Saturday, November 03, 2007

பாகிஸ்தானில் நெருக்கடி நிலை

கிட்டத்தட்ட அனைவருமே எதிர்பார்த்த ஒரு நிகழ்வு இன்று நடந்துள்ளது. பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஜெனரல் பர்வீஸ் முஷரஃப், நாட்டில் நெருக்கடி நிலையைப் பிரகடனப் படுத்தியுள்ளார்.

அவரது கோணத்திலிருந்து இதை மட்டும்தான் அவரால் செய்திருக்க முடியும். ஆனால் இது பாகிஸ்தானைப் பெரும் உள்நாட்டுப் போரில் கொண்டுபோய் சேர்க்கப்போகிறது.

1. நீதிபதிகள் ஒடுக்கப்படுவர். ஒட்டுமொத்தமாக சிறையில் அடைக்கப்படுவர். சிலர் தீர்த்துக்கட்டப்படலாம். தலைமை நீதிபதி இஃப்திகார் சவுதுரி நிச்சயமாக சிறையில் தள்ளப்படுவார்.

2. முக்கியமான சில வக்கீல்கள் - முஷரஃபை எதிர்ப்பவர்கள் - காணாமல் போகலாம். உயிருடன் திரும்பி வந்தால் பெரிய விஷயம்.

3. எதிர்க்கட்சித் தலைவர்கள் நிச்சயமாக ஒடுக்கப்படுவர். நவாஸ் ஷரீஃப், பேநசீர் புட்டோ இருவருக்கும் தலைவலி.

பாகிஸ்தானின் முன்னாள் ஆட்சியாளர்கள் கொடுத்த நெருக்கடி நிலை ஆட்சிக்கும் இப்போதுள்ள ஆட்சிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். முஷரஃபின் முதல் நெருக்கடி நிலை ஆட்சிக்கும் இப்போதுள்ளதற்கும்கூட வித்தியாசங்கள் உண்டு. முதல்முறை முஷரஃபை மக்கள் ஆதரித்தனர். இப்போது முஷரஃபுக்கு எல்லாத் தரப்பு மக்களிடமிருந்தும் எதிர்ப்பு வலுத்துள்ளது.

ஆனால் முஷரஃபின் பெரும் தலைவலி மதத் தீவிரவாதிகளிடமிருந்துதான் வரும். அவர்களைத்தான் முஷரஃப் தாக்குவார். அவர்கள் பதில் தாக்குதல் தொடுப்பார்கள். ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சியினரும் மக்களில் சிலரும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவார்கள். விளைவு... பாகிஸ்தான் அரசியலே தீவிரவாதத்தின் பிடியில் மாட்டிக்கொள்ளும்.

பாகிஸ்தானுக்குப் பெரும் தலைவலி. விளைவாக, இந்தியாவுக்கும் தலைவலிதான்!

No comments:

Post a Comment