
உண்ணாவிரதம் இருந்தால் தனி மாநிலம் கிடைக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் தெலுங்கர்கள். பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். ஆந்திர மாநிலம் உருவானது. இப்போது சந்திரசேகர ராவ். தெலுங்கானாவும் உருவாகிவிடலாம்.
தெலுங்கானாவைப் பற்றிச் சிந்திக்கும்போது, அது தேவைதான் என்று முன்னர் நினைத்திருந்தேன். ஆனால் மீண்டும் ஆழமாகச் சிந்திக்கும்போது அது தவறோ என்று தோன்றுகிறது. இந்தியாவில் சிறு மாநிலங்கள் எல்லாமே சகதியில் மாட்டியுள்ளன. அவற்றின் சட்டமன்றங்கள் inherently unstable வகையைச் சார்ந்தவை. அதிலும் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மூன்று மாநிலங்களான ஜார்க்கண்ட், உத்தராஞ்சல், சட்டீஸ்கர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். பெரு மாநிலங்களின் சிறு துண்டுகளாக இருந்தவை. அனைத்திலும் கனிம வளம். அனைத்திலும் பழங்குடியினர். அனைத்திலும் மாவோயிஸ்டுகள். அனைத்துமே பின்தங்கிய பகுதிகள்.
இவை எல்லாமே ஒன்றோடு ஒன்று இணைந்தவை. பழங்குடிகள் அதிகமாக இருக்கும் இடங்கள், நவீன நாகரிக அளவுகோல்களின்படிப் பார்த்தால் பின்தங்கிய பகுதிகளாகவே இருக்கும். பழங்குடிகள் காட்டில் வசிக்க விரும்புபவர்கள். காடுதான் அவர்களுக்கு உணவு; காடுதான் அவர்களுக்கு வாழ்விடம். அவர்களுக்கு பணம் தேவையில்லை. பணம் என்பதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றே இன்னும் அறியாமல் இருக்கிறார்கள். (ஜார்க்கண்டுக்குச் சென்றுவந்த வங்கி அதிகாரி ஒருவர் இதைப்பற்றி என்னிடம் கூறினார்.) அந்தப் பகுதிகளில் மருத்துவமனைகள் கிடையாது. சாலைகள் கிடையாது. பள்ளிக்கூடங்கள் கிடையாது.
ஆனால் அங்கேதான் கனிமங்கள் உள்ளன. எனவே கனிம வளங்களை வெட்டி எடுக்க விரும்பும் நிறுவனங்கள் வருகின்றன. விளைநிலம் என்றாலாவது அதிலிருந்து கிடைக்கும் விளைச்சல் பரவலாகும். செல்வம் அனைத்து மக்களுக்கும் போய்ச்சேராவிட்டாலும் பலருக்கும் போய்ச்சேரும். மீதம் உள்ளவர்களுக்கு வேலையாவது கிடைக்கும். ஆனால் கனிமங்கள் என்றால் முதலீடு நிறையத் தேவை. அதிலிருந்து கிடைக்கும் செல்வமும் சில பெரு நிறுவனங்களுக்கும் அதன் பங்குதாரர்களுக்கும் மட்டுமே போய்ச்சேரும். அந்த நிறுவனங்களில் பழங்குடியினருக்கு வேலை கிடைக்காது. அங்கு வேலை செய்ய பிற இடங்களிலிருந்து ஏழைகள் அழைத்து வரப்படுவார்கள்.
எனவே மாவோயிஸ்டுகள் தோன்றித்தான் ஆகவேண்டும்.
அடிப்படையில் வலுவற்ற, ஆட்டம் காணும் சிறு சட்டமன்றங்கள், பெரும் பணத்தால் எளிதாக வளைக்கப்படும். எனவே காவலர்களின் காட்டாட்சி, பின்னர் ராணுவத்தின் ரத்த வேட்டை. சிறு சட்டமன்றங்களில்தான் ஊழல் அதிகமாகவும் இருக்கும்.
எந்தக் கட்டத்திலும் வளர்ச்சி வராது; எனவே மாநிலம் ஆரம்பிக்க இருந்த ஆதாரக் கருத்தான ‘பின்தங்கிய’ பகுதிகள் மேலும் பின்தங்கியே இருக்கும். ஜார்க்கண்டைப் பாருங்கள். உத்தராஞ்சலைப் பாருங்கள். சட்டீஸ்கரைப் பாருங்கள்.
