Thursday, March 22, 2018

மேலும் பல மதங்கள் உதயமாகுமா?

[மின்னம்பலம் இணைய இதழுக்காக எழுதியது.]

கர்நாடக அமைச்சரவை, ‘லிங்காயத்’ என்பது தனி மதம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. அவ்வாறு அறிவிக்கக் கோரி மத்திய அரசை அணுகியுள்ளது. இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், லிங்காயத் மதமானது சமணம், பௌத்தம், சீக்கியம் போல இந்தியாவில் ஒரு சிறுபான்மை மதமாக இருக்கும்.

இதுநாள்வரையில் இந்து மதத்தின் ஒரு பிரிவாகக் கருதப்பட்டுவந்த லிங்காயத்துகள், தனி மதமாகத் தங்களை அறிவிக்கக் கோரிப் போராட்டம் நடத்திவந்தனர். கர்நாடகத்தில் வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பாரதிய ஜனதா கட்சியை செக்மேட் செய்ய ஒரு சரியான வாய்ப்பாக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமய்யா இந்த முடிவை எடுத்துள்ளார்.
மத்திய அரசு இதை எதிர்த்தாலும் பிரச்சினை, ஏற்றாலும் பிரச்சினை என்ற நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதைத்தான் சித்தராமய்யா எதிர்பார்த்திருந்தார்.

உண்மையில், இந்து மதம் என்பது கலவையானது. முற்றிலும் முரண்படக்கூடிய பல வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடிக்கும் பல குழுக்கள் ஒன்றுசேர்ந்து இந்துக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பல கடவுள்கள், பலவிதமான கோயில்கள், பல்வேறு வழிபாட்டு முறைகள் என்று பிரிந்து கிடந்தாலும், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதுதான் இவர்கள் அனைவரும் ‘இந்து’ மதத்தினர் என்று குறிக்கப்பட்டனர்.

வாக்கு வங்கி அரசியலின் எதிர்வினை

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்து ஒற்றுமை என்ற பெயரில் இந்துக்களை ஒருங்கிணைத்து அவர்களை ஒரு பெரும் வாக்கு வங்கியாக ஆக்க முற்பட்டதற்கான எதிர்வினைதான் இப்போது கர்நாடகத்தில் நடைபெறுவது. அயோத்தி ராமர் கோயில் பிரச்சினை தொடங்கி, பசுப் பாதுகாப்பு, கிறிஸ்தவ / இஸ்லாமிய மதமாற்றத்துக்கு எதிரான போராட்டம், ‘லவ் ஜிகாத்’ எனப்படும் மதமாற்றத் திருமணங்களுக்கு எதிரான போராட்டம் போன்றவற்றை பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.எச்.பி அமைப்பும் கையில் எடுப்பதன் அடிப்படை, இந்துக்களை அரசியல் வாக்கு வங்கியாக உணர்வுரீதியாக ஒருங்கிணைப்பது. இதனாலேயே இந்துக்களின் எண்ணிக்கையைக் குறைத்து லிங்காயத் என்ற புதிய மதத்தை உருவாக்கும் முயற்சி பாஜகவையும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் அதிகம் துன்புறுத்தும். ஆனால், கொஞ்சம் கவனமாக யோசித்துப் பார்த்தால் பாஜக கவலைப்பட வேண்டியதில்லை என்றுதான் தோன்றுகிறது.

இந்தியாவில் மதச் சிறுபான்மையினருக்கு என்று சில வசதிகள் உள்ளன. கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் அவர்களுக்குச் சிக்கல்கள் குறைவு. பிற நிறுவனங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகள் மதச் சிறுபான்மையினருக்குக் கிடையாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. ‘அனைவருக்கும் கல்வி உரிமை’ சட்டத்தின் ஷரத்துகள் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தா. இந்தக் காரணங்களுக்காகத்தான் ராமகிருஷ்ண மடமும் ஒரு காலத்தில் தங்களைத் தனி மதமாகக் கருதக் கோரினர். ஆனால், பின்னர் பின்வாங்கிக் கொண்டனர்.

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் மதச் சிறுபான்மையினருக்குக் கிடைக்கும் கல்விச் சலுகையைக் கண்டு பொறுமுகின்றனர். ஆனால், ஆட்சியில் இருக்கும்போது இந்தச் சட்டங்களை மாற்ற அவர்கள் முனைப்பு காட்டுவதில்லை. சம ஆடுதளத்தை உருவாக்க அவர்கள் முனைவதில்லை. அதற்குப் பதில், ஒவ்வொரு மாநிலத்திலும் சில குழுக்களைத் தனி மதமாக அறிவிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுவதே சிறந்தது. தமிழகத்தின் அய்யாவழி, கேரளத்தின் நாராயண குரு அமைப்பு, கர்நாடகத்தின் லிங்காயத், வங்காளத்தின் ராமகிருஷ்ண வழி என்று தேடித் தேடி இவர்கள் அனைவரையும் தனித் தனி மதங்களாக உருவாக்கிவிடலாம். மீதமுள்ள இந்துக்களும் தங்களை சைவர்கள், வைணவர்கள், சாக்தர்கள், அத்வைதிகள், இயற்கை வழிபாட்டாளர்கள், சார்வாகர்கள், நாத்திகர்கள் என்றெல்லாம் அறிவித்துவிடலாம்.

