Friday, October 14, 2011

அம்மா போஸ்டர்






சைதை துரைசாமிக்கு ஆதரவாக.

நிச்சயமாக இவர் சென்னை மேயர் தேர்தலில் ஜெயித்துவிடுவார் என்று தோன்றுகிறது. என் வாக்கு இவருக்கே.

Wednesday, October 12, 2011

மாறன் சாம்ராஜ்ஜியத்தில் ரெய்டு

திங்கள்கிழமையன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘புதுப்புது அர்த்தங்கள்’ காலை நிகழ்ச்சிக்காக ஜென்ராம் என்னை அழைத்திருந்தார். மற்றொரு விருந்தினர் ஞாநி. செய்தித்தாள்களில் வந்தவற்றை அலசும் நிகழ்ச்சி. ஏற்கெனவே அதில் இருமுறை கலந்துகொண்டுள்ளேன். நேரலை ஒளிபரப்பு முடிந்து வெளியே வரும்போது நியூஸ் பகுதியிலிருந்து பரபரப்பாக அங்கு வந்தனர். ‘மாறன் வீட்டில் ரெய்ட். அது தொடர்பான லைவ் கவரேஜில் கலந்துகொள்ள முடியுமா?’ என்று கேட்டனர். எனக்கு அலுவலகம் செல்ல நேரமாகிக்கொண்டிருந்தது. இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி 2ஜி பற்றியும் மேக்சிஸ்-ஏர்செல் பற்றியும் என் கருத்துகளைச் சொன்னேன்.

நிகழ்ச்சி நடக்கும்போது குருமூர்த்தி, சோ ராமசாமி, தா.பாண்டியன், டி.ராஜா, சௌந்திரராஜன் என்று பலர் தொலைபேசி வழியாகக் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவித்தபடி இருந்தனர். கம்யூனிஸ்டுகள் அல்லது கட்சி சாராதவர்கள் தவிர மீதி யாருமே கருத்து சொல்லத் தயாராக இல்லை என்று தெரிகிறது. அஇஅதிமுகவில் அம்மா தவிர மீது எல்லோரும் டம்மி. திமுகவில் பலருக்கு உள்ளூர ஆனந்தம் என்றாலும் வெளிப்படையாகச் சொல்லமுடியாது. காங்கிரஸ் இதைப்பற்றி எதையுமே சொல்லத் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் பாஜகவினருக்கு பதிலாக குருமூர்த்தியும் சோவும் பேசிவிட்டனர்.

***

ரெய்டு தொடர்பான தகவல்கள் மிகச் சொற்பமே. விலாவரியாக இன்னமும் யாரும் இந்தக் கதையை விளக்கவில்லை. ரெய்டு நடைபெற்றது மேக்சிஸ்-ஏர்செல் விஷயம் தொடர்பாக மட்டும்தானா அல்லது தயாநிதி மாறன் வீட்டில் இருந்த சட்டவிரோதமான தொலைபேசி இணைப்பகம் தொடர்பானதா? அல்லது இரண்டையும் பற்றியதா?

சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் என்றால் அது 2ஜி வழக்குடன் சேர்ந்து வராது. அதற்கெனத் தனி வழக்கு ஒன்று பதிவு செய்யவேண்டும். ஆனால் அந்தக் குற்றச்சாட்டு உண்மையென்றால் அதில் தண்டனை பெற்றுத்தருவது எளிது.

மாறாக, மேக்சிஸ்-ஏர்செல் விஷயத்தில் வலுவான வழக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இங்கும் சந்தர்ப்ப சூழ்நிலை, பாதிக்கப்பட்டவரின் (சிவசங்கரனின்) வாக்குமூலம் என்று போனால், வழக்கு நிற்குமா என்று தெரியவில்லை.

தயாநிதி மாறன் உண்மையிலேயே திட்டம் தீட்டி, சிவசங்கரனை மிரட்டி, உரிமம் தராமல் அலைக்கழித்து, பின் மேக்சிஸ் ஏர்செல்லை வாங்கியவுடனேயே அனைத்து உரிமங்களையும் தந்திருக்கலாம். ஆனால் அதனை எப்படி சந்தேகத்துக்கு இடமின்றி, சாட்சியங்களுடன் ஒரு வழக்காடுமன்றத்தில் நிரூபிப்பது? அதுதான் சிக்கலே.

