Tuesday, March 27, 2018

தூண்டில் கயிறு - சுபா

"தமிழ்ப் புத்தக நண்பர்கள்" என்ற குழுவின் மாதாந்திரப் புத்தக விமர்சன நிகழ்ச்சியில் இன்று நான் பேசியது.

**

தூண்டில் கயிறு - சுபா
ஈகிள்ஸ் ஐ டீம் தூள்பறத்தும் சுபாவின் மாஸ்டர்பீஸ்!

தமிழில் பல்ப் நாவல்களுக்கு என்று ஒரு பொற்காலம் இருந்தது. ‘பல்ப்’ என்பதை நான் அதன் மோசமான பொருளில் முன்வைக்கவில்லை. எளிதில் படித்துமுடித்துவிடக்கூடிய, குறைந்தபட்ச உத்தரவாதமான மகிழ்ச்சியைத் தரக்கூடிய, படித்துமுடித்ததும் தூக்கி எறிந்துவிடக்கூடியமாதிரியான புத்தகம். விலை குறைவாக இருக்கவேண்டும். ஒரு பேருந்துப் பயணத்தில் படித்துமுடித்துவிடலாம். அருகில் உட்கார்ந்திருப்பவர் கடன் கேட்டால், தைரியமாகக் கொடுத்துவிடலாம். அவர் எடுத்துக்கொண்டு போனாலும் சேதமில்லை.

1980களின் இரண்டாம் பாதியும் 1990களின் முதற்பாதியும்தான் இந்தக் காலம். கேபிள் டிவி வந்திருக்கவில்லை. தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் ஆரம்பித்திருக்கவில்லை. திரைப்படங்கள் என்றால், திரையரங்கு சென்றுதான் பார்க்கவேண்டும். அல்லது தூரதர்ஷனில் காட்டப்படும் வாரம் ஒருமுறை தமிழ்ப் படம். அதுவும் எல்லோருக்கும் கிடைக்காத ஒன்று.

வார இதழ்களில் தொடர்கதைகளும் சிறுகதைகளும் வெளியாகின. ஆனால், நெடுங்கதைகளைப் படிக்க வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. தொடர்கதைகளையெல்லாம் வாராவாரம் கிழித்து பைண்ட் செய்துவைத்துப் படிக்கவேண்டும். அல்லது புத்தகமாக வெளியாகியிருந்தால் அவற்றை வாங்கவேண்டும். அன்றுமுதல் இன்றுவரை புத்தகப் பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை நாடு முழுதும் விற்பனை செய்வதற்கு உருப்படியாக ஒரு முயற்சியையும் செய்ததில்லை. தெருக்கோடிக் கடையிலும் வார இதழ் கிடைக்கும். அச்சிட்ட கதைப் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று பெரும்பாலானோருக்குத் தெரியவே தெரியாது. மேலும் வார இதழ்களின் விலை மிகக் குறைவு. அச்சிட்ட புத்தகங்களின் விலை, மிக அதிகம். எளிய மக்கள் அவற்றை வாங்க மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கும் நெடுங்கதைகளைப் படிக்கவேண்டும் என்ற பெரும் தாகம் இருந்தது.

குமுதம் குழுமத்திலிருந்து மாலைமதி, தினத்தந்தி குழுமத்திலிருந்து ராணிமுத்து ஆகியவை மாதாமாதம் முழு நெடுங்கதைகளை வெளியிட்டன. மேற்கொண்டு ஓரிரு இதழ்கள் இதேபோல் இருந்திருக்கலாம். எனக்கு ஞாபகம் வரவில்லை. இந்தச் சில இதழ்களால் மக்களின் படிப்புத் தாகத்தைத் தீர்த்துவைக்க முடியவில்லை.

இந்த நேரத்தில்தான் “மாத நாவல்கள்” என்னும் பிராண்ட் உருவானது. அடிப்படையில் ஒரு நெடுங்கதை. அழகான ஆர்ட் வொர்க், லேமினேஷனுடன் அட்டை. உள்ளே பெரும்பாலும் மோசமான சாணித்தாள்தான். கொஞ்சம் ஜோக், ஓரிரு மோசமான கவிதைகள், இதழ் எடிட்டர் மிகவும் சாமர்த்தியசாலி என்று தன்னைக் காட்டிக்கொள்ளும்விதமாக கேள்வி பதில் வேறு எழுதுவார். இந்தத் துறையில் மிகப்பெரும் முன்னோடி ஜி. அசோகன் என்பவர். இன்றும் இதே தொழிலில் இருக்கிறார். ஆனால் அந்தப் பொற்காலத்தைப் போல இப்போது இல்லை என்று சொல்லலாம்.

ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார், புஷ்பா தங்கதுரை, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்றோர் துப்பறியும் நெடுங்கதைகளை எழுத ஆரம்பித்தது இந்தச் சூழ்நிலையில்தான். ஜி. அசோகன் மட்டுமின்று வேறு பலரும் இந்தத் துறையில் ஈடுபட்டிருக்கலாம். இதன் முழுமையான வரலாறு எனக்குத் தெரியாது.

பெரும்பாலான ஆண் வாசகர்களை ஈர்க்க இந்தக் கொலைக் கதைகள் பயன்பட்டன. மென் பாலியல் சித்திரிப்புகள், சீண்டல்கள் விரவிவரும். சில கொடும் குற்றச் செயல்கள் நிகழும். ரெகுலர் ஹீரோக்கள் இந்தக் குற்றச் செயல்களைத் துப்பறிந்து குற்றவாளியைக் கண்டுபிடித்துவிடுவார்கள். பெரும்பாலும் காவலர்கள் டம்மிகள்தான்.

சுஜாதாவின் துப்பறியும் கதைகளில் வரும் கணேஷ்-வசந்த் இணையரை நீங்கள் பலரும் படித்திருப்பீர்கள். இருவரும் வழக்கறிஞர்கள். ஆனால் சந்தர்ப்பச் சூழ்நிலை காரணமாக குற்றச் செயல்களைத் துப்புத் துலக்குவதற்குள் நுழைந்தவர்கள். இவ்விருவரை ஆர்தர் கோனான் டாயிலின் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் வரும் ஷெர்லாக் ஹோம்ஸ் - டாக்டர் வாட்சனோடு பொருத்திப் பார்க்கலாம்.

ஹோம்ஸ் அதீத ஆற்றல்கள் பொருந்தியவர். அதி புத்திசாலி. ஆனால் அத்துடன் கடுமையான உழைப்பும் அவரிடம் இருந்தது. பல துறை வித்தகர். ரசாயனங்கள், விஷங்கள் ஆகியவை தொடர்பான அவருடைய அறிவாற்றல் அபாரமானது. சுருட்டின் சாம்பலைப் பார்த்தே அது எந்தவகைச் சுருட்டு என்று கண்டுபிடித்துவிடுவார். மண் தீற்றலைக் கொண்டே அது லண்டனின் எந்தப் பகுதியிலிருந்து வந்தது என்று அறிந்துவிடுவார். அவருடைய கூட்டாளி வாட்சன் உண்மையில் அந்தக் கூட்டணியில் எந்தப் பெரிய செயலையும் செய்துவிடவில்லை. அவர் ஒரு டம்மி. ஆனால் அவர் இந்தக் கதைகளில் இருப்பது நமக்காக. இறுதியில் கதை எப்படி நகர்ந்தது என்பதை விவரிக்க, வாட்சன் நமக்குத் தேவை. எப்போதாவது அவருடைய துப்பாக்கி பயன்படும். எப்போதாவதுதான்.

ஆனால் சுஜாதாவின் வசந்த், அப்படிப்பட்ட டம்மி கிடையாது. கணேஷுக்கு இணையானவன். இள ரத்தம் என்பதால் கொஞ்சம் அவசரப்பட்டுவிடுவான். பெண்களிடம் அதிகம் வழிவான். ஆனால் படு சுட்டியும்கூட. கணேஷுக்கு வசந்த் மிக மிக அவசியம். ஷெர்லாக் ஹோம்ஸ், வாட்சன் இல்லாமலேயே வழக்குகளை ஊதித் தள்ளிவிடுவார். பல வழக்குகளை அவர் அப்படிக் கையாண்டிருக்கிறார். ஆனால் வசந்த் என்ற பாத்திரத்தை சுஜாதா உருவாக்கியதும் கணேஷுடன் வசந்த் ஒட்டிக்கொண்டு அவர்கள் இரட்டையர் ஆகிவிட்டனர்.

