Friday, December 31, 2004

நாகை மாவட்ட மீட்பு விவரம்

ரஜினி ராம்கி பூம்புகார் பகுதிக்குச் சென்றுள்ளார். தேவையான பொருட்கள் அங்கு வந்து சேர்ந்து விட்டதாகவும், இப்பொழுதைக்கு பற்றாக்குறை disposable syringes தான் என்றும் சொல்கிறார். மேற்கொண்டு என்ன தேவை என்பதை அங்கிருந்து சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்.

நேற்று நாகைக்கு நாங்கள் அனுப்பிய மருந்துப் பொருட்கள் அரசின் முட்டாள்தனத்தால் போய்ச்சேர தாமதாமாகியுள்ளது. எந்த வண்டியையும் திருவாரூர் தாண்டி அனுப்பவில்லை. எனவே இன்று காலைதான் மருந்துப் பொருட்கள் நாகை போய்ச்சேர்ந்துள்ளன.

நேற்று ஜெயலலிதா நாகையில் இருக்கும்போதுதான் இந்த அரசின் 'எச்சரிக்கைச் செய்தி' கூத்து நடந்தேறியுள்ளது. உடனே ஜெயலலிதாவும், பிற அமைச்சர்களும் அலறியடித்துக்கொண்டு தாங்கள் வழங்கிக்கொண்டிருந்த உதவிப்பொருட்களை அப்படியே போட்டுவிட்டு வண்டிகளில் ஏறி ஓட, மற்ற ஜனங்களும் ஓட, போக்குவரத்து நெரிசலாக, அதனை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் எல்லாவற்றையும் சரிசெய்து விட்டு திரும்பிப் பார்த்தால் அவரது காரின் ஓட்டுனரும், ஆட்சியரின் உதவியாளரும் ஓட்டமெடுத்திருந்தனர். ஆட்சியரை அம்போவென விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். உடனே கிடைத்த காரில் ராதாகிருஷ்ணனும் சென்றுவிட்டார்.

கோமாளிக்கூட்டம்!

ஆலடி அருணா வெட்டிக்கொலை

இன்று காலை நெல்லை அருகே தமிழக முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ஆலடி அருணாவும், அவரது நண்பரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆலடி அருணா திமுகவில், பின் எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுக, பின் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் மீண்டும் திமுக என்று இருந்தவர். கடைசியாக திமுக ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர். பாராளுமன்றத்தில் உறுப்பினராக பல வருடங்கள் இருந்தவர். போபோர்ஸ் நேரத்தில் அந்த பிரச்னையை விசாரித்த பாராளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவராகவோ, உபதலைவராகவோ (சரியாக ஞாபகம் இல்லை) இருந்தவர். போபோர்ஸ் ஊழல் பற்றி தமிழில் திமுக வெளியிட்ட சிறு பிரசுரம் ஒன்றை எழுதியவர்.

கடைசியாக திமுகவில் தனக்கு சீட் கிடைக்கவில்லை என்று வெளியேறியவர். திமுக தலைமை, பாராளுமன்றத் தேர்தலின்போது அதிக அளவில் பணம் கேட்டார்கள் என்று புகார் செய்தவர்.

மேற்கொண்டு தகவல் வரும் நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இப்பொழுதைய சுனாமி பிரச்னையில் இந்த விஷயம் அடிபட்டுப் போனாலும் போகலாம்.

சுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை

நான் எதிர்பார்த்தது போலவே TRO பற்றிய முதல் அறிக்கை சுப்ரமணியம் சுவாமியிடமிருந்து.

தி ஹிந்து செய்தி

TRO வழியாக யாரும் வடகிழக்கு இலங்கைக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறார். ஆக தமிழகத்தில் இருந்து TRO-வுக்கு உதவி செய்ய நினைக்கும் கொஞ்சம் நஞ்சம் பேரையும் பயமுறுத்தியாகி விட்டது.

வைகோ போன்றோருக்கு TRO என்று ஒன்று இருப்பது கூடத் தெரியுமோ, தெரியாதோ. இன்றுவரை ஜெயலலிதா அரசு தமிழக மக்களுக்கு நிவாரண உதவிகளைச் சரியாகச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு மட்டும்தான் அவரிடமிருந்து வந்துள்ளது. வடகிழக்கு இலங்கையில் புலிகள் கீழுள்ள பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் நாசங்களுக்காக வருந்தியோ, இரங்கியோ இன்றுவரை தமிழகத்தில் ஒரு செய்தியையும் காணோம். புலிகளுக்கு எதிர்ப்பு காட்டலாம். ஆனால் அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் திண்டாடுவதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் முல்லைத்தீவில் நங்கூரம் பாய்ச்சியிருந்த 'கடல் புலிகள்' படகுகள் 80% அழிந்துவிட்டன என்று சந்தோஷப்படும் சுவாமியை... என்னவென்று சொல்ல?

மேலும் TRO வழியாக இலங்கைக்கு அனுப்பும் பாராசிடமால், அமாக்சிசிலின் மருந்துகளை வைத்தா புலிகள் வெடிகுண்டு செய்யப்போகின்றனர்?

நேற்றுகூட (இலங்கைக்கான இந்தியத் தூதர்) நிருபமா ராவ் பேசுவதை தொலைக்காட்சியில் பார்த்தேன். அதிகபட்சமாக இந்திய உதவி திரிகோணமலையோடு நின்றுவிட்டது. நிருபமா ராவுக்கு இலங்கையில் உள்ள பிற இடங்களைப் பற்றி தெரியவே தெரியாதோ என்னவோ? கொழும்பு... அதன்பின் திரிகோணமலை.

