Friday, May 20, 2016

ஹயெக், பணவீக்கம், பிட்காயின், சுவாமி, ராஜன்

பிரெடெரிக் அகஸ்ட் ஹயெக் (FA Hayek) பற்றிய ஓர் அருமையான அறிமுகப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஹயெக் எழுதியவற்றைப் படிக்கத் தொடங்குமுன் இந்த அறிமுகப் புத்தகத்தைப் படித்துவிடலாம் என்று எடுத்திருந்தேன். Eamonn Butler எழுதிய Friedrich Hayek: The Ideas and Influence of the Libertarian Economist என்ற புத்தகம் இது.

பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது பற்றிப் பேசும் ஹயெக், பொதுவாகவே வரலாற்றைப் பார்க்கும்போது, அரசுகள் தங்களிடம் இருக்கும் ஏகபோக அதிகாரமான பணம் அச்சிடுவதை வைத்துக்கொண்டு மக்களைக் கொள்ளையடித்து, ஏய்க்கிறார்கள் என்கிறார். அதற்கு என்ன மாற்று இருக்கிறது?

ஒரேவழி, அரசுகளிடம் இருக்கும் பணத்தை அச்சிடும் ஏகபோக அதிகாரத்தை நீக்கி, பணம் வெளியிடுவதையும் போட்டிச் சந்தைக்குள் கொண்டுவரவேண்டியதுதான் என்று படுதைரியமான யோசனையை "Choice in Currency and Denationalisation of Money" என்ற ஆக்கத்தில் முன்வைக்கிறார். இதைப் படித்த உடனேயே பிட்காயின்தான் (Bitcoin) என் நினைவுக்கு வந்தது. அதுவும் சமீபத்தில்தான் சடோஷி நாகாமோட்டோ தான்தான் என்று ஆஸ்திரேலியர் ஒருவர் சொன்னதாகச் செய்திகள் வேறு வந்திருந்தன. ஓராண்டுக்குமுன் வாங்கிப் படிக்காமல் இருந்த Nathaniel Popper எழுதிய “Digital Gold: Bitcoin and the Inside Story of the Misfits and Millionaires Trying to Reinvent Money" என்ற புத்தகம் நினைவுக்கு வந்தது. கூடவே, ஹயெக்-பிட்காயின் கனெக்‌ஷன் நமக்கே தோன்றுகிறது என்றால் இதைப்பற்றி வேறு பலரும் சிந்தித்திருப்பார்களே என்று நினைத்து இணையத்தைத் தேடினேன்.

ஃபோர்ப்ஸில் வந்த ஒரு கட்டுரையின் வழியே 2012-ல் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வெளியிட்டிருந்த Virtual Currency Schemes (pdf) என்ற ஓர் ஆவணம் கிடைத்தது.

அதில் இ.சி.பி, இவ்வாறு சொல்கிறது:
The theoretical roots of Bitcoin can be found in the Austrian school of economics and its criticism of the current fiat money system and interventions undertaken by governments and other agencies, which, in their view, result in exacerbated business cycles and massive inflation.
பிட்காயின் அல்லது வர்ச்சுவல் கரன்சி பற்றி எனக்கு ஆர்வம் அதிகம் இல்லாமல் இருந்தது. அவை குறித்த ஓர் அச்சமும் இருந்துவந்தது. ஆனால் ஹயெக், சந்தை அடிப்படையிலான கரன்சி பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இப்போது வந்துள்ளது. இந்த வார இறுதிக்கான அசைன்மெண்ட், மேலே உள்ள அனைத்தையும் படித்து முடிக்கவேண்டும்:-)

ஹயெக்கின் மிக முக்கியமான அறிவுரையே, பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது. பணவீக்கத்தைப் போல ஒரு நாட்டை அழிப்பது வேறு ஒன்றுமில்லை என்கிறார் ஹயெக். பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க மானிட்டரி பாலிசி, அவ்வப்போது வட்டி விகிதத்தைச் சற்றே அதிகமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். ஆனால் இது தொழில்துறைக்குச் சிரமத்தைத் தரும். மந்தமான தொழில் நிலைமையை மாற்ற வட்டி விகிதத்தைக் குறைப்பதை ஹயெக் கடுமையாக எதிர்த்தார். தேவையின்றி வட்டிவிகிதத்தை மத்திய வங்கி குறைக்கும்போது அது எந்த அளவுக்குப் பணப் புழக்கத்தை அதிகரித்து, விரைவில் மக்களுக்குப் பயன் ஒன்றுமே இல்லை என்றாகி, பெரும் நாசத்தையும் விளைவிக்கும் என்று ஹயெக் விளக்குகிறார். நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருந்தால் அரசு பணத்தைக் கடன் வாங்கிச் செலவிடுவதால் பொருளாதாரத்தை உந்த முடியும் என்று ஜான் மேனார்ட் கீன்ஸ் சொன்னதையும் ஹயெக் கடுமையாக எதிர்த்தார்.