**
இப்போது சுபாவுக்கு வருவோம்.

இன்று தமிழ் சினிமாவில் கதை-திரைக்கதை-வசனத்தில் கோலோச்சிக்கொண்டிருக்கும், பல வெற்றிப்படங்களைத் தந்திருக்கும் சுரேஷ் - பாலா இரட்டையர்களுக்குப் பல முகங்கள்.

நாம் மேலே பார்த்தபடி துப்பறியும் மாத நாவல்கள் பலவற்றை எழுதியுள்ளனர். நல்ல பத்திரிகையாளர்களும்கூட. நல்ல பல சிறுகதைகள் எழுதியுள்ளனர். பக்தித் தொடர்கள் எழுதியுள்ளனர். ஜக்கி வாசுதேவின் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடர் விகடனில் வெளியானது. அதனை எழுதியவர்கள் சுபா. கல்கியில் எக்கச்சக்கமான சினிமா விமரிசனங்கள் எழுதியுள்ளனர்.

புகைப்பட நிபுணரான கே.வி.ஆனந்த் சினிமாத்துறைக்குள் நுழைந்தபோது அவருடனான நட்பின் வழியாக அத்துறைக்குள் புகுந்தவர்கள் சுபா (என்று நினைக்கிறேன்). அது அவர்களுக்குப் பெரிய வாய்ப்பாகப் போனது. அவருடைய சமகாலத்தவர்களான பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார் ஆகியோர் திரைத்துறையில் பிரகாசிக்க முடியவில்லை. சீரியலும் அவர்களுக்கு அவ்வளவாக செட் ஆகவில்லை. தேவிபாலா, இந்திரா சௌந்தரராஜன் ஆகியோர் சீரியல் எழுதுவதில் தங்கள் கவனத்தைச் செலுத்தினர். ஒருவிதத்தில் ‘பல்ப்’ துப்பறியும் கதைகள் வழியாக சினிமாவுக்குள் நுழைந்து அங்கே வலுவான ஓரிடத்தில் தொடர்ந்துகொண்டிருப்பது சுபா மட்டும்தான்.

**

சுபாவின் துப்பறியும் கதைகளில் ‘ஈகிள்ஸ் ஐ’ என்றதொரு டிடெக்டிவ் நிறுவனம் வரும். முதன்மையானவர்கள் நரேந்திரன், வைஜயந்தி. ராஜேஷ் குமாரின் விவேக் - ரூபலா ஜோடியைப்போல. பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத் - சுசீலா போல. ஹோம்ஸ் - வாட்சன், கணேஷ் - வசந்த் இருவருமே ஆண் ஜோடிகள். ஆனால், ஒரு ஆண்-பெண் ஜோடியைக் கொண்டுவந்தால் அவர்களுக்கிடையிலான சில்மிஷங்கள், சண்டைகள் போன்றவைமூலம் ஆண் வாசகர்களுக்கு மேலும் கொஞ்சம் கிளுகிளுப்பூட்டலாம். இதனை சுபாவும் புரிந்துகொண்டதனால் உருவானவர்கள்தான் நரேந்திரன் - வைஜயந்தி இணையர்கள். ஆனால் பல நேரங்களின் வைஜயந்தி ஒரு லயபிலிட்டியும்கூட. இவ்விருவர் தவிர, ஜான் சுந்தர், அனிதா என்று இன்னொரு ஜோடித் துப்பறிவாளர்கள் + ஈகிள்ஸ் ஐயின் நிறுவனர் ராம்தாஸ். ஆனால் பின்னே சொன்ன மூவரும் கொஞ்சமாகத்தான் கதைக்குப் பங்களிப்பார்கள்.

தூண்டில் கயிறு கதைக்கு வருவோம். மாத நாவலாக மூன்று பாகங்களாக வெளியானது. பொதுவான மாத நாவல்களோடு ஒப்பிடும்போது கொஞ்சம் நீண்ட கதை.

ரஞ்சித் என்ற இளைஞனின் கொலையுடன் கதை தொடங்குகிறது. ஆனால் கதையில் ரஞ்சித்தின் இடம் மிகக் குறைவுதான். வெகு விரைவில் ராஜபூபதி என்ற கதையின் முக்கியக் கதைமாந்தரைச் சந்திக்கிறோம். பெயரைப் பார்த்தால் ஜமீந்தார் மாதிரி இருக்கிறது என்றாலும், நவீனத் தொழில் ஒன்றைச் செய்கிறார். மீன்பிடித் தூண்டில்களை உருவாக்கி உலகம் முழுவதும் விற்பனை செய்யும் தொழிலதிபர். அவருடைய ஒரே மகள் சுபத்ராவைத்தான் ரஞ்சித் காதலிக்கிறான். ஆனால் கொலை செய்யப்படுகிறான்.

ராஜபூபதி வாழ்க்கையில் இரண்டு பேய்கள் குறுக்கிடுகின்றன. அவை அவருடைய சகோதரன் சுந்தர பூபதியும் அவனுடைய மனைவி அமராவதியும். இந்தப் பேய்கள் உண்மையில் யார் என்பதைக் கண்டறிய ராஜபூபதி ஈகிள்ஸ் ஐ நிறுவனத்தை நாடுகிறார். நரேந்திரன் உள்ளே வருகிறான்.

சுந்தர பூபதியும் அமராவதியும் மின்விபத்தில் இறந்துபோயிருக்கின்றனர். ஆனால் ராஜபூபதிதான் இவ்விருவரையும் கொலை செய்ததாக ஒரு பேச்சும் உள்ளது. இவை இரண்டும் உண்மையில் பேய்தானா என்பதைக் கண்டறிவதற்குள் மேலும் பல மர்மங்கள். புதிய திருப்பங்கள். மேலும் சில கொலைகள்.

இறுதியில், சுபாவுக்குப் பிடித்தமான ஹெராயின் கடத்தலும் சேர்ந்துகொள்கிறது. மர்மங்கள் முடிச்சவிழ்க்கப்படுகின்றன. ராஜபூபதிதான் உண்மையான வில்லன். பேய்கள் பேய்கள் கிடையாது. அந்த வேஷம் போட்டுக்கொண்ட இருவர். அவர்கள் இருவரும் யார்? தொழிற்சாலையில் என்ன நடக்கிறது? ராஜபூபதிக்குப் பணம் கொழிப்பதன் மர்மம் என்ன? ஒரு படுபயங்கர சினிமாத்தனமான கார், லாரி சேஸ் சென்னையின் தெருக்களில் நடக்கிறது. வில்லன் ராஜபூபதி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சாகிறான். கடைசியில் சுபத்ராவுடன் நரேந்திரன் செய்யும் சில வழிசல்களுடன் கதை முடிகிறது.

**

இந்தக் கதையைத் தனியாக விமர்சிப்பது என்றால், இதில் விமர்சிக்க அதிகம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தத்துவார்த்தச் சிக்கல்கள் கொண்ட தஸ்தாயேவ்ஸ்கியின் கதையல்ல இது. எளிய மக்கள், விரைவாகப் படித்து, இன்புற நினைக்கும் ஒரு கதைதான். படித்தவுடன் அதிகம் நினைவில் இருக்கக்கூடிய கதைகள் அல்ல இவை.

குறிப்பிட்ட வணிகச்சூழல், படிப்போரின் பின்புலம் இரண்டையும் மனத்தில் வைத்துத்தான் இம்மாதிரிக் கதைகளை அலசவேண்டும். பெரும்பாலும் ஓரிரு மாதங்களுக்குள்ளாக எழுதப்பட்டிருக்கவேண்டும். கம்ப்யூட்டர் காலத்துக்கு முந்தைய கதைகள் இவை என்று கருதுகிறேன். எனவே கையால் எழுதப்பட்டிருக்கவேண்டும்.

