Tuesday, September 17, 2013

தேர்தலில் நிற்கிறேன்!

நாடாளுமன்றத் தேர்தல் அல்ல!

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தேர்தலில்தான்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பபாசி எனப்படும் தெ.பு.வி.ப.சங்கத்துக்குத் தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தல் செப்டெம்பர் 19-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

2009-ம் ஆண்டு நான் இந்தத் தேர்தலில் ‘செயற்குழு உறுப்பினர் - தமிழ்’ என்ற இடத்துக்கு நின்றேன். தோல்வி அடைந்தேன். மொத்தம் 12 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஆறு பேர் தமிழ்ப் பதிப்பாளர்கள் அல்லது புத்தக விற்பனையாளர்கள். ஆறு பேர் ஆங்கிலப் பதிப்பாளர்கள்/விற்பனையாளர்கள். அப்போது எனக்கு பபாசி தேர்தல்கள் பற்றி முழுமையான புரிந்தல் இருந்திருக்கவில்லை. தேர்தல் என்று வந்தால் அணி திரண்டு நிற்பார்கள் என்று எனக்கு அப்போது தெரியாது.

பபாசி தேர்தலில் சுமார் அறுநூற்று சொச்சம் உறுப்பினர்கள் வாக்களிக்கவேண்டும். ஒரு தலைவர், இரு துணைத்தலைவர்கள், ஒரு செயலர், ஓர் இணைச் செயலர், இரு துணைச் செயலர்கள், ஒரு பொருளாளர், 12 செயற்குழு உறுப்பினர்கள், 4 நிரந்தர புத்தகக் கண்காட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

2011-ல் தேர்தலில் மீண்டும் நிற்க விரும்பினேன். அப்போதுதான் நாங்கள் அலுவலகம் மாற்றிக்கொண்டிருந்தோம். எனவே தேர்தல் விண்ணப்பத்துக்கான காலம் முடிவடைந்த பின்னரே ஆண்டறிக்கை அஞ்சலும் தேர்தல் தேதியும் அங்கும் இங்கும் சுற்றி என் கைக்குக் கிடைத்தது.

இம்முறை தேர்தலில் நிற்பது என்று முடிவெடுத்திருந்தேன். உயிர்மை மனுஷ்யபுத்திரனுடன் ஒருமுறை பேசியிருந்தேன். நல்லோர் அடங்கிய ஓர் அணியைத் திரட்டி, பபாசிக்குப் புது ரத்தம் பாய்ச்சவேண்டும் என்று சொன்னார். ஆனால் அப்படி ஒரு செயலில் ஈடுபட்டு பலரையும் சந்தித்துத் திரட்டக்கூடிய அளவு என்னிடம் நேரம் இல்லை. மாறாக யாரேனும் என்னைத் தொடர்புகொண்டால் அந்த அணியில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்து அவர்களுடன் சேர்ந்து நிற்பது, அல்லது தனியாக ‘அடிமட்ட’ இடமான செயற்குழு-தமிழ் என்ற இடத்தில் நிற்பது என்று முடிவெடுத்திருந்தேன்.

தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் சிக்ஸ்த் சென்ஸ் புகழேந்தி தொடர்புகொண்டார். மணிவாசகர் பதிப்பகத்தின் மீனாட்சி சுந்தரம் தலைவர் பதவிக்கும் புகழேந்தி செயலர் பதவிக்கும் நிற்பதாகவும் அந்த அணியின் சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நான் நிற்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நான் உடனே ஒப்புக்கொண்டேன். இவர்கள் இருவர்மீதும் எனக்கு மரியாதை உண்டு.

இந்தப் பதிவைக் காணும் பபாசி உறுப்பினர்கள், ஏற்கெனவே யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்யவில்லை என்றால் எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் போட்டியிடும் அணியில் வேறு யார் யார் உள்ளனர் என்பதை விவரமாக ஓரிரு மணிக்குள் பதிகிறேன்.

Friday, September 13, 2013

ஸ்லிப்

நான் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருக்கும்போது அதிகாலை எழுந்து பாடம் படிக்க ஒரேயொரு காரணம் மட்டுமே இருந்தது. ஆஸ்திரேலிய வானொலியில் கிரிக்கெட் நேர்முக வர்ணனை கேட்க முடியும் என்பதுதான் அது. ஆஸ்திரேலியா யாருடன் விளையாடினாலும் அந்த ஆட்டங்களின் வர்ணனையைக் கேட்பது என் வழக்கம்.

ஆஸ்திரேலியா பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச் அது. ஆட்டம் எங்கே நடந்தது என்ற ஞாபகமெல்லாம் இப்போது இல்லை. கார்ல் ராக்கமென் என்ற ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர். அவர் பந்து வீசும்போது தடுப்பாளர் வியூகத்தில் எழு ஸ்லிப் வைக்கப்பட்டுள்ளது என்றார் வர்ணனையாளர். இது எனக்குப் புரியவில்லை. எதற்கு ஒரு பந்துவீச்சாளருக்கு ஏழு ஸ்லிப் வேண்டும்? தொலைக்காட்சி பார்க்காத காலகட்டம் என்பதால் என்னால் ஆட்ட நிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

நான் நேரில் பார்த்த எந்த ஆட்டத்திலும் (அதாவது நாகப்பட்டினம் அவுரித் திடல் அல்லது வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் அல்லது உப்பாற்றுத் திடல்) ஒரு ஸ்லிப்புக்கே வேலை இருக்காது. இந்தியா விளையாடும் ஆட்டங்களில் கபில் தேவ் பந்துவீசும்போது முதல் சில ஓவர்களில் அல்லது புதுப்பந்து எடுக்கும்போது மூன்று ஸ்லிப்புகள்வரை வைத்திருப்பார்கள். இப்படி விக்கெட்கீப்பர் பக்கத்தில் ஏழு பேர் நின்றால் மிச்சம் இரண்டு பேர்தான் பாக்கி. அவர்களில் ஒருவர் ஆஃப் சைடிலும் ஒருவர் ஆன் சைடிலும் முன்பக்கம் நிற்கிறார்கள் என்றால் ரன்களை எப்படித் தடுப்பது?

தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியபின்னும் இந்தக் கேள்வி மண்டையைக் குடைந்துகொண்டே இருந்தது. உண்மையிலேயே ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு எத்தனை ஸ்லிப்புகள் வேண்டும்? வேகம் மட்டும்தான் இதனை முடிவு செய்கிறதா அல்லது பந்தின் ஸ்விங் இதில் சேர்த்தியா? சும்மா மட்டை பிடிப்பவரைப் பயமுறுத்த என்றே ஸ்லிப்புகளை அதிகப்படுத்துகிறார்களா? நான்கு ஸ்லிப், ஒரு கல்லி என்று ஃபீல்டிங் செட் அப் வைத்துவிட்டால், வீசுபவர் பயங்கர வேகத்தில் வீசப்போகிறார் என்று பேட்ஸ்மேன் பயந்து நடுங்கிவிடுவார் என்று எதிர்பார்க்கிறார்களா?

நான் கிரிக்கெட்டை உன்னித்துப் பார்க்கும் காலத்தில் இந்தியா நோஞ்சான் அணியாகவே இருந்தது. காவஸ்கர், கபில் தேவ் என்ற இருவர்தான் உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்றும் பிறர் எல்லாம் 11 பேர் வேண்டுமே என்பதற்காக அணியில் இருக்கிறார்கள் என்றுமே நினைத்துக்கொண்டிருந்தேன். நான் கிரிக்கெட்டைக் கவனிக்கத் தொடங்கி சீக்கிரமே விஸ்வநாத் ரிட்டயர் ஆகிவிட்டார். வெங்க்சர்க்கார் அப்போது பெரிய பெயர் பெற்றிருக்கவில்லை. இன்று இந்தியப் பொருளாதாரத்தைப் பார்க்கும்போது ஏற்படும் பயம்தான் அப்போது இந்திய கிரிக்கெட் அணியைப் பார்த்தபோது எனக்கு ஏற்பட்டு வந்தது. அப்போது பெரும் வயிற்றெரிச்சலே பாகிஸ்தான் அணி மீதுதான். அதுவும் அவர்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள்மீது. மாமிச உணவு, இஸ்லாம் தரும் முரட்டுத்தனம் என்றெல்லாம் ஏதேதோ கற்பனைகள் இருந்தன. அதுவும் மிகக் கடுப்பாவது அவர்கள் வியூகத்தில் இருக்கும் ஸ்லிப்புகளின் எண்ணிக்கை. ஸ்லிப்புகளின் எண்ணிக்கை ஏதோ ஒருவிதத்தில் ஆண்மையின் அடையாளம் என்பதாகவே எனக்குப் பட்டது.

அதனாலேயே கார்ல் ராக்கமென் ஏழு ஸ்லிப் வைத்து பாகிஸ்தானியர்களுக்கு எதிராகப் பந்து வீசி அவர்களைக் கதற அடித்தது உள்ளூர சந்தோஷமாக இருந்தது. அதையே ஓர் இந்தியப் பந்துவீச்சாளர் செய்திருந்தால் இன்னமும் அதிகமாக மகிழ்ந்திருப்பேன்.

கொஞ்சம் கிரிக்கெட் புரிய ஆரம்பித்தபின்னரும் ஸ்லிப் மீதிருந்த மோகம் போகவில்லை. இப்போதும் ஒரு டெஸ்ட் மேட்ச் ஆரம்பித்து முதல் ஓவரில், நான்கு அல்லது ஐந்து ஸ்லிப், ஒரு கல்லி, ஒரு பாயிண்ட், ஒரு கவர் என்று வைத்து சும்மா ஒப்புக்கு ஆன் சைடில் ஒரேயொரு மிட்விக்கெட் அல்லது மிட் ஆன் வைத்து, புத்தம் புது சிகப்புப் பந்துடன் வேகப் பந்துவீச்சாளர் ஓடிவந்து பந்துவீசும்போது ஒரு சிலிர்ப்பு ஏற்படும். இந்த மைதானமே உன் முன்னால் இருக்கிறது; தெம்பு இருந்தால் காலை முன்னேயோ பின்னேயோ மாற்றி வைத்து நேராக அடித்துப் பார் என்று வேகப் பந்துவீச்சாளர் விடும் அறைகூவல் அது. என் வேகத்தையும், துல்லியத்தையும், பந்தின் வளைவையும் உன்னால் கணிக்கவே முடியாது; அப்படியே கணித்தாலும் அந்தப் பந்தை விட்டுவிடுவதுதான் உனக்கு நல்லது; ஏனெனில் தொட்டால் உன்னைக் கவ்வ ஆறு பேரை நியமித்திருக்கிறேன் என்கிற அகங்காரம் அது. மிஞ்சி மிஞ்சிப் போனால் உன் மட்டையின் விளிம்பைத் தொட்டு ஸ்லிப்பின் தலைக்குமேல் எகிறிச் சென்று நான்கு ரன்கள் கிடைக்கலாம்; ஆனால் உன்னைத் தவறு செய்ய வைத்துவிட்டேன் என்ற வெற்றியும் எனக்குத்தான் என்கிற கர்வம்.

இந்த மாதிரி எதிரணியினரை வெகுசில இந்தியப் பந்துவீச்சாளர்களே பயமுறுத்தியுள்ளனர். ஜவகல் ஸ்ரீநாத், கொஞ்சம் இஷாந்த் ஷர்மா. நம் வேகப்பந்து வீச்சாளர்கள் பலரும் மிதவேகத்துக்குமேல் செல்வதில்லை. அப்படியே வேகமாக வீசுபவர்களையும் அணிப் பயிற்சியாளர் கீழே இறக்கிவிடுகிறார்போல.

