Wednesday, October 24, 2007

பங்குச்சந்தை: பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ்

இந்தியப் பங்குச்சந்தைகளில் பங்குகளை வாங்கி விற்பவராக இருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களது PAN எண்ணை - அதாவது வருமான வரி எண் - உங்களது பங்குத்தரகருக்குத் தெரிவிக்க வேண்டும். அவர் அந்த எண்ணை பங்குச்சந்தைக்குத் தெரிவிப்பார். ஆக, எந்த நேரத்திலும் எந்தப் பங்கை யார் வாங்குகிறார்கள் என்ர தகவலை அரசு நிறுவனங்கள், வருமான வரி அலுவலகம், காவல்துறை ஆகியவற்றால் தெரிந்துகொள்ள முடியும்.

கடந்த ஓர் ஆண்டில், வருமான வரி எண் இல்லாமல் யாருமே பங்குச்சந்தையில் முதலிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

வெளி நாடுகளிலிருந்து இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய என்.ஆர்.ஐகளுக்கும் அந்நிய நாட்டுக் குடிமக்களுக்கும் தடை உள்ளது. விதிவிலக்கு: வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்; ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய, பிற நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் முதலீடு செய்யமுடியாது. இவர்கள் அனைவருமே பரஸ்பர நிதி - மியூச்சுவல் ஃபண்ட் - மூலம் மறைமுகமாக இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்.

தனிமனிதர்களுக்குத்தான் கட்டுப்பாடே ஒழிய, அந்நிய நிதி நிறுவனங்கள் (Foreign Institutional Investors - FIIs) இந்தியப் பங்குச்சந்தையில் குறிப்பிட்ட சதவிகிதத்துக்குள் முதலீடு செய்யமுடியும். இந்த FIIக்கள் முதலில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி (SEBI) இடம் பதிவு செய்துகொள்ளவேண்டும்.

ஆனால் இந்த இடத்தில் இந்த FIIக்கள் ஓர் ஓட்டையைப் பயன்படுத்திக்கொண்டு அந்நிய நாட்டவர் அல்லது அனுமதிக்கப்படாத என்.ஆர்.ஐக்களை இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வழிசெய்துகொடுக்கின்றன.

அதற்குப் பெயர்தான் பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ். இதைப் பார்ப்பதற்கு முன், இதைப்போன்றே உள்ள ஒரு நிதிக்கருவியைப் பார்ப்போம். அதற்குப் பெயர் டெபாசிட்டரி ரிசீப்ட்ஸ். ADR, GDR என்ற பெயர்களில் இவை பிரபலமாக உள்ளன.

இப்பொழுது அமெரிக்கப் பங்குச்சந்தைகளில் வர்த்தகமாகும் இந்திய நிறுவனப் பங்குகள் சிலவற்றை எடுத்துக்கொள்வோம். இன்ஃபோசிஸ், ரீடிஃப், சிஃபி போன்றவை. உண்மையில் இவற்றின் பங்குகள் ஏதும் நாஸ்டாக்கில் வர்த்தகமாவதில்லை. இரண்டு கட்டங்களில் இது நடக்கிறது. முதலில் ஒரு நிதி நிறுவனம் (வங்கி), இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகமாகக்கூடிய பங்குகளை நேரடியாக அந்த நிறுவனத்திடமிருந்தோ (public offer), அல்லது sponsored முறையிலோ பெறுகிறது. இந்த நிதிநிறுவனத்தின் பெயர் டெபாசிட்டரி.

அந்தப் பங்குகளுக்கு இணையான வேறு கருவியை (டெபாசிட்டரி ரிசீப்ட்) இந்த டெபாசிட்டரி நிறுவனம் உருவாக்கி அவற்றை அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஓடவிடுகிறது. ஒரு பங்குக்கு இணையாக ஒரு டெபாசிட்டரி ரிசீப்ட் இருக்கலாம். அல்லது இரண்டு, மூன்று, நான்கு பங்குகளுக்கு இணையாக ஒரு டெபாசிட்டரி ரிசீப்ட் இருக்கலாம். இந்த டெபாசிட்டரி ரிசீப்டை அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஈடுபடும் எவரும் வாங்கி, விற்கலாம். இந்தியப் பங்குச்சந்தையில் இருக்கும் விலைக்கும் அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் விலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும்; ஆனால் பல நேரங்களில் ஒரு சந்தையில் மற்றொரு சந்தையைவிட விலை அதிகமாகவோ குறைந்தோ இருக்கலாம். இடையிலான ஆர்பிட்ராஜை வைத்துப் பணம் சம்பாதிப்பது முடியாமல் போகும்.

அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனத்தில் நேரடியாக முதலீடு செய்வது தடைசெய்யப்பட்டிருக்கும்போது இந்த முறையைக் கொண்டு அவர்கள் இந்திய நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ய வழிவகுக்கலாம்.

இந்திய நிறுவனம் டிவிடெண்ட், போனஸ் ஆகியவற்றை அளிக்கும்போது, டெபாசிட்டரி நிறுவனம் அவற்றைப் பெற்று, அவற்றை பத்திரமாக அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு மாற்றிக்கொடுக்கும்.

இதுபோன்ற சமயத்தில் செபி, இந்த அமெரிக்கத் தனி முதலீட்டாளர்களைப் பற்றி கவலைப்படாது. அவர்களது குலம், கோத்திரம் என்ன என்றெல்லாம் விசாரிக்காது. ஆனால் அந்த வேற்று நாட்டு (அமெரிக்கா) பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியம் இந்த முதலீட்டாளர்கள் யார் என்பதைக் கட்டுப்படுத்தும்; அவர்களிடம் ஒழுங்காக வரி வசூலிக்கும்.

இப்பொழுது பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் என்றால் என்ன என்று பார்ப்போம். இது டெபாசிட்டரி ரிசீப்ட்ஸுக்கு நேர் எதிர்.

இந்தியப் பங்குச்சந்தை பிற நாட்டுக் குடிமகன்களுக்குத்தான் தடை என்றும் அந்நிய நிதி நிறுவனங்கள் செபியிடம் பதிவு செய்துகொண்டால் அனுமதிக்கப்படும் என்றும் பார்த்தோம் அல்லவா? இப்படிப் பதிவுசெய்துகொண்ட FIIக்கள், தனி ஆசாமிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்கள் சார்பில் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்கின்றனர். ஆனால் பங்குகள் என்னவோ இந்த FIIக்கள் பேரில் இருக்கும். தனி ஆசாமிகள் கணக்குக்கு, அவர்களுக்கு பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் எனப்படும் PN ரசீதுகளைக் கொடுத்துவிடுவார்கள். அதாவது இது ஒரு பினாமி வழி.

யார் முதலீடு செய்கிறார்கள் என்பதை FIIக்கள் செபியிடம் இதுவரை சொன்னதில்லை. செபியும் கேட்டதில்லை. அப்படி செபி கேட்கப்போகிறது என்று விஷயம் கசிந்தால் உடனே பங்குச்சந்தை ஆட்டம் காணும். நிதியமைச்சரும் பயந்துபோய், இன்னும் கொஞ்சம் நாள் விட்டுவிடுவோம் என்பார். அதுதான் சென்ற வாரம் நடந்தது.

இப்பொழுது நமக்குத் தோன்றவேண்டிய கேள்விகள் இவை:

1. செபி ஏன் PN வழியாக வர்த்தகம் செய்வோரது தகவலைக் கேட்கவேண்டும்?
2. அப்படிக் கேட்டால் ஏன் இந்த ஃபாரின் வஸ்தாதுகள் பயப்படவேண்டும்? கொடுத்துவிட்டுப் போகவேண்டியதுதானே?
3. PN/FII-க்களுக்கு ஏன் இந்தியப் பங்குச்சந்தை/செபி/நிதியமைச்சர் பயப்படவேண்டும்?
4. இந்தியாவில் இருக்கும், பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் நாம் என்ன நிலையை எடுக்கவேண்டும்?

பதில்களைப் பார்ப்போம்.

PN வழியாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் செய்வோரில் உருப்படியான, நியாயமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தமது தகவலைச் சொல்ல பயப்பட மாட்டார்கள். ஆனால் பல கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதில் முதலாவது இந்தியாவில் கறுப்புப் பணத்தைத் தேக்கி, ஹவாலா வழியாக அதை வெளிநாடுகளுக்குக் கொண்டுசென்றுள்ளவர்கள். இரண்டாவது சர்வதேச தீவிரவாதிகள்.

இந்த இரண்டு ஆசாமிகளும் இந்தியப் பங்குச்சந்தைக்குள் பணத்தைப் போட விரும்புகிறார்கள். ஏன்? ஏனென்றால் இப்பொழுது இந்தியா ‘வளர்ச்சி' கதையால், இந்தியப் பங்குச்சந்தையில் நல்ல லாபம் புரளுகிறது. நல்லவர்கள் போல, கெட்டவர்களும் இந்த ‘வளர்ச்சி'யின் பயனை அறுவடை செய்ய விரும்புகிறார்கள். PN வழியாக இதைச் செய்தால் கேள்வி கேட்க யாருமே இல்லை.