களம், சூழல், பாத்திரங்கள் ஆகியவற்றில் பல குறைபாடுகள் உள்ளன. புத்தகம் ஹெராயின் கடத்தல் பற்றியதல்ல. அது வெறும் ஒரு ஊறுகாய் மட்டும்தான். கதை படிப்போருக்கு ஹெராயின் என்பதே அந்நியமானது. அதுகுறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. நாம் கொலம்பியாவிலும் இல்லை, அமெரிக்காவிலும் இல்லை. இந்தியாவிலும் ஹெராயினும் போதைப்பொருளும் நிச்சயம் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் இந்தியா ஹெராயின் ஏற்றுமதிக் களமாக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

குற்றச் செயல் புரிபவர்கள், அதுவும் கூடவே பல குண்டர்களை வைத்துக்கொண்டு கொலை செய்வதில் அஞ்சாதவர்கள், ஈகிள்ஸ் ஐ டிடெக்டிவ் ஏஜென்சி போய் நரேந்திரனை அழைத்துக்கொண்டுவந்து பேய் உண்மையா இல்லையா என்றெல்லாம் கண்டுபிடிக்கச் சொல்வது, வேட்டிக்குள் ஓணானை விடுவதற்கு ஒப்பானது. ஆனாலும் நம் கதைகளில் இவை தொடர்ந்து நடக்கின்றன. சம்பவம் நடக்கும் இடத்தைச் சுற்றி பத்து தடியர்களை கையில் துப்பாக்கியுடன் உலவவிட்டால் உண்மையைக் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் கதை இல்லாமல் போயிருக்கும்.

சுபா இணையர்கள் புத்திசாலிகள். அவர்களால் நிச்சயமாக மிகச் சுவாரசியமான துப்பறியும் கதைகளை எழுத முடியும். அதற்கு ஆழமான ஆராய்ச்சி தேவை. களம் பற்றிய புரிதல் தேவை. சென்னைக்கு அருகில் எண்ணூரில் ஒரு எஸ்டேட்டில் ரப்பர், தேக்கு, மிளகு ஆகியவையெல்லாம் விளையுமா என்று எனக்குத் தெரியாது. சாத்தியம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். மேலும் இணையம், கூகில் ஆகியவற்றின் பெரும் வளர்ச்சிக்குமுன் ஆராய்ச்சி செய்வது என்பதே கடினமானது என்பதை மனத்தில் இருத்திவைத்துக்கொள்ளுங்கள்.

கூகில் பெருவளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் இம்மாதிரியான கதைகளை எழுதுவதை விட்டுவிட்டு சினிமாத்துறைக்குள் சுபா நுழைந்துவிட்டனர். இப்போது இம்மாதிரியான கதைகளை எழுதுவதில் இவர்களுக்குப் பெரிய நாட்டம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அப்படியே இன்று தீவிர ஆராய்ச்சிக்குப்பின் சுவாரசியமான துப்பறியும் கதை எழுதினால் புத்தகங்கள் பல ஆயிரம் விற்கும் என்ற உத்தரவாதம் ஏதும் இல்லை.

ஒருவிதத்தில், கேபிள் டிவியின் அசுர வளர்ச்சிக்குப்பிறகு, மாத நாவல்கள் அழிந்துபோயின என்றுதான் சொல்லவேண்டும். இன்று அவை விற்பது மிக மிகக் குறைவு. ராஜேஷ் குமார் மட்டும்தான் தொடர்ந்து புதிதாக இவ்வகைக் கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இன்றைய சூழலும் களமும் புதியவை. குற்றச் செயல்களும் புதியவை. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, துப்பு துலக்கும் வழிமுறைகளிலும் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஆங்கிலத்தில் எண்ணற்ற புதிய மர்ம நாவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவில் உட்கார்ந்துகொண்டே பிரிட்டிஷ் புனைபெயரில் இங்கிலாந்தில் நடப்பதுபோல எழுதும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அமேசான் மின்புத்தகமாக வெளியிட்டே கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் கேள்வி.


அத்தகைய வாய்ப்பு தமிழிலும் விரைவில் ஏற்படலாம். கோடிகளில் இல்லாவிட்டாலும் லட்சங்களிலாவது சுபாவுக்கு வாய்க்க வாழ்த்துவோம்.

Thursday, March 22, 2018

மேலும் பல மதங்கள் உதயமாகுமா?

[மின்னம்பலம் இணைய இதழுக்காக எழுதியது.]

கர்நாடக அமைச்சரவை, ‘லிங்காயத்’ என்பது தனி மதம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. அவ்வாறு அறிவிக்கக் கோரி மத்திய அரசை அணுகியுள்ளது. இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், லிங்காயத் மதமானது சமணம், பௌத்தம், சீக்கியம் போல இந்தியாவில் ஒரு சிறுபான்மை மதமாக இருக்கும்.

இதுநாள்வரையில் இந்து மதத்தின் ஒரு பிரிவாகக் கருதப்பட்டுவந்த லிங்காயத்துகள், தனி மதமாகத் தங்களை அறிவிக்கக் கோரிப் போராட்டம் நடத்திவந்தனர். கர்நாடகத்தில் வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பாரதிய ஜனதா கட்சியை செக்மேட் செய்ய ஒரு சரியான வாய்ப்பாக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமய்யா இந்த முடிவை எடுத்துள்ளார்.
மத்திய அரசு இதை எதிர்த்தாலும் பிரச்சினை, ஏற்றாலும் பிரச்சினை என்ற நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதைத்தான் சித்தராமய்யா எதிர்பார்த்திருந்தார்.

உண்மையில், இந்து மதம் என்பது கலவையானது. முற்றிலும் முரண்படக்கூடிய பல வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடிக்கும் பல குழுக்கள் ஒன்றுசேர்ந்து இந்துக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பல கடவுள்கள், பலவிதமான கோயில்கள், பல்வேறு வழிபாட்டு முறைகள் என்று பிரிந்து கிடந்தாலும், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதுதான் இவர்கள் அனைவரும் ‘இந்து’ மதத்தினர் என்று குறிக்கப்பட்டனர்.

வாக்கு வங்கி அரசியலின் எதிர்வினை

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்து ஒற்றுமை என்ற பெயரில் இந்துக்களை ஒருங்கிணைத்து அவர்களை ஒரு பெரும் வாக்கு வங்கியாக ஆக்க முற்பட்டதற்கான எதிர்வினைதான் இப்போது கர்நாடகத்தில் நடைபெறுவது. அயோத்தி ராமர் கோயில் பிரச்சினை தொடங்கி, பசுப் பாதுகாப்பு, கிறிஸ்தவ / இஸ்லாமிய மதமாற்றத்துக்கு எதிரான போராட்டம், ‘லவ் ஜிகாத்’ எனப்படும் மதமாற்றத் திருமணங்களுக்கு எதிரான போராட்டம் போன்றவற்றை பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.எச்.பி அமைப்பும் கையில் எடுப்பதன் அடிப்படை, இந்துக்களை அரசியல் வாக்கு வங்கியாக உணர்வுரீதியாக ஒருங்கிணைப்பது. இதனாலேயே இந்துக்களின் எண்ணிக்கையைக் குறைத்து லிங்காயத் என்ற புதிய மதத்தை உருவாக்கும் முயற்சி பாஜகவையும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் அதிகம் துன்புறுத்தும். ஆனால், கொஞ்சம் கவனமாக யோசித்துப் பார்த்தால் பாஜக கவலைப்பட வேண்டியதில்லை என்றுதான் தோன்றுகிறது.

இந்தியாவில் மதச் சிறுபான்மையினருக்கு என்று சில வசதிகள் உள்ளன. கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் அவர்களுக்குச் சிக்கல்கள் குறைவு. பிற நிறுவனங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகள் மதச் சிறுபான்மையினருக்குக் கிடையாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. ‘அனைவருக்கும் கல்வி உரிமை’ சட்டத்தின் ஷரத்துகள் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தா. இந்தக் காரணங்களுக்காகத்தான் ராமகிருஷ்ண மடமும் ஒரு காலத்தில் தங்களைத் தனி மதமாகக் கருதக் கோரினர். ஆனால், பின்னர் பின்வாங்கிக் கொண்டனர்.

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் மதச் சிறுபான்மையினருக்குக் கிடைக்கும் கல்விச் சலுகையைக் கண்டு பொறுமுகின்றனர். ஆனால், ஆட்சியில் இருக்கும்போது இந்தச் சட்டங்களை மாற்ற அவர்கள் முனைப்பு காட்டுவதில்லை. சம ஆடுதளத்தை உருவாக்க அவர்கள் முனைவதில்லை. அதற்குப் பதில், ஒவ்வொரு மாநிலத்திலும் சில குழுக்களைத் தனி மதமாக அறிவிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுவதே சிறந்தது. தமிழகத்தின் அய்யாவழி, கேரளத்தின் நாராயண குரு அமைப்பு, கர்நாடகத்தின் லிங்காயத், வங்காளத்தின் ராமகிருஷ்ண வழி என்று தேடித் தேடி இவர்கள் அனைவரையும் தனித் தனி மதங்களாக உருவாக்கிவிடலாம். மீதமுள்ள இந்துக்களும் தங்களை சைவர்கள், வைணவர்கள், சாக்தர்கள், அத்வைதிகள், இயற்கை வழிபாட்டாளர்கள், சார்வாகர்கள், நாத்திகர்கள் என்றெல்லாம் அறிவித்துவிடலாம்.

