Tuesday, November 27, 2007

பிரபாகரனின் 2007 மாவீரர் உரை

வன்னி வானொலி நிலையத்தில் இலங்கை விமானப்படை வீசிய குண்டுகள், இணைய வானொலியில் வந்த நேரடி ஒலிபரப்பைத் தடுக்கவில்லை. இப்பொழுது pdf கோப்பாக தமிழ்நெட்டில் கிடைக்கிறது.

சில உடனடிக் கருத்துகள்:

1. புதிதாக இந்தப் பேச்சில் ஒன்றுமில்லை.

2. இந்தியாவுடன் சுமுகமான உறவுக்கு வழிகோலும் வகையில் இந்தப் பேச்சு இருப்பதாகத் தெரியவில்லை. ‘இந்தியாவின் தவறு' பற்றி பிரஸ்தாபம் நிறைய உள்ளது. இந்தியாவின் உதவியைப் பற்றி பிரபாகரன் அதிகமாக யோசிப்பதில்லை என்றே தோன்றுகிறது.

3. அமெரிக்காவைப் பெயர் சொல்லிக் குற்றம் சொல்ல பிரபாகரன் தவிர்த்திருக்கிறார். “எம் மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியற்சட்டங்களுக்கு அமைவாக, நீதி தவறாது மேற்கொள்ளும் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானச் செயற்பாடுகளையும் படுபாதகமான குற்றவியற் செயல்களாக இந்நாடுகள் காட்டிவருகின்றன. தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமானப்படுத்தியிருக்கின்றன. நீதி கேட்டு, நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியிருக்கின்றன.”

4. தமிழ்ச்செல்வன் கொலைக்கு சர்வதேச நாடுகளே காரணம் என்ற அபத்தமான கருத்து. “சமாதானத்திற்காக உழைத்த எமது தவப்புதல்வன் தமிழ்ச்செல்வனைச் சர்வதேசம் சமாதானம் பேசியே சாகடித்திருக்கிறது. .... சிங்களத் தேசத்தின் சமாதான விரோதப்போக்கை, போர்வெறியை உலக நாடுகள் உறுதியோடு கண்டித்திருந்தால், தமிழ்ச்செல்வன் இன்று உயிரோடு இருந்திருப்பான்.”

5. “பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்துவாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம்.” - இந்த வாக்கியத்தை கவனமாக வேறு மாதிரிச் சொல்லியிருக்கலாம். “எமக்கென ஒரு நாடு” என்பது இந்த எண்பது மில்லியன் தமிழர்களுக்குமான ஒரு நாடு என்ற பொருளில் இருந்தால் அது இந்தியாவில் எவ்வாறு திரிக்கப்படும் என்பதைப் புரிந்து வேறுவிதமாகச் சொல்லியிருக்கலாம்.

“உலகம் முழுதும் வாழும் தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்கு உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு” வேண்டும் பிரபாகரன், அதற்கான நடவடிக்கைகள் சிலவற்றையும் எடுக்கலாம்.

2005 மாவீரர் தின உரையை ஒட்டி நான் எழுதியது

Sunday, November 25, 2007

அரபி மொழிக்கு மொழிமாற்றம்

கார்டியன் வழியாக தி ஹிந்துவில் வந்த கட்டுரை. கார்டியனில் தேடிக் கண்டுபிடித்ததில் மேற்கொண்டு தகவல்கள் கிடைத்தன.

அபு தாபியைச் சேர்ந்த கலிமா என்னும் அமைப்பு பிற மொழிகளிலிருந்து நிறைய புத்தகங்களை அரபி மொழிக்கு மொழிமாற்றம் செய்ய உள்ளது. முதல் ஆண்டு (2007-ல்) 100 புத்தகங்கள். 2010-லிருந்து ஆண்டுக்கு 500 புத்தகங்கள். முதல் 100-ல் பாதி ஆங்கிலத்திலிருந்து அரபிக்கு. மீதம் உள்ள புத்தகங்கள் 16 மொழிகளிலிருந்து வரப்போகிறதாம்.