Thursday, December 30, 2004

இன்றைய தேவையற்ற கலவரம்

திடீரென - குற்ற உணர்ச்சி மிகுதியால் - இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் "மற்றுமொரு சுனாமி" என்று பயமுறுத்தல் அழைப்பு விட, அதனைக் கேட்டு ஒவ்வொரு தென் மாநிலமும் அவசர அவசரமாக எல்லோரையும் கடலை விட்டு அகன்று, மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு சொல்ல, ஒரே களேபரம்.

கடலை ஒட்டி இரண்டு கி.மீ தொலைவில் உள்ள அனைவரும் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று சொல்வது சாதாரண விஷயமல்ல. இந்தியாவின் மாபெரும் கடற்கரை ஓரங்களில் பல லட்சம் பேர் குடியிருக்கின்றனர்.

என்னதான் நடக்கிறது?

கடந்த ஏழு நாள்களில் எங்கெங்கெல்லாம் நில அதிர்வு, எந்த அளவில் நடக்கிறது என்பதை அமெரிக்காவின் நிலவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தளத்தில் பார்க்கலாம்.

வடக்கு சுமத்ராவில் 9.0 ரிக்டர் அளவில் நடந்த நில நடுக்கத்தையொட்டி, அங்கும், அந்தமான் நிகோபார் தீவுகளிலும், தினமும்... ஆம், தினமும், நில அதிர்ச்சி வந்தவண்ணம் உள்ளது. இந்த after shock இன்னமும் சில நாள்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். கடந்த 12 மணி நேரத்தில் சுமத்ராவில் மூன்று நில அதிர்ச்சிகள் 5.6, 5.7, 5.3 ரிக்டர் நிகழ்ந்துள்ளன. கடந்த நான்கு நாள்களில் அந்தமான் நிகோபார் தீவுகளில் கிட்டத்தட்ட 30 நில அதிர்வுகள்.

இந்த அதிர்ச்சிகளால் சுனாமி ஏற்படப் போவதில்லை.

ஒருவர் சென்னை ரிசர்வ் வங்கிக் கட்டடம் வரை தண்ணீர் வந்துவிட்டது என்று எழுதியிருந்தார். அப்படியொன்றும் நடக்கவேயில்லை. கடல் உறுமியிருக்கலாம். அலைகள் கூட ஆர்ப்பரித்திருக்கலாம். ஆனால் சுனாமி ஏதும் இதுவரையில் இல்லை.

அரசின் வீண் "புலி வருது" பயமுறுத்தலால் இன்று நாகை போன்ற இடங்களில் மீட்புப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மக்கள் மனதில் தேவையற்ற பீதி.

ஆனால் அவ்வப்போது "No need to panic, we are asking people only to be cautious" என்கிறார்கள் மத்திய அரசுத் தரப்பினர்.

Wednesday, December 29, 2004

இலங்கை நிலவரம்

இந்தோனேஷியா, இலங்கை ஆகிய இடங்களில் நேர்ந்துள்ள இழப்பு மிகவும் மோசமானது. இவ்விரு நாடுகளிலும் ஆளும் அரசுக்கு எதிராக சண்டையிட்ட குழுவினர் கையில் இருக்கும் இடங்களிலும் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் சேதம் ஏற்பட்டுள்ள, அரசின் கீழுள்ள பகுதிகளில்கூட மீட்புப் பணிகள் நடப்பதில் சிரமங்கள் உள்ளன. அரசின் அங்கம் ஏதும் இல்லாத விடுதலைப்புலிகள் கீழுள்ள பகுதிகளில் அரசு நிறுவனத்தால் எந்தவிதத்தில் உதவி செய்யமுடியும்?

இந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் கையிலான தமிழர் பகுதிகளுக்கான நிவாரணத்தை சரியாகச் செய்யக்கூடியவர்கள் விடுதலைப் புலிகள்தான். ஆனால் பிற நாட்டு அரசுகளால் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படாத ஓரமைப்பிற்கு எந்த அளவுக்கு பிற நாட்டு அரசுகள் உதவி செய்யும் என்று தெரியவில்லை.

இந்தியா இலங்கைக்கு ரூ. 100 கோடி உதவி செய்வதாகச் சொல்லியிருக்கிறது. இதில் எத்தனை வடகிழக்கிலங்கைக்குப் போய்ச்சேரும் என்று தெரியவில்லை. அதைப்போல இந்தியா அனுப்பியுள்ள மருத்துவர்களில் சிலர்தான் திரிகோணமலைப் பகுதிக்கு மட்டும் சென்றுள்ளனர். தமிழகத்தில் ஏதேனும் அமைப்பு மருத்துவர்கள் பலரை ஒன்று சேர்த்து வன்னி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். இந்திய அரசே இந்தச் செயலை முன்னின்று செய்யும் என்று எனக்குத் தோன்றவில்லை.

செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை, (ஆக்ஸ்ஃபாம்?) வடகிழக்கிலங்கையில் எந்த அளவுக்கு இருக்கின்றன என்றும் தெரியவில்லை.

வடகிழக்கிலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை மிகவும் வருத்தத்தைத் தருகிறது.