Saturday, November 15, 2014

சிந்து எழுத்துகளின் முன்-திராவிடத் தன்மை

நேற்று மாலை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்து ஆராய்ச்சி மையத்தில் டாக்டர் கிஃப்ட் சிரோன்மணி எண்டோமெண்ட் சிறப்புப் பேச்சு, டாக்டர் ஐராவதம் மகாதேவனால் வழங்கப்பட்டது. சிந்து நாகரிகப் பகுதிகளில் கிடைத்திருக்கும் பட வடிவ அச்சுகளைப் புரிந்துகொள்ளும் ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தனது கண்டுபிடிப்புகளை ஐராவதம் மகாதேவன் முன்வைத்தார்.

சிந்து பட வடிவங்கள் எழுத்துகளா அல்லது வேறு ஏதேனுமா என்ற கேள்வியும் இருக்கும் நிலையில் இந்தப் பதிவுக்காக அவற்றை எழுத்துகள் என்றே எடுத்துக்கொள்வோம். அவை எழுத்துகள் என்றால் அதன் அடிப்படை மொழி என்ன? இந்தியாவின் வரலாற்றுக் காலத்தின் மிகப் பழமையான மொழிகளான சமஸ்கிருதம் அல்லது தமிழாக (அல்லது அவற்றின் முன்னோடி மொழிகள்) அவை இருக்கலாம் என்று இரு கோணங்களில் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஐராவதம் இதில் திராவிடக் கட்சி. கிடைத்திருக்கும் சான்றுகளின்படி சிந்து எழுத்துகளின் அடிப்படை முன்-திராவிட மொழி ஒன்றுதான் என்பதற்கான பல வாதங்களை அவர் வைத்தவண்ணம் இருக்கிறார். அவ்வாறு தான் வைத்துள்ள வாதங்களிலேயே நேற்றைய ஆராய்ச்சிக் கட்டுரைதான் இதுவரையில் தன்னுடைய ஆகச் சிறந்தது என்ற தன் கருத்தையும் அவர் முன்வைத்தார்.

(நான் எழுதுவதில் நிச்சயம் பிழை இருக்கலாம். அவருடைய பேச்சைக் கேட்டு, குறிப்புகள் ஏதும் எடுத்துக்கொள்ளாமல், பின் அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரையை இன்று காலை வாசித்து, அதன்பின் எழுதியுள்ளேன்.)

சிந்து எழுத்துகளின் முழுமையான தரவகத்தை உருவாக்கிய நால்வருள் ஐராவதம் மிக முக்கியமானவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆக, சிந்து நாகரிகப் பகுதிகளில் கிடைத்துள்ள, இப்போதும் கிடைத்துக்கொண்டிருக்கும் அச்சுகளை முழுவதுமாக உள்வாங்கியுள்ளவர் இவர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இந்த எழுத்துகளில் நான்கு எழுத்துகள் மீண்டும் மீண்டும் திரும்ப வருவதை (ஃப்ரீக்வன்சி) எடுத்துக்கொண்டு, அந்த நான்கு எழுத்துகள் (சொற்கள்) என்னவாக இருக்கும் என்பதைக் கண்டறியும் முயற்சிதான் இந்த ஆராய்ச்சி. அந்தப் படங்கள் கீழே.


வலமிருந்து இடமாகப் படிக்கவேண்டும். இந்த நான்கையும் அவர் இவ்வாறு பெயர் கொள்கிறார்.

A = ஓநாய்
B = கொக்கி
C = நால்வழிச் சாலை
D = சாடி

சித்திர எழுத்துகளின் அடிப்படைகள் சிலவற்றை முதலில் விளக்குகிறார் ஐராவதம். ஒரே உச்சரிப்பு கொண்ட சொல், இரு வேறு பொருளைத் தருவதாக எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு பொருளைப் படமாக விளக்கிவிடலாம். இன்னொன்றைப் படமாகக் காட்டுதல் எளிதல்ல. அப்படிப்பட்ட நிலையில் இரண்டாவது கடினமான சொல்லைக் குறிப்பதற்கும் முதல் படத்தைப் பயன்படுத்துவார்கள். இதனை ஆங்கிலச் சொல்லான rebus என்பதனைப் பயன்படுத்துகிறார் ஐராவதம். தமிழில் இதற்கு இணையான, இதே பொருள் கொண்ட சொல் எனக்குத் தெரியவில்லை என்பதால் ரீபஸ் என்ற சொல்லையே பயன்படுத்துகிறேன். இந்த ரீபஸ், ஒரு குறிப்பிட்ட மொழி சார்ந்தது. இதனை வேறு மொழிக்கு மொழிபெயர்க்கும்போது இந்தக் கருத்து சிதைந்துவிடும்.