சுழல்பந்தா, வேகப்பந்தா எது நமக்கு ஏற்றது என்ற பட்டிமன்றங்களையெல்லாம் நாம் இப்போது தாண்டி வந்துவிட்டோம். அனைத்திலும் ஒரு சமச்சீர் வேண்டும் என்பதை நன்கு அறிந்துவைத்துள்ளோம். அதற்கு ஏற்றாற்போல இன்று பல வேகப்பந்து வீச்சாளர்கள் கண்ணுக்குத் தென்படுகின்றனர்.

இன்றும் டெஸ்ட் மேட்ச்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முதல் ஓவர் வீசுவதை ஆர்வத்துடன் பார்க்க முனைகிறேன். குறைந்தபட்சம் கிரிக்கின்ஃபோவிலாவது வர்ணனையைப் படித்துவிடுகிறேன். ஐந்து ஸ்லிப், ஒரு கல்லி, மணிக்கு 150 கிமீ வேகத்தில் வீசும் அந்தப் பந்துவீச்சாளருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

Wednesday, September 11, 2013

மதுரத்வனி: மகாகவி பாரதி நினைவு



நாள்: 11-09-2013
நிகழ்வு: மகாகவி பாரதி நினைவு
நேரம்: 5.30 மணி. பாரதி இசை

கல்கத்தா சகோதிரிகள்  திருமதி  சித்ரா & திருமதி கலா
திருமதி நீலா ஜெயகுமார்  வயலின்
திரு வி.ஆர். ஜெயகுமார்  மிருதங்கம்

நேரம்: 6.45 மணி: சிறப்புச் சொற்பொழிவு

“பாரதி என்னும் மகாகவி”
திருப்பூர் கிருஷ்ணன்

நிகழ்விடம்: ஆர்கே கன்வென்சன் சென்டர்,146, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை

இந்நிகழ்ச்சியை  நேரடியாக இணையத்தில் காண  http://www.arkayconventioncenter.in/live.aspx

அனைவரும் வருக

Wednesday, August 28, 2013

உணவுப் பாதுகாப்புச் சட்டம்

ட்ரீஸ்/சென் தங்கள் புத்தகத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து இவ்வாறு பேசுகிறார்கள்: (அடுத்தடுத்த பக்கங்களில் அவர்கள் கொடுத்துள்ள வாக்கியங்களைக் கோர்த்து மொழிமாற்றிக் கொடுத்துள்ளேன். இது ஒரு தொடர் பத்தியாக அந்தப் புத்தகத்தில் இடம்பெறவில்லை.)
டிசம்பர் 2011-ல் இந்திய நாடாளுமன்றத்தில் தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டபோது நடந்த தீவிரமான விவாதத்தைக் கவனியுங்கள். செல்வாக்குமிக்க விமர்சகர்கள் உடனடியாக அந்த மசோதாவை, நிதிரீதியாகப் பொறுப்பற்ற ஒன்று என்று கடுமையாகத் தாக்கினார்கள். இந்த மசோதாவைச் செயல்படுத்த ஆண்டுக்கு 27,000 கோடி ரூபாய் (இந்திய ஜிடிபியில் சுமார் 0.3%) தேவைப்படும் என்று அதிகாரபூர்வமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தங்க, வைர இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கு கொடுப்பதால் இழக்கப்படும் வருமானம் ஆண்டுக்கு ரூ. 57,000 கோடி என்று நிதி அமைச்சகத்தின் ‘இழக்கப்பட்ட வருமானம்’ என்பதன்கீழ், கணிக்கப்படுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா குறிப்பிடும் அதிகப்படிச் செலவைப்போல இரண்டு மடங்கு இது.

அனைத்து ‘இழக்கப்பட்ட வருமான’த்தையும் சேர்த்தால், மொத்த பொது வருமான இழப்பு 2010-11-ல் ரூ. 480,000 கோடி என்றும் 2011-12-ல் ரூ. 530,000 கோடி (இந்திய ஜிடிபியில் 5%-க்கும் மேல்) என்றும் நிதி அமைச்சகம் கணக்கிடுகிறது.

இந்த அடிப்படையிலும் பிற தரவுகளின் அடிப்படையிலும் பார்க்கும்போது, ‘நாடு மிகவும் ஏழையானது, பொது வருமானம் மிகவும் குறைவானது, எனவே உணவு கிடைக்காமல் திண்டாடுவோர் மிக அதிகமாக இருக்கும் இந்தியாவில் அம்மக்களுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறோம்’ என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை.

---- Dreze, Jean; Sen, Amartya (2013-07-04). An Uncertain Glory: India and its Contradictions. Penguin Books Ltd. Kindle Edition.
மேலே சொன்னவற்றுக்கு இடையே இரண்டு இடங்களில் ட்ரீஸ்/சென் இவ்வாறும் சொல்கிறார்கள்:
  • தங்க, வைர இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கினால் 57,000 கோடி ரூபாய் இழப்பு என்றாலும், வரி விதித்தால் இறக்குமதி குறையும் என்பதையும் இந்த இறக்குமதியில் குறிப்பிட்ட அளவு, மேற்கொண்டு மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்வதற்காக என்பதையும் எடுத்துக்கொண்டு பார்த்தால், இழப்பின் மதிப்பு 57,000 கோடி ரூபாயைவிடக் குறைவாக இருக்கும்.
  • இழக்கப்பட்ட வருமானம் என்று நிதி அமைச்சகம் சொல்லும் எண்ணிக்கை அதீதமானது; அதற்கான திருத்தங்களைச் செய்தால், அளவு குறைந்தாலும் இது ‘ராட்சத’ அளிவில்தான் இருக்கும்.
ட்ரீஸ்/சென், அரசு முன்வைக்கும் உணவுப் பாதுகாப்புச் சட்ட செலவை 27,000 கோடி ரூபாய் என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்கிறார்கள். அரசு முதலில் சொன்ன தொகை அது. ஆனால் அரசே இப்போது சொல்லும் எண் 27,000 கோடி ரூபாய் அல்ல; மாறாக 72,000 கோடி ரூபாய். வலதுசாரிப் பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கும் கணிப்பு 314,000 கோடி ரூபாய். (பார்க்க: சுர்ஜித் பல்லா) இதனை மறுத்து, இடது ஓரத்தவர்கள் முன்வைக்கும் எண் 85,000 கோடி ரூபாய். (பார்க்க கொத்வால் எட் ஆல்)

கொத்வால் கட்டுரையில் இறுதிப் பத்தி வேறு ஒரு பிரச்னையை முன்வைக்கிறது. அதைப் பற்றி இப்போது நான் பேசப்போவதில்லை. பிறகு பேசுவோம்.