PN வழியாக இந்தியச் சந்தையில் புரளும் பணம் சுமார் 90 பில்லியன் டாலர்கள் என்கிறார்கள். இதில் பாதிக்கு மேல் கெட்ட பணமாக இருக்கலாம்.

கடந்த சில வாரங்களில் தேவையில்லாமல் இந்தியப் பங்குச்சந்தை உச்சத்தைத் தொட்டுள்ளதற்கு வெளிநாட்டுப் பணம் முக்கியமான காரணம். திடீரென PN-ல் கையை வைப்பதாக செபி அறிவித்ததுமே இவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஆனால் பங்குச்சந்தை கீழே விழும் என்றெல்லாம் பயப்படாமல் செபி, இந்த விஷயத்தில் கறாராக நடந்துகொள்ளவேண்டும். PN வழியாக இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய விரும்புகிறவர்களுக்கும் PAN எண் போல ஒரு எண்ணை வழங்கவேண்டும். அட்ரஸ் ப்ரூஃப் இருக்கவேண்டும். தவறான ஆசாமிகள் என்று தெரியவரும்போது அவர்களுக்கு வர்த்தகம் செய்துகொடுத்த FII-க்களை ஒட்டுமொத்தமாகத் தடைசெய்யவேண்டும்.

அதாவது யாரிடமிருந்து பணம் பெற்று பங்குச்சந்தை வர்த்தகம் செய்யவேண்டும் என்ற விதியை FII-க்கள் மீது புகுத்தவேண்டும்.

இதை ஏற்காத FII-க்களை இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கக்கூடாது.

இந்தியாவில் முதலீடு செய்யும் மொபியஸ் என்னும் FII செபியின் விதிமுறைகளை ஏற்பதாகவும் PN முறையில் செய்யப்படும் முதலீடும் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதை ஒப்புக்கொள்வதாகவும் இன்று தகவல் வந்துள்ளது. பிற FII-க்கள் ஒத்துவந்தால் அனுமதிப்போம். இல்லாவிட்டால் துரத்திவிடுவோம்.

Monday, October 22, 2007

ஞாநியும் சிநேகிதர்களும்

ஞாநி தமிழக முதல்வர் கருணாநிதியைப் பற்றி எழுதிய 'ஓ பக்கங்கள்' கட்டுரை ‘விருப்பப்படி இருக்க விடுங்கள்', உள்நோக்கத்துடன் எழுதப்பட்டதாகவே நான் நினைக்கிறேன்.

ஞாநிக்கு கருணாநிதி மீது எந்தக் கரிசனமும் கிடையாது. அவரது எழுத்துக்களைப் படித்துவருவோர் அனைவருக்கும் இது தெரியும். அப்படிப்பட்ட நிலையில் ‘வஞ்சக் கரிசனத்துடன்', “அய்யோ பாவம்! ஒரு கிழவரை இப்படிப் போட்டு வாட்டி வதைக்கிறார்களே” என்று ஞாநி எழுதினால் அதைவிட கயமைத்தனம் ஏதும் இருக்கமுடியாது.

ஞாநிக்கு பல நோக்கங்கள் இருந்திருக்கலாம்.

வயதானவர் மாநிலத்தின் முக்கியமான பதவியில் இருந்தால் மாநிலத்தின் நலனுக்குக் கேடு என்று அவர் கருதியிருந்தாரானால் அதை வெளிப்படையாக எழுத்தில் காட்டியிருக்கலாம்.

இல்லை, கருணாநிதியை தனக்குப் பிடிக்கவில்லை என்று ஞாநி நினைத்திருந்தாரானால், அதையும் நேரடியாகச் சொல்லி, இவரைத் தூக்கி எறிந்துவிட்டு வேறு யாரையாவது முதல்வராக்குங்கள் என்று நேரடியாகச் சொல்லியிருக்கலாம். (அது நடக்காது என்பதை ஞாநி உணர்ந்திருப்பார்.)