விளைவுகள் என்னவாக இருக்கும்?

கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தாங்கள் மட்டும்தான் மதச் சிறுபான்மையினர் என்று தனிச் சலுகை கேட்க முடியாது. அனைவருமே மதச் சிறுபான்மையினர்தான் என்றாகிவிடும். மதச் சிறுபான்மையினருக்கான சிறப்புச் சட்டங்கள் அனைத்தும் காலாவதியாகிவிடும்.
யாரேனும் ஒரு சிறு குழு செய்யும் ஆட்சேபகரமான காரியங்களுக்காக இந்து மதம் சிலுவை சுமக்க வேண்டியதில்லை. இந்துத் தீவிரவாதம் என்ற சொல் காணாமல் போய்விடும். கலுபுர்கியையும் கௌரி லங்கேஷையும் கொலை செய்தது ஒரு லிங்காயத்தாகக்கூட இருக்கலாம் அல்லவா! கோயிலுக்குள் ‘இந்துக்கள் மட்டும் வரலாம்’ என்ற பலகைகள் எடுக்கப்பட்டுவிடும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தலித்துகள் அவரவர் விரும்பிய புதிய மதத்தை உருவாக்கிக்கொள்ளலாம். அல்லது பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைத் தழுவிக்கொள்ளலாம். லிங்காயத் மதத்தில்கூடச் சேர்ந்துகொள்ளலாம். ஆனால், தற்போதைய சட்டங்களின் அடிப்படையில் பட்டியல் இனத்தவருக்கான வாய்ப்புகளை இழக்க வேண்டியிருக்கும்.
பழங்குடியினர் அவரவர் மதங்கள் என்று தங்கள் குடிப் பெயர்களையே பயன்படுத்திக்கொள்ளலாம். தோடர்கள், தோடர் மதம். படகர்கள், படகர் மதம். மொத்தத்தில் இந்து மதம் என்பதை ஒட்டுமொத்தமாக நீக்கிவிடலாம்.

லிங்காயத் என்பது தனி மதம் என்று ஆகிவிட்டால், அவர்கள் சிவனை வழிபடாமல் போய்விடப் போகிறார்களா என்ன? திருநீற்றைக் குழைத்துப் பூசாமல் போய்விடுவார்களா என்ன? கழுத்தில் லிங்கத்தை அணியாமல் போய்விடுவார்களா என்ன? கூடலசங்கமதேவா என்று கூப்பிடாமல் போய்விடுவார்களா என்ன?

இந்து என்பது இடையில் வந்த ஒரு பெயர். இல்லாமல் போய்விட்டால் யாருக்கும் நஷ்டம் இல்லை.

இன்னும் சில தாக்கங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. இந்து என்ற பெயரே போய்விடும் என்றால், இந்து திருமணச் சட்டத்தை நீக்கவேண்டிய கட்டாயம் வந்துவிடும். இதை முன்மாதிரியாக வைத்து, பொது சிவில் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து விடலாம். தனித்தனியாக மதங்கள் எவற்றுக்கும் சிவில் சட்டங்கள் கிடையாது. ஒற்றை சிவில் சட்டம். ஒற்றை கிரிமினல் சட்டம்.

இது தொடர்ந்தால், பெரும்பாலான சாதிகள், தங்களைத் தனி மதங்களாக அறிவித்துக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் லிங்காயத்துகளைப் போலவே, ஒவ்வொரு சாதிக்கும் கடவுள் வழிபாட்டில், வாழ்க்கை முறையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. லிங்காயத்துகளுக்குப் பொருந்தும் எதுவும் இன்னொரு சாதிக் குழுவுக்கும் பொருந்தும். ஏனெனில், யாரைக் கேட்டாலும் அவர்களும் 1881 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதுதான் நாங்களும் இந்துக்கள் ஆனோம், அதற்கு முன் நாங்கள் வேறாகத்தான் இருந்தோம் என்று சொல்வார்கள்.

சாதிகளின் இடத்தில் மதங்கள்

இதன் நீட்சியாகப் பார்த்தால், இந்தியாவில் சாதிகள் அதிகாரபூர்வமாக ஒழிந்துவிடும். என்ன, மாறாக, பல ஆயிரம் மதங்கள் இருக்கும். அவற்றைப் பிற்பாடு கவனித்துக்கொள்ளலாம்.
இடஒதுக்கீடு என்பதில் பல்லாண்டு காலமாகவே சீர்த்திருத்தங்கள் தேவை என்பது கண்கூடு. இப்போதைக்கு இடஒதுக்கீடு என்பது சாதிகளுக்கு அல்ல, சாதித் தொகுப்புகளுக்கே வழங்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது மதக்குழு, பிற்படுத்தப்பட்டதா, மிகவும் பிற்படுத்தப்பட்டதா அல்லது பட்டியல் இனத்தைச் சேர்ந்ததா, பழங்குடியா என்பதைத் தீர்மானிக்க மிகத் தெளிவான வரையறைகளை இப்போது உருவாக்கிக்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட மதக் குழுவின் சராசரி வருமானம், படிப்பு, தொழில் நடத்தும் தன்மை, அரசு வேலைகளில் உள்ள பங்கு, வேறு சில சமூகக் காரணிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அவர்களுடைய ‘பிற்பாட்டுக் குறியீட்டெண்’ ஒன்றை உருவாக்கலாம். இந்த எண்ணின் அடிப்படையிலேயே ஒரு மதக்குழு எந்தத் தொகுப்பில் இருக்கும், அதற்கான இடஒதுக்கீட்டுச் சதவிகிதம் என்ன என்பது தீர்மானிக்கப்படும். இது வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கும்.

மத மாற்றம் என்பதைப் பகுத்தறிவின்பாற்பட்டு அணுகலாம். ஒருவர் கிறிஸ்தவ அல்லது இஸ்லாம் மதத்துக்கு மாறினால் ஏற்படும் பதற்றம் தேவையற்றது. அது மனத்தால் ஏற்பட்ட மாற்றமா, பணத்தால் ஏற்பட்ட மாற்றமா அல்லது மணத்தால் ஏற்பட்ட மாற்றமா என்பது முக்கியமே இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும். ஏதோ ஒரு நன்மை கிடைக்கிறது என்பதால் ஒருவர் மதம் மாறுகிறார். நாட்டில் பல ஆயிரம் மதங்கள் இருந்தால் அவற்றில் சில, பிரத்யேகக் குழுக்கள்போல யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருக்கலாம். வேறு சிலவோ மிக அதிகமான எண்ணிக்கையில் பலரையும் உள்ளே கொண்டுவர முனையலாம். அப்போது அவர்கள் தங்கள் குழுவுக்கு மாறிக்கொள்ளச் சில ஆதாயங்களைத் தர முன்வரலாம். அது இகலோகத்தைச் சேர்ந்த விலையில்லாப் பொருளாக இருக்கலாம். வேலைவாய்ப்பாக இருக்கலாம். காதலாக இருக்கலாம். கண்ணியமாக இருக்கலாம். நோய் தீர்க்கும் மருந்தாக இருக்கலாம். அல்லது பரலோக சாம்ராஜ்ஜியத்தில் பதவிசான இடமாக இருக்கலாம். அரசு சொல்ல வேண்டிய ஒரே விஷயம், ‘Caveat Emptor!’ - வாங்குவோர் ஜாக்கிரதையாக இருக்கவும். நுண்ணெழுத்தில் எழுதியிருப்பதை ஒழுங்காகப் படித்துவிட்டு வாங்கவும் (அல்லது சேரவும்.) மதமாற்றத் தடைச் சட்டங்கள் அடிப்படையில் தனிநபர் உரிமைக்கு எதிரானவை.

