Wednesday, April 02, 2014

மகேந்திரன் பாதை

ஞாயிறு அன்று நாங்கள் 40 பேர் மகேந்திரவர்மப் பல்லவனின் சில குகைக் கோயில்களைப் பார்த்துவிட்டு வரச் சென்றோம். திட்டம் வேறாக இருந்தாலும், இறுதியில் வல்லம், தளவானூர், சிங்கவரம், மண்டகப்பட்டு, பனமலை ஆகிய ஐந்து இடங்களுக்கு மட்டுமே போக முடிந்தது. இதில் பனமலை, ராஜசிம்மனால் கட்டுவிக்கப்பட்டது. சிங்கவரம் மகேந்திரன் காலத்ததா என்பதில் சந்தேகம் உள்ளது. பிற்பட்டதாக இருக்கலாம்.

வல்லத்தில் மூன்று குகைக் கோவில்கள் உள்ளன. முதல் இரண்டு, மகேந்திரனின்கீழ் ஆட்சி நடத்திய கந்தசேனன் என்பவனால் 7-ம் நூற்றாண்டில் கட்டுவிக்கப்பட்டது. இதில் சிவனுக்கான கோவில் இன்றும் வழிபாட்டில் உள்ளது. அதைச் சுற்றி சிமெண்ட், செங்கல், இரும்புக் கம்பி கட்டடங்கள் உருவாகி, குகைக் கோவிலின் அழகைக் குலைத்துள்ளன. சிவனுக்கான கோவிலின் இரு பக்கமும் கணபதி, ஜேஷ்டா தேவி உருவங்கள் பிறைகளில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவை பிற்காலத்தில் செய்யப்பட்டிருக்கவேண்டும். இங்குள்ள துவாரபாலகர் சிற்பங்கள் மிக மிக அருமை. (படங்கள் கீழே)

   

விஷ்ணுவுக்கான கோவில் சற்றுத் தள்ளி உள்ளது. கருவறை உள்ளே இருக்கும் வழிபடுமூர்த்திகள் - விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி - பிற்காலத்தவை.



இந்த இடத்தின் முக்கியத்துவம் ஆரம்பகாலத் தமிழ் எழுத்துகளில் காணப்படும் மிக அழகான ஒரு கல்வெட்டு. “பகாப்பிடுகு லளிதாங்குரன் சத்துருமல்லன் குணபரன் மயேந்திரப்போத்தரேசரு அடியான் வயந்தப்பிரி அரேசரு மகன் கந்தசேனன் செயிவித்த தேவகுலம்” என்று அதில் எழுதியுள்ளது.

மூன்றாவது, 12-ம் நூற்றாண்டில் கோப்பெருஞ்சிங்கனால் குடையப்பட்ட கோவில். கந்தசேனனின் சிவன் கோவிலுக்கு நேர் கீழே உள்ளது. அதன் துவாரபாலகர் சிலைகள் பெருமளவு சிதைய ஆரம்பித்துவிட்டன. இந்த இடம் இப்போது பயனற்றுக் கிடக்கிறது.

தளவானூர் குகைக் கோவில், மகேந்திரனே நேரடியாகக் கட்டுவித்தது. மிக அழகான முகப்பு. மகர தோரணங்கள். மேலே கபோதத்தில் ஐந்து கூடுகள். கூட்டில் காணப்படும் தலை ஒவ்வொன்றும் வித்தியாசமான அலங்காரங்கள் கொண்டதாக இருக்கின்றன. இங்கும் மிக அழகான துவாரபாலகர்கள், வெளி வாயிலிலும், பின்னர் உள்ளே கருவறைக்கு முன்பாகவும்.


இந்த இடத்தின் முக்கியத்துவம், இங்கே வெளிப்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ள ஒரு சமஸ்கிருதச் செய்யுளும் அதன் நெருக்கமான தமிழ் மொழிபெயர்ப்பும். இந்தக் கல்வெட்டு எழுத்துகள் இப்போது பெரும்பாலும் மங்கிவிட்டன.