ஜெயமோகன் ஒருமுறை சுந்தர ராமசாமி/காலச்சுவடு பற்றி எழுதும்போது, யானைப்பாகன், கிழ யானையைக் காட்டிப் பிச்சையெடுத்து சம்பாதிப்பதைப்போல என்று (கேவலமாக) எழுதியிருந்தார். ஞாநியும் அதைப்போலவே கருணாநிதியின் பிள்ளைகள் தங்கள் தகப்பனை தங்களது சொந்த விருப்பங்கள் காரணமாக, தள்ளாத வயதிலும் தெருவில் அழைத்துவந்து அவரைச் சுரண்டி, அவரை வைத்து வித்தை காட்டிப் பிழைப்பு நடத்துகின்றனர் என்று பொருள்பட எழுதியிருப்பது கண்டனத்துக்குரியது.

ஞாநி ஒரே சீராக நடுநிலையுடன் தனது எழுத்தைச் செய்வதில்லை. கருணாநிதியை எதிர்க்கும் அளவுக்கு ஜெயலலிதாவை எதிர்ப்பதில்லை.

ஞாநி சில விஷயங்களைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் குணம் உடையவர். மாற்றுக் கருத்துகள் தொடர்பாக என்ன ஆதாரம் கிடைத்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தனது கருத்தை மாற்றிக்கொள்ள மறுப்பவர்.

இப்படி ஞாநியைக் குறைசொல்ல எவ்வளவோ இருக்கிறது.

-*-

ஞாநிக்கு பேச்சு, எழுத்து சுதந்தரம் இருந்தாலும் கண்ணியமற்ற முறையில் சிலவற்றை எழுதினால் அதனால் கோபம் கொள்பவர்கள் கண்டனக் கூட்டம் நடத்துவதில் தவறில்லை. அப்படி நடந்த கூட்டம்தான் வாணி மஹாலில் சனிக்கிழமை நடந்த ஒன்று.

ஆனால் ஞாநியைக் கண்டித்த சிநேகிதர்கள் (அவர்கள் அனைவரும் ஞாநியுடன் இப்பொழுதும் நல்ல பரிச்சயம் வைத்திருப்பவர்களாம்), பல அபத்தங்களையும் வாரி உதிர்த்தனர்.

மேற்படி விஷயத்தில் ஞாநியைக் கண்டிக்க ஆயிரம் முகாந்திரங்கள் இருந்தாலும் மேலும் பலவற்றை இழுக்கவேண்டுமே. அதைச் சரியாகக் கண்டறிந்து 20-20 கிரிக்கெட் போட்டியின் தரத்தில் தடாலடியாக ஆரம்பித்து வைத்தார் தொடக்க ஆட்டக்காரரான கவிஞர் அறிவுமதி.

அதுதான் 2000 வருடப் பகைமை. தன் மூதாதையர் உழைப்பில் 'உண்டு', 'பேண்டு' இன்று சுகமாக இருக்கும் பார்ப்பனர்களை அறிவுமதி நன்றாகச் சாடினார். புரசைவாக்கமாக இந்த இடம் இல்லாமல் போய்விட்டதே, கொஞ்சம் நாகரிகமாகப் பேசவேண்டுமே என்று வருத்தப்பட்டார். ‘உங்கள் யாருக்காவது வசிக்க வீடில்லாமல் இருக்கிறதா' என்று பார்ப்பனர்களைக் கேட்டார். பார்ப்பனர்களை இவர் ஒன்றும் செய்யாவிட்டாலும் இணையத் தம்பிகள் ஒருகை பார்த்துவிடுவார்கள் என்று கோடி காட்டினார்.

அடுத்து பேசவந்தவர்களில் பலர் இந்த 2000 வருடப் பாரம்பரியச் சண்டை (அப்படி ஒன்று இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை. எழுத்தாளன் சொன்னால் மேல் அப்பீல் கிடையாது) பற்றி பலரும் தொடர்ந்தார்கள்.

தோழர் மகேந்திரன் தொடர்ந்தார். பிரபஞ்சன் ஒருபடி மேலே போனார். அ.மார்க்ஸ் பற்றி சொல்லத் தேவையே இல்லை. பிரபஞ்சன் அதெப்படி ஊடகங்கள் எல்லாம் சட்டையை அவிழ்த்துவிட்டுக்கொண்டு பூணூல் போட்டுக்கொள்கிறார்கள் என்று கேட்டார்.