இந்தத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.

*

ஓர் ஆண்டுக்கு ஸ்பெயின் மொழிக்கு எவ்வளவு புத்தகங்கள் மொழிமாற்றம் செய்யப்படுகின்றனவோ, அந்த எண்ணிக்கையை அரபி மொழி கடந்த 1000 ஆண்டுகளில்கூட எட்டவில்லையாம்.

இங்கு அரபி மொழியை எடுத்துவிட்டு தமிழ் என்று போட்டால் அதே நிலைதான் இருக்கும்.

இந்தியாவில் மலையாளத்தை எடுத்துவிட்டுப் பார்த்தால் பிற மொழிகளிலிருந்து இந்திய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பது என்பது அபூர்வமே. அதற்கான உள்கட்டுமானம் இல்லாத நிலை. அப்படி ஒன்றைச் செய்தால் அதற்குத் தேவையான சந்தை இருக்குமா என்ற பயம். சந்தை இருக்கும் என்று தோன்றினாலும் எப்படி சரியாகச் செய்வது என்று தெரியாத சூழ்நிலை. தரம் பற்றிய கவனம் இல்லாமை.

இதனை மாற்றவேண்டுமென்றால் நிறைய புத்தகங்கள் சுமாரான தரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று தமிழுக்குக் கொண்டுவரப்படவேண்டும். பின்னர் அவற்றைச் செப்பனிடும் பணியும் தொடர்ந்து நடைபெறவேண்டும்.

மொழிபெயர்ப்பு பற்றிய என் முந்தைய பதிவு

Friday, November 23, 2007

விடுதலைப் புலிகள், காங்கிரஸ், திமுக

இன்றைய தி ஹிந்து கருத்துப் பத்தியில் ஹரீஷ் கரே எழுதியுள்ள கட்டுரையிலிருந்து:
... Mr. Antony was not in favour of the AICC resolution taking a critical note of the eulogy of LTTE cadres. (This was an indirect reference to the Tamil Nadu Chief Minister’s recent paean to a slain LTTE activist). His argument was that the Tamil Nadu Congress had already voiced its objection. Where was the need for the AICC to rub it in once again against a critical ally?
விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களில் இருவரான தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப்படை குண்டுவீச்சுத் தாக்குதலில் இறந்ததற்கு தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்து ஒரு கவிதை பாடியிருந்தார். உடனே அவர் என்னவோ உலகிலேயே பெரிய தப்புக்காரியம் செய்ததைப் போலவும் இந்திய இறையாண்மையைச் சீர்குலைத்ததுபோலவும் ஜெயலலிதா கருணாநிதியைச் சாடினார்.

விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் கருணாநிதி செய்தது தவறு என்பது சிலரது வாதம். அதுவும் அவர் தனிப்பட்ட முறையில் இல்லாமல் அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் பதவியில் இருப்பவர் என்பதால் என்கிறது இந்த வாதம்.

விடுதலைப் புலிகள் இந்தியாவின் இறையாண்மைக்கு எந்தவித அச்சுறுத்தலையும் தருவதாகத் தோன்றவில்லை. அப்படிப்பட்ட சில அமைப்புகளைக்கூட இந்தியா இதுவரை தடை செய்யவில்லை. தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் இந்தியா புலிகள் அமைப்பைத் தடைசெய்வதை ஒரு சடங்காகச் செய்துவருகிறது. யாரும் இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதில்லை. உள்துறை அமைச்சகம் ரப்பர் ஸ்டாம்ப் அடிப்பதோடு சரி.

