுங்க வரி பொருளின் விலையைப் போன்று பல மடங்கு இருக்கும். $100 விற்கும் பொருள் கைக்கு வந்து சேர $400 ஆகிவிடும். அந்த அந்நியச் செலாவணியைப் பெறத் திண்டாட வேண்டும். இதுவும் பெரும் ஊழலுக்கும் கள்ளக்கடத்தலுக்கும் வழி வகுத்தது என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இந்த நேரத்தில் Import Credit என்ற முறை புகுந்தது. பொருள்களை இறக்குமதி செய்ய கோட்டா இருந்தது. இந்த கோட்டாவுக்கு அடிப்படைக் காரணம் மிகக் குறைவாக அந்நியச் செலாவணி கையிருப்பு நம்மிடம் இருந்ததுதான். கோட்டாவுக்கு மேற்கொண்டு இறக்குமதி செய்ய விரும்பினால் என்ன செய்வது? அந்த இறக்குமதியாளர் தானே கொஞ்சம் ஏற்றுமதி செய்தால், அந்த ஏற்றுமதியின் மதிப்பின் அளவுக்கு மேற்கொண்டு இறக்குமதி செய்யலாம். இதனால் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு கட்டுக்குள் இருக்கும் என்று ஆட்சியாளர்கள் நினைத்தார்கள்.

இவ்வாறு இறக்குமதி செய்யும் பொருளுக்கும் சுங்க வரி கட்டவேண்டும். அப்படி அதிகச் செலவு செய்தாலும் அதை இந்தியாவுக்குள் விற்கும்போது லாபம் கொள்ளை கொள்ளையாகக் கிடைக்கும் என்று தெரிந்த இறக்குமதியாளர்கள் உப்பு, புளி, மிளகாய் என்று ஏற்றுமதி செய்யத் தொடங்கினர். தாங்கள் ஏற்றுமதி செய்யும் பொருள்களை வாங்குபவர் யாரும் இல்லை என்று தெரிந்தால்கூட பொய்யாக செங்கல்லையும் சுண்ணாம்பையும் குப்பைகளையும் அடைத்து, அவற்றை, வெளிநாடுகளில் தாங்களே ஏற்படுத்தி வைத்திருக்கும் தங்களது பினாமி நிறுவனங்களைக் கொண்டே வாங்கி import credit-களை சேர்த்து வைத்தனர். அதன்மூலம் அரிய பொருள்களை இறக்குமதி செய்து சுங்கவரி கட்டி, அதற்கும் மேல் லாபம் பார்த்தனர். இத்தனையிலும் பாதிக்கப்பட்டது இந்திய மக்கள்தாம்.

-*-

இந்தக் காலகட்டத்தில்தான் திருபாய் அம்பானியும் தொழில் செய்தார். ஜெஹாங்கீர் டாடாவும் தொழில் செய்தார். முன்னவர் நிச்சயமாக ஆட்சியில் இருப்பவர்களையும் அதிகாரிகளையும் தன் வசப்படுத்த முயற்சி செய்தார் என்றும் அரசின் ரகசிய ஆவணங்கள் வெளியாவதற்கு முன்னதாக தனக்குக் கிடைக்க ஏற்பாடுகள் செய்தார் என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. டாடாவோ விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள்ளாக, தன் எதிர்ப்பை மட்டும் பதிவு செய்துவிட்டு, இயங்கினார்.

டாடா கட்டிய ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசு தேசியமயமாக்கியது. இந்தியா சுதந்தரம் அடைவதற்கு முன்னமேயே இருந்த காரணத்தால் டாடா ஸ்டீல் (டிஸ்கோ) தேசியமயமாவதிலிருந்து தப்பித்தது.

அம்பானி தன்னைச் சுற்றியிருந்த கட்டுப்பாடுகளை நிச்சயமாக வெறுத்திருப்பார். வளைகுடா நாடுகளில் மேற்கத்திய பொறியாளர்கள் கட்டிய மாபெரும் தொழிற்சாலைகளை நேரில் பார்த்திருந்த அவர் இந்தியாவின் மோசமான சூழலை எதிர்கொள்வதற்குத் தேர்தெடுத்த முறை 'சட்டபூர்வமானதல்ல'. வளர்ச்சி ஒன்றே முக்கியம் - அடையும் இலக்கு முக்கியம், அதை அடையப் பயன்படுத்தும் வழி முக்கியமல்ல என்ற கொள்கையை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று ஆராய்ச்சியாளர்கள் சிந்தனையைச் செலுத்தலாம்.