இந்தியாவுக்குள் நுகரப்படும் தங்க/வைர இறக்குமதிமீது சுங்க வரி விதிப்பதை நான் ஆதரிக்கிறேன். அந்தப் பணத்தைக் கொண்டு ஏழைகளுக்குச் சோறிடவேண்டும் என்று சொன்னால் தங்கத்தை அள்ளிக் கழுத்திலும் காதிலும் மாட்டிக்கொள்ளும் அதே ஏழை மற்றும் நடுத்தரப் பெண்கள் ஒப்புக்கொள்வார்களா என்று தெரியவில்லை. ஆனால் தங்க/வைர இறக்குமதியைக் குறைக்க கடுமையான வரிகளை விதிப்பதில் எனக்குச் சம்மதமே. இதனால் அந்நியச் செலாவணித் தேவை கொஞ்சமாவது குறையும். அதே நேரம், தங்கத்தையும் வைரத்தையும் இறக்குமதி செய்து, அதில் மதிப்பு கூட்டி, மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் நம் அந்நியச் செலாவணி வருமானம் பாதிக்கப்படும். இவ்வாறு வரி விதிப்பதன்மூலம் கிடைக்கும் மேலதிக வருமானம், அதிகபட்சம் 20,000 கோடி ரூபாயைத் தாண்டாது என்று நான் கணிக்கிறேன்.

அடுத்து, ‘இழக்கப்படும் வருமானம்’ என்ற கணிப்பை நிதியமைச்சகம் வருடா வருடம் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது. அனைத்து இடதுசாரி நண்பர்களும் உடனே இதைப் பார்த்துவிட்டு, “பார்த்தீர்களா, பார்த்தீர்களா, பணக்காரர்களுக்கு எவ்வளவு சலுகைகள்!” என்று சொல்கிறார்கள். ட்ரீஸ்/சென் அதையே தொடர்கிறார்கள். அவர்கள் சொல்லவருவது இதைத்தான்: “நிதிப் பற்றாக்குறையைக் கொஞ்சம்கூட அதிகப்படுத்தாமல், சர்வ சாதாரணமாக சில லட்சம் கோடிகளை நம்மால் பொது வருமானத்தில் சேர்க்க முடியும்; ஆனால் அவ்வாறு செய்யாமல் பல லட்சம் கோடிகளை நாம் இழக்கிறோம்; இதனால்தான் நம் நாட்டில் பட்டினிச் சாவுகள் நடக்கின்றன.”

இது உண்மையா? யார் இம்மாதிரி அரசின் வருமானத்தை அபகரித்துச் செல்லும் திருடர்கள்? இதை முழுமையாகப் புரிந்துகொள்ள, ரோஹித் சின்ஹாவின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள். நான் கீழே கொடுத்துள்ள அட்டவணைகள் இரண்டும் இந்தக் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டவை.

2011-12-க்கான ‘இழக்கப்படும் வருமானம்’ சுமார் 530,000 கோடி ரூபாய் எப்படிப் பிரிகிறது என்று பாருங்கள். இதில் மிகப் பெருமளவு சுங்க வரி விலக்கு அளிப்பதில்தான் நடக்கிறது (236,852 கோடி ரூ). அடுத்து, கலால்/ஆயத்தீர்வை (195,590 கோடி ரூ). அடுத்து நிறுவனங்களுக்கான வருமான வரியில் அளிக்கப்படும் விலக்கு (61,765 கோடி ரூ). இறுதியாக தனி நபர் வருமான வரியில் அளிக்கப்படும் விலக்கு (39,375 கோடி ரூ).

Overview of Revenue Foregone 2011-12 (in Rs. Crore)
Tax Type
Revenue Foregone
Aggregate Tax Collection
Revenue Foregone as a %age of Aggregate Tax Collection
Corporation Tax
61765
322816
19.1%
Personal Income Tax
39375
170342
21.3%
Excise Duty
195590
145607
134.3%
Customs Duty
236852
149327
158.63%
TOTAL
533582
788092
67.7%

முதலில் தனி நபர் வருமான வரிக்கு அளிக்கப்படும் விலக்கை எடுத்துக்கொள்வோம். கட்டுமானக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்தல், வரிவிலக்கு அளிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்தல் ஆகிய காரணங்களால் அளிக்கப்படும் வரிவிலக்கு, பெண்கள், முதியோர்களுக்கு வருமான வரியில் அளிக்கப்படும் வரிவிலக்கு போன்ற பலவும் சேர்ந்து உருவாகும் எண்ணிக்கை இது. இந்த ஒவ்வொரு வரிவிலக்கும் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகத் தரப்படுகிறது. தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் நன்கொடைக்கு வரிவிலக்கு கிடையாது என்றால் கட்டாயமாக தொண்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் நன்கொடை குறையும். அதனால் விளையும் தீமைகள் யாருக்கு? பெண்கள், முதியோர்களுக்கு வருமான வரியில் அதிக விலக்கு கொடுப்பதன் காரணத்தை உங்களால் நியாயமாக எதிர்க்க முடியுமா? அப்படியே பார்த்தாலும் ஒரு தனி நபர் பெறும் வருமான வரி விலக்கு என்பது சில ஆயிரம் ரூபாய்களுக்குமேல் போகாது.