காங்கிரஸ் கட்சிக்கு ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வருத்தம் இருப்பது நியாயமே. அதுவும் முக்கியமாக தமிழக காங்கிரஸுக்கு இது மனவருத்தத்தைத் தரக்கூடிய விஷயம் என்பதிலும் சந்தேகம் இல்லை. இதில் மேற்கொண்டு சோனியா காந்திக்கு என்ன நிலை என்பதை அறியவேண்டியது அவசியம். சோனியா காந்தி வெளிப்படையாக விடுதலைப் புலிகள் விவகாரத்தில் என்ன நிலை எடுக்க விரும்புகிறார் என்று எங்கும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. அவரைச் சந்தோஷப்படுத்தவென்றே தமிழக காங்கிரஸ்காரர்கள் சிலவற்றைச் சொல்கிறார்கள் என்று தோன்றுகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி சற்று தீவிரமாக சோனியாவின் மனத்தை அறிய முயற்சி செய்யவேண்டும். ஒரு ஸ்டேட்ஸ்மேன் சொந்த சோகத்தைத் தாண்டிச் செயல்படவேண்டும். கட்சி, நாடு, அண்டை நாடு, அங்குள்ள மக்கள் படும் அவலம் ஆகியவற்றைப் பற்றி யோசிக்கவேண்டும்.

இந்நிலையில் ஏ.கே.அந்தோனியின் கருத்து கவனிக்கப்படவேண்டும். முக்கியமாக திமுக, இலங்கையில் தமிழர்கள் நிலைமீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்குமா என்று நாம் பார்க்கவேண்டும்.

Saturday, November 17, 2007

அமேசானின் கிண்டில் (Kindle)

அமேசான் எந்த நேரமும் கிண்டில் எனப்படும் தனது மின்புத்தகப் படிப்பானை வெளியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எங்கோ ஆரம்பித்த சில வதந்திகள் இந்தக் கருவி திங்களன்று வெளியாகலாம் என்று சொல்ல, அத்தனை நியூஸ்வயர் செய்திகளும் அதையே திருப்பித் திருப்பி சொல்லி, வதந்தியை உண்மையாக உரைத்தன. இப்பொழுது அடுத்த வதந்தி, இந்த மின்புத்தகப் படிப்பான் கருவி வெளியாக ஜனவரிவரை ஆகலாம் என்கிறது.

$400 என்ற விலை அதிகம்தான்.

இலியாட் எனப்படும் கருவி - லினக்ஸ் இயங்குதளம், திறமூல ஆர்வலர்களுக்கு சந்தோஷம் தரக்கூடியது - இப்பொழுது $700-க்கு விற்கிறது. அதை வாங்கி அதில் தமிழ் மின்புத்தகத்தைப் போட்டுப் பார்த்தேன்.


மேலே, அளவு ஒப்புமைக்காக ஒரு ஆடியோ புத்தகம், ஒரு அச்சுப் புத்தகம் ஆகியவற்றையும் வைத்துப் படம் எடுத்துள்ளேன்.

இலியாடில் எல்.சி.டி திரை கிடையாது. உயர்தரமான e-ink தொழில்நுட்பத்தால் உருவான திரை உள்ளது. இதனால் மின்புத்தகத்தைப் படிக்கும்போது கண்ணை உறுத்துவது கிடையாது. எல்.சி.டி திரைதான் இருக்கப்போகிறது என்றால் அமேசானின் கிண்டிலை இன்னமும் குறைந்த விலைக்குக் கொடுக்கலாம்.

இந்தியாவுக்குத் தேவை மிகக் குறைந்த விலை மின்புத்தகப் படிப்பான் கருவி. ரூ. 5,000 என்பதே இந்தியாவுக்கு அதிகம்.

Sunday, November 11, 2007

சென்னை புத்தகக் கண்காட்சி 2008

சென்னை புத்தகக் கண்காட்சி நடக்க உள்ள நாள்கள்: 4-17 ஜனவரி 2008

இடம்: சென் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி வளாகம் (பச்சையப்பர் கல்லூரிக்கு எதிராக)

வெளியூரில் இருப்பவர்கள், சென்னைக்கு இந்த நேரத்தில் வருபவர்கள், தேதியைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.