He probably thought he was ethically and morally right, even if legally wrong.

ஆனால் டாடாவோ துளியும் சட்டத்தின் பாதையிலிருந்து விலகாமல் கடைசிவரை இருந்து போராடி, தனது அடுத்த தலைமுறை சட்டத்தின் பாதைக்குள் இருந்தவாறே மேற்கொண்டு வளர்ச்சியை அடைய முனைய வேண்டும் என்று விரும்பினார். அதைத்தான் இன்று ரத்தன் டாடா செய்கிறார்.

(நேற்று CNN-IBN தொலைக்காட்சியில் பேட்டி அளித்த ரத்தன் டாடா இவ்வாறு கூறியுள்ளார்

Tata group chief Ratan Tata has said that though the licence permit raj was over, some businesses still believed they could get away with violating the law.

"There is always a view among some segments of industrial community that they are above the law and they can manage the environment. The licence permit raj is over but there are businesses that think they can get away with the violations of law. If the enforcements were stricter and more uniform, then India, would become a better place", he said in an interview to CNN-IBN.)

-*-

குரு படத்துக்கு மீண்டும் வருவோம். குருவின்மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

1. கோட்டாவுக்கு மேல் உற்பத்தி செய்தார். (Legally wrong. Ethically?)
2. உதிரி பாகங்கள் என்று சொல்லி வாங்கி அவற்றை இணைத்து ஆறு இயந்திரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் பன்னிரண்டு இயந்திரங்களை அமைத்து அதிகமாக உற்பத்தியைச் செய்தார். (Legally wrong. Ethically?)
3. அதிக உற்பத்தி செய்வதைக் கணக்கில் காட்ட முடியாது. எனவே அவற்றை கள்ளச்சந்தையில் கணக்கு புத்தகத்தில் காட்டாமல் விற்றிருக்க வேண்டும். அப்பொழுது ஆயத்தீர்வை, வருமான வரி ஆகியவற்றைக் கட்டியிருக்க முடியாது. (Legally wrong. Also ethically wrong and corrupt.)
4. மந்திரிகளை, அதிகாரிகளை பணம் கொடுத்து வளைத்து தனக்கு வேண்டிய விஷயங்களை வேகமாகச் செய்துகொண்டார். (Legally and ethically wrong.)

இவை அனைத்துக்கும் பதில் சொல்லும் குரு, தான் கடின உழைப்பாளி என்று மட்டும் சொல்கிறார். கடினமாக உழைக்கும் ஒரே காரணத்துக்காக சட்டத்துக்குப் புறம்பாகவும் நேர்மை, நியாயத்துக்குப் புறம்பாகவும் நடக்க யாருக்கும் உரிமை கிடையாது. மணிரத்னத்தின் குரு, நாளைய தொழில்முனைவோரின் இலட்சிய நாயகராக இருக்கக்கூடாது.

குருவின் தவறான பாதையைப் பின்தொடரும் புலனாய்வு இதழாளரும் தவறு செய்கிறார். குரு குப்பைகளை ஏற்றுமதி செய்கிறார் என்பதைக் காட்ட அராபியர்கள் வேடமிட்ட இருவர் மும்பையிலேயே குப்பை டப்பாக்களைப் பிரிப்பதுபோலக் காட்டி இது வேறெங்கோ அரபு நாடு ஒன்றில் நடப்பதாகக் கதை எழுதுகிறார். இதன்மூலம் நியாயத்தை நிலைநாட்டத் தவறுகளைச் செய்யலாம் என்பதை வலியுறுத்துகிறார் மணிரத்னம். இதையே குருவும் தனது தற்காப்புக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிக உற்பத்தி நாட்டுக்கு நல்லது; எனவே அந்த நல்லதைச் செய்ய சட்டத்தை மீறுவது தவறாகாது என்று ஏதோ தர்மசூத்திரத்தை முன்வைத்து குரு சொல்லக்கூடும்.