வட்டி விகிதம் குறையவேண்டும் என்றுதான் நானும் இதுவரை நினைத்துவந்தேன். ஆனால் ஹயெக் வட்டிவிகிதம் பற்றிச் சொல்லியுள்ளதைப் பார்க்கும்போது, நம் நோக்கம் குறைவான வட்டிவிகிதம் அல்ல, குறைவான பணவீக்கம் + அதற்கு ஏற்ற வட்டிவிகிதம் என்பதே என்பது புரிய ஆரம்பித்துள்ளது.

இதைத்தான் நம் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் முன்வைக்கிறார். இதைத்தான் சுப்ரமணியன் சுவாமி கடுமையாகச் சாடுகிறார். ராஜன் வட்டிவிகிதத்தைக் குறைக்காததுதான் இந்தியப் பொருளாதாரம் மந்தமாக இருக்கக் காரணம் என்கிறார் சுவாமி. எனவே ராஜனைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்கிறார் சுவாமி.

சுவாமியா, ராஜனா என்றால், ராஜன்தான் சரி என்று தோன்றுகிறது. எனவே சுவாமியின் அவதூறுகள் குறித்துக் கவலைப்படாமல் ராஜனுக்கு இன்னொருமுறையும் மோதி பதவி நீட்டிப்பு செய்யவேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

14 comments:

  1. மிக நன்று பத்ரி. நான் அமெரிக்காவில் இருக்கின்றேன். உங்களது மன மாற்றங்களைக் கண்டு பெரும் மகிழ்ச்சி. எல்லா மக்களைப் பற்றியும் சிந்திக்கத் துவங்கியுள்ளீர்கள்! சுவாமி போன்ற கைக்கூலிகளை அடையாளம் கண்டாலே ராஜன் போன்ற மேதைகளை நாம் அரவணைக்க முடியும்! மிக மிக மகிழ்சி! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  2. Really i like u only for such above articles.

    ReplyDelete
  3. உண்மையில் சுவாமிக்கும் - ராஜனுக்கும் பகையில்லை .மோடி உணர்வின் நிழலாக சுவாமி செயல்படுகிறார்.அவ்வளவுதான் .ராஜன் தவறு செய்தால் சர்வதேச சமூகம் சாடுவதற்கு கையில் பேனாவோடு காத்து இருக்கிறது .
    இவர் பிரபலம் தேடுவதிலும் நிழல் மனிதராக செயல்படுவதிலும் மன்னராச்சே ?

    ReplyDelete
  4. சுப்ரமணியன் சுவாமி, துக்ளக் சோ போன்ற பிராமணர்களால் ஏற்படுகிற பிராமண வெறுப்பு எந்தளவிற்கு ஒரு உச்சத்தைத் தூண்டுகிறது என்றால் ஒட்டு மொத்த யூத இனத்தையே அழித்தொழிக்கத் துடித்த ஹிட்லரின் கோப வெறுப்பளவிற்கு.மறுபுறம் உங்களைப் போன்றவர்களின் இந்த இது போன்ற கட்டுரைகள் தமிழ் சினிமாக்களின் க்ளைமாக்ஸ் காட்சியைத் தான் நினைவூட்டுகிறது. ஹீரோவின் கொலை வெறியைக் கடைசி வினாடியில் தடுக்கிற ஏதாவது ஒரு அம்சத்தைப் போலத் தான் நினைவூட்டுகிறது. தமிழ் சமூகத்தைக் கொலை வெறிக்குத் தூண்டியே தீர்வது என்ற அவர்களைப் போன்றவர்களின் எண்ணத்தில் தங்களைப் போன்றவர்களின் எழுத்துப் பணி டண் டண்ணாக மண்ணை விழ வைக்கட்டும். வளர்க உங்களைப் போன்றவர்களின் எழுத்துப் பணி. இந்த எனது விமர்சனக் கருத்தை பிரசுரிப்பதாய் இருந்தால் திருத்தம் இன்றி அப்படியே பிரசுரிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. When Hitler loved truth? DK fellows are like that only.They do hate politics and suppress ppl with reservation. Fit for nothing fellows. As far as Badris article is concerned Hayek theory was doomed long back. He needs to read about Keynes and Milton before writing more nonsense on economy .