அடிப்படையில் தயாநிதி மாறனுக்குத் தொலைத்தொடர்புத் துறையே கொடுக்கப்பட்டிருக்கக்கூடாது. Conflict of interest என்று தெரிந்தும் தயாநிதி மாறனுக்கு இந்தத் துறையைக் கொடுத்து மன்மோகனும் காங்கிரஸும் திமுகவின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்ததுதான் மிகப் பெரிய குற்றம். ஆனால் அதற்கு சட்டரீதியில் தண்டனை எதையும் கொடுக்கமுடியாது. வாக்களிக்கும்போதுதான் தண்டனை கொடுக்கமுடியும்.

கொட்டிவாக்கம் ராஜுடன் ஒரு பேட்டி

தமிழ்பேப்பரில் இன்று வெளியாகியுள்ள பேட்டி - ராஜ் செருபால், சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கான கொட்டிவாக்கம் வார்டு வேட்பாளர்

இவருக்காக வாக்குகள் சேகரிக்க நான் சென்றது பற்றிய பதிவு இங்கே.

Tuesday, October 11, 2011

2011 நோபல் பரிசுகள்

தமிழ்பேப்பரில் இன்று நோபல் பரிசுகள் பற்றி மூன்று கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

2011 மருத்துவ நோபல் பற்றி - மருத்துவர் விஜய்
2011 இயற்பியல் நோபல் பற்றி - அருண் நரசிம்மன்
2011 வேதியியல் நோபல் பற்றி - அருண் நரசிம்மன்

Sunday, October 09, 2011

தேர்தல் பிரசாரம்

இன்று காலை நானும் சத்யாவும் கொட்டிவாக்கம் தொகுதியில் ராஜ் செருபால்  சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்டோம். சத்யா ஏற்கெனவே இரண்டு நாள்கள் பிரசாரத்துக்குச் சென்றிருந்தார். நான் போவது இதுதான் முதல் முறை.

ராஜ் கொட்டிவாக்கம் தொகுதியில் (வார்ட் எண் 183) சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நிற்கிறார். சில மாதங்களுக்குமுன் ராஜ், நான், சத்யா, இன்னும் சிலர் சேர்ந்து வெவ்வேறு தொகுதிகளில் நிற்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். பல்வேறு காரணங்களால் நாங்கள் பலரும் கழன்றுகொண்டோம். ராஜ் மட்டும் நிற்கிறார்.

ராஜ், சிடிகனெக்ட் என்ற லாபநோக்கில்லா அமைப்பில் பணி புரிகிறார். ஒரு நகரம் சரியாகத் திட்டம் தீட்டாத காரணத்தால் மக்களுக்குத் தரவேண்டிய அடிப்படை வசதிகளைச் சரியாகத் தருவதில்லை. இருக்கும் இடத்துக்குள் அந்த வசதிகளை எப்படிச் செய்துதருவது என்பதை ஆராய்கிறது சிடிகனெக்ட். போக்குவரத்து நெரிசலா? எப்படியான சிறு சிறு மாறுதல்களைச் செய்தால் நெரிசலைக் குறைக்கலாம்? தெருவோரத்தில் மக்கள் நடக்க ஏன் மாநகராட்சி வசதிகளைச் செய்துதருவதில்லை? அதனை எப்படி மக்களின் ஈடுபாட்டுடனேயே நடைமுறைப்படுத்தலாம்? தெருவோர வியாபாரிகளைப் பொதுவாகத் துரத்துவதையே ஆட்சியாளர்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்த அளவுக்கு ஒரு உள்ளூர்ப் பொருளாதாரத்துக்கு உபயோகமானவர்கள், அவர்களுக்கு எப்படிப்பட்ட வசதிகளைச் செய்துகொடுக்கலாம்; அதே நேரம் பாதையில் நடக்கும் மக்களுக்கும் பிரச்னையில்லாமல் எப்படிச் செய்யலாம்? இதுபோன்ற பல விஷயங்கள், நீர், குப்பை என்று மக்களுக்குத் தேவையான பலவற்றைப் பற்றியுமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர் ராஜ்.

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் ஒன்றில் தி.நகர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ராஜ் விரிவாகவே பேசியிருந்தார்.