ஒரு லிபரல் குடியாட்சி முறையில் இதுபோன்ற கருத்துகளுக்கு இடம் இருக்கக்கூடாது. End vs Means - இலக்கு மட்டும் நியாயமானதாக இருந்தால் போதாது. அந்த இலக்கை அடையும் வழியும் நியாயமானதாகவும் சட்டபூர்வமானதாகவும் இருக்கவேண்டும். சட்டம் சரியில்லை என்று தோன்றினால் சட்டத்தை உடைத்து, மாற்றப் போராடவேண்டும். சட்டத்தை மீறத்தொடங்கினால் நமது ஆட்சிமுறையும் வாழ்க்கைமுறையும் ஆட்டம் காணத் தொடங்கிவிடும்.

-*-

அம்பானியைத் தோலுரிக்க விரும்பிய ராம்நாத் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸில் ஆசிரியராக இருந்த அருன் ஷோரி பிற்காலத்தில் மத்திய அமைச்சரானபோது அம்பானி போன்றோர் கோட்டா ராஜ்ஜியத்தை ஏமாற்றியது ஒருவகையில் சரிதான் என்பதுபோலப் பேசினார். அது தவறான கூற்று. ஆட்சியாளர்கள் தவறு செய்யும்போது தவறை அனைவரும் குடியாட்சி முறையில்தான் எதிர்த்து மாற்றவேண்டும். காலனிய ஆட்சிமுறை பற்றியும் காந்தியின் சட்டமறுப்புப் போராட்டங்கள் பற்றியும் இங்கு பேசக்கூடாது. மணிரத்னம், காந்தியை குருவுக்கு ஆதரவாக இழுக்கிறார். இது தவறான வாதம். ஒருமுறை காந்தியின் Satyagraha in South Africa என்ற புத்தகத்தை முழுமையாக வாசித்துவிட்டு இந்த வாதத்துக்கு வாருங்கள்! வேறு எந்த வழியும் இல்லை; ஆட்சியாளர்களை மாற்றக்கூடிய உரிமை கிடையாது என்னும்போது சத்யாக்கிரகம் என்னும் முறை முன்வைக்கப்படுகிறது. அந்த முறையிலும்கூட சட்டத்தை மீறி, ஏமாற்றிப் பலன் பெறுவதை காந்தி முன்வைக்கவில்லை. சட்டத்தை மீறி, அதன் விளைவாகக் கைது செய்யப்பட்டு அந்த சட்டத்தினாலே கிடைக்கும் தண்டனையை முழுமனதாக விரும்பி ஏற்றுக்கொண்டு அதன்மூலம் எதிராளியை வெட்கித் தலைகுனிய வைத்து சட்டத்தை மாற்றக்கூடிய ஓர் ஆயுதம் சத்தியாக்கிரகம்.

குரு படம் சர்வதேச நிதியும் முதலாளித்துவமும் இணைந்து உழைக்கும் வர்க்க மக்களைச் சுரண்ட எடுத்த ஒரு படம் என்று நான் நினைக்கவில்லை. குழப்பமான கதையைக் கொண்ட, சரியான பாத்திர வார்ப்புகள் அமையாத, தெளிவான நல்ல சிந்தனையை மக்களுக்குக் கொடுக்காத, மோசமான ஒரு படம். சீரியஸான ஒரு படத்துக்கு இடையே தமிழ்/ஹிந்தி சினிமாவுக்கே உரித்தான தேவையற்ற சில அம்சங்கள். ஆடல் பாடல்கள் எவையும் கருத்தைக் கவருபவையாக இல்லை. வசனங்கள் சுமார்தான்.

-*-

அம்பானியைவிட ஜெஹாங்கீர் (ஜே.ஆர்.டி.) டாடா இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக இருப்பார்.

Sunday, February 04, 2007

புதிய வணிக செய்தித்தாள்

இந்தியாவின் வணிக செய்தித்தாள்கள் அனைத்துமே சுமாரான தரத்தவைதான். தி எகனாமிக் டைம்ஸ் வெற்று பந்தா. செய்திகளை ஆராய்ந்து பின்னணியை விளக்கமாகத் தர அவர்கள் முயற்சி செய்வதேயில்லை. சிதம்பரத்தை வைத்து ஒருநாள், நாராயண மூர்த்தியை வைத்து ஒருநாள், ஒருவேளை ஷில்பா ஷெட்டியை வைத்து ஒருநாள் என்று செய்தித்தாளை எடிட் செய்து அந்த விளம்பரத்தில் வாழ்க்கையை நடத்திவிடுவார்கள். பல நிறுவனங்களிலும் நெருக்கமான தொடர்பு இருப்பதால் அதைக்கொண்டு breaking news பலவற்றை முதலில் வெளியிடுவதுதான் இவர்களது சிறப்பு.

