Wednesday, November 26, 2014

பிகாரி

ஞாயிறு மதியம் ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னைக்கு குருவாயூர் விரைவு வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. முன்பதிவு கேரேஜ் ஒன்றில் 96 பேர் உட்காரலாம். ஆனால் உள்ளே அதற்குமேல் நூறு பேர் நின்றுகொண்டிருந்தனர். ஒவ்வொரு கேரேஜிலும் இதுதான் நிலைமை. ஏறி என் இடத்தில் உட்கார்ந்திருந்தவரை எழுப்பிவிட்டு உட்கார்ந்தேன். நிற்க, நகர துளிக்கூட இடம் இல்லை. சீட் இல்லாமல் ஆங்காங்கே உட்கார்ந்திருக்கும், நிற்கும் எல்லோரும் இளைஞர்கள். ஆண்கள். எல்லோரும் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் அழுக்கு உடையில். பலர் கிழிந்த உடைகளில். எல்லோரிடம் முதுகில் மாட்டும் பை ஒன்று. பலர் முகத்தில் தூக்கம். உடல் சோர்வு.

கையோடு கொண்டுவந்திருக்கும் கிண்டிலில் ஒரு சுவாரசியமான புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். திடீரென ‘பை ஆர் ஸ்கொயர்ட்’ என்றான் ஒருவன். இல்லை ‘டூ பை ஆர்’ என்றான் இன்னொருவன். அவர்கள் பேசுவதைக் கேட்டு ஆச்சரியம் ஏற்பட்டது. அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். என் உடைந்த இந்தியில் அருகில் நிற்கும் இருவருடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

அவர்கள் அனைவரும் பிகாரின் வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்தவர்கள். திருச்சியில் ரயில்வே தேர்வு ஒன்றை எழுத வந்திருந்தார்கள். தேர்வைக் காலையில் எழுதிவிட்டு இப்போது மீண்டும் ஊர் திரும்புகிறார்கள். சென்னை போய், அங்கிருந்து எதோ ஒரு ரயிலைப் பிடித்து இதோபோல் தொத்தி, கிடைத்த இடத்தில் உட்கார்ந்துகொண்டு பாட்னா சென்று அங்கிருந்து அவரவர் ஊர் செல்லவேண்டும்.

தென்னக ரயில்வேயில் கேங்மேன்/சிக்னல் ஊழியர் குரூப் டி தேர்வாம். ஒருவரிடமிருந்து தேர்வுத் தாள் வாங்கிப் பார்த்தேன். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வினாக்கள் இருந்தன. 90 நிமிடங்கள், 100 கேள்விகள். ஒரு சில கணக்கு வினாக்கள். ஒரு சில பொது அறிவுக் கேள்விகள். கடைசிக் கேள்வி ‘இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் யார்?’ என்றிருந்தது. இதில்தான் ஒரு கேள்வி வட்டத்தின் சுற்றளவு அல்லது பரப்பளவு என்ன என்று இருக்கவேண்டும்.

நான் பேசியவர்கள் அனைவருமே பட்டப்படிப்பு படித்திருக்கிறார்கள். ஒருவர் கையில் ஆண்டிராய்ட் ஃபோனில் http://www.onlinetyari.com/ என்ற தளத்தின் குறுஞ்செயலி ஒன்றை வைத்திருந்தார். அதிலிருந்து (இந்தியிலான) மல்ட்டிபில் சாய்ஸ் கேள்விகளுக்கு விடை தட்டி, சரியா தவறா என்று பார்த்துக்கொண்டே இருந்தார். அடுத்த பரீட்சைக்குத் தயாராகிறாராம்.