ஞாநிக்கான கண்டனக் கூட்டமா, தி.கவின் பார்ப்பன எதிர்ப்புக் கூட்டமா என்று புரியாத வகையில் இறையன்பன் குத்தூஸ் வந்து ஒரு பாடலைப் பாடினார். அதன் வரிகள் பின்வருமாறு:
வடக்கே ஒரு பார்ப்பன வேதாந்தி கலைஞரின் தலை கேட்கிறான்
இங்கே ஒரு பார்ப்பன அஞ்ஞாநி நஞ்சைக் கக்குகிறான்
பார்ப்பானையும் பாம்பையும் கண்டால்
முதலில் பார்ப்பானை அடி என்றார் தந்தை பெரியார்
நம் சிந்தையெல்லாம் நிறைந்த தந்தை பெரியார்

தொண்டால் பொழுதளக்கும் தலைவரை
இங்கு கொச்சைப்படுத்துகிறான் ஒரு தறுதலை
பொறுமை கலைஞரின் பெருந்தன்மை
இது புரிந்திடுமா அஞ்ஞாநிக்குப் பேருண்மை

யாரை சந்தோஷப்படுத்த இவன் எழுதுகிறான்? இங்கே
யாரை சந்தோஷப்படுத்த இவன் எழுதுகிறான்?

பார்ப்பன அரசியலைப் புரிந்துகொள்ளடா
பார்ப்பன பத்திரிகை அரசியலைப் புரிந்துகொள்ளடா

தமிழா! தமிழா! தமிழா!
இந்தப் பாடல் பாடப்படும்போது இணையப் பிரமுகர்கள் இருவர் ‘அய்யோ' என்று தலையில் அடித்துக்கொள்வதைப் பார்க்க முடிந்தது.

இதற்கடுத்து தலைமையுரை ஆற்றிய பன்னீர்செல்வம், ஞாநியின் எளிமைப்படுத்தப்பட்டு வெகுஜன ஊடகங்களில் கொடுக்கப்படும் கருத்துக்களை எதிர்க்கவேண்டும் என்றார். ஆனால் அதே எளிமைப்படுத்தப்பட்ட சூத்திரம்தான் இந்த கண்டனக் கூட்டத்திலும் காணக் கிடைத்தது.

ஞாநி = பார்ப்பான்
விகடன் = பார்ப்பனப் பத்திரிகை
பார்ப்பான் = 2000 வருடப் பகைமை
கலைஞர் = பெரியாரின் வழிவந்த சூத்திரத் தலைவர்
பார்ப்பான் x சூத்திரன்
(ஞாநி + விகடன்) x கலைஞர் => எனவே விகடன் கட்டுரை

எனவே... போடு பார்ப்பான் தலையில் நாலு சாத்து!

-*-

அ.மார்க்ஸ் ஒரு கான்ஸ்பிரசி தியரியை முன்வைத்தார்.
கலைஞர் x மாறன் சகோதரர்கள் பிரச்னைக்குப் பிறகுதான் விகடன் கலைஞருக்கு எதிராக எழுதுகிறது... இதற்கு விகடன் டெலிவிஸ்டா - சன் டிவி சீரியல் வழியாக ஏதேனும் தொடர்பு இருக்குமோ...
அ.மார்க்ஸ் அடுத்து கனிமொழி, இரவிக்குமார், சல்மா ஆகியோர்மீது கடுமையான ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.
கலைஞர் மீது இன்று என்ன தைரியத்தில் இப்படி எல்லாம் எழுதமுடிகிறது? காலச்சுவடு கொண்டுவந்த பெரியார் சிறப்பிதழில் பெரியாரை அவமரியாதை செய்து (அவர் பெண்பித்தர்... தலித்களுக்கு எதிரானவர்...) எழுதியிருந்ததை யாருமே பெரிய அளவில் கண்டிக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக இன்று யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் அவதூறாகப் பேசமுடிகிறது. இதற்கு கனிமொழியும் பிறரும் பதில் சொல்லவேண்டும்.
இரவிக்குமாரும் சல்மாவும் அடுத்து பேசினாலும் இதைத் தொட்டே செல்லவில்லை. கனிமொழி பேசவில்லை. ஆனால் அவர் சார்பாகப் பேசிய பிரபஞ்சன், அந்த இதழுக்கு அடுத்த இதழிலிருந்து கனிமொழி காலச்சுவடு ஆசிரியர் குழுவிலிருந்து விலகிவிட்டார் என்ற தகவலை வெளியிட்டார்.

-*-

தினமணி, காலச்சுவடு, கார்ட்டூனிஸ்ட் மதி ஆகியோரும் திட்டு வாங்கினர்.

-*-

பேசிய பலரும் பெரியாரையும் கலைஞரையும் ஒப்பிட்டுப் பேசினர். இரவிக்குமார் தனது 20+ நிமிடப் பேச்சில் பெரியாரைக் கொண்டுவரவேயில்லை. பார்ப்பனர்களையும் இழுக்கவில்லை.