விளைவுகள் என்னவாக இருக்கும்?

கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தாங்கள் மட்டும்தான் மதச் சிறுபான்மையினர் என்று தனிச் சலுகை கேட்க முடியாது. அனைவருமே மதச் சிறுபான்மையினர்தான் என்றாகிவிடும். மதச் சிறுபான்மையினருக்கான சிறப்புச் சட்டங்கள் அனைத்தும் காலாவதியாகிவிடும்.
யாரேனும் ஒரு சிறு குழு செய்யும் ஆட்சேபகரமான காரியங்களுக்காக இந்து மதம் சிலுவை சுமக்க வேண்டியதில்லை. இந்துத் தீவிரவாதம் என்ற சொல் காணாமல் போய்விடும். கலுபுர்கியையும் கௌரி லங்கேஷையும் கொலை செய்தது ஒரு லிங்காயத்தாகக்கூட இருக்கலாம் அல்லவா! கோயிலுக்குள் ‘இந்துக்கள் மட்டும் வரலாம்’ என்ற பலகைகள் எடுக்கப்பட்டுவிடும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தலித்துகள் அவரவர் விரும்பிய புதிய மதத்தை உருவாக்கிக்கொள்ளலாம். அல்லது பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைத் தழுவிக்கொள்ளலாம். லிங்காயத் மதத்தில்கூடச் சேர்ந்துகொள்ளலாம். ஆனால், தற்போதைய சட்டங்களின் அடிப்படையில் பட்டியல் இனத்தவருக்கான வாய்ப்புகளை இழக்க வேண்டியிருக்கும்.
பழங்குடியினர் அவரவர் மதங்கள் என்று தங்கள் குடிப் பெயர்களையே பயன்படுத்திக்கொள்ளலாம். தோடர்கள், தோடர் மதம். படகர்கள், படகர் மதம். மொத்தத்தில் இந்து மதம் என்பதை ஒட்டுமொத்தமாக நீக்கிவிடலாம்.

லிங்காயத் என்பது தனி மதம் என்று ஆகிவிட்டால், அவர்கள் சிவனை வழிபடாமல் போய்விடப் போகிறார்களா என்ன? திருநீற்றைக் குழைத்துப் பூசாமல் போய்விடுவார்களா என்ன? கழுத்தில் லிங்கத்தை அணியாமல் போய்விடுவார்களா என்ன? கூடலசங்கமதேவா என்று கூப்பிடாமல் போய்விடுவார்களா என்ன?

இந்து என்பது இடையில் வந்த ஒரு பெயர். இல்லாமல் போய்விட்டால் யாருக்கும் நஷ்டம் இல்லை.

இன்னும் சில தாக்கங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. இந்து என்ற பெயரே போய்விடும் என்றால், இந்து திருமணச் சட்டத்தை நீக்கவேண்டிய கட்டாயம் வந்துவிடும். இதை முன்மாதிரியாக வைத்து, பொது சிவில் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து விடலாம். தனித்தனியாக மதங்கள் எவற்றுக்கும் சிவில் சட்டங்கள் கிடையாது. ஒற்றை சிவில் சட்டம். ஒற்றை கிரிமினல் சட்டம்.

இது தொடர்ந்தால், பெரும்பாலான சாதிகள், தங்களைத் தனி மதங்களாக அறிவித்துக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் லிங்காயத்துகளைப் போலவே, ஒவ்வொரு சாதிக்கும் கடவுள் வழிபாட்டில், வாழ்க்கை முறையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. லிங்காயத்துகளுக்குப் பொருந்தும் எதுவும் இன்னொரு சாதிக் குழுவுக்கும் பொருந்தும். ஏனெனில், யாரைக் கேட்டாலும் அவர்களும் 1881 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதுதான் நாங்களும் இந்துக்கள் ஆனோம், அதற்கு முன் நாங்கள் வேறாகத்தான் இருந்தோம் என்று சொல்வார்கள்.

