Monday, February 28, 2011

கிழக்கு மொட்டை மாடி: இந்திய வானியல்

மார்ச் 3-ம் தேதி, வியாழக்கிழமை, இந்திய வானியல் வரலாறு பற்றிய கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் நடைபெறுகிறது.

* வானியல் துறை இந்தியாவில் எப்போது தோன்றியது?
* தோற்றுவித்தவர்கள் யார்?
* இந்திய வானியலின் அடிப்படைக் கருத்துகள் என்ன?
* வேத ஜோதிடம் மெய்யா, பொய்யா?

வானியலின் அறிவியல் பின்னணியை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் எளிமையாக விளக்க இருக்கிறார் டாக்டர் த.வி. வெங்கடேஸ்வரன். இவர் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விக்யான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பில் அறிவியலாளராகப் பணியாற்றுகிறார்.

இடம்: கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, சென்னை - 18
நாள்: 3 மார்ச் 2011, வியாழக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி

கல்வித்துறையில் கணினிநுட்பம்

எஸ்.எஸ்.என் எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்ட TEDxSSN ஒரு நாள் நிகழ்வில் நான் கலந்துகொண்டு பேசியதன் வீடியோ:

நொறுங்கும் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு

கிரேக்க நாட்டிலிருந்து தற்போது சென்னையில் இருக்கும் நிக்கோலாஸ் கஸானாஸ் என்ற இந்தியவியல் பேராசிரியர், சனிக்கிழமை (26 பிப்ரவரி 2011) அன்று ஐஐடி சென்னையில் பேசினார். மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவில் நுழைந்து கங்கைச் சமவெளிக்குப் பரவி, பூர்வகுடி இந்தியர்களை ஆக்ரமித்தனர்; அவர்களது நூல்தான் வேதங்கள் என்று ஒரு கோட்பாடு உள்ளது. மொஹஞ்சதாரோ, ஹாரப்பா நாகரிகத்தினரையும் இந்த குதிரை மேல் ஏறிப் போர்புரியும் ஆர்யர்கள்தான் அழித்தனர் என்றும் இந்தக் கோட்பாடு நீட்டிக்கிறது.

இவற்றை மறுத்து, இவற்றுக்கு மாறான ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார் நிக்கோலாஸ் கஸானாஸ். ஆரிய-திராவிடப் பகை குறித்து எதையும் இவர் பேசுவதில்லை அல்லது முன்வைப்பதில்லை. மாறாக, வேதங்களை யார் இயற்றினரோ, வேதிக் அல்லது வேதமொழி எனப்படும் சமஸ்கிருதத்துக்கும் முந்தைய பழமையான மொழியை யார் பேசினரோ அவர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்றும், அவர்கள் வெளியிலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை; மாறாக அவர்கள் இந்தியாவிலிருந்துதான் வெளியே வடமேற்கு மற்றும் வடகிழக்குத் திசைகளில் போயிருக்கவேண்டும் என்பதும் இவரது வாதம். அந்தப் பேச்சின் வீடியோவைக் கீழே பார்க்கலாம். கேள்வி பதில் பகுதியும் இணைந்தது.

Tuesday, February 22, 2011

மாமல்லபுரம் காஃபி டேபிள் புத்தகம் தமிழில்

சில மாதங்களுக்குமுன் Mahabalipuram - Unfinished Poetry in Stone என்ற ஆங்கில காஃபி டேபிள் புத்தகம் ஒன்று வெளியானது. புகைப்படக் கலை நிபுணர் அசோக் கிருஷ்ணசுவாமியின் ஆர்கே கிராபிக்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டது. பேராசிரியர் சுவாமிநாதன் எழுதி, அசோக்கின் புகைப்படங்களுடன் இந்தப் புத்தகம் மாமல்லபுரத்தை உங்கள் வீட்டின் முன்னறைக்கே கொண்டுவருகிறது. நீங்கள் மாமல்லபுரம் நேரில் சென்றாலும் காணமுடியாத சிற்பங்களையும் (உதாரணம்: தர்மராஜ ரதத்தின் முதலாம், இரண்டாம் நிலைகளில் உள்ள படங்கள்) உங்களிடம் கொண்டுவருகிறது இந்தப் புத்தகம்.