உதாரணத்துக்கு, ஆங்கிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். I என்பது தன்னைக் குறிக்கும். அதே உச்சரிப்பு கொண்ட Eye என்பது கண்ணைக் குறிக்கும். கண்ணைக் குறிக்க விழியின் படத்தை வரைந்துவிடலாம். ஆனால் “I" என்ற தன்னைக் குறிக்க ஒரு படத்தைப் போடுவது கடினம். அதற்கு பதில் “விழி” படத்தையே வரைந்துவிட்டால், இடத்துக்கு ஏற்ப அம்மொழியின் பயனாளர்கள் சரியான இடத்தில் சரியான பொருளைப் புரிந்துகொண்டுவிடுவார்கள். இதுதான் ரீபஸ். ஆனால், வேற்று மொழிக்காரர்கள், தவறான பொருளைப் புரிந்துகொண்டுவிட அனைத்து சாத்தியங்களும் உள்ளன.

இதன் அடிப்படையில்தான் மேலே உள்ள சிந்து படத்தை எடுத்துக்கொண்டு ஆராய்கிறார் ஐராவதம். இதனை பழைய தமிழில் உள்ள சொற்களோடு பொருத்திப் பார்த்தால் இணையான, பொருள் பொதிந்த சொற்கள் கிடைக்கின்றன. ஆனால் ரிக் வேதச் சொற்களைக் கொண்டு ஆராய்ந்தால் இணையான சரியான சில சொற்களும், சற்றே தவறான ரீபஸ் சொற்களும் கிடைக்கின்றன. (அவற்றைக் கீழே விளக்குகிறேன்.)

எனவே, ஐராவதத்தின் கருதுகோள் (என் வார்த்தைகளில்): சிந்து மொழியானது முன்-திராவிடத்துக்கும் ரிக்வேத சமஸ்கிருதத்துக்கும் மூத்தது. சிந்து மொழி முன்-திராவிடத்தை ஒத்தது. ரிக்வேத சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டது. ரிக்வேதிகள் சிந்து நாகரிக அழிவுக்கு வெகு காலத்துக்குப் பிறகுதான் ரிக்வேதத்தை உருவாக்குகிறார்கள். அப்போது சிந்து மொழியின் முழுமையான புரிதல் அவர்களிடமிருந்து அகன்று போய்விட்டது. எனவே சில சரியான மொழியாக்கம், சில தவறான மொழியாக்கம் இரண்டும் சேர்ந்து புதிய புராணக் கதைகளை அவர்கள் உருவாக்குகிறார்கள். ஆனால் தமிழ் மொழியின் ஆரம்பகாலச் சொற்கள் தவறின்றி அப்படியே சிந்து மொழியின் அடிப்படையிலேயே உள்ளன. ஆனால் அவற்றின் பொருள் பரிமாண மாற்றம் அடைந்துவிடுகிறது. அப்படி மேலே காணப்படும் சிந்து வார்த்தைகள் எல்லாம் பாண்டிய குலப் பெயர்களுடன் ஒத்துப்போகின்றன. எனவே மூத்த தமிழர்களான பாண்டியர்கள் சிந்து நாகரிக வழி வந்தவர்கள், சிந்து நாகரிகப் பகுதியிலிருந்து புலம் பெயர்ந்து தமிழகம் வந்தவர்கள். ரிக்வேதிகளோ இந்தியாவுக்குப் பிறத்திலிருந்து சிந்து பகுதி வழியாக வந்து கொஞ்சம் சரியும் கொஞ்சம் தவறுமாக சிந்து மொழியை உள்வாங்கிக்கொண்டு தம் மொழிக்கு அவற்றை சரியும் தவறுமாக மொழிமாற்றி ரிக் வேதத்தில் வைத்திருக்கின்றனர்.

இந்தக் கருதுகோளுக்கான சில சான்றுகளைத்தான் நேற்றைய பேச்சின்போது ஐராவதம் தந்தார்.

