Monday, July 09, 2007

பொறியியல்/மருத்துவக் கல்வியின் விலை

கடந்த சில தினங்களாக சுயநிதி பொறியியல்/மருத்துவக் கல்லூரிகள் பற்றிய விவாதம் பாமக-திமுக கட்சிகளிடையே நடந்து வருகிறது.

சுயநிதி பொறியியல்/மருத்துவக் கல்லூரிகள் விதிமுறைகளுக்கு மாறாக மாணவர்களிடமிருந்து எக்கச்சக்கமான பணத்தை வசூல் செய்கின்றன; அவ்வாறு பெறும் பணத்துக்கு ரசீது கொடுப்பதில்லை என்பது அனுபவபூர்வமாக நம்மில் பலருக்குத் தெரிந்துள்ளது. என் உறவினர்கள், நண்பர்கள் குடும்பங்களில் பல மாணவர்கள் இதுபோன்ற கல்லூரிகளில் சேர்ந்து படித்துள்ளனர். பொறியியல் படிப்புகளுக்கு டொனேஷன் என்ற பெயரில் 1 லட்சம் முதல் 8 லட்சம் வரை வாங்கப்படுகிறது. மருத்துவப் படிப்புகளுக்கு 50 லட்சம் என்று பேசுகிறார்கள்.

புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் பொன்முடி கூறுகிறார். ஆனால் இந்த மாணவர்கள் யாருமே புகார் செய்யப்போவதில்லை. பணம் கேட்கிறார்களே என்று புலம்பினாலும் பணம் கொடுக்க இவர்கள் யாருமே தயங்குவதில்லை. அதாவது, இது விரும்பிக் கொடுக்கும் லஞ்சம். ஏனெனில் இந்தப் படிப்பு முக்கியம், இதற்கு எத்தனை பணம் ஆனாலும் பரவாயில்லை என்று இந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கருதுகிறார்கள்.

அதிகபட்சமாக 'ஸ்டிங் ஆபரேஷன்' மூலம் இந்தக் குற்றங்களை வெளிக்கொணர முடியும். மக்கள் தொலைக்காட்சி இதில் ஈடுபடலாம்.

இந்தியாவின் கல்விக்கொள்கை கறுப்புப்பணத்தை வரவேற்கும் விதமாகவே அமைந்துள்ளது. பொதுமக்களிடையே உயர்கல்விக்குப் பெருத்த ஆதரவு உள்ளது. ஆனால் அரசுக் கல்லூரிகளால் தேவையான இடங்களை உருவாக்க முடிவதில்லை.

தனியார் கல்வி நிறுவனங்கள் லாபநோக்கில்லாத அறக்கட்டளைகளாக அமையவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் லாபநோக்கில்லாமல் கல்வியைத் தரும் தன்மை ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாகவே முடிவடைந்துவிட்டது. எனவே, பெரும்பாலும் சட்டத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாத பொறுக்கிகள் மட்டுமே இப்பொழுது கல்வி நிலையங்களைத் தொடங்குகிறார்கள். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்.

இந்தத் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்துமே லாபத்தை எதிர்பார்த்து ஆரம்பிக்கப்படுகின்றன. ஆனால் சட்டம் அதற்கு இடம் கொடுக்காது என்னும் காரணத்தால் கறுப்புப் பணமாக, கணக்கில் காட்டாமல், கல்விக்கு முன்னுரிமை கொடுக்காமல் லட்சம் லட்சமாக வாங்குகிறார்கள்.

இதனை சட்டம் கொண்டுவந்து தடுக்கவே முடியாது. கொடுக்க விரும்புபவர்களும் வாங்க விரும்புபவர்களும் இருக்கும்வரை இது நிற்காது.

ஆனால் வேறு ஒன்றைச் செய்யலாம். இன்றுள்ள சுயநிதி தொழிற்கல்வி நிலையங்களைப் பொருத்தமட்டில் என்ன பிரச்னை என்று ஆராயலாம்.

* சட்டப்படி லாபம் சம்பாதிக்கமுடியாது என்னும் நிலையில் லாபத்தை விரும்பும், ஆனால் நியாயமான கம்பெனிகள் இந்தத் துறையில் ஈடுபடமுடியாது.
* சட்டபூர்வமாக கல்வி நிறுவனங்களை விற்பது, வாங்குவது, லாபம் அடைவது எளிதல்ல.
* பங்குச்சந்தையை அணுகி வேண்டிய பணத்தை முதலீடாகப் பெற்று நிறுவனத்தை விரிவாக்க முடியாது. பணம் வேண்டுமென்றால் கடன்களை மட்டுமே பெற முடியும்.

இந்தக் காரணங்களால் சட்டத்துக்குப் புறம்பாகவே அனைத்து விஷயங்களும் நடைபெறுகின்றன.

எனவே சட்டங்களை முற்றிலுமாக மாற்றி கல்வியில் லாபநோக்குள்ள நிறுவனங்கள் ஈடுபடலாம் என்று சொல்லிவிடலாம்.