பிசினஸ் ஸ்டாண்டர்ட் எவ்வளவோ தேவலாம். இப்பொழுதைக்கு பிற செய்தித்தாள்களைவிட இதுதான் விஷயகனத்தில் முன்னணியில் உள்ளது என்பேன். ஹிந்து பிசினஸ்லைனுக்கு என்று சிறப்பாக ஒன்றையும் சொல்லமுடியாது. ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் முதலில் தாளின் தரத்தை அதிகப்படுத்துவதில் ஆரம்பித்து செய்யவேண்டியது நிறைய உள்ளது.

என்னைப்போன்ற பலர் (அலுவலகத்தில்) இந்த நான்கு செய்தித்தாள்களையும் வாங்கிவிடுவர். ஆனால் இரண்டை முழுதாகப் படித்து முடிப்பதற்கே எனக்கு நேரம் இருக்காது. பொதுவாக நான் பிசினஸ் ஸ்டாண்டர்டை முழுவதுமாகப் படிப்பேன்; எகனாமிக் டைம்ஸை வேகமாகப் பக்கம் புரட்டி அதிர்ச்சியாக ஏதாவது கண்ணில் படுகிறதா என்று பார்ப்பேன். பிசினஸ்லைனை அவ்வப்போது பார்ப்பதோடு சரி. ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் நேராகக் குப்பைக்குப் போனாலும் காசு கொடுத்து வாங்கிவிடுவது வாடிக்கை.

இப்பொழுது ஹிந்துஸ்தான் டைம்ஸ் குழுமமும் வால் ஸ்டிரீட் ஜர்னலும் சேர்ந்து இந்தியாவில் மிண்ட் (Mint) என்ற பெயரில் புதிய பத்திரிகையைத் தொடங்கியுள்ளனர். பிசினஸ் ஸ்டாண்டர்ட் எந்த அளவுக்கு அதன் பங்குதாரர் லண்டன் ஃபைனான்ஷியல் டைம்ஸிடமிருந்து இதழியல் நுட்பங்களைப் பெறுகிறது என்று தெரியவில்லை. மிண்ட், வால் ஸ்டிரீட் ஜர்னலிடமிருந்து நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டு அவற்றைச் செயல்படுத்தினால் ஒரே ஆண்டில் இந்தியாவின் முன்னணி வணிக செய்தித்தாளாக ஆகமுடியும்.

Friday, February 02, 2007

டாடா - கோரஸ்

டாடா குழுமம் கடைசியாக கோரஸ் என்னும் பிரிட்டன் - டச்சு உருக்கு நிறுவனத்தை விலைக்கு வாங்குவதில் வெற்றி கண்டுள்ளது. உடனடியாக 'இந்தியா வாழ்க', 'இந்நாள் பொன்னாள்' என்னும் பதிவும் 'தரகு முதலாளித்துவ டாடா ஒழியப்போகிறது; போகும்போது இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் வயிற்றில் அடித்துவிட்டுத்தான் போகப்போகிறது' என்னும் பதிவும் கண்ணில் பட்டன.

லக்ஷ்மி மிட்டல் சம்பாத்தியம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் கிடைத்தது. அவரது வளர்ச்சி சாமர்த்தியமான வளர்ச்சி. ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர் மிட்டல் கையில் எத்தனை பணம் இருந்தது என்றால் அதிகம் ஒன்றுமில்லை என்றுதான் பதில் கிடைத்திருக்கும். அவரது தந்தையும் மாபெரும் தொழில் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி மேய்க்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி உலகின் ஐந்தாவது பணக்காரராகவும் உலகிலேயே மிக அதிகமாக உருக்கு இரும்பைத் தயாரிப்பவராகவும் மிட்டல் ஆனார் என்ற கேள்வி எழும். மிட்டலின் சாமர்த்தியம் நஷ்டத்தில் இயங்கும் உருக்கு நிறுவனங்களை மிகக்குறைந்த விலைக்கு வாங்கி, அதுவும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்மூலம் வாங்கி, அந்த ஆலைகளை லாபம் பெறச் செய்து, கடனை அடைத்து நிறுவனத்தை முழுமையாகத் தன் கைக்குள் கொண்டுவரச் செய்வது.