பாஜகவுக்கு இதனால் ஏதேனும் நஷ்டமா? காங்கிரஸுக்கு ஏதேனும் ஆதாயமா? குறுகிய காலக் கண்ணோட்டத்தில் அப்படி ஏதேனும் இருந்தாலும் நாளடைவில் அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. கிறிஸ்தவர்கள் மிகப் பெரும்பான்மையாக இருக்கும் நாகாலாந்தில் பாஜகவுக்கு 12 இடங்கள் கிடைக்கின்றன. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. துணை முதல்வர் பாஜகவைச் சேர்ந்தவர். வயதானவர்களை ஜெருசலத்துக்கு அழைத்துப்போவதாக பாஜக தேர்தல் வாக்குறுதி தந்திருக்கிறது. நாளை கர்நாடகத்தில் லிங்காயத்துகளுக்கு அதிகச் சலுகைகள் தரப்போவது நாங்கள்தான் என்று சொல்லி பாஜக அரசியல் செய்யலாம். லிங்காயத்துகளின் ஒப்பற்ற தலைவர் எடியூரப்பா என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆக, இன்னொரு மதம் இந்தியாவில் பிறந்திருக்கிறது என்று கைகொட்டி வரவேற்போம்.

Monday, January 22, 2018

ரஜினியின் அரசியல் பிரவேசம்!

[மின்னம்பலம் இணைய இதழுக்காக எழுதியது.]

இன்று தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் என்ன நடக்கும்?
திமுக வலுவான கட்சியாகத் தொடர்கிறது. கட்சியின் தலைமையில் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். ஸ்டாலினின் செயல்பாடு குறித்து இருவேறு கருத்துகள் உள்ளன. ஒரு சாரார், கருணாநிதிபோல் ஸ்டாலின் இயங்கவில்லை; கட்சி தேக்க நிலையிலேயேதான் உள்ளது என்கின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வைப்புத்தொகையை இழந்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்னொரு சாரார் ஆர்.கே.நகரைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஓர் இடைத்தேர்தலில் நடந்ததை வைத்துத் தமிழகம் முழுதும் நடக்கப்போகும் தேர்தலை எடைபோட முடியாது என்பது அவர்கள் வாதம். அதிமுகவில் இருப்பது போன்ற குழப்பங்கள் ஏதும் திமுகவில் கிடையாது. ஸ்டாலினின் தலைமையை கிட்டத்தட்ட அனைவருமே ஏற்றுக்கொண்டுவிட்டனர். மு.க.அழகிரி பற்றி இன்று யாரும் பேசுவதுகூடக் கிடையாது.

அதிமுக தற்போதைக்கு இரு குழுக்களாக உள்ளது. ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆளும் கட்சி. இன்னொருபுறம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆதரவாளர்கள். மேலோட்டமாகப் பார்த்தால், பழனிசாமி - பன்னீர்செல்வம் குழு பலம் வாய்ந்ததாகத் தெரியலாம். ஏனெனில், ஆட்சி அவர்கள் கையில் உள்ளது. இரட்டை இலைச் சின்னமும் அவர்கள் கையில் உள்ளது. இருந்தாலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் என்ன ஆனது? ஒரு சுயேச்சையாக தினகரனால் தன் ஆதரவாளர்களை வைத்து வேலை வாங்க முடிந்தது. அதிமுகவின் இரு தரப்புமே பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தும், தினகரனால்தான் வெல்ல முடிந்தது.

இதை வைத்துப் பார்க்கும்போது, பழனிசாமி - பன்னீர்செல்வம் அணியில் இருப்பவர்கள் அனைவரும் அதிகாரம் இந்த இருவரிடமும் இருக்கும்வரையில்தான் இருப்பார்கள் என்று தோன்றுகிறது. இவர்களிடமிருந்து அதிகாரம் போய்விட்டால், பெரும்பாலானோர் அப்படியே தினகரன் பின்னால் போய்விடக்கூடும்.

தேர்தல் காட்சிகள்: ஒரு கற்பனை

இப்போது முதலில் ஆரம்பித்த கேள்விக்கு வருவோம். உடனேயே சட்டமன்றப் பொதுத்தேர்தல் வந்து, அதில் திமுக ஒருபக்கமும் இரண்டு அதிமுக அணிகள் தனித்தனியாகவும் போட்டியிடும் என்று வைத்துக்கொள்வோம். அப்படி ஒரு தேர்தல் நடந்தால் திமுக ஜெயிப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. இரட்டை இலை இல்லாத தினகரன் இரண்டாம் இடத்துக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன. பழனிசாமி - பன்னீர்செல்வம் அணி மூன்றாம் இடத்துக்குத்தான் வரும்.
இப்போது குட்டையைச் சற்றே குழப்புவோம். ரஜினிகாந்த் களத்தில் இறங்குகிறார். புதிய கட்சி ஒன்றை உருவாக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டார். அந்தக் கட்சியின் வாய்ப்புகள் எவ்வாறு திமுகவையும் அதிமுகவின் இரு அணிகளையும் பாதிக்கும்?

இப்போதைக்குத் தமிழகத்தில் அதிகப் பிரபலமான நபர் யார் என்றால், அது ரஜினிகாந்த்தான் என்று பட்டென்று சொல்லிவிடலாம். ஜெயலலிதா உயிருடன் இல்லை. கருணாநிதி களத்தில் இல்லை. ஸ்டாலின் நிச்சயமாக ரஜினிகாந்த் அளவுக்குக் கவர்ச்சிகரமானவர் கிடையாது. அதிமுகவின் இரு அணிகளில் யாருமே ரஜினிக்கு அருகில்கூட வர முடியாது.
ஆனால், இது ஒன்றே ரஜினிகாந்த்துக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்துவிடுமா? ரஜினி ரசிகர்கள் வாக்குவங்கியாக மாறுவார்களா?

கவர்ச்சி மட்டும் போதுமா?

கட்சியை ஆரம்பித்து, ரசிகர்களை மட்டும் முதலாக வைத்து ஆட்சியைப் பிடிப்பது தற்போதைக்குச் சாத்தியமே இல்லை என்று தோன்றுகிறது. தேர்தல் என்பது கடுமையான உழைப்பைக் கோருகிற ஒன்று. டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் ஜெயித்ததன் பின்னால் கடுமையான உழைப்பு இருந்தது. முதல் தேர்தலில் அவர் பெற்ற இடங்கள் குறைவுதான். மறு தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் பெற்ற வாக்குகள் கெஜ்ரிவாலின் கட்சிக்கு மாறின. அதன் காரணமாகவே அவர் மாபெரும் வெற்றி அடைந்தார்.

ரஜினியோ அவரது ரசிகர்களோ தீவிர அரசியல் களத்தில் இல்லை. நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் ரஜினி கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் என்ன கருத்து சொன்னாலும் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவை அந்நியப்படுத்த நேரிடும். ஆனால் இதற்கெல்லாம் பயந்துகொண்டிருந்தால் அரசியல் செய்ய முடியாதே. வாயே திறக்காமல் தேர்தலுக்கு முதல் நாள் வந்து மக்களுக்குக் கும்பிடு போட்டால் வாக்குகள் வந்துவிடுமா?

சட்டமன்றத் தேர்தல்தான் தன் இலக்கு என்கிறார் ரஜினி. நியாயமாகப் பார்த்தால் அது 2021இல்தான் வர வேண்டும். ஆனால், இப்போதைக்கு ஆளும்கட்சியின் நிலையைப் பார்த்தால் தேர்தல் கட்டாயம் அடுத்த ஆண்டு வந்துவிடும் என்று தோன்றுகிறது. நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடக்கும் அதேநேரம் 2019இல் தமிழகச் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வந்துவிடும் என்றே நான் கருதுகிறேன். தமிழக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலையலாம். தினகரன் ஆதரவாளர்களை அவைத்தலைவர் தகுதிநீக்கம் செய்ததால்தான் தற்போதைய ஆட்சி நீடிக்கிறது. நீதிமன்றம் இந்த வழக்கில் கொடுக்கும் தீர்ப்பு ஆட்சிக் கலைப்பில் முடியலாம். இல்லாவிட்டாலும்கூட இந்த ஆட்சி எளிதில் கலையக்கூடிய ஒன்றுதான்.

அப்படி அடுத்த ஆண்டு தேர்தல் நடந்தால், அதுவும் நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் வந்தால் மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கும்?
தமிழகத்தில் எம்மாதிரியான கூட்டணி அமையும்?