நிறுவனங்களின் வருமான வரிக்கு அளிக்கப்படும் விலக்கு 61,765 கோடி ரூபாய். இதில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களுக்குத் தரப்படும் வரிவிலக்கு முதல் பல்வேறு வரிவிலக்குகள் அடக்கம். இங்கு அரசு கொஞ்சம் கடுமையாக நடந்துகொண்டு பல வரிவிலக்குகளைக் குறைக்கலாம். ஆனால் ஏற்கெனவே நசிந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்தில், நிறுவனங்கள் இதனை எப்படி எதிர்கொள்ளும் என்று யோசியுங்கள்.

ஆயத்தீர்வையில் தரப்படும் விலக்குகளால் பொதுமக்களுக்கு அதிக நன்மை போய்ச்சேருவதில்லை என்கிறார் சின்ஹா. பெரும்பாலான வரிவிலக்கை நிறுவனங்கள் தம்மிடமே வைத்துக்கொண்டு, மிகக் குறைவான அளவையே மக்களுக்குத் தருகின்றன என்கிறார். இதில் வேண்டுமானால் கையை வைக்கலாம் அரசு. இதன் காரணமாக நிச்சயமாக பிஸ்கட் முதல் பல்வேறு பொருள்களுக்கு விலை அதிகமாகும்; அதனால் பணவீக்க அளவு சற்றே அதிகமாகும். தவறில்லை என்று தோன்றுகிறது. வரிச் சீர்திருத்தத்துக்கு உகந்த இடமாக இது உள்ளது.

கடைசியாக சுங்க வரி விலக்கு. இதில் எதெதற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது என்று விளக்குகிறார் சின்ஹா. 

Contribution of Top 5 Commodity Groups contributing to Custom Duty Foregone 2011-12 (in Rs. Crore)
Sector
Revenue Foregone
% Share in Total Custom Duty Foregone
Diamond & Gold
65975
23%
Crude Oil and Mineral Oils
55576
19.5%
Vegetables Oils                                
32407
11.5%
Machinery
32386
11.5%
Chemicals & Plastics
20758
7%
TOTAL
207102
72.5%

தங்கம்/வைரம் முதலிடத்தில். நான் ஏற்கெனவே சொன்னதுபோல உள்நாட்டுப் பயனுக்கு என்று இறக்குமதி செய்யப்படும் தங்கம்/வைரத்தின்மீது வரிவிலக்கு தராமல் வரி விதிப்பது நியாயமாகத் தோன்றுகிறது. ஆனால் மதிப்புக் கூட்டி வெளிநாட்டுக்கு விற்கப்போகும் தங்க/வைர இறக்குமதிமீது வரி விதிப்பது பொன் முட்டையிடும் வாத்தைக் கொல்வதற்குச் சமம். அதையும் சேர்த்துக் கணக்குக் காட்டியுள்ளதால் அதனை விடுத்துப் பார்ப்பதே சரியானது.

கச்சா எண்ணெய் மீதான வரிவிலக்கு அடுத்து. பெட்ரோல் விலை, சமையல் எரிவாயு விலையைக் கண்டு ஏற்கெனவே சமூகப் பீதி அடைந்துள்ளது. ஆனாலும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு ஆதரவாக இருப்போர்கள் பெட்ரோல் விலையைக் கண்டு பீதி அடையவேண்டியதில்லை. எனவே இந்த வரிவிலக்கை நீக்க நான் பரிந்துரை செய்கிறேன். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான மான்யங்களையும் முற்று முழுதாக நீக்க நான் பரிந்துரைக்கிறேன். இதனால் பணவீக்கம் கடுமையாக அதிகமாகும். ஆனால் வேறு வழியில்லை.

அடுத்து இயந்திரங்களை இறக்குமதி செய்வதன்மீதான வரிவிலக்கு. இதனைத் தொடருமாறு கோருவேன். இந்த இயந்திரங்கள் உள்ளே வருவதன்மூலம்தான் நாட்டில் வேலைகள் அதிகமாகும்.

இறுதியாக ரசாயனங்கள்/பிளாஸ்டிக். இதில் ரசாயனங்கள் என்பவதில் உரங்கள்மீதான வரிவிலக்குதான் பிரதானம் என்பது என் யூகம். அதன் அடிப்படையில் உணவுக்கு இந்த ரசாயனங்கள் மிக முக்கியத் தேவை என்பதால் இந்த வரிவிலக்கைத் தொடரலாம். அல்லது உரங்கள்மீதான மான்யத்தையும் வரிவிலக்கையும் முற்றிலுமாக நீக்கிவிட்டு, ஒரு கிலோ அரிசி ரூ. 100/150 என்று போனால் பரவாயில்லை என்று வைத்துக்கொள்ளலாம். எப்படியும் நாட்டில் 2/3 பங்கு மக்களுக்கு ரூ. 3-க்கு அரிசி கிடைத்துவிடும். எனவே மிச்சமுள்ள 1/3 கிராம மக்கள், 1/2 நகர மக்களுக்கு மட்டும்தானே இந்தச் சிக்கல்?

ஆகா, ஆனால் வேறு சில சிக்கல்கள் வந்ந்துவிடும். டீசல், மின்சாரம், உரம் ஆகியவற்றின் மான்யங்களை நீக்கிவிட்டால், விளைவிக்கப்படும் அரிசி/கோதுமை/தானியங்களின் விலை கடுமையாக அதிகரிக்கும். அப்போதும் அவற்றை 3/2/1 ரூ. என்ற விலைக்கு விற்கவேண்டும் என்று சட்டம் சொல்வதால் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைச் செயல்படுத்த ஆகும் மானியச் செலவு விண்ணைத் தொடும். அந்தப் பணத்தைத் திரட்ட மேலும் வரிகளை விதிக்கவேண்டும். இப்படியே போனால், நாடு நாசமாகப் போய்விடும்.