நம்முடைய அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் ஆகிய அனைத்துமே இன்று லாபநோக்குள்ள நிறுவனங்களால்தான் நடத்தப்படுகின்றன. தேவைப்படும்போது அரசு தனது பங்களிப்பைச் செய்கிறது. ஆனால் கல்வி என்று சொன்னால் உடனே அங்கு லாபநோக்கம் இருக்கக்கூடாது என்று பலரிடம் 'ஒருமித்த' கருத்து உள்ளது.

லாபநோக்கு நிறுவனங்கள் கல்வித்துறையில் ஈடுபடலாம் என்றால் என்ன ஆகும்?

1. Greater transparency. நிறைய முதலீட்டுடன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் கல்வியில் ஈடுபடும். இவை தகவல்களை வெளிப்படையாக அளிக்கவேண்டும். இன்றைய கல்வி நிறுவனங்கள் தகவல்களை வெளிப்படையாக அளிப்பதில்லை.

2. Regulated fee. அரசு கட்டணம் இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக மொபைல் ஃபோன் கட்டணங்கள் போன்று இதிலிருந்து இதற்குள் இருக்கலாம் என்று தீர்மானம் செய்யலாம். ஒவ்வொரு நிறுவனமும் தனது விருப்பத்துக்கு ஏற்ப கட்டணத்தைத் தீர்மானம் செய்து, அந்தக் கட்டணத்தை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். அப்பொழுது மாணவர்கள் தாம் எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும் என்பதை நன்கு அறிந்துகொண்டு அதற்கு ஏற்ப வேண்டிய நிறுவனத்தில் சேர்ந்துகொள்வர்.

3. Stiff penalties. மாணவர்களை ஏமாற்றுதல், அரசின் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தவறான தகவலை அளித்தல் போன்ற குற்றங்களுக்கு பல கோடி ரூபாய் அபராதமாக விதிக்கலாம்.

4. License fee & taxes. லாப நோக்குள்ள நிறுவனம் என்பதால் இவற்றிடமிருந்து உரிமக் கட்டணம் என்று பெரும் தொகையையும், ஆண்டு லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை வரியாகவும் வசூலிக்கலாம். இந்த வருமானத்தை அரசு அடிப்படைக் கல்விக்குச் செலவழிக்கலாம்.

5. Better loans. வெளிப்படையான கட்டணம் என்பதால் உண்மையாக கல்விக்கு எவ்வளவு செலவாகும் என்று கல்வி நிறுவனத்துக்கும் மாணவர்களுக்கும் தெரியும். எனவே கல்வி நிறுவனமே சில வங்குகளுடன் உறவு ஏற்படுத்தி தேவையான கல்விக்கட்டணத்தைக் கடனாகப் பெற்றுத்தரலாம். இப்பொழுது 8 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டும் என்று கேட்டால் எந்த வங்கியும் கடன் கொடுக்காது!

6. Better companies. இப்பொழுதுள்ள அரசியல் தாதாக்களுக்கு பதிலாக நியாயவான்கள் பலர் கல்வித்துறைக்கு வரலாம். இது மிகவும் நல்லதாகப் பீக வாய்ப்புள்ளது.

7. Increased capacity. பங்குச்சந்தைமூலம் பணம் திரட்ட வாய்ப்புள்ளதால் மிகப்பெரிய அளவுக்கு இடங்களை அதிகரிக்க முடியும். இதனால் demand-supply கொள்கைப்படி, தானாகவே கட்டணம் குறையும். வேண்டியவர்கள் வேண்டிய படிப்பைப் பெறமுடியும். ஏழைகளுக்கும் எஞ்சினியரிங் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

எவ்வளவு விரைவில் கல்வியை லாபநோக்குள்ளதாக மாற்றமுடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாட்டுக்கு நல்லது நடக்கும். அதுவரை கறுப்புப் பணமுதலைகள் வாழ்வில் கொண்டாட்டம்தான்.

4 comments:

  1. அருமையான யோசனை. இன்னும் விரிவாக அலசப்பட வேண்டிய விசயம்

    ReplyDelete
  2. //அருமையான யோசனை. இன்னும் விரிவாக அலசப்பட வேண்டிய விசயம்//
    என் கருத்தும் அதே!
    -vibin

    ReplyDelete
  3. I agree... After implementing this kind of approach, we should also have Ranking of the colleges (some thing similar to USnews. Charges can then be correlated with better ranking. demand /supply will be appropriate. Banks/financing agencies also can give loans based on the strength(merit) of an applicant. eg ---IIT/ Jipmer guys are more succesful than say some run of the mill colleges.

    ReplyDelete
  4. //புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் பொன்முடி கூறுகிறார்.//

    மணப்பாறையில் யாருமே புகார் செய்யவில்லை.... இன்று வரை அறுவை சிகிச்சை செய்ததை பதிவு செய்த குறுந்தகடு கிடைக்கவில்லை....

    ஆனால் மருத்துவர்களை கைது செய்து சிறையில் வைத்துள்ளனர்.....

    புகார் இல்லை..... இரு வாரங்களாக தேடியும் ஆதாரம் கூட இல்லை.... ஆனால் குற்றம் சுமத்தப் பட்டவர்களோ சிறையில்.... இது ஏன் பொன்முடிக்கு தெரியாமல் போனது....

    I am not supporting murugesan or dileepan raj..... but ponmudi should himself know the hollowness of his statement

    ReplyDelete