திமுகவின் கூட்டணி மிகவும் தெளிவானது. காங்கிரஸ், மதிமுக, குறைந்தபட்சம் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோர் இணைவார்கள். மற்றொரு பக்கம் பாஜக, பாமக, பழனிசாமி - பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக ஆகியோர் ஒரு கூட்டணியாகப் போட்டியிடச் சாத்தியங்கள் உள்ளன. தினகரனுடன் கூட்டுசேர சொல்லிக்கொள்ளும்படியான கட்சி ஏதும் இருக்காது. ரஜினிகாந்த் தனியாகத்தான் களம் இறங்குவார்.

இப்படி ஒரு நிலை இருந்தால் வாக்குகள் எவ்வாறு பிரியும்? இது முழுக்க முழுக்க, திமுகவின் பலத்தையும் அவர்கள் களத்தில் செய்யும் வேலையையும் பொறுத்தது. ஒவ்வொருவரும் அவரவர் தொகுதியில் நிறுத்திவைக்கும் வேட்பாளர்களைப் பொறுத்தது. ரஜினி களத்தில் இறங்கி வாக்குகளைப் பிரித்தால், திமுக தலைமையிலான அணியே அதிக இடங்களைப் பெறும். ஆனால் தனிப் பெரும்பான்மையிலிருந்து சற்றே பின்தங்கிவிட நேரிடலாம். அப்படி நடந்தால், எதிர்த்தரப்பில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க பாஜக தூண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி அடைந்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டால் இது எளிதில் சாத்தியமாகிவிடும். அதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கும் என்று தோன்றுகிறது.

Monday, December 25, 2017

பாஜக எவ்வாறு ஜெயிக்கிறது?

குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் தேர்தல் முடிந்து, இரண்டிலும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரையில் இல்லாத அளவு நாட்டில் 16 மாநிலங்களில் பாஜக நேரடியாக அல்லது கூட்டணியாக ஆட்சி நடத்துகிறது. 3 மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோழமைக் கட்சிகள் ஆட்சி நடத்துகின்றன. மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக 2014-ல் ஆட்சியைப் பிடித்தது. இவை அனைத்தும் வெறும் மூன்றே ஆண்டுகளில் சாத்தியம் ஆகியிருக்கிறது.

இதோ, பாஜக காலி, இந்தத் தேர்தலோடு கதை முடிந்தது என்று எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் எக்காளமிட்டுக்கொண்டிருக்க, பாஜகவோ மேலும் ஒரு மாநிலத்தைக் கைப்பற்றுகிறது. சில இடங்களில் பாஜகவால் ஜெயிக்க முடிவதில்லைதான். ஆனால் வெகு சில இடங்களில் மட்டுமே.

எனில், இந்த வெற்றிகள் எப்படிச் சாத்தியமாகின்றன? 2014 மக்களவைத் தேர்தல் தொடங்கி, மஹாராஷ்டிரம், ஹரியானா, ஜம்மு & காஷ்மிர், ஜார்க்கண்ட், அசாம், உத்தரப் பிரதேஷ், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெற்றி எப்படிச் சாத்தியமானது? அதே நேரம் தில்லி, பிகார், பஞ்சாப் ஆகிய இடங்களில் தோல்வியையும் கண்டுள்ளது பாஜக. (பிகாரில் பின்னர் கூட்டணி மாறி இன்று பாஜக கூட்டணிதான் ஆட்சியில் உள்ளது.) இதற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?

இவற்றை ஆராயும் இரண்டு புத்தகங்களைக் கடந்த வாரம் படித்து முடித்தேன். ஒன்று: How the BJP wins: Inside India’s Greatest Election Machine. இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையாளர் பிரஷாந்த் ஜா எழுதி ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியிட்ட புத்தகம். இரண்டாவது: The Last Battle of Saraighat: The Story of the BJP’s Rise in the North-East. பாஜக அனுதாபிகளும் தேர்தல் களத்தில் பாஜகவின் செயல்திட்டங்களை வடிவமைப்போருமான ரஜத் சேத்தி, ஷுப்ரஸ்தா ஆகியோர் எழுதிய புத்தகம். பெங்குவின் வெளியீடு.

முதலாவது புத்தகம், எளிமையாகப் படிக்கக்கூடியது. நல்ல எடிட்டிங். இரண்டாவது மிகச் சுமாராக எழுதப்பட்டது. வளவளவென்று செல்கிறது. மோசமான எடிட்டிங். ஆனால் சில உள்விஷயங்களை நுணுக்கமாக அளிப்பதால், முக்கியமானதாகிறது.

முக்கியமான கருத்துகளை இப்படிச் சொல்லிவிடலாம்:

1.     அமித் ஷா தலைமையில் பாஜக வலுவான தேர்தல் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு இல்லாத மாநிலங்களிலும்கூட பாஜகவால் வெகு விரைவில் இந்த இயந்திரத்தைக் கொண்டு வேலை செய்ய முடிந்திருக்கிறது.
2.     ஆர்.எஸ்.எஸ்ஸின் உழைப்பும் ஆள் பலமும் பாஜகவுக்கு மிக மிக முக்கியம்.
3.     ஒவ்வொரு மாநிலத்திலும், விரிவானதொரு சாதிக் கூட்டமைப்பை பாஜகவால் உருவாக்க முடிந்திருக்கிறது. இதுநாள்வரையில் தேர்தல் அரசியலால் பலன் அடையாத பிற்படுத்தப்பட்ட, தலித் சாதியினரை ஒருங்கிணைத்து அவர்களுக்குச் சரியான இடங்களைக் கொடுப்பதன்மூலம் இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெறுவதோடு, உயர் சாதியினரின் வாக்குகளையும் தக்கவைத்துக்கொள்வதில் பாஜக பெரும் வெற்றி அடைந்திருக்கிறது.
4.     முஸ்லிம்களுக்கு எதிரான  (நிஜ மற்றும் பொய்) பிரசாரங்களின்மூலம் போலரைசேஷனை ஏற்படுத்தி, இந்து வாக்குகளை ஒருமுகப்படுத்துவதில் பாஜக வெற்றி அடைந்துள்ளது.
5.     ஜம்மு காஷ்மிர், அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களைப் பொருத்தமட்டில் ராம் மாதவின் தலைமையில் பெரும் வெற்றிகள் குவிந்துள்ளன. (நரேந்திர மோதி, அமித் ஷா பெயர்களுக்கு அடுத்து இரு புத்தகங்களும் முக்கியமாகக் குறிப்பிடும் பெயர் ராம் மாதவ்.)
6.     பணம் திரட்டுவதிலிருந்து, சரியாகச் செலவழிப்பதிலிருந்து, மையப்படுத்தப்பட்ட முறையில் தேர்தலை நடத்துவதுவரை, அமித் ஷாவின் தலைமையில் பாஜக, தேர்தல் நிர்வாகத்தில் புதிய சகாப்தத்தைப் படைத்துள்ளனர்.
7.     ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு நோக்கங்கள் கொண்ட குழுக்களை ஓரணியில் திரட்டுவது, எளிமையான கோஷங்களை மக்கள்முன் கொண்டுசெல்வது, எதிர்க்கட்சிகளை உடைப்பது அல்லது அவர்கள் ஓரணியில் திரளாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வது என்று சகலவிதமான செயல்திட்டங்களையும் பாஜக செயல்படுத்துகிறது. வெற்றி ஒன்றுமட்டுமே நோக்கம்.
8.     எல்லாவற்றுக்கும் மேலாக, நரேந்திர மோதி என்ற ஒற்றை நபரின் செல்வாக்கு, அவருடைய பிரசார பலம், மக்கள் அவர்மீது கொண்டிருக்கும் மாபெரும் நம்பிக்கை. இதற்கு இணையாக தற்போதைக்கு இந்தியாவில் யாருமே கிடையாது.

இப்படி இருந்தும் தில்லி, பிகார் தோல்விகள் எப்படி நிகழ்ந்தன. பிரஷாந்த் ஜா அவற்றை ஓரளவுக்கு ஆய்வு செய்கிறார். லாலு யாதவ், நிதீஷ் குமார் ஜோடி எவ்வாறு பாஜகவை அதன் ஆட்டத்தை வைத்தே தோற்கடித்தது என்ற அத்தியாயம் மிக முக்கியமானது. இந்த இரு புத்தகங்களும் எழுதப்பட்டபிறகுதான் குஜராத், இமாச்சலப் பிரதேசத் தேர்தல்கள் நடைபெற்றன.