இந்த நெகடிவ் ஃபீட்பேக் லூப் பிரச்னையை ட்ரீஸ்/சென் போன்றோர் கண்டுகொள்வதில்லை. பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து அதிலிருந்து நியாயமாகப் பெறும் வரி வருமானம் அதிகரித்து, அந்த வருமானத்தைக் கொண்டு பட்டினிப் பிரச்னையைத் தீர்ப்பதா அல்லது ‘இழக்கப்படும் வருமானம்’ என்று சொல்லப்படும் ஒரு தொகையை உண்மை என்று கருதி, அதை இழக்காமல் அப்படியே கைப்பற்றி, அதிலிருந்து நாட்டில் உள்ள அனைவருக்கும் (சரி, கிட்டத்தட்ட அனைவருக்கும்) உணவை 3/2/1 ரூபாய்க்குத் தர முயற்சிப்பது உண்மையிலேயே நடைபெறுமா? அப்படி நடைபெற்றால் அதன் பொருளாதார விளைவுகள் என்னென்ன?

சிந்தியுங்கள்.

Friday, August 23, 2013

தமிழ் இணைய மாநாடுகள், பிற இந்திய மொழிகள் - 1

பன்னிரண்டு தமிழ் இணைய மாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. தமிழ் மொழி இந்தியாவில் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும், சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் அதிகாரபூர்வ மொழியாக உள்ளது. இது தவிர பல உலக நாடுகளில் தமிழ் மொழி பேசுவோர் வாழ்ந்துவருகின்றனர்.

தமிழ் சந்திக்கும் நுட்பியல் பிரச்னைகள் அனைத்தையும் பிற இந்திய மொழிகளும் சந்திக்கின்றன. அது தவிர்த்து, தமிழுக்கு சில பிரத்யேக அரசியல் பிரச்னைகளும் உள்ளன. தமிழ் மொழியின் எழுத்துகள், பிற இந்திய மொழிகளின் எழுத்துகளைவிடக் குறைவாக இருக்கும் காரணத்தால், சில தமிழ் அறிஞர்கள் தமிழைப் பிற இந்திய மொழிகள்போலக் கருதாமல் தனியாகக் கருதும்படிக் கோருகிறார்கள். தமிழில் சில வடமொழி எழுத்துகள் (கிரந்த எழுத்துகள் என இவற்றை வழக்குமொழியில் அழைப்பர்) புகுந்துள்ளதைக் காரணம் காட்டி அவற்றை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையைச் சிலர் முன்வைக்கிறார்கள். எழுத்து சீர்திருத்தம் தேவை என்பதைச் சிலர் முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவை அனைத்தும் தமிழைக் கணினியில் கொண்டுவருவதில், தெரியவைப்பதில் புதுப்புது சிக்கல்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

தமிழ் எழுத்து என்பதற்கு இனியும் தமிழர்கள் மட்டும் சொந்தக்காரர்கள் இல்லை. தமிழக அரசு, இந்திய அரசு, பன்னாட்டு கணினித் தர அமைப்புகள் (ஒருங்குறி சேர்த்தியம் போன்றவை), கணினி/கைப்பேசி தயாரிப்பாளர்கள், இயக்குதளம் உருவாக்குபவர்கள், நிரல் எழுதுபவர்கள் என்று பலரும் இன்று உலக மொழிகள் அனைத்துக்கும் சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். ‘என் மொழி, நான் இப்படித்தான் செய்வேன்’ என்று இனியும் யாரும் தனியாக எதையும் செய்துவிட முடியாது. எது செய்தாலும் அதனை முறைப்படிச் செய்யவேண்டிய தேவை இருக்கிறது. இத்துறையில் அரசியல் கலக்கும்போது, தமிழ் இன உணர்வு என்பது முன்வைக்கப்படும்போது பிரச்னை பெரிதாகிறது. வேண்டியபோது வடமொழி, இந்தி, நடுவண் அரசு, பார்ப்பனர்கள் ஆகியவற்றைப் பிடித்து இழுத்து சிக்கலை வேண்டிய அளவு விரிவாக்கிக்கொள்ளலாம்.

தமிழ்க் கணிமையின் ஆரம்ப சிக்கல், தரப்படுத்தப்பட்ட எழுத்துக் குறியீடு ஒன்றை உருவாக்குவதே. பன்னாட்டு அளவில் ஒருங்குறி (யூனிகோடு) சேர்த்தியம் உருவாவதற்கு முன்பிருந்தே டெஸ்க்டாப் பப்ளிஷிங் என்ற துறையின் வளர்ச்சி காரணமாக பல்வேறு தமிழ் எழுத்துருக்களும் அவை ஒவ்வொன்றுக்குமான பிரத்யேக எழுத்துக் குறியீடுகளும் உருவாகத் தொடங்கியிருந்தன. 1997 முதல் தமிழ் இணைய மாநாடு (அப்போது அதற்கு அந்தப் பெயரில்லை. உத்தமம் அமைப்பே அப்போது உருவாக்கப்பட்டிருக்கவில்லை. 2000-ல் உத்தமம் உருவாகி இணைய மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டபோது 1997 சிங்கப்பூர் மாநாட்டை முதல் தமிழ் இணைய மாநாடு என்று குறிப்பது வழக்கமாகியது) நடந்தபோதிலிருந்தே இந்தச் சிக்கல் உணர்த்தப்பட்டது. விரைவாக உத்தமம் உருவாகி, தமிழக அரசின் ஈடுபாட்டுடன் எழுத்துக் குறியீடு தரப்படுத்தல் முயற்சி தொடங்கியது. தமிழக அரசு TAB, TAM என்ற எழுத்துக் குறியீடுகளை முன்வைக்க, உத்தமம் தரப்பு TSCII என்ற குறியீட்டை முன்வைக்க, இந்த மூன்று குறியீடுகளும் சேர்ந்து அரசுத் தரம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. (ஆனால் கடைசிவரை அரசு அலுவலகங்களில் வானவில் என்ற எழுத்துரு/குறியீடு/தட்டச்சுப் பலகை முறையே பயன்பாட்டில் இருந்தது, இன்றும் பெரும்பாலும் இருக்கிறது என்பது பெரும் முரண்.)