தெலுங்கானாவிலும் இதுவே நடக்கும். அங்கும் கனிம வளம் உண்டு. அங்கும் நக்சலைட் பிரச்னைகள் உண்டு. ஹைதராபாத், ரங்காரெட்டி மாவட்டம் என்ன ஆகும் என்பது தனிக்கேள்வி. தெலுங்கானா உருவாவதற்கு உள்ள மிகப்பெரிய இடையூறே ஹைதராபாத் நகரம்தான். தெலுங்கானாவில் மஹ்பூப்நகர், நால்கொண்டா, கம்மம் மாவட்டங்கள் இருக்கும் என்றால், ரங்கா ரெட்டியும் ஹைதராபாதும் அதற்குள் சிக்கியே ஆகவேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் கோடி கோடியாகக் கொட்டி இழைத்து அந்த நகரை உருவாக்கி, அதனை “வேறு யாருக்கோ” கொடுக்க எந்த முதலமைச்சருக்கும் மனம் வராது. ஒருவேளை ரோசையா போன்ற non-descript ஆள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாமோ, என்னவோ.
*
அப்போது வேறு என்னதான் வழி? மாவோயிசப் பிரச்னைக்கான வழி பற்றிப் பிறகு பேச முற்படுகிறேன். ஒரு மாநிலத்தில் சில பகுதிகள் பின்தங்கியிருந்தால் என்ன செய்யலாம்? அந்தப் பகுதிகளுக்கு வளர்ச்சியைக் கொண்டுவர, அது ஒரு பெரிய மாநிலமாக இருந்தால்தான் முடியும்.
பெரிய மாநிலங்களுக்கு சில நன்மைகள் உள்ளன. அவற்றின் வருமானம் அதிகம். இரு வகைகளில். முதலில் மத்திய அரசு பகிர்ந்தளிக்கும் வரி வருமானம் ஜனத்தொகைக்கு ஏற்றவாறு நிறையக் கிடைக்கும். அடுத்து, பெரிய மாநிலத்தின் பல பகுதிகள் தொழில் வளம் பெற்றவையாக இருக்கும். எனவே விற்பனை வரி நிறையக் கிடைக்கும். அந்தப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகமாக இருக்கும். எனவே சொத்து வரி அதிகம் கிடைக்கும்.
இதனால், பின்தங்கிய பகுதிகளுக்கு அதிக அளவு பணத்தைச் செலவு செய்ய முடியும். தேவை அதிகமாக உள்ள பகுதிகளுக்கு அதிகமான பகுதியைப் பகிர்ந்தளிப்பதுதானே அரசின் வேலை? ஆனால் இது நடக்கவேண்டுமென்றால் மாநில முதல்வர் enlightened ஆசாமியாக இருக்கவேண்டும். ஒருவிதத்தில் பார்க்கும்போது தமிழக முதல்வர்கள் மாவட்ட அல்லது பகுதிச் சார்பு இல்லாதவர்களாக, தமிழகம் முழுமைக்குமாகச் செலவு செய்பவர்களாகவே இருந்துள்ளனர். தமிழகத்திலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்கள் தங்கள் மாவட்டங்களின் பின்தங்கிய நிலையை எடுத்துச் சொல்லி முறையிடலாம். ஆனால் அவர்கள்கூட தனி மாநிலம் என்று பேசமாட்டார்கள்.
கேரளாவை எடுத்துக்கொள்ளுங்கள். நல்ல அரசியல்வாதிகள். மக்களுக்கு நிறைய நல்லது செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதற்குத் தேவையான வருமானம் அவர்களிடம் இல்லை. ஆனால் ஊருக்கெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி வாரி வழங்கும் அளவுக்கு தமிழகத்திடம் வருமானம் உள்ளது.
எனவே தெலுங்கானா மக்கள் தனி மாநிலம் கேட்டுப் போராடுவது நல்லதல்ல என்று தோன்றுகிறது. மாறாக, அவர்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்கச்சொல்லி சோனியா காந்தியின் கால்களில் விழலாம். அது வேலை செய்யவில்லை என்றால், நல்ல மனிதர் யாராவது ஒருவர் முதல்வர் ஆகிறாரா என்று பார்த்து அவர் காலில் விழலாம். இல்லையா, மாநில சட்டமன்றம் தொங்கு சட்டமன்றமாக ஆகும்வரை பொறுத்திருந்து, தெலுங்கானா எம்.எல்.ஏக்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஒரு கூட்டமைப்பாகி தங்கள் பகுதிக்கு நிறையச் செலவுசெய்தால்தான் ஆதரவு என்ற நிலை வருமாறு செய்யலாம்.
வருடங்கள் அதிகமானாலும் இதில்தான் நிரந்தர நன்மை உள்ளது என்று நம்புகிறேன்.