-*-

மனுஷ்ய புத்திரன் பேசும்போது பாய்ஸ் படப் பிரச்னையின்போது ஞாநி, எழுத்தாளர் சுஜாதாவின் ‘இருதய ஆபரேஷனை' குறிப்பிட்டு கேவலமாக எழுதியதை சொன்னார்.

-*-

இருவர் (அரசு, மணி), “இந்தாளு போடற நாடகமே புரியாது” என்று, ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழுவை ஒரு பிடி பிடித்தனர். அதைக் கண்டிக்க தனியாக ஒரு கூட்டம் நடத்தியிருந்தால் தேவலை.

-*-

விழாவின் முக்கியமான கான்ஸ்பிரசி தியரி - கிட்டத்தட்ட அனைவருமே ஏற்றுக்கொண்டது இதுதான்.
கலைஞர் இருந்தால் சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிடுவார். அதைத் தடுக்கவேண்டும். எனவே சிலர் (பார்ப்பான்கள்?) ஒன்றுசேர்ந்து திட்டம் தீட்டி இப்படி கலைஞருக்கு எதிரான காரியங்க்களில் இறங்கியுள்ளனர். பத்திரிகைகள் ஒன்றுசேர்ந்து கலைஞரைத் தாக்குவதற்கு இதுதான் காரணம். அங்கே டில்லியில் நீதிமன்றத்தைக் கைக்குள் போட்டுக்கொண்டு முட்டுக்கட்டை போடுகின்றனர். இங்கே இவரை எப்படியாவது துரத்திவிட நச்சைக் கக்குகின்றனர்.
-*-

கண்டனக் கூட்டத்தில் பலரும் சொன்னது:
ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் ஆட்டோ போயிருக்கும். இங்கு கண்ணியமான முறையில் எழுத்து/பேச்சு சுதந்தரத்துக்கு எந்த பங்கமும் வராத வகையில், குடியாட்சி முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மைதான். ஆனால் ஆட்டோ வரும் என்றெல்லாம் பயந்து அடுத்த ஜெயலலிதா ஆட்சியில் (அப்படி ஒன்று ஏற்பட்டால்) ஆட்சியாளரின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதை நிறுத்தாதீர்கள்.

ஆட்டோ அனுப்பாத ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்போம். எந்த ஆட்சியாளர் காலத்திலும் ஆட்டோக்கள், ரவுடிகள் மூலம் நமது சுதந்தரம் தடைப்படுவதை அனுமதியோம்.

-*-

ஒலிப்பதிவுகள்
மணிகண்டன்
மதுமிதா

Sunday, October 21, 2007

ஞாநிக்கு எதிரான கண்டனக் கூட்டம் - ஒலிப்பதிவு

சென்னை வாணி மஹாலில் நேற்று (20 அக்டோபர் 2007) நடைபெற்ற கண்டனக் கூட்டத்தின் முழுமையான ஒலிப்பதிவு.

[இதற்குமுன் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள இங்கே செல்லுங்கள்.]

வரவேற்பு: கவிஞர் இளையபாரதி (MP3, 3.31 min, 1.61 MB) | Other formats
முகவுரை: கவிஞர் தமிழச்சி (MP3, 10.15 min, 4.69 MB) | Other formats

சிறப்புரைகள்:

கவிஞர் அறிவுமதி (MP3, 26.27 min, 12.1 MB) | Other formats
கவிஞர் கரிகாலன் (MP3, 7.58 min, 3.65 MB) | Other formats
பேராசிரியர் அ.மார்க்ஸ் (MP3, 14.29 min, 6.63 MB) | Other formats
கவிஞர் சல்மா (MP3, 7.29 min, 3.43 MB) | Other formats
எழுத்தாளர் இமையம் (MP3, 9.33 min, 4.37 MB) | Other formats
சட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார் (MP3, 23.42 min, 10.8 MB) | Other formats
பேராசிரியர் வீ.அரசு (MP3, 8.30 min, 3.89 MB) | Other formats
தோழர் சி.மகேந்திரன் (ஆசிரியர் - தாமரை) (MP3, 20.38 min, 9.45 MB) | Other formats
பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ்.மணி (MP3, 17.34 min, 8.04 MB) | Other formats
கவிஞர் மனுஷ்ய புத்திரன் (MP3, 10.13 min, 4.67 MB) | Other formats
எழுத்தாளர் பிரபஞ்சன் (MP3, 8.25 min, 3.85 MB) | Other formats