சமஸ்கிருதத்தில் எழுதியிருப்பது:
    தண்டநாத மகேந்திரேன நரேந்திரேனைச காரித:
    சத்ருமல்லேன சைலேஷ்மின் சத்ருமல்லேஸ்வராலய:
செல்லன் சிவதாசன் என்பவன் இதன் தமிழாக்கத்தை எழுதிப் பொறித்திருக்கிறான்:
ஸ்ரீ தொண்டையன் தார்வேந்தன் நரேந்திரப் போத்தரையன் வெண்பேட்டன் என்பால் மிகமகிழ்ந்து கண்டான் ச மிக்க வெஞ்சிலையான் சத்ருமல்லேஸ்வரர் ஆலயம் என்று அரனுக்கு இடம் ஆக அங்கு.
இது தவிர நந்திவர்மப் பல்லவனின் ஒரு தமிழ்க் கல்வெட்டும் இங்கு உள்ளது.

மண்டகப்பட்டு, மிகப் பிரசித்தி பெற்றது. மகேந்திரவர்மன் முதன்முதலாக இந்தக் கோவிலைத்தான் வெட்டியிருக்கவேண்டும் என்பதை அவனுடைய கல்வெட்டிலிருந்து புரிந்துகொள்ளலாம். (சமஸ்கிருதம், கிரந்த எழுத்துகளில்)
    ஏதத் அனிஷ்டகம் அத்ருமம் அலோஹம் அசுதம்
    விசித்ரசித்தேன நிர்மாபிதம் ந்ருபேன
    ப்ரஹ்மேஸ்வர விஷ்ணு லக்ஷிதாயதனம்
அதாவது,
செங்கல் இல்லாமல், மரம் இல்லாமல், உலோகம் இல்லாமல், சுதை இல்லாமல், பிரம்மா, ஈஸ்வரன், விஷ்ணுவுக்காகவென்று இந்தக் கோவில் விசித்திரசித்தனால் கட்டுவிக்கப்பட்டது.

நல்ல தடி, தடித் தூண்கள் இருக்குமாறு வெட்டுவிக்கப்பட்ட மண்டபம் இது. பிற்காலங்களில் தூண்களின் குறுக்களவு குறைந்து மெலிதாக ஆகத் தொடங்கின. இங்கு காணப்படும் துவாரபாலகர்களும் மிகப் பிரமாதம். நாகசாமி, இவர்களில் இடது பக்கம் உள்ளவரை கருடன் என்றும் வலதுபக்கம் உள்ளவரை மகா காலன் என்றும் சொல்கிறார்.

இந்த நான்கு ஜோடி துவாரபாலகர் படங்களும் கீழே:

   

வல்லம். வலதுபக்க வாயிற்காப்போன் கையில் ஒரு மின்விளக்கைக் கொடுத்து அசத்தியுள்ளனர்!

   

தளவானூர். மண்டபத்தின் முகப்பில் உள்ள வாயிற்காப்போர்

   

தளவானூர். கருவறைமுன் இருக்கும் வாயிற்காப்போர்

   