***

காலையில் சுமார் 8 மணிக்கு ராஜை அவர் வீட்டில் சந்தித்து துண்டுப் பிரசுரங்களைச் சேகரித்துக்கொண்டோம். வரைபடத்தில் ஏற்கெனவே கவர் செய்திருந்த பகுதிகளைக் குறியிட்டிருந்தார். அதுபோக இன்று பார்க்கவேண்டிய தெருக்களைக் குறித்துக்கொண்டு நானும் சத்யாவும் கிளம்பினோம். முதலில் ஒவ்வொரு வீட்டுக்கும் இருவருமே போய்க் கதவைத் தட்டிப் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தோம். மிடில் கிளாஸ், லோவர் மிடில் கிளாஸ், ஏழை மக்கள் என்று கலந்துகட்டிய பகுதி. பக்கிங்காம் கால்வாய்க்கும் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி. களத்துமேட்டுத் தெரு, வெங்கடேச நகர் பகுதிகளில் சில பல தெருக்களிலும் சந்துகளிலும் வீடு வீடாகச் சென்றோம்.

மக்கள் அனைவருமே நின்று நாங்கள் பேசியதைக் கேட்டனர். பலரும் எங்களை வீட்டுக்கு அழைத்து தண்ணீர் கொடுத்தனர். காபி குடிக்கிறீர்களா என்று கேட்டனர்.

இந்தப் பகுதிக்கு நீங்கள் ஒருமுறை சென்றால் தெரியும். திறந்த சாக்கடை. ஆங்காங்கே குளம் குட்டையாக நீர் தேங்கி பல்வேறு உயிரினங்கள் பல்கிப் பெருகுகின்றன. குப்பைகள் எடுக்கப்படுவதே இல்லை. சாலைகள் சரியாக இல்லை. டீ வீலர், ஃபோர் வீலர் என்று எதுவாக இருந்தாலும் ஒரு மாதத்தில் பஞ்சர் ஆகிவிடும் அல்லது சஸ்பென்ஷன் போய்விடும். அனைத்து வீடுகளுக்கும் ஒழுங்காகக் குடிநீர் வருவதில்லை. இப்படிப் பலவிதப் பிரச்னைகள்.

இதுவரையில் கொட்டிவாக்கம் பஞ்சாயத்தாக இருந்த இந்த இடம் இப்போது ஒரு வார்டாக சென்னை மாநகராட்சியில் சேருகிறது. ராஜ் செருபால் போன்ற ஒருவர் கவுன்சிலராக வந்தால் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்ற எங்கள் நம்பிக்கையை அங்குள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டதாகவே எனக்குத் தோன்றியது.

சிறிது நேரம் கழித்து வேறு இரு நண்பர்கள் சேர்ந்துகொண்டனர். ராஜும் சேர்ந்துகொண்டார். மேலும் பல வீடுகளுக்குச் சென்றோம். சுயேச்சை வேட்பாளர் இவர் என்பது அனைத்து இடங்களிலுமே வரவேற்பைத் தந்தது. சிலர் ‘படித்த ஆசாமி’ என்று வரவேற்றனர். அமெரிக்கா சென்று படித்தவர் என்பது மட்டுமின்றி குடிமைச் சமூக வேலைகளில் கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் ஈடுபட்டவர், தில்லியில் மட்டுமின்றி சென்னையிலும் கடந்த சில ஆண்டுகளாக இந்தத் துறையில் ஈடுபட்டு வருகிறவர் என்பதைச் சுட்டிக் காட்டினோம். ஒரு சிலர், இவர் ஏழை மக்களுடன், குப்பத்தில் உள்ளவர்களுடன் பேசுவாரா என்று சந்தேகத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் குப்பம் ஒன்றுக்கு ராஜ் செருபால் சென்றபோது, அங்குள்ள இளைஞர்கள் பலரும் தன்னார்வலர்களாகப் பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்குக் காசு பணம் கொடுக்க முடியாது என்பதை ராஜ் செருபால் விளக்கியபோது, அவர்கள் காசு ஏதும் தேவையில்லை என்று தெளிவாகவே கூறினர். இதுவரை காசு கொடுத்த கட்சிகள் மக்களுக்கு ஒன்றும் செய்ததில்லை என்பதை இந்த இளைஞர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர். நேற்று இரவு முழுதும் கண் விழித்து தெருவெங்கும் போஸ்டர்களை அவர்கள்தான் ஒட்டினர். 150-க்கும் ஏற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு ஒன்றைச் சேர்ந்த ஏழைப் பெண்கள் அனைவரும் ராஜ் செருபாலின் பிரசாரத்துக்கு ஆதரவு தந்து கூட வந்து வாக்கு கேட்பதாகச் சொல்லியுள்ளனர்.

வார்டு எண் 183-ல் இருக்கிறீர்களா? செயலூக்கம் கொண்ட கவுன்சிலர் உங்களுக்குத் தேவையா? தன்னார்வலராக ராஜ் செருபாலுக்கு வாக்கு சேகரிக்க விரும்புகிறீர்களா? என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.