சிறப்புப் பாடல்: இறையன்பன் குத்தூஸ் (MP3, 3.40 min, 1.68 MB) | Other formats

தலைமையுரை: பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் (MP3, 22.41 min, 10.3 MB) | Other formats

நன்றியுரை: கவிஞர் தமிழச்சி (MP3, 1.34 min, 742 KB) | Other formats

Saturday, October 20, 2007

புத்தக உரிமைச் சந்தை - 1

புத்தகச் சந்தை என்பது புத்தகத்தைப் பதிப்பிப்பவர் (பதிப்பாளர்), புத்தகத்தை விற்பனை செய்பவர் (விநியோகஸ்தர், கடைக்காரர்), புத்தகத்தை வாங்குபவர் (நுகர்வோர்) ஆகியோருக்கு இடையேயான சந்தையைக் குறிப்பது. பெரும்பான்மையான புத்தகக் கண்காட்சிகள் இந்தச் சந்தையைக் குறிவைத்து இயங்குகின்றன. உதாரணம்: சென்னை புத்தகக் கண்காட்சி. பதிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் கடையைப் பரப்புவார்கள். படிப்பவர்கள் வந்து புத்தகத்தை வாங்கிச் செல்வார்கள். இது b2c (business to consumer) சந்தை.

ஆனால் இந்தியர்கள் அதிகம் அறியாத ஒன்று புத்தக உரிமைச் சந்தை. எழுத்தாளர்கள், எழுத்தாளர்களின் பிரதிநிதிகள், பதிப்பாளர்கள் மட்டுமே இயங்கும் சந்தை இது. அதாவது b2b (business to business) சந்தை.

உலகில் அதிகமாக விற்கும் ஹாரி பாட்டர் அல்லது டா விஞ்சி கோட் போன்ற புத்தகங்களை எடுத்துக்கொள்வோம். இதுபோன்ற புத்தகங்கள் எவ்வாறெல்லாம் விற்பனை செய்யப்படலாம்?

* புத்தகம் எழுதப்பட்ட மூல மொழியில் உலகெங்கும் ஒரே பதிப்பாளரால் விற்பனை செய்யப்படலாம்.

* ஆனால் அந்தப் பதிப்பாளருக்கு உலகெங்கும் விற்பனை செய்யக்கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். ஹாரி பாட்டர் புத்தகங்களை பிரிட்டனில் பதிப்பித்து விற்பனை செய்ய உரிமம் பெற்றிருந்தது ப்ளூம்ஸ்பரி நிறுவனம். அமெரிக்காவில் அந்த நிறுவனத்துக்கு கட்டுமானம் கிடையாது. அமெரிக்காவில் இந்தப் புத்தகங்க்களுக்கான 'ஏலம்' நடைபெற்றபோது ஸ்கோலாஸ்டிக் என்ற நிறுவனம் அமெரிக்காவில் பதிப்பித்து விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றது.

அதாவது நாம் மேலே குறிப்பிடுவது ‘நிலப்பகுதிவாரிப் பதிப்பு உரிமை' - Territorial Publishing Right.

* மறு அச்சாக்கும் உரிமை (Reprint Right). புது பதிப்பு என்றால் பதிப்பாளர் புத்தகத்துக்குள் பல இடங்களில் கையை வைக்கலாம். அமெரிக்காவில் ஸ்பெல்லிங்க் மாற்றம் பெறும். சில பிரிட்டானியச் சொல்லாக்கங்கள் மாற்றம் அடையும். அட்டை மாற்றம் காணும். புத்தகத்தில் தலைப்பே மாற்றம் பெறும். உலகெங்கும் Harry Potter and the Philosopher's Stone என்ற பெயரில் வெளியான புத்தகம் அமெரிக்காவில் Harry Potter and the Sorcerer's Stone என்ற பெயரில் வெளியானது. ஆனால் மறு அச்சாக்கும் உரிமையில் இதுபோன்ற மாற்றங்கள் ஏதும் இருக்கா. அப்படியே அச்சாக்கி, அட்டையை வேண்டுமானால் மாற்ற அனுமதி கிடைக்கலாம்.

பொதுவாக அமெரிக்கா, பிரிட்டனில் வெளியாகும் பல புத்தகங்கள் இந்தியாவில் கிடைக்கா. சில, இறக்குமதி செய்யப்பட்டு மிக அதிக விலையில் இந்தியாவில் விற்பனையாகும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவற்றின் மறு அச்சாக்கும் உரிமையை சில இந்திய நிறுவனங்கள் வாங்கலாம். இந்த நிறுவனங்களுக்கு எடிட்டோரியல் திறமை ஏதும் இருக்கவேண்டிய தேவையே இல்லை.