இதன் விலை ரூ. 2,500/-

தமிழில் இதுபோன்ற புத்தகங்கள் கிடைப்பதில்லையே என்ற குறையைப் போக்க, தமிழ் மொழிபெயர்ப்பில் இந்தப் புத்தகத்தை ஆர்கே கிராபிக்ஸுடன் சேர்ந்து கிழக்கு பதிப்பகம் கொண்டுவந்துள்ளது. விலை ரூ. 995/- மட்டுமே. 168 பக்கங்கள், ஆர்ட் பேப்பர், கெட்டி அட்டை. சுவாமிநாதனின் எழுத்தை தமிழுக்குக் கொண்டுவந்திருப்பவர் கே.ஆர்.ஏ. நரசய்யா.

மாமல்லபுரம் காஃபி டேபிள் புத்தகத்தை வாங்க

கோவில் கட்டும் கலை எப்படி ஆரம்பித்திருக்கும், மகேந்திரவர்மன் தமிழகத்தில் உருவாக்கிய கல்லில் செதுக்கிய கோவில்கள், மகேந்திரனின் வழித்தோன்றல்கள் மாமல்லபுரத்துக்கு வந்து என்ன செய்தனர் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் இந்தப் புத்தகம், விளக்கமாக மாமல்லையில் காணப்படும் கீழ்க்கண்டவற்றைப் பற்றிப் பேசுகிறது:
  • குடைவரைக் கோவில்கள்
  • ஒற்றைக் கல் கோவில்கள்
  • கட்டுமானக் கோவில்கள்
  • திறந்தவெளி புடைப்புச் சிற்பத் தொகுதிகள்
  • என்னவென்றே வகைப்படுத்த முடியாத பல்லவப் புதுமைகள்
அத்துடன் மாமல்லையில் உள்ள வெப்பமண்டல, வறண்ட, பசுமைமாறாக் காடுகள் பற்றியும் அங்குள்ள தாவரங்கள் பற்றியும் படங்களுடன் விளக்கங்களைத் தருகிறது இந்தப் புத்தகம். கூடவே கோவில் கட்டுமானம் மற்றும் சிற்பக் கலையில் பயன்படுத்தப்படும் சொற்கள், அவற்றுக்கான பொருள்கள் ஆகியவற்றைச் சில கோட்டோவியங்களுடன் விளக்குகிறது அருஞ்சொற்பொருள் பகுதி.

தமிழகத்தின் மிகச் சிறந்த கலைத்தலமாக, யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக இருக்கும் இந்த இடத்தின் மேன்மையை முழுதாக உணர, ரூ. 995/- கொடுத்து இந்தப் புத்தகத்தை வாங்குங்கள்.

Monday, February 21, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு

தெரு கிரிக்கெட் விளையாடும் சிறுவன் தொடங்கி தெண்டுல்கர் வரை அத்தனை பேருக்கும் ஒரே கனவுதான். உலகக்கோப்பை. அதை மட்டும் வென்றுவிட்டால் போதும்; உலகத்தையே வென்றதற்குச் சமம்.

1975 தொடங்கி இன்று வரையிலான உலகக்கோப்பைப் போட்டிகளின் புள்ளிவிவரத் தொகுப்பு மட்டுமல்ல; உங்களை சிலிர்க்க வைத்த, பிரமிக்க வைத்த, பெருமை கொள்ளவைத்த அத்தனைத் தருணங்களையும் வரலாற்றுப் பதிவாக மறு உருவாக்கம் செய்கிறது இந்தப்புத்தகம்.

நடந்துமுடிந்த போட்டிகளை மீண்டும் ஒருமுறை வர்ணித்து, சுவாரசியம் குறையாமல் எழுதுவது சுலபமான விஷயம் அல்ல. தீவிர கிரிக்கெட் ரசிகரான நூலாசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி ரசித்து ரசித்து எழுதியிருப்பதை நீங்கள் சிரித்துச் சிரித்துப் படிக்கலாம்.

நேற்றுவரை டிவியையும் டிவிடியையும் வைத்து உலகக்-கோப்பைப் போட்டிகளை நினைவூட்டி ரசித்த நீங்கள், இனி புத்தகம் மூலமாகவும் ரசிக்கப்போகிறீர்கள். புதிய அனுபவத்துக்குத் தயாராகுங்கள்!


Enjoy Cricket World Cup 2011.