டாடா நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையில் மூன்று டாடாக்கள் வருகிறார்கள். மூவரும் அவரவர் அளவில் மிகப் பெரிய ஆளுமைகள். டாடா குழுமத்தை ஆரம்பித்த ஜாம்ஜெட்ஜி டாடா (தாடிக்காரர்), ஜெஹாங்கீர் டாடா (ஜே.ஆர்.டி), இப்பொழுதைய ரத்தன் டாடா. (நேரடி உறவினர்கள் கிடையாது. ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட உறவு.)

ஜாம்ஷெட்ஜி, காலனிய ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் தொழில்மூலம் பணம் சம்பாதிக்க என்னென்ன வழிகள் இருந்தனவோ, அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டார். ஜெஹாங்கீர் பாதி பிரெஞ்சுக்காரர். பெரும்பாலும் வெளிநாடுகளில் வளர்ந்தவர். டாடா குழுமத்தை மிகப்பெரும் தொழில் குடும்பமாக மாற்றியவர். பல புதுமையான தொழில்களைக் கொண்டுவந்தவர். இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்தவர்.

ஜெஹாங்கீர் டாடாவின் கடைசிக் காலத்தில் டாடா குழுமத்தின் பல தொழில்கள் பிய்த்துக்கொண்டு போக முற்பட்டன. இந்திரா காந்தியின் அதீத சட்டங்களுக்குப் பயந்து ஜெஹாங்கீர் பல குழும நிறுவனங்களில் மிககுறைந்த அளவுக்கான பங்குகளையே வைத்திருந்தார். ஒவ்வொரு டாடா நிறுவனத்தையும் (டெல்கோ, டிஸ்கோ, டைடன் ....) ஒரு படைத்தளபதி ஆண்டுவந்தார். எப்படி ராஜாவுக்கு வயதாகும்போது தளபதிகள் தம்முடைய பகுதியை எடுத்துகொண்டு தங்களையே ராஜாவாக அறிவிப்பார்களோ அதுதான் நடக்க ஆரம்பித்தது. ரத்தன் டாடா குழுவின் சேர்மனாக அறிவிக்கப்பட்டதும் இப்படியான தளபதிகளை அடக்கி, துரத்தி, மீண்டும் குழுமத்தை ஒரு குடையின்கீழ் வலுப்படுத்தினார்.

டாடா குழுமம் அப்பொழுது பல நூறு தொழில்களில் இருந்தது. ரத்தன் அவற்றில் பலவற்றை விற்றார். புதிதாகச் சில தொழில்களில் இறங்கினார் (டெலிகாம்). பலவற்றை வலுப்படுத்தினார்.

இப்பொழுது டாடா குழுமத்தின் மிக முக்கியமான தொழில்கள் இவை:
* டாடா கன்சல்டன்சீஸ் (மென்பொருள், தகவல் தொழில்நுட்பம்)
* டாடா மோட்டார்ஸ் (கனரக, இலகுரக மோட்டார் வாகனங்கள், கார்கள்)
* டாடா ஸ்டீல் (இரும்பு, உருக்கு உற்பத்தி)
* டாடா டெலிகாம், வி.எஸ்.என்.எல்... (தொலைத்தொடர்பு)

இவைதவிர இன்ஷூரன்ஸ், நிதி மேலாண்மை, ஹோட்டல்கள், வாட்ச்கள், வோல்டாஸ் ஏர்கண்டிஷனர்கள், ரசாயனம் என பல துறைகளில் உள்ளனர். ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள நான்கு துறைகளில்தான் எதிர்கால வளர்ச்சி உள்ளது.

டாடா கன்சல்டன்சீஸ் நிறுவனம் இந்தியாவின் மென்பொருள் துறையில் முதலாவதாக உள்ள நிறுவனம். கிட்டத்தட்ட 30 பில்லியன் டாலர் மார்க்கெட் கேபிடலைசேஷன் உள்ள நிறுவனம். ஆண்டுக்கு மூன்று பில்லியன் டாலருக்குமேல் வருமானமும், சுமார் ஒரு பில்லியன் டாலருக்குமேல் லாபமும் பெறும் நிறுவனம். அடுத்த பல வருடங்களில் மாபெரும் வளர்ச்சி காணப்போகும் இந்திய நிறுவனங்களுள் முக்கியமானதாக இருக்கப்போகிறது.