அவருடைய முழுமையான ஆராய்ச்சிக் கட்டுரையை இங்கே தருவது என் நோக்கமல்ல. விருப்பம் உள்ளவர்கள் வாங்கி (அல்லது தரவிறக்கி) படித்துக்கொள்ளுங்கள்.

முதலில் ‘ஓநாய்’ சின்னத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு ஓநாய் முக்கியமல்ல. அப்படியென்றால் அதன் முகம் காண்பிக்கப்பட்டிருக்கும். அதன் பின்புறம்தான் காண்பிக்கப்பட்டுள்ளது. எனவே “மாறு”, “மாறி” (திரும்பி) என்னும் பொருளைக் குறிப்பிடுகிறது இச்சொல். இந்த வேர்ச்சொல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு என ஐந்திலும் அப்ப்டியே வருகிறது. (இவ்வாறு ஒவ்வொரு வேர்ச்சொல்லுக்கும் ஐந்து திராவிட மொழிகளிலிருந்தும் கொடுக்கிறார். பின்னர் ரிக்வேதத்திலிருந்தும் கொடுக்கிறார்.) எனவே இந்தச் சின்னம் குறிப்பிடுவது பொருள்களை மாற்றிக்கொள்ளுதல் அல்லது பண்டமாற்று.

இந்த ஓநாய்ச் சின்னத்திலேயே காதுகள் வித்தியாசமாக இருப்பதை, அவர் முடியின் பின்னல் என்று எடுத்துக்கொண்டு இச்சொல், ‘குடுமி’, ‘சடை’ போன்ற சொற்களைக் குறிப்பதாகவும் எடுத்துக்கொள்கிறார்.

இரண்டாவதாக, ‘கொக்கி’. இதற்கு இரண்டு அடிப்படை தமிழ் வேர்ச் சொற்கள்.

(1) கொளுத்து/கொளுவு/கொளுக்கி/கொளுவி/கொண்டி/கொள்
(2) செடில்/செத்/செழ்

கொக்கி, கொள்ளுதல் என்பதைக் குறிக்கிறது என்று எடுத்துக்கொண்டால், AB இரண்டும் சேர்ந்து ‘மாறுகொள்’ என்ற பொருள் தரும். பாரதியின் ‘கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்’ என்பதை உதாரணமாகக் கொள்ளலாம். பண்டமாற்று செய்வது, செய்பவன் ஆகியோரைக் குறிக்கும்.

மூன்றாவதாக நால்வழிச் சாலை. பாதை/பாடி என்று வழியை அல்லது நகரத்தைக் குறிக்கும். அல்லது நகரத்தைச் சேர்ந்தவனைக் குறிக்கும்.

நான்காவது சாடி. இது இலக்கண விதிக் குறிப்பு மட்டுமே என்கிறார். அதாவது ஆண்பால் விகுதியான அன் அல்லது அர்.

எனவே மேலே உள்ள சிந்து வடிவத்துக்கு மாற்/கொள்/பாட்/அன் அல்லது மாறுகொள்பாடியன் = Merchant of the city என்று பொருள் கொள்ளலாம் என்கிறார்.

இது அடுத்து மாபெரும் தாவுதலில், பாண்டிய குலப் பெயர்களாக ஆகிறது.

ஓநாய் என்பது மாறு = மாறன். பின்னல் உள்ள காரணத்தால், குடுமி அல்லது சடையன்.
கொக்கி என்பது செட்/செழ் என்றாகி, செழியன்.
நால்வழிப்பாதை = பாட் -> பாண்ட் -> பாண்டியன்; வழி-> வழுதி.

மாறன், செழியன், வழுதி, பாண்டியன் (பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, மாறவர்மன், சடவர்மன் போன்ற பாண்டியப் பெயர்கள் நினைவுக்கு வருகின்றனவா?)

***

இதுவரை தாக்குப் பிடித்தவர்கள் வாருங்கள், அடுத்து ரிக்வேதத்துக்குள் நுழைவோம்.

இதே சின்னங்களை ரிக்வேதத்துக்குள் வரும் சொற்களுடன் அல்லது கடவுளர்களுடன் பொருத்திப் பார்க்க முடியுமா?