மண்டகப்பட்டு

சிங்கவரம், சயனத் திருமாலின் திருக்கோவில். ஆனால் அதனைச் சுற்றி பிற்காலத்தில் முழுமையான கட்டுமானக் கோவில் ஒன்று எழும்பிவிட்டது. ஆதிசேடன்மீது படுத்திருக்கும் போக சயனமூர்த்தி. காலடியில் பூதேவி. நாபிக்கமலத்தில் பிரம்மா. மதுவும் கைடபனும் ஆளுக்கொரு தடியுடன் அவரைத் தாக்க முனைகிறார்கள். கருடன் அவர்களை நோக்கிச் சைகை செய்கிறார். பிருகு, மார்க்கண்டேயர் திருமாலை வணங்கியபடி உள்ளனர். (உள்ளூர் புராணத்தின்படி இதில் ஒருவரை பிரகலாதன் ஆக்கிவிடுகிறார்கள். ஆகமப்படி இந்த இரண்டு இருடிகளும் பிருகு, மார்க்கண்டேயர் ஆகியோரே.) வெறும் குகைக் கோவில் மட்டும் இருந்த காலத்தில் கருவறையை ஒட்டிய சுவற்றில் மிக அழகான துர்கையைக் கண்டிருக்க முடியும். திரிபங்கத்தில் மிக ஒயிலாக துர்கை நின்றிருக்க, கீழே ஓர் அடியார் கைகூப்பித் தொழ, இன்னொருவர் தன் தலையை வெட்டிக் காணிக்கையாக்கத் தயாராக இருக்கிறார். [மாமல்லையில் ஆதிவராக மண்டபத்திலும் திரௌபதி ரதத்திலும் இதே போன்ற கொற்றவையைக் காணலாம்.] ஆனால் பின்னர் அமைக்கப்பட்ட கட்டுமானத்தில் துர்கையை ஒரு சிறு துவாரம் வழியாகக் குனிந்துதான் பார்க்க முடிகிறது. பெருமாளுக்கு ஏற்ற ஜோடியாகப் பின்னர் செய்விக்கப்பட்ட தாயாருக்கான சந்நிதி இந்த துர்கையை மறைத்துவிடுகிறது.

பனமலைக்கு நாங்கள் சென்றது மிக முக்கியமாக அங்கே இன்னமும் எஞ்சியிருக்கும் பல்லவர் கால ஓவியத்தைப் பார்வையிட. சிவன் ஊழி நடனம் செய்ய, உமை சற்றே ஒயிலாகக் காலை சுவற்றின்மீது சார்த்தி, கையில் குடையைப் பிடித்தபடி பார்வையிடுகிறாள். ஓவியம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது. எனவே பார்க்க விரும்புவோர் உடனே சென்று பார்த்துவிடவும்.

9 comments:

  1. தன்னுடைய பழமையை மதிக்கும் எந்த சமூகமும் தன்னுடைய எதிர்காலத்தை சிறப்பாக தொடங்கும் என்பதர்க்கு உங்களுடைய தேடல் உதாரணம் .அற்புத பயணம் .நன்றி .

    ReplyDelete
  2. திரு.பத்ரி அவர்களே,உங்கள் தளத்தில் "வலையிலிருந்து " என்ற பகுதியில் 'சவுக்கு' என்ற சுட்டியை சொடுக்கினால்,கீழ் கண்ட வாசகம் காணப்படுகிறதே என்ன காரணம்?
    This site has been blocked as per instructions from Department of Telecom (DOT) .

    ReplyDelete
    Replies
    1. சண்டமாருதன்Wed Apr 02, 10:47:00 PM GMT+5:30


      1. Copy the link.
      2. Open boomproxy.com
      3. Paste the link and click go button.

      Delete
    2. http://proxyhat.com/index.php?q=aHR0cDovL3NhdnVra3UubmV0L2luZGV4LnBocD9vcHRpb249Y29tX2NvbnRlbnQmYW1wO3ZpZXc9YXJ0aWNsZSZhbXA7aWQ9MTk2MzoyMDE0LTA0LTAxLTA1LTIzLTA0JmFtcDtjYXRpZD0xOjIwMTAtMDctMTItMTYtNTgtMDYmYW1wO0l0ZW1pZD0xOQ%3D%3D

      Delete
  3. hi 1 important suggestion to you. at the top of your nhm.in site write cash on delivery available if we select registered book post(vpp)...only after selecting vpp i came to know cash on delivery available in ur site....yithanai naalaaga cash on delivery ungal siteil illai yena nambi kondirundhaen...

    ReplyDelete
  4. there is an image called vpp in nhm.in... actually instead of that put the image showing the word put the 3 words 'cod by vpp'...(vpp yenraal cod thaan yenbadhae yenaku munbu theriyaadhu)

    ReplyDelete
  5. Wonderful Imagery & documentary !!

    -srinath

    ReplyDelete
  6. ஒரு சிலையில் பூணல் உபவீதமாகவும் மற்றொன்றில் நவீதமாகவும் இருப்பதற்கு பிரத்யேக காரணங்கள் இருக்கிறாதா?

    ReplyDelete