Saturday, April 19, 2003

இராக்கில் அடுத்து என்ன நடக்கும்?

ஜார்ஜ் புஷ்ஷும், டோனி பிளேரும் இராக்கில் சரமாரியாக குண்டு போட்டுத்தாக்கி பல இராக்கியர்களுக்கு ஒட்டுமொத்தமாக உலகிலிருந்தே விடுதலை கொடுத்துள்ளனர். சில தேர்ந்தெடுக்கப்பட்ட இராக்கியர்கள் மூலம் கைப்பாவை அரசை நிலைநாட்ட அவர்கள் நினைத்தால் அது நடக்காது என்றே தோன்றுகிறது.

இராக்கில் குர்து இனத்தவர் ஒரு பக்கம், அராபியர்களிலேயே ஷியா என்னும் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் (60%) ஒரு பக்கம், சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் மறுபக்கம் என ஒவ்வொருவரும் கூடிய சீக்கிரத்திலேயே ஒருவரை ஒருவர் ஒழிக்கப் புறப்படுவார்களோ என்று பயம் இருக்கிறது. இந்நிலை ஏற்பட்டால், இரான் ஷியாக்களுக்கு ஆதரவாகப் புறப்படலாம். துருக்கியோ குர்துக்களுக்கு எதிராக வட இராக்கில் போர் புரிய உள்ளே நுழையலாம். இராக்கின் சதாம் ஹுஸ்ஸேனின் பாத் கட்சியினைப் பின்பற்றிபவருக்கு ஆதரவாக சிரியா குழப்பம் விளைவிக்களாம். பாலஸ்தீனியருக்கு ஆதரவாக, இஸ்ரேலுக்கு எதிர்ப்பாக பல தீவிரவாதிகள் இராக்கில் உருவாகலாம். இதன் நடுவில், சதாம் ஹுஸ்ஸேனே அல்லது அவரது மகன்களோ, ஆதரவாளர்களோ குட்டையை இன்னும் குழப்பலாம். முன்னால் நாடுகடத்தப்பட்ட சதாம் ஹுஸ்ஸேனின் எதிரிகள் ஆளாளுக்கு தனக்குப் பதவி கிடைக்க்குமோ என்று ஒருவர் காலை ஒருவர் வாரிவிடலாம்.

இத்தனைக்கும் நடுவில், வற்றாத எண்ணைக்கிணறு நமக்கே என்ற ஆசையில் அமெரிக்க எண்ணை நிறுவனங்களும், அய்யோ போய்விட்டதே என்ற வெறியில் ரஷ்ஷிய, ஃபிரென்சு நிறுவனங்களும், ஏதாவது எச்சில் சோறாவது கிடைக்குமா என்று கெஞ்சும் பிரிட்டிஷ் நிறுவனங்களும், புணரமைப்பு என்ற பேரில், பில்லியன் டாலருக்கு அலைமோதும் அமெரிக்க, மற்றும் உலக நிறுவனங்கள் (இந்திய நிறுவனங்கள் உட்பட) என்னென்ன செய்யப்போகிறார்களோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

நாசமாக்குவதுதான் என் வேலை, சுத்தம் செய்யவேண்டியது உன் வேலை என்று அமெரிக்கா கழண்டுகொள்ள, அய்யோ-பாவம் ஐ.நா சபை தன்னால் முடிந்ததைச் செய்யும்.

கோமாளி புஷ்ஷோ, அடுத்து சிரியா என்று பாயத் தயார். பரிதாபம் பிளேர் "இது போதும், விட்டு விடுங்கள், இதற்கு மேல் என்னால் தாக்குப் பிடிக்க முடியாது" என்று ஓடும் நிலைக்குத் தயாராகி விட்டார்.

மாட்டிக்கொண்டு முழிப்பதென்னவோ இராக் மக்கள்.

No comments:

Post a Comment