***

கட்சிகள் தேர்தல்களை அணுகும் முறையில் பாஜக பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதனைப் புரிந்துகொள்ளாமல் பாஜகவை வீழ்த்துவது கடினம். ‘என்னதான் இருந்தாலும் ஆர்.கே.நகரில் 1500+ வாக்குகள்தானே பாஜக பெற்றது’ என்று பேசுவோர் தவறிழைக்கின்றனர்.

என் கணிப்பில் நான்கு மாநிலங்களில்தான் பாஜக அடுத்து வரும் பத்தாண்டுகளில் ஆட்சியைப் பிடிக்க மிகவும் கஷ்டப்படும். அவை கேரளம், தமிழகம், வங்கம் மற்றும் தெலங்கானா. இந்த மாநிலங்களிலும்கூட சிறிது சிறிதாக பாஜக வளர்ந்துகொண்டுதான் இருக்கும். மற்ற மாநிலங்களில், ஒன்று பாஜக ஆளும் கட்சியாக இருக்கும் அல்லது முதன்மை எதிர்க்கட்சியாக இருக்கும் அல்லது அதன் தோழமைக் கட்சி ஆட்சியில் இருக்கும்.

அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் பாஜக பின்பற்றும் உத்திகள் சில ஏற்க முடியாதவையாக இருக்கும். மிக முக்கியமாகச் சொல்வதானால் மதத்தின் பெயராலான போலரைசேஷன். ஆனால் அவர்கள் பார்வையில் இது ஒன்றுதான் அசாம் போன்ற 30% முஸ்லிம்கள் உள்ள மாநிலத்திலோ அல்லது உத்தரப் பிரதேசம் போன்ற 20%+ முஸ்லிம்கள் உள்ள மாநிலத்திலோ வெற்றி தரக்கூடிய ஒரே வழிமுறை. இவற்றைச் செய்யும் அதே நேரம், பாஜகவால் ஜம்மு காஷ்மிரில் பிடிபி போன்ற கட்சியுடன் கூட்டணி ஆட்சியை நடத்த முடிகிறது. வடகிழக்கில் கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கும் சிறு மாநிலங்களில் ‘பாரதிய ஜீசஸ் பார்ட்டி’ என்றுகூட பாஜக அறிமுகப்படுத்தப்பட்டு இடங்களைப் பிடிக்கிறது!

ஒவ்வொரு முறை ஒரு மாநிலத்துக்குத் தேர்தல் நடக்கும்போதும் ஊடகங்கள் பாஜகவின் தோல்வியை எதிர்பார்த்துத் தீர்ப்புகளை முன்னதாகவே எழுதுகின்றன. அத்துடன் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அப்படிச் செய்துவிடும், இப்படிச் செய்துவிடும், மோதி இத்தோடு காலி என்றும் ஆரூடம் எழுதுகின்றன. கேட்டால் வாஜ்பாயின் ‘இந்தியா ஒளிர்கிறது’ பிரசாரத்தை உதாரணமாகச் சொல்கிறார்கள். அப்போதைய பாஜகவுக்கும் இப்போதைய பாஜகவுக்கும் என்ன வித்தியாசம், களத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒருசில ஊடகவியலாளர்களாவது புரிந்துவைத்திருக்கிறார்கள். புத்தகமாக எழுதவும் செய்கிறார்கள். இத்தனைக்கும் பிரஷாந்த் ஜா, பாஜகவுக்கு எதிரான மனநிலை கொண்டவர் என்பது புத்தகத்தைப் படிக்கும்போதே தெரிகிறது.

-->
பாஜக நிச்சயமாக அடுத்துவரும் பல தேர்தல்களில் தோற்கத்தான் செய்யும். குஜராத்போலத் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. ஆனால் மிகவும் நெகிழ்வுடன் தன்னை மாற்றியமைத்து, புதிய கூட்டணிகளை ஏற்படுத்திக்கொண்டு, பிரசாரத் தொனியை மாற்றிக்கொண்டு, கடுமையான களப்பணியின்மூலம் பாஜக தோல்விகளைவிட அதிக விகிதத்தில் வெற்றிகளைப் பெறும் என்பது புலனாகிறது. குறைந்தபட்சம் அடுத்த பத்தாண்டுகளில்.

Tuesday, December 12, 2017

பாபர் மசூதி இடிப்பும் இந்திய அரசியல் மாற்றமும்!

நான் எழுதிய கட்டுரை, மின்னம்பலம் இணைய இதழில் வெளியானது.

===

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு அதற்கு நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துவந்தது. ஆங்கிலேய ஆட்சியின்போது தீர்க்க முடியாத வழக்கு இன்றுவரை தீர்க்க முடியாததாகவே இருக்கிறது.

1886இல் ஃபைஸாபாத் மாவட்ட நீதிபதி கர்னல் சேமியர் என்பவர், “இந்துக்களுக்குப் புனிதமான ஓர் இடத்தில் மசூதி ஒன்று கட்டப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. ஆனால், நிகழ்வு 356 ஆண்டுகளுக்கு முன் நடந்திருப்பதால் காலம் கடந்துவிட்டது. இன்று கோரிக்கைகளுக்குச் செவி சாய்ப்பது கடினம்” என்று தீர்ப்பு எழுதினார். 2010இல் அலகாபாத் உயர் நீதிமன்றம், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்து இரண்டு பகுதிகளை இந்துக்களுக்கும் மீதிப் பகுதியை சன்னி வக்ப் வாரியத்துக்கும் தருவதாகத் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் அது இந்துக்களையும் திருப்திப்படுத்தப் போவதில்லை, முஸ்லிம்களையும் திருப்திப்படுத்தப்போவதில்லை.

இதற்குக் காரணம், விஸ்வ இந்து பரிஷத், பாரதிய ஜனதா அமைப்பினர் ஒரு பெரும் இயக்கமாக மசூதி அமைந்திருந்த இடத்துக்குச் சென்று, 1992 டிசம்பர் 6 அன்று அதைச் சட்டத்துக்குப் புறம்பாக இடித்துத் தள்ளியதே. வெறும் சட்டப் போராட்டமாக இருந்த சிக்கல், நாடு தழுவிய மதப் போராட்டமாக மாறியது இந்தப் புள்ளியில்தான்.

வழிபாட்டுத் தலங்களும் வரலாறும்

எட்டாம் நூற்றாண்டிலிருந்து இந்தியாமீது இஸ்லாமியப் படையெடுப்புகள் பல நிகழ்ந்திருக்கின்றன. அந்தப் படையெடுப்புகளின்போதும், தொடர்ந்த இஸ்லாமிய ஆட்சிகளின் கீழும் எண்ணற்ற இந்துக் கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்துக் கோயில்களின் இடிமானங்களைக் கொண்டு மசூதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றை டெல்லி முதற்கொண்டு இந்தியா முழுமையிலும் காணலாம். காசி, மதுரா போன்ற இந்துக்களின் முக்கியமான சில வழிபாட்டிடங்களில் கோயிலின் பகுதிகளிலேயே மசூதிகளை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வலுக்கட்டாயமாக அமைத்தனர். இவை வடஇந்தியாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் இருப்பதைக் காணலாம். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பல்லாவரம் குடைவரைக்கோயில் இன்றும் ஓர் இஸ்லாமிய வழிபாட்டிடமாக உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி வருவதற்குமுன், நியாயமான சட்டத்தின் ஆட்சி என்ற கருதுகோள் நம்மிடம் இல்லை. வலுவான அரசன் முடிவு செய்வதுதான் சட்டம். அதன் விளைவாகத்தான் பிறருடைய வழிபாட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. ஆங்கிலேயர்கள் சட்டத்தின் ஆட்சி என்பதை முன்வைத்த பின்னர்கூட அயோத்தி ராமர் கோயில் பிரச்னை தீர்க்க முடியாததாக இருந்தது. 

பேச்சுவார்த்தைகள்மூலம் இரு மதத்தாரும் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளுதல் மட்டுமே ஒரே தீர்வு. ஆனால், விஸ்வ இந்து பரிஷத்தும் பாரதிய ஜனதாவும் அயோத்தி விஷயத்தில் இது நடக்காமல் பார்த்துக்கொண்டனர்.