முதலில் நால்வழிச்சாலையை எடுத்துக்கொள்கிறார் ஐராவதம். பதஸ்பதி - பாதைகளின் கடவுள் (ரிக் 6.53.1) என்று பூஷண் என்ற கடவுள் கருதப்படுகிறார். இதே கடவுள் ரிக் வேதம் முழுவதிலும் வளமானவர், செல்வத்தின் கடவுள், இவருடைய தங்கக் கப்பல்கள் கடல் தாண்டிச் செல்லும் என்று சொல்லப்படுகிறது. அனைத்துமே மாறுகொள்ளும் வியாபாரியின், செல்வம் செழிக்கும் பின்னணியுடன் பொருந்திப்போகிறது.

வழுதி -> வழ் -> வள் -> வளமை -> செல்வம்

ஓரிடத்தில் இவர் கூழ்/கஞ்சி சாப்பிடுபவர் (கரம்பாதிதி - ரிக் 6.56.1) என்று வருகிறது. செல்வத்துக்கு அதிபதியான பூஷண் ஏன் ஏழைகளின் உணவான கஞ்சியைச் சாப்பிடவேண்டும் என்ற கேள்வியை பலர் முன்னமேயே எழுப்பியுள்ளனர். அது தொடர்பாக பின்னர் மகாபாரதத்தில் ஒரு கதை வருகிறது. தட்ச யாகத்தில் தேவர்கள் அவி பெறும்போது, தன்னைக் கூப்பிடாததால் கோபம் கொண்ட சிவன் வந்து அங்கிருக்கும் தேவர்களை அடித்து உதைக்க, பூஷணின் பல் உடைந்துவிடுகிறது. எனவே பல போன அவரால் கஞ்சி மட்டும்தான் உண்ண முடியும். இந்தக் கதையே தவறான மொழிபெயர்ப்பால் உருவானது என்கிறார் ஐராவதம்.

நான்குவழிச்சாலை கூடும் இடத்துக்கு, அனைவரும் கூடும் இடத்துக்கு தமிழிலும் பிற திராவிட மொழிகளிலும் ‘அம்பலம்’ (ambalam) என்று பெயர். (ஏழை சொல் அம்பலம் ஏறுமா? அம்பலம் = கோவில், சிற்றம்பலம் = சிதம்பரம். இந்த ஊழலை அம்பலத்துக்குக் கொண்டுவருவோம்...)

ஆனால் தமிழில் அம்பலி, கன்னடத்தில் அம்பலி/அம்பிலா, துளுவில் அம்புலி, தெலுங்கில் அம்பலி, மராட்டியில் ஆபில் என்றால் கஞ்சி என்றும் பொருள்.

அம்பலம் என்ற கூடுமிடத்தை அம்பலி என்ற கஞ்சியாக எடுத்துக்கொண்டு ரிக்வேதத்தவர்கள் மொழிபெயர்த்ததில் பூஷண் கஞ்சி குடிப்பவராக ஆகிவிட்டார் என்கிறார் ஐராவதம். அதே நேரம் வேறிடத்தில் சரியான மொழிமாற்றத்தின்படி, கூடுமிடத்தின் தலைவன் என்ற பொருளில் விதத்யா (ரிக் 7.36.8, 10.85.26) என்றும் கூறப்படுகிறது. எனவே அவர் கூடுமிடத்தின்/ பாதைகளின் கடவுளாகவும் இருக்கிறார், கஞ்சி குடிப்பவராகவும் இருக்கிறார்.

அடுத்து கொக்கி. இது கொள்/கொளுத்து என்ற சொல்லைக் குறிக்கிறது. கொளுத்து என்பது நெருப்பு என்றும் தவறாகப் பொருள் கொள்ளப்படலாம். அதே அடிப்படையில் பூஷண் அக்ரிணி (ரிக் 6.53.3) - நெருப்பு போல் ஒளிர்பவர் என்றும் வருகிறது. ஆனால் செடில்/செண்டு என்ற பொருளில் கையில் அஸ்த்ர (ரிக் 6.53.9) என்ற கொக்கி போன்ற ஆயுதத்தைக் கொண்டவர் என்றும் வருகிறது.