இதையடுத்து தமிழில் தட்டச்சு செய்ய விசைப்பலகை தரப்படுத்துதல் என்பதும் உத்தமம், தமிழக அரசு இரண்டும் இணைந்து செயல்பட்டதால்தான் அமலுக்கு வந்தது. அதுதான் TamilNet99 அல்லது Tamil99 என்ற பலகைமுறை. இன்று தமிழக அரசின் தரமாக இது இருந்தாலும் நான் மேலே சொன்னபடி தமிழக அரசு அலுவலகங்கள் பல இடங்களிலும் வானவில்தான் கோலோச்சுகிறது. ஆனால் சிங்கப்பூரில் Tamil99 தட்டச்சுப் பலகைதான் அங்கீகரிக்கப்பட்ட முறை.

இவையெல்லாம் உள்ளூர் மென்பொருள் தயாரிப்பாளர்களைத்தான் கட்டுப்படுத்தியது. அவர்கள், தத்தம் சொந்தக் குறியீடுகள், விசைப்பலகைகள் ஆகியவற்றுடன், TAM/TAB/TSCII/Tamil99 ஆகியவற்றுக்கான ஆதரவையும் தரவேண்டியிருந்தது. மைக்ரோசாஃப்ட் போன்றோர் இதுகுறித்துக் கவலை கொள்ளவில்லை. பெரும்பாலான பன்னாட்டுக் கணினி நிறுவனங்கள் ஒருங்குறியை நோக்கி நகரத் தொடங்கியிருந்தனர். விரைவில் மைக்ரோசாஃப்ட் இயக்குதளம் ஒருங்குறி ஆதரவைக் கொண்டுவந்தது. அத்துடன் அசிங்கமாகத்தெரியும் (நீங்கள் பெரும்பாலும் இப்போது படித்துக்கொண்டிருக்கும்) லதா எழுத்துருவையும் அறிமுகப்படுத்தியது மைக்ரோசாஃப்ட். அடுத்தடுத்து வரும் மைக்ரோசாஃப்ட் இயக்குதளங்கள் தமிழுக்கான ஆதரவை இயல்பிலேயே உள்ளே கொண்டிருந்தன. மேகிண்டாஷ் இயக்குதளமும் பின்னர் லினக்ஸ் இயக்குதளமும் தமிழ் யூனிகோட் ஆதரவை உருவாக்கிக்கொண்டன.

எனவே தமிழக அரசும் உத்தமம் அமைப்பும் தம் தர நிர்ணயத்தை மாற்றவேண்டியிருந்தது. TAM/TAB/TSCII ஆகியவை மறக்கப்பட்டு யூனிகோடு ஒன்றே தரம் என்ற நிலையை ஏற்கவேண்டும் என்று உத்தமம் கருத்தை முன்வைத்தது. அனைத்து தமிழ் எழுத்துகளையும் உள்ளடக்கிய Complex Unicode rendering தேவைப்படாத TACE என்ற குறியீட்டுத் தரத்தை சிலர் அறிமுகப்படுத்த விரும்பினார்கள். இது தொடர்பாக பல கட்டுரைகள் தமிழ் இணைய மாநாடுகளில் முன்வைக்கப்பட்டன. யூனிகோடு எழுத்துக் குறியீட்டுக்கு இன்றுவரை பல மென்பொருள்களில் ஆதரவு கிடையாது. அடோபி பிடிஎஃப் ரீடர் தமிழ் யூனிகோடைக் காண்பிக்கும், ஆனால் தேடுதல் முடியாது; டெஸ்க்டாப் பப்ளிஷிங் மென்பொருள்கள் பலவும் தமிழ் யூனிகோடைக் கடித்துத் துப்பும். TACE குறியீட்டில் இந்தப் பிரச்னைகளையெல்லாம் சமாளிக்கலாம். ஆனால் இணையச் சேவைகள் என்று வந்தால் யூனிகோடு போதும். ஒரு சமரச முயற்சியாக உத்தமம் பணிக்குழு ஒன்று இந்த இரண்டு குறியீடுகளையும் தரமாக அறிவிக்கலாம் என்று தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்ய, அது குறித்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை TACE என்ற குறியீடு Private Use Area என்ற இடத்தில்தான் உள்ளது., இந்த எழுத்துருக்களை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையத்தளத்திலிருந்துதான் நீங்கள் தரவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். நீங்கள் வாங்கும் கணினியில் தொடக்கம் முதலே இந்த எழுத்துருக்கள் இருக்கா.

இது பெரிய பிரச்னை இல்லை. தொழில்முறை நிபுணர்களைத் தவிரப் பிறருக்கு TACE தேவையில்லை. (பலருக்கு மாற்றுக் கருத்து இருக்கும். இது என் கருத்து.) இன்று கணினியைப் பொருத்தமட்டில் உங்கள் கணினியில் தமிழ் வேலை செய்யும். படிக்கலாம். கொஞ்சம் முயற்சி செய்தால் எழுதலாம்.

இந்த மாற்றம் சுளுவாக, வேகமாக, அரசின் ஆதரவுடன், அரசாணை அடிப்படையில் செயல்படுவதற்கு உத்தமம் என்ற அமைப்பு பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. எண்ணற்ற சண்டைகள் நிகழ்ந்துள்ளன. பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, கணினி வல்லுனர்கள் பல்லாயிரக்கணக்கான நேரம் செலவு செய்து, முடிவுகள் எடுக்க உதவியுள்ளனர். இதுபோல் எதுவும் பிற மொழிகளுக்கு நடைபெறவில்லை.