சாதிகளின் இடத்தில் மதங்கள்

இதன் நீட்சியாகப் பார்த்தால், இந்தியாவில் சாதிகள் அதிகாரபூர்வமாக ஒழிந்துவிடும். என்ன, மாறாக, பல ஆயிரம் மதங்கள் இருக்கும். அவற்றைப் பிற்பாடு கவனித்துக்கொள்ளலாம்.
இடஒதுக்கீடு என்பதில் பல்லாண்டு காலமாகவே சீர்த்திருத்தங்கள் தேவை என்பது கண்கூடு. இப்போதைக்கு இடஒதுக்கீடு என்பது சாதிகளுக்கு அல்ல, சாதித் தொகுப்புகளுக்கே வழங்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது மதக்குழு, பிற்படுத்தப்பட்டதா, மிகவும் பிற்படுத்தப்பட்டதா அல்லது பட்டியல் இனத்தைச் சேர்ந்ததா, பழங்குடியா என்பதைத் தீர்மானிக்க மிகத் தெளிவான வரையறைகளை இப்போது உருவாக்கிக்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட மதக் குழுவின் சராசரி வருமானம், படிப்பு, தொழில் நடத்தும் தன்மை, அரசு வேலைகளில் உள்ள பங்கு, வேறு சில சமூகக் காரணிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அவர்களுடைய ‘பிற்பாட்டுக் குறியீட்டெண்’ ஒன்றை உருவாக்கலாம். இந்த எண்ணின் அடிப்படையிலேயே ஒரு மதக்குழு எந்தத் தொகுப்பில் இருக்கும், அதற்கான இடஒதுக்கீட்டுச் சதவிகிதம் என்ன என்பது தீர்மானிக்கப்படும். இது வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கும்.

மத மாற்றம் என்பதைப் பகுத்தறிவின்பாற்பட்டு அணுகலாம். ஒருவர் கிறிஸ்தவ அல்லது இஸ்லாம் மதத்துக்கு மாறினால் ஏற்படும் பதற்றம் தேவையற்றது. அது மனத்தால் ஏற்பட்ட மாற்றமா, பணத்தால் ஏற்பட்ட மாற்றமா அல்லது மணத்தால் ஏற்பட்ட மாற்றமா என்பது முக்கியமே இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும். ஏதோ ஒரு நன்மை கிடைக்கிறது என்பதால் ஒருவர் மதம் மாறுகிறார். நாட்டில் பல ஆயிரம் மதங்கள் இருந்தால் அவற்றில் சில, பிரத்யேகக் குழுக்கள்போல யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருக்கலாம். வேறு சிலவோ மிக அதிகமான எண்ணிக்கையில் பலரையும் உள்ளே கொண்டுவர முனையலாம். அப்போது அவர்கள் தங்கள் குழுவுக்கு மாறிக்கொள்ளச் சில ஆதாயங்களைத் தர முன்வரலாம். அது இகலோகத்தைச் சேர்ந்த விலையில்லாப் பொருளாக இருக்கலாம். வேலைவாய்ப்பாக இருக்கலாம். காதலாக இருக்கலாம். கண்ணியமாக இருக்கலாம். நோய் தீர்க்கும் மருந்தாக இருக்கலாம். அல்லது பரலோக சாம்ராஜ்ஜியத்தில் பதவிசான இடமாக இருக்கலாம். அரசு சொல்ல வேண்டிய ஒரே விஷயம், ‘Caveat Emptor!’ - வாங்குவோர் ஜாக்கிரதையாக இருக்கவும். நுண்ணெழுத்தில் எழுதியிருப்பதை ஒழுங்காகப் படித்துவிட்டு வாங்கவும் (அல்லது சேரவும்.) மதமாற்றத் தடைச் சட்டங்கள் அடிப்படையில் தனிநபர் உரிமைக்கு எதிரானவை.

பாஜகவுக்கு இதனால் ஏதேனும் நஷ்டமா? காங்கிரஸுக்கு ஏதேனும் ஆதாயமா? குறுகிய காலக் கண்ணோட்டத்தில் அப்படி ஏதேனும் இருந்தாலும் நாளடைவில் அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. கிறிஸ்தவர்கள் மிகப் பெரும்பான்மையாக இருக்கும் நாகாலாந்தில் பாஜகவுக்கு 12 இடங்கள் கிடைக்கின்றன. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. துணை முதல்வர் பாஜகவைச் சேர்ந்தவர். வயதானவர்களை ஜெருசலத்துக்கு அழைத்துப்போவதாக பாஜக தேர்தல் வாக்குறுதி தந்திருக்கிறது. நாளை கர்நாடகத்தில் லிங்காயத்துகளுக்கு அதிகச் சலுகைகள் தரப்போவது நாங்கள்தான் என்று சொல்லி பாஜக அரசியல் செய்யலாம். லிங்காயத்துகளின் ஒப்பற்ற தலைவர் எடியூரப்பா என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆக, இன்னொரு மதம் இந்தியாவில் பிறந்திருக்கிறது என்று கைகொட்டி வரவேற்போம்.

2 comments:

  1. நல்ல சாட்டையடி. நக்கல் பிரமாதம்

    ReplyDelete
  2. உண்மையாகவே இது நல்லது என்கிறீர்களா அல்லது கூடாதென்கிறீர்களா என்றே புரியவில்லை.

    ReplyDelete