இப்போது ‘ஓநாய்’ சின்னத்தை கடைசியாக எடுத்துக்கொள்கிறார். மாறு என்ற சொல், தவறாக மறி என்ற பொருளைக் குறிக்கும்போது, ஆடு என்றாகிறது. பூஷண், ஆடுகளைத் தன் தேரை ஓட்டும் மிருகங்களாகக் கொண்டுள்ளவர். அவருக்கு அஜாஸ்வ (ரிக் 6.55.3) என்று பெயர் உள்ளது. இது ‘ஓநாய்’ சின்னத்தை மாறு என்பதற்குபதில் மறி என்ற ஆடாகப் பார்த்ததன் விளைவான தவறான மொழியாக்கமும் அதன்மூலம் வந்த புராணக் கதையும் என்கிறார் ஐராவதம். பூஷணுக்கு அகோஹ்ய (ரிக் 1.23.14) - எதையும் அவரிடமிருந்து மறைக்க முடியாது - என்ற பெயரும் உண்டு. மாறு - மறை என்றாகி, மறைப்பின் கடவுள் என்றாகி, எதையும் அவரிடமிருந்து மறைக்க முடியாத தன்மை கொண்ட கடவுள் என்றாகியது. இதுவும் தவறான பொருளைப் புரிந்துகொண்டதால் ஏற்பட்ட கதை என்கிறார் ஐராவதம்.

பூஷண் கபர்தின் (ரிக் 6.55.2) என்று, அதாவது பின்னலிட்ட குடுமி வைத்துள்ளவர் என்று சொல்லப்படுகிறார். குடுமி என்று நாம் முன்பு சொன்னதையும் ஓநாய் சின்னத்தில் உள்ள பின்னலையும் சேர்த்துப் பாருங்கள்.

***

ஆக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிந்து சின்னங்கள் சிந்து நாகரிக காலத்தில் நகரத்தின் வியாபாரி என்ற பொருளையும், தமிழகத்தில் மாறன்/செழியன்/பாண்டியன் என்ற பாண்டிய குலப் பெயர்களாகவும், ரிக் வேதத்தில் பூஷண் என்ற கடவுளையும் குறிக்கிறது.

பூஷண் இவ்வாறாக வியாபாரிகளின் (வைசியர்களின்) கடவுளாக இருந்து, கொக்கி ஏராகக் கருதப்பட்டு உழவர்களின் கடவுளாகவும், கொக்கி ஆடு/மாடு மேய்ப்போரின் ஆயுதமாகக் கருதப்பட்டு மேய்ப்பர்களின் கடவுளாகவும் கருதப்பட்டதும் ரிக் வேதத்தில் வருகிறது என்கிறார்.

==== முற்றும் ====

ஐராவதம் மகாதேவனின் முழுமையான ஆராய்ச்சிக் கட்டுரை இங்கே.

4 comments:

  1. Ignore my earlier comment. Saw the PDF link later. Apologies.

    ReplyDelete
  2. Related talk on Ted, Mar 2011: http://www.ted.com/talks/rajesh_rao_computing_a_rosetta_stone_for_the_indus_script

    The speaker mentions Mahadevan in his talk.

    -Nakul

    ReplyDelete
  3. மூலத்தில் உள்ள cross roads என்ற பதத்தையும் அதற்கான படத்தையும் பொருத்திப் பார்க்கும்போது நால்வழிச்சாலை என்ற சொல்லைவிட குறுக்குசாலை/ நான்கு சாலை சந்திப்பு/ கூட்ரோடு(சென்னை வழக்கு) இவற்றில் ஒன்று இன்னும் கொஞ்சம் பொருத்தமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
    (நால்வழிச்சாலை என்பது 4 lane roadக்கான தமிழ்ச்சொல்லாகப் புழக்கத்தில் இருப்பதால் முதலில் குழம்பிவிட்டேன். மூலத்தைப் படிக்கும்முன்
    கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலேயே தமிழன் நால்வழிச்சாலை அமைத்துவிட்டானோ என்று ஒரு நிமிடம் தோள்கள் பூரித்துவிட்டன:))))

    ReplyDelete
  4. சிந்து சமவெளி நாகரிக எழுத்துகளை புரிந்துகொள்ளவும் ரிக் வேதத்தை புரிந்துகொள்ளவும் விண்மீன் தொகுதிகளின் அறிவு அவசியம் என நினைக்கிறேன். பூஷண் கடவுள் ஒரு விண்மீன் தொகுதியாக இருக்கக்கூடும்.

    ReplyDelete