
சில மாதங்களுக்குமுன்
Mahabalipuram - Unfinished Poetry in Stone என்ற ஆங்கில காஃபி டேபிள் புத்தகம் ஒன்று வெளியானது. புகைப்படக் கலை நிபுணர் அசோக் கிருஷ்ணசுவாமியின் ஆர்கே கிராபிக்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டது. பேராசிரியர் சுவாமிநாதன் எழுதி, அசோக்கின் புகைப்படங்களுடன் இந்தப் புத்தகம் மாமல்லபுரத்தை உங்கள் வீட்டின் முன்னறைக்கே கொண்டுவருகிறது. நீங்கள் மாமல்லபுரம் நேரில் சென்றாலும் காணமுடியாத சிற்பங்களையும் (உதாரணம்: தர்மராஜ ரதத்தின் முதலாம், இரண்டாம் நிலைகளில் உள்ள படங்கள்) உங்களிடம் கொண்டுவருகிறது இந்தப் புத்தகம்.
இதன் விலை ரூ. 2,500/-
தமிழில் இதுபோன்ற புத்தகங்கள் கிடைப்பதில்லையே என்ற குறையைப் போக்க, தமிழ் மொழிபெயர்ப்பில் இந்தப் புத்தகத்தை ஆர்கே கிராபிக்ஸுடன் சேர்ந்து கிழக்கு பதிப்பகம் கொண்டுவந்துள்ளது. விலை ரூ. 995/- மட்டுமே. 168 பக்கங்கள், ஆர்ட் பேப்பர், கெட்டி அட்டை. சுவாமிநாதனின் எழுத்தை தமிழுக்குக் கொண்டுவந்திருப்பவர் கே.ஆர்.ஏ. நரசய்யா.
மாமல்லபுரம் காஃபி டேபிள் புத்தகத்தை வாங்க
கோவில் கட்டும் கலை எப்படி ஆரம்பித்திருக்கும், மகேந்திரவர்மன் தமிழகத்தில் உருவாக்கிய கல்லில் செதுக்கிய கோவில்கள், மகேந்திரனின் வழித்தோன்றல்கள் மாமல்லபுரத்துக்கு வந்து என்ன செய்தனர் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் இந்தப் புத்தகம், விளக்கமாக மாமல்லையில் காணப்படும் கீழ்க்கண்டவற்றைப் பற்றிப் பேசுகிறது:
- குடைவரைக் கோவில்கள்
- ஒற்றைக் கல் கோவில்கள்
- கட்டுமானக் கோவில்கள்
- திறந்தவெளி புடைப்புச் சிற்பத் தொகுதிகள்
- என்னவென்றே வகைப்படுத்த முடியாத பல்லவப் புதுமைகள்
அத்துடன் மாமல்லையில் உள்ள வெப்பமண்டல, வறண்ட, பசுமைமாறாக் காடுகள் பற்றியும் அங்குள்ள தாவரங்கள் பற்றியும் படங்களுடன் விளக்கங்களைத் தருகிறது இந்தப் புத்தகம். கூடவே கோவில் கட்டுமானம் மற்றும் சிற்பக் கலையில் பயன்படுத்தப்படும் சொற்கள், அவற்றுக்கான பொருள்கள் ஆகியவற்றைச் சில கோட்டோவியங்களுடன் விளக்குகிறது அருஞ்சொற்பொருள் பகுதி.
தமிழகத்தின் மிகச் சிறந்த கலைத்தலமாக, யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக இருக்கும் இந்த இடத்தின் மேன்மையை முழுதாக உணர, ரூ. 995/- கொடுத்து இந்தப் புத்தகத்தை வாங்குங்கள்.