டாடா டெலிகாம், வி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் சற்றே பின்னணியில் இருப்பவை. வேகமாக இயங்காத காரணத்தால் டாடா குழுமம் இந்தத் துறையில் பல வாய்ப்புகளை இழந்தது. ஐடியா செல்லுலார் நிறுவனம் தொடர்பான குழப்பங்கள் அவர்களை வெகுவாகப் பின்னுக்குத் தள்ளியது. இந்தக் குழப்பங்கள் இப்போது ஓரளவுக்கு மறைந்துள்ளன என்றாலும் டாடாவின் மொபைல், பிற தொலைபேசிச் சேவைகள் மெதுவாகவே வளர்கின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலக அரங்கில் மிகச்சிறிய நிறுவனம். சிங்கூர் விவகாரத்தால் (ஒரு லட்சம் ரூபாய் கார்) பெரிய அளவில் பேசப்பட்டாலும் இந்திய அளவிலேயே பெரும் இடத்தைப் பிடிக்க நிறைய வேலைகளைச் செய்யவேண்டும். கொரியாவின் தேவூ நிறுவனத்தின் சில சொத்துக்களை வாங்கியதன்மூலமும் தென் ஆப்பிரிக்காவில் கால் ஊன்றியதன்மூலமும் உலக அளவிலும் தன் சந்தையை விரிவாக்க நினைக்கிறது டாடா மோட்டார்ஸ்.

டாடா ஸ்டீல், கோரஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதன்மூலம் உலகின் ஐந்தாவது பெரிய உருக்கு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஆனால் கொடுத்த விலை அதிகம் என்று பலர் நினைக்கிறார்கள். விலை அதிகமானாலும் இந்த விலையைக் கொடுக்கக்கூடிய திறன் இந்தியாவின் வெகுசில நிறுவனங்களிடம் மட்டுமே உள்ளது. கோரஸ் நிறுவனத்தை வாங்க சுமார் 12 பில்லியன் டாலர்கள் தேவை. டாடா கன்சல்டன்சீஸ் நிறுவனத்தின் 80% பங்குகள் டாடா சன்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. மீதிப் பங்குகள் பொதுச்சந்தையில் உள்ளன. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 30 பில்லியன் டாலர்கள். டாடா சன்ஸ் மேலும் 20% டாடா கன்சல்டன்சீஸ் பங்குகளை அமெரிக்க / பிரிட்டன் பங்குச்சந்தையில் வெளியிடுவதன்மூலம் 7 பில்லியன் டாலராவது பெறமுடியும். (வெளிநாட்டுப் பங்குச்சந்தையில் பிரீமியம் அதிகம் கிடைக்கும். இப்பொழுது இன்போசிஸ் பங்குகள் அப்படித்தான் உள்ளன.)

மீதப் பணத்தை டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் ஆகியவை கொஞ்சமும், கடன்கள் மூலமும் பெறலாம். பின்னர் டாடா ஸ்டீல் + கோரஸ் நிறுவனத்தை பிரிட்டன் பங்குச்சந்தைக்குக் கொண்டுவந்து 20% பங்குகளை வெளியிட்டால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கடன்களை வெகுவாகக் குறைக்கமுடியும்.

சர்வதேச நிதிச் சந்தையை டாடா குழுமம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தேவையான பணத்தை எளிதாகப் பெறமுடியும்.

வேறு எந்தச் சொத்தும் இல்லாத நிறுவனம்தான் முழுக்கவே கடன்களை நம்பி இயங்க வேண்டியிருக்கும் (CSN போல). மிகச்சிறிய நிறுவனமான டாடா ஸ்டீல், கோரஸ் நிறுவனத்தை வாங்கியது ஒரு பெரிய விஷயம் என்று பார்க்கக்கூடாது. டாடா குழுமம் என்று ஒருசேரப் பார்க்கும்போது அது கோரஸ் நிறுவனத்தைவிடப் பல மடங்கு பெரியது.

கோரஸை வாங்கியதுபோலவே டாடா குழுமம் ஐரோப்பாவில் நலிந்த நிலையில் இருக்கும் மோட்டார் கார் நிறுவனம் ஒன்றையும் வாங்க முற்படலாம். அதன்மூலம் பெரிய ஐரோப்பியச் சந்தைக்கு இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் வழியைப் பார்க்கலாம். இந்தியாவுக்குத் தேவையான தொழில்நுட்பத்தையும் அதன்மூலம் எளிதாகப் பெறலாம். அதுதான் அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும்.