இது நிச்சயமாக பாரதிய ஜனதாவுக்கு நன்மை அளித்தது. இன்று தனிப் பெரும்பான்மையில் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கும் பல மாநிலங்களில் அவர்கள் ஆட்சியில் இருப்பதற்குமான அடித்தளம் ‘இந்துப் புத்தெழுச்சி’ என்பதாகும். இந்துப் புத்தெழுச்சி, அயோத்தி ராமஜன்ம பூமி இயக்கத்தின்மீது கட்டமைக்கப்பட்டது. அதற்கு பாபர் மசூதியை இடிப்பது அவசியமானது.

மசூதி முதல் மாட்டிறைச்சி வரை

பாரதிய ஜனதா கட்சிக்கு நன்மை அளித்த இந்த நிகழ்வு இந்திய நாட்டுக்கு என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம். சாதிப் பிரச்னைகள் பெரும்பாலும் ஒரு கிராமம் என்பதிலிருந்து அதிகபட்சம் ஒரு மாவட்டம் என்ற அளவைத் தாண்டாது அடங்கிவிடும். ஆனால் இந்து -முஸ்லிம் பிரச்னை என்பது நாடு தழுவிய அளவில் பரவக்கூடியது.

அயோத்தி மசூதி இடிப்பு இந்தியா முழுவதும் மதக் கலவரங்களை ஏற்படுத்தியது. முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் பாபர் மசூதி என்பது குறிப்பிடத்தகுந்த புனிதத் தலம் ஒன்றும் கிடையாது. ஆனால், ஒரு வன்முறைக் கும்பல், சட்டத்தைப் பற்றியோ நீதிமன்றங்களைப் பற்றியோ கவலைப்படாது ஒரு கட்டடத்தை அடித்து நொறுக்கும் என்றால் முஸ்லிம்களாகிய தங்களுக்கு இந்த நாட்டில் சட்டத்தால் எந்தப் பாதுகாப்பும் கிடையாது என்பதை முஸ்லிம்கள் அன்று உணர்ந்தார்கள். அது அவர்களைப் பெரும் கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.
பல நகரங்களில் அவர்கள் தன்னிச்சையாகத் தெருவில் குழுமினார்கள். அவ்வாறு குழுமியவர்களுக்கு எதிராக இந்துப் புத்தெழுச்சிக்காரர்களும் குழுமினார்கள். விளைவு, கடுமையான எதிரெதிர் தாக்குதல்கள், வணிக நிறுவனங்கள் எரிக்கப்படுதல், கல்வீச்சு, காவல்துறைத் தாக்குதல், கொலை, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்.

தேசப் பிரிவினைக்குப்பிறகு நிகழ்ந்த மிகப் பெரிய இந்து - முஸ்லிம் வன்முறை இதுதான். இதன் அடுத்த கட்ட நிகழ்வுகள் யாராலுமே தடுக்க முடியாதவையாக அமைந்தன. மும்பை குண்டுவெடிப்புகள், தொடர்ந்து மும்பையில் நிகழ்ந்த இந்து - முஸ்லிம் வன்முறைகள், சிமி போன்ற இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகள் உருவாகி நாட்டில் பல பகுதிகளிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது, குஜராத்தில் கரசேவகர்கள் ரயில் எரிப்பு, தொடர்ந்து குஜராத் முழுவதும் நிகழ்ந்த இந்து - முஸ்லிம் வன்முறை என்று தொடர்ச் சங்கிலிப் பிரச்னைகளாக நிகழ்ந்தன. இன்று வடமாநிலங்களில் நடக்கும் பசு இறைச்சி தொடர்பான தாக்குதல்கள், லவ் ஜிகாத் என்ற பெயரிலான இந்து - முஸ்லிம் காதல் திருமணங்கள்மீதான தாக்குதல்கள் போன்றவற்றையும் பாபர் மசூதி இடிப்பின் அடிப்படையிலேயே பார்க்க வேண்டும்.

இந்தியச் சுதந்திரம்தொட்டே காஷ்மீர் பிரச்னை கனன்றுகொண்டிருக்கிறது. காஷ்மீர் பகுதி எரிமலையாக இருப்பதற்குத் தேவையான அனைத்தையும் பாகிஸ்தானும் செய்துகொண்டிருக்கிறது. காஷ்மீரின் அரசியல் கட்சிகளும் மக்களை மதிக்காமல் தேர்தலில் ஊழல்களைச் செய்ததன்மூலம் அந்நியப்பட்டுப் போனார்கள். ஆஃப்கனிஸ்தானத்தின் ஜிஹாதி போராளிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ இவை அனைத்தும் காரணமாக இருந்தன. கூடவே பாபர் மசூதி இடிப்பும் சேர்ந்துகொண்டது. இந்தியாவுடன் இருந்தால் முஸ்லிம்களாகிய நமக்கு நியாயம் கிடைக்காது என்பதற்கான பல காரணங்களில் பாபர் மசூதி இடிப்பும் ஒன்றாகியது.

மதம் அரசியலின் மையமாகும் அபாயம்

பாபர் மசூதி இடிப்புக்கு முன்பு இந்திய அரசியலில் மதம் ஒரு பெரிய இடத்தை வகிக்கவில்லை. பெரும் அரசியல் கட்சிகள் எவையுமே இந்துக்களைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும், உள்ளூரப் பல கருத்துகளைக் கொண்டிருந்தாலும், வெளிப்படையாக மேடையில் எதையும் பேச மாட்டார்கள். ஆனால், பாபர் மசூதி இடிப்பினால் மிகப் பெரும் அரசியல் லாபங்களைப் பெற்ற பாரதிய ஜனதா, தொடர்ந்து இந்துக்களை ஒருமுகப்படுத்துவதன் மூலமும், அவர்களுக்கு முஸ்லிம்கள் எதிரிகள் என்பதைக் கட்டமைப்பதன் மூலமும் தம்முடைய செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளலாம் என்றே இயங்குகிறது. இதன் விளைவு என்னவாக இருக்கும்? பிற பெரிய கட்சிகளும் இந்துமைய அரசியலை நோக்கி நகரக்கூடும். இதன் விளைவாக மதச்சார்பற்ற இந்திய அரசியல், மதமைய அரசியலாகும் வாய்ப்பு உள்ளது. இது இந்தியாவின் அமைதிக்குப் பெரும் ஊறு விளைவிக்கும்.

இன்றைய தலைமுறையினர் பலருக்கும் பாபர் மசூதி இடிப்பு நினைவில் இருக்காது அல்லது மிகவும் மங்கலாக இருக்கும். நாளடைவில் இது வெறும் ஒரு வரலாற்றுச் செய்தியாக மட்டுமே இருக்கும். ஆனால், என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்மீது இந்த நிகழ்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் அப்போது அமெரிக்காவின் ஒரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவனாக இருந்தேன். பாபர் மசூதி இடிப்பு சரியானதே என்பதே என் உடனடி எண்ணமாக இருந்தது. சட்டம் இந்துக்களுக்கு நியாயம் வழங்காதபோது, வலுக்கட்டாயமாக நியாயத்தை எடுத்துக்கொள்வது தவறல்ல என்று நினைத்தேன். முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்து வழிபாட்டிடங்கள் அனைத்தும் சட்டபூர்வமாகவோ, அப்படி முடியாவிட்டால் முரட்டுத்தனமாகவோ திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கருதினேன்.

இன்று என் கருத்து மாறியுள்ளது. வலுக்கட்டாயமோ, வன்முறையோ எந்த விதத்திலும் தீர்வாகாது என்றே கருதுகிறேன். இவை தொடர் சங்கிலி வன்முறையாகச் சுழன்றபடி, சூறாவளிபோலத் தன் சக்தியை அதிகரித்தபடி, தன் பாதையில் தென்படும் எண்ணற்ற அப்பாவிகளைச் சூறையாடிவிடும். இதற்கான சான்று பாபர் மசூதி இடிப்பும் தொடர்ந்த, இன்றும் தொடரும், வன்முறைகளும். குறுங்குழு மனப்பான்மையிலிருந்து விசாலமானதொரு பார்வையை நோக்கிச் செல்வதற்கு நமக்குப் பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கிறது. ஆனால், மதப் பிளவுகளோ மிக விரைவில் நம்மை வன்முறை நிறைந்த, அமைதியற்ற பழைய குறுங்குழு வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றுவிடும். அந்த வகையில் பாபர் மசூதி இடிப்பு நமக்குப் பெரும் பாடமாக அமைகிறது.