      Delete
  5. ஒட்டு மொத்தத் தமிழ் சமூகத்தையே ஒரு ஹிட்லர் சமூகமாக மாற்றத் துடிக்கும் மற்ற பிராமண அறிவாளிகள், தலைவர்கள் மத்தியில் பத்ரி உங்களைப் போன்றவர்களின் இத்தகைய எழுத்துப் பணி மட்டுமே இனி (வருங்காலத்திலாவது) அத்தகு துர்பாக்கியத்திலிருந்து இரண்டு சமூகங்களையும் காப்பாற்றக் கூடும்.

    ReplyDelete
  6. வாட்ஸ் ஆப் ஷேர் ஆப்சனும் கொடுக்கலாமே

    ReplyDelete
  7. அருமையான பதிவு👍

    ReplyDelete
  8. ஹலோ பத்ரி,

    ஹயெக்கின் அறிமுகத்திற்கு நன்றி. பிட்காயின் என்றாலே ஒரு பயம் வருகிறது. எவனாவது ஹேக்கிங் பண்ணி எல்லாத்தையும் ஆட்டைய போட்டு விட்டால் எங்கே போய் முறையிடுவது? எனக்கு வேறு ஒரு சந்தேகமும் உண்டு. தெரிந்தவர்கள் சொல்லவும். நம் ரூபாயின் மதிப்பு பொருட்களுக்கு எதிராகக் குறைந்து கொண்டே வருகிறது அல்லவா? டாலருக்கு எதிராக நடப்பது இருக்கட்டும். நான் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் எதிராகச் சொல்கிறேன். உதாரணமாக ஒரு சோப் 1990-லும் அதே சோப் தான். 2016-லும் அதே சோப் தான். ஆனால் அதற்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டே வந்திருக்கிறது அல்லவா? 5 ரூபாய் ஒரு சோப்பிற்குச் சமமாக இருந்தது. ஆனால் இன்று 30 ரூபாய் வைக்க வேண்டி இருக்கிறதே? இந்த வீழ்ச்சி இப்படியே போய்க்கொண்டு இருந்தால் நாளைக்கு நாமும் இந்தோனேசியாவைப் போல ஒரு சோப் ஒரு லட்சம் கொடுத்து வாங்கும் நிலைக்குப் போய்விடுவோமா? ஸிம்பாப்வே நாட்டில் இன்னும் மோசம். ஒரு தள்ளு வண்டியில் பணத்தைக் கொண்டு போனால் தான் வாங்க முடியும். அந்த நிலைமை நமக்கும் படிப்படியாக வந்து விடுமா? வருங்காலத்தில் பணப்பரிவர்த்தனை எல்லாமே கார்டில் தான் நடக்கும் என்று வைத்துக்கொண்டாலும் கோடிகளில் தான் மளிகைச் சாமான் வாங்குவோமா?

    ReplyDelete
  9. Subramanyam swamy is an Iyer and Raghuram Rajan is an Iyengar. Historically, Iyers and Iyengars don't get along well (See Dasavadharam Movie)!!!.

    ReplyDelete
  10. Dr.S.Swamy is also an economist who taught in Harvard etc. Many of his ideas also are very radical. He also may be aware of Hayek's theory. Unless we hear his side also in detail we cannot come to a conclusion.
    He has some other reasons also for removing Dr.Rajan.

    ReplyDelete
  11. A good post. It is a sad state of affairs that the Austrian school of economics has been relegated to the fringes of macroeconomic orthodoxy.
    Rajat is by far the best central bank governor going around. He does not pander to the government goons and hence the call for his removal.
    I would recommend "Economics in One Lesson" to learn how to evaluate economic policies.

    ReplyDelete
  12. I guess both Swamy and Parivar fielding S.Gurumurthy to be the next RBI governor.

    ReplyDelete
  13. ரேன் சம் வைரஸ் தாக்குதலுக்குப் பின் பிட் காய்ன் பற்றி விரிவாக ஏதும் பதிவிடுவீர்கள் எனப் பார்த்தேன். இன்னமும் அத்தகைய ஒன்றையும் காணோம். மற்ற பணிச் சுமைகளின் அழுத்தம் அதிகமா?!

    ReplyDelete