* மொழிமாற்றிப் பதிப்பிக்கும் உரிமை (Translation Right). ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்து புத்தகங்களைப் பதிப்பித்து, அவற்றை உலகமெங்கும் விற்பனை செய்யும் உரிமை. இது பல வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

* சுருக்கிப் பதிப்பிக்கும் உரிமை (Abridgmenet Right). பல புத்தகங்களை உரிமம் பெற்று சுருக்கு, சில (அதிகாரபூர்வ) மாறுதல்களைச் செய்து, மீண்டும் பதிப்பிப்பது.

* மலிவுவிலைப் பதிப்பு உரிமை: பல வருடங்களாக விற்பனை ஆகும் புத்தகங்களின் உரிமையைப் பெற்று அவற்றை மலிவு விலைப் புத்தகங்களாக அச்சிட்டுக் கொண்டுவருவது. இதற்கு மாற்றாக சில புத்தகங்களை அதிகவிலைப் புத்தகங்களாக (Coffee-table books, Premium Production) உருவாக்கி விற்பதும் சாத்தியமே.

* வேறு பல உரிமங்களும் சாத்தியமே:

ஒற்றைப் பதிப்பு (Single Print run Right) என்பது தமிழகத்திலேயே நடைமுறையில் இருப்பது. ரமணி சந்திரன் கதைகள் ஒற்றைப் பதிப்பு முறையில் மாதநாவலாக வந்து, பின்னர் அதுவே அருணோதயம் பதிப்பகம் வழியாக தொடர்ச்சியாக வெளியிடப்படும்.

தொடர்நாவல் உரிமம் (Serialisation Right) என்பதும் நமக்குத் தெரிந்ததுதான். தமிழகத்தில் பொதுவாக தொடர்கதையாக (கட்டுரையாக) வந்தவை, பின் முழுப் புத்தகமாக அச்சேறும். ஆனால் பிற இடங்களில், புத்தகமாக வந்தவற்றை, தொடர் கதையாக/கட்டுரையாக மறுபிரசுரம் செய்வார்கள்.

திரைப்படமெடுக்கும் உரிமை (Cinema Rights) நமக்குக் கொஞ்சம் புதுசு. பொதுவாக தமிழ் இயக்குனர்கள் கதைகளைத் திருடி, உல்டா செய்து, நான்கைந்து இடங்களிலிருந்து வெட்டி ஒட்டி, கடைசியில் யாருக்கும் காசு கொடுக்காமல் ஒப்பேற்றி விடுவார்கள். அல்லது காசு கொடுத்து உரிமம் வாங்கினாலும் கதையைக் கைமா செய்துவிடுவார்கள். ஹாலிவுட்டில் ஓரளவுக்கு ஒழுங்காக, காசு கொடுத்து வாங்கி கதையை அப்படியே சினிமாக்குவது நடந்துவருகிறது.

ஒலிப்புத்தக உரிமை (Audio book Rights) இப்பொழுது பிரபலமாகி வருகிறது. புத்தகத்தை அப்படியே படித்து ஒலிப்பதிவாக்கி விற்பனை செய்வது.

மின் புத்தக உரிமை (E-book Rights) என்பதும் நம் அனைவருக்கும் தெரிந்ததே. இப்பொழுது மின் புத்தகப் படிப்பான் கருவிகள் (சோனி ரீடர், ஐரெக்ஸின் இலியட், இதோ வந்துவிடும் என்று சொல்லப்படும் அமேசானின் கிண்டில்) போன்றவை. கணினியில் படிப்பது கண்களுக்கு எளிதான வேலை அல்ல. ஆனால் மின் புத்தகப் படிப்பான்கள் கண்ணுக்கு இதமாக உள்ளன.

மேலும் பல உண்டு. இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக்கொள்வோம். அடுத்த பதிவுகளில் இந்த உரிமங்களுக்கு உள்ளே சென்று ஆழமாகப் பார்ப்போம்.

Monday, October 08, 2007

ஃபிராங்க்ஃபர்ட் புத்தகக் காட்சி

நியூ ஹொரைசன் மீடியா நிறுவனம் இரண்டாவது ஆண்டாக, ஃபிராங்ஃபர்ட் புத்தகக் காட்சியில் பங்குபெறும். எங்களது அரங்கு முகவரி 6.0 E 904.