ஏனெனில் உத்தமம் என்ற அமைப்புபோன்ற எதுவும் பிற மொழிகளுக்கு இல்லை. பல மாநில அரசுகளுக்கு இதெல்லாம் என்னவென்றே தெரியாது. மத்திய அரசு அமைப்புகள் அனைத்து இந்திய மொழிகளுக்குமாக சில கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளும். Inscript என்ற முறையில் அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஒரு விசைப்பலகை முறை உருவாக்கப்பட்டது. தமிழுக்கும் அவ்வாறு ஒரு விசைப்பலகை உள்ளது. ஆனால் தமிழர்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. தங்களுக்கென சிறப்பான Tamil99 முறையை உருவாக்கிக்கொண்டனர். சில மாநில அரசுகளின் மொழிகள் இன்றும் கணினியில் சரியாகத் தெரிவதில்லை. அம்மாநிலங்கள் அவைபற்றிக் கவலை கொள்வதாகத் தெரியவில்லை.

கன்னட எழுத்தாளரும் ஞானபீடப் பரிசு பெற்றவரும் ஹம்பியில் கன்னடப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்தவருமான முனைவர் சந்திரசேகர கம்பார, சென்ற ஆண்டு இவ்வாறு சொன்னார்:
"They say that in this Internet age, every three years amount to a 'yuga', so we are at least five yugas behind Tamil. Leave alone email, it's a pity we are not able to send even an SMS in Kannada," the Jnanpith awardee lamented, while speaking at a book release function.
கம்பார இதை வேறு இடங்களிலும் சொல்லியிருக்கிறார். கம்பாரவின் ஒப்பீட்டில் கொஞ்சம் பிழை இருக்கிறது. அவர் பேசிய காலகட்டத்தில் கன்னடத்தில் தமிழைப் போலவே மின்னஞ்சல் செய்ய முடிந்தது; சில கைப்பேசிகளில் கன்னடத்திலும் தமிழைப் போலவே குறுஞ்செய்திகளை அனுப்ப முடிந்தது. தமிழில் செய்யும் பலவற்றையும் கன்னடத்திலும் செய்ய முடிந்தது. ஆனால் தமிழில் நடைபெறும் அளவுக்கு ஆராய்ச்சிகளும் அடிதடிச் சண்டைகளும் கன்னட கணினி உலகில் நடந்திருக்கவில்லை. அரசிடமிருந்து ஆணைகள் ஏதும் வந்திருக்கவில்லை. அரசு நேரடியாகவோ மறைமுகமாகவோ கன்னடக் கணிமை பற்றிக் கவலைகொண்டதாகத் தெரியவில்லை. ஆக, கல்வியாளராகவும் எழுத்தாளராகவும் தமிழ்க் கணிமையிலும் கணினி மொழியியலிலும் ஆராய்ச்சி செய்யும் சிலரை அறிந்தவராகவும் இருக்கும் கம்பார கவலைப்பட்டதில் நியாயம் இருக்கிறது.

இதனால் தமிழ் என்னவோ உலகிலேயே கணிமையில் மிகச் சிறந்த இடத்தில் இருக்கிறது என்று பொருள் கொள்ளக்கூடாது. தட்டிக் கொட்டி ஏதோ கொஞ்சம் வேலைகள் தமிழில் முன்னெடுக்கப்படுகின்றன என்றே இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். இதற்குப் பலருக்குத் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லவேண்டும். அவர்கள் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் உத்தமம் என்ற அமைப்புடன் தொடர்புகொண்டவர்கள். இதில் சிலர் உத்தமத்துடன் சண்டை போட்டுக்கொண்டு வெளியிலிருந்து கடுமையாக எதிர்த்து, பின்னர் உத்தமம் அமைப்பை வழிநடத்துபவர்களாக ஆனவர்கள். வேறு சிலர் உத்தமத்தில் இயங்கியபின் கடும் மனவெறுப்படைந்து உத்தமம் அமைப்பிலிருந்து விலகிச் சென்றவர்கள். பிறகு ஒரு நியூட்ரல் நிலையில் தொடர்ந்து ஆதரவு தந்துகொண்டிருப்பவர்கள்.

மலேசியாவில் நடந்த 12-வது மாநாட்டின்போது அங்கு குழுமியிருந்த சில முக்கியமான உத்தமம் முன்னாள்/இந்நாள் நிர்வாகிகள்/ஆலோசகர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேரா. ஆனந்தகிருஷ்ணன், பேரா. பொன்னவைக்கோ, அருண் மகிழ்நன், முத்து நெடுமாறன், மணி மணிவண்ணன், வெங்கட்ரங்கன் ஆகியோருடன் இந்நாள் உத்தமம் செயற்குழுவினர்களான இளந்தமிழ், இளங்கோவன், மணியம், வாசு அரங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் ஒரு ஓரத்தில் குறிப்பெழுதுபவனாக நானும் இருந்தேன். இந்தக் குழுவில் விடுபட்ட முக்கியமான ஒரு நபர் கல்யாணசுந்தரம். அவரால் மலேசியா மாநாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை. மாநாடுகளை நடத்தியுள்ளனர். அரசுகளுடன் உறவாடியுள்ளனர். பணத்தைத் திரட்டியுள்ளனர். ஒருங்குறி சேர்த்தியம் போன்ற பன்னாட்டுக் கணினி அமைப்புகளுடன் போராடி, தமிழின் நிலையை எடுத்துச் சொல்லியுள்ளனர். மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற கணினி நிறுவனங்களோடு தொடர்ந்து உறவாடி அவர்களை வற்புறுத்தி தமிழுக்கான ஆதரவைக் கூட்டியுள்ளனர். இவர்கள் தனியாக இத்தனையையும் செய்தார்கள் என்று நான் சொல்லவில்லை; இவர்கள் தலைமை வகித்த கடந்த பதினாறு ஆண்டுகளில் மேலும் பலர் செயற்குழுவிலும் பணிக்குழுவிலும் பணியாற்றியுள்ளனர்; தன்னார்வலர்களாகத் தங்கள் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர்.

இதுபோன்ற முயற்சிகள் இந்திய மொழிகள் பிறவற்றில் எதற்கும் இல்லை என்பதை இங்கே குறிப்பிடுதல் அவசியம்.

(தொடர்வேன்)