குழந்தை வேலைக்காரர்கள் விற்பனைக்கு
ஒல்லூர் (திருச்சூர் மாவட்டம்)
குழந்தைகள் விற்பனைக்கு. விருப்பமான வேலை செய்ய வைத்துக்கொள்ளலாம். கூலி மாதம் ரூ எழுநூற்றைம்பது மட்டும். ஏஜண்டுக்கு ரூபாய் ஐநூறு கமிஷன்.
தேசிய நெடுஞ்சாலை எண் 47-ல், செவ்வாய்க்கிழமை (நேற்று) இது காணக் கிடைத்தது. வழியருகே நிறுத்திய ஒரு க்வாலிஸ் காரில் சுமார் பதினைந்து சிறுவர் சிறுமியர் இப்படி விற்பதற்காகக் காட்சிப் படுத்தப்பட்டார்கள்.
சேலத்துக்காரர்களான இவர்களில் 11 வயதுள்ள சிறுவனும், 9 வயதுள்ள சிறுமியும் உண்டு. ஏஜண்டுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியில்லாமல், குழந்தைகள் வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூட்டிப்போகப்பட்டார்கள்.
சேலம் நெடுஞ்செழியன் என்பது ஏஜண்ட் பெயர். செயிண்ட் மெரீஸ் தேவாலய மடத்தின் அருகில் நெரிசல் மிகுந்த சாலையில் குழந்தைகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.
குறைந்தது ஓர் ஆண்டாவது குழந்தைகளை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிபந்தனை உண்டு. குழந்தைகளை அழைத்துப் போகும்போது கமிஷன் கொடுக்க வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை குழந்தைகளை 'வாங்கிய' வீடுகளுக்கு ஏஜண்டுகள் போவார்கள். அப்போது குழந்தைகளுடைய ஆறு மாதச் சம்பளத்தை மொத்தமாகத் தரவேண்டும். உடன்படிக்கை எல்லாம் வாய்மொழியாகத்தான். திருச்சூரில் மட்டுமில்லை, மற்ற கேரள மாவட்டங்களிலும் இப்படிக் குழந்தைகளை விற்பனை செய்வதுண்டு.
ஒரு வருட ஒப்பந்தம் முடிந்தால் வீட்டுக்காரர்கள் தங்கள் உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ இக்குழந்தைகளை ஏஜண்ட் மூலம் மறுபடி விற்கலாம். குழந்தைகள் அந்த ஒரு வருடத்தில் செய்த வேலை, உழைப்புத் திறனை வைத்து அவர்களுக்கு அடுத்த கூலி நிர்ணயிக்கப்படும்.
சின்னக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது, நோயாளிகளுக்குப் பணிவிடை செய்வது என்பது போன்ற வேலைகளுக்காக இக்குழந்தைகள் பணியாளர்களாக அமர்த்தப்படுகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவையாவது இப்படிக் குழந்தைகளைப் பகிரங்கமாக விற்பது நடைபெறுகிறது என்று ஏஜண்ட் சொன்னான். (நம் நிருபர்) வேலைக்குக் குழந்தை வேண்டும் என்று நடித்து அவனை அணுகியபோது இதைச் சொன்னான். குழந்தைகள் சேலம் பகுதியிலிருந்து புகைவண்டியிலோ, பேருந்திலோ கொண்டுவரப்பட்ட பிறகு இப்படி வேன்களில் சந்தைப்படுத்தப்படுவார்கள்.
கூடுதல் விலைபோகும் இடத்தில் வேனை நிறுத்திவைப்பார்கள். ஒல்லூரில் ஒருவரே மூன்று குழந்தைகளை வாங்கிப்போனார். ஒரு வருடம் வேலை செய்த குழந்தைகளை அவர்கள் வேலை செய்த வீடுகளிலிருந்து கூட்டி வந்து வேறு வீட்டுக்காரருக்குக் கைமாற்றுவதும் இந்த வேளையில் நடக்கும்.
குழந்தைகளைப் பார்த்துவிட்டுத் திரும்பி நடக்கும்போது, பின்னாலேயே வந்த ஏஜண்ட் நெடுஞ்செழியன் சொன்னான், "சார், 650 ரூ கொடுத்தாலும் போதும்; பிள்ளையைக் கூட்டிட்டுப் போங்க".
நன்றி: மாத்ருபூமி 2.2.2005
தொலைக்காட்சி வந்ததும் கிரிக்கெட் வர்ணனை முற்றிலுமாக அழிந்துபோனது. நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை மட்டுமே வைத்து தொலைக்காட்சி வர்ணனை நடந்தது. படங்களே எல்லாவற்றையும் விவரிப்பதால், தொலைக்காட்சி வர்ணனையாளர் எப்பொழுதாவது ஓரிரு வார்த்தைகள் சொன்னால் போதும் என்றானது.