படித்த இளைஞர்களுக்கு பிகாரில் உருப்படியான வேலை ஒன்றுமில்லை. எனவே சில ஆயிரம் கிமீ தாண்டி வந்து ரயில்வே ஸ்டேஷனிலேயே தங்கி பரீட்சை எழுதி, என்ன வேலை கிடைத்தாலும் எடுத்துக்கொண்டு செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

பிகார் அரசியல் குறித்தும் தமிழகம் குறித்தும் என்னால் முடிந்த இந்தியில் அவர்களுடன் பேசினேன். அவர்களுக்கு இந்தி தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. நிதீஷ் நிஜமாகவே மாநிலத்தை முன்னேற்றியிருக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் நிதீஷும் லாலுவும் ஒன்றாகச் சேர்வது சாத்தியமில்லை என்றும் சொன்னார்கள். பிகார் பாஜகவில் உருப்படியான, நம்பிக்கை வைக்கக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை என்பதுதான் அவர்களுடைய ஒட்டுமொத்தக் கருத்தாக இருந்தது. சுஷீல் மோதிமீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்கள். அதே சமயம், மத்தியில் இருக்கும் கட்சியே மாநிலத்தில் வருவதுதான் உபயோகமானது என்றார்கள். எனவே பாஜகவுக்கு ஆதரவு தருவார்கள் என்றுதான் தெரிகிறது.

தமிழகத்தில் என்ன நடந்திருக்கிறது, பிகாரில் என்ன நடக்கவில்லை என்பது குறித்துக் கொஞ்சம் பேசினேன். (ஆனால் சரியான இந்தி வார்த்தைகள் தெரியாமல் ஆங்கிலம் கலந்துதான் பேசவேண்டியிருந்தது.) ஓர் இளைஞர் சொன்னார்: “பிகாரில் மக்கள் அரசை நம்பியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அரசு மக்களை நம்பியிருக்கிறது.”

பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பிகார் போகவேண்டிய தூரம் மிக அதிகம் என்பது அம்மாநிலத்தின் படித்த இளைஞர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ஏதேதோ காரணங்களுக்காக இவர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் செல்கிறார்கள். அடிமட்ட வேலைகளிலிருந்து அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய தலைவர்கள் அனைவரும் அவர்களை ஏமாற்றியுள்ளனர். பாஜகவும் நம்பத்தகுந்த வகையில் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. ஆனால் அக்கட்சிக்கு ஒரு வாய்ப்பு தரத் தயாராக இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. பாஜகவும் பிகாரைக் காப்பாற்றவில்லையென்றால் இது மிகப்பெரும் மானுடச் சோகத்தில்தான் முடியும்.

6 comments:

  1. “பிகாரில் மக்கள் அரசை நம்பியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அரசு மக்களை நம்பியிருக்கிறது.” - இது 100% உண்மை. வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் உள்ள வேறு பாடு இதுதான்.

    ReplyDelete
  2. கடைசியில் பாசக ஆதரவுடன் முடித்து இடுகை போட்டதின் தார்மீக கடமையை நிறைவேற்றியுள்ளீர்கள். வாழ்த்து :-)

    ReplyDelete
  3. ஜெயப்ரகாஷ் நாராயண்,ராஜேந்திரபிரசாத் போன்ற பெரியோர்களாலும் பீகாரை முன்னேற்ற முடியாத்தன் காரணம் என்ன, கூறமுடியுமா?

    ReplyDelete
  4. Dear sir,

    When I travelled in the same train few months ago, some other gang of NI's with same dirty clothes accompanied and behaved very indecently with fellow passengers...by teasing other oldies in the compartment...Annoyed and worried at their audacity...

    -Swaminathan

    ReplyDelete
  5. தமிழகத்தில் அரசு மக்களை நம்பி உள்ளது// டாஸ்மாக் வருமானமே மக்களை நம்பித்தானே!

    ReplyDelete
  6. Thamizhagathil arasu makkalukku ilavasamaaga kodukkum porutkalai nambi ulladhu.
    Arisi paruppu
    Fan mixie grinder
    +2 maanavargalukku ilavasa kanini. Adhaipola oru kollai irukka mudiyadhu. Unmaiyana varumai ullavarkku adhu oru ettakani. Kidaikka seidhal nanru. Aanal avai yaarukkume udhaviyaaga illai. En akka paiyan kondu vandhu mudhalil curiosityil velai seydhadhudhaan. Piragu thoduvadhillai
    Config is so bad nothing runs properly on it. Appadi oru udhavakarai porulai aayirakanakkaana kodi koduthu vaanguvadhil enna laabam? Ivargal ellorum oru varudathil ottu podium vayadhai adaigiraargal.mun panam. Advance lanjam.

    ReplyDelete