Sunday, January 01, 2017

மாமல்லை பேச்சுக் கச்சேரி 2016

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை ஒவ்வோர் ஆண்டும் 'பேச்சுக் கச்சேரி' என்றதொரு நிகழ்வை நடத்துவதுண்டு. இது இசைக் கச்சேரிகள் நிறைந்திருக்கும் டிசம்பர் மாதத்தில் சென்னையில் நடக்கும். ஆனால் 2015 டிசம்பரில் பெருவெள்ளப் பேரழிவுக்குப் பிறகு இந்நிகழ்ச்சியை நடத்தாமல் அதனை 2016 டிசம்பருக்கு நகர்த்திவைத்தோம். பெரும்புயலுக்குப் பிறகும் நிகழ்ச்சியை நடத்திவிட்டோம்.

மேலே உள்ள படத்தில் பார்ப்பது நிகழ்ச்சியைப் பின்னிருந்து நடத்திய சிலரையும், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சிலரையும்.

மாமல்லபுரம், யுனெஸ்கோவால் உலகக் கலாசாரச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஓரிடம். தமிழகத்தில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள ரம்பரியக் கலைச் சின்னங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று மாமல்லை. இரண்டாவது 'வாழும் சோழர்காலக் கோவில்கள்' என்ற மூன்று கோவில்கள் அடங்கிய ஒரு தொகுப்பு: தஞ்சைப் பெருவுடையார் கோவில், கங்கைகொண்டசோழபுரப் பெருவுடையார் கோவில், தாராசுரத்தின் ஐராவதீசுவரர் கோவில். இவை முறையே முதலாம் இராசராசன், இராசேந்திரன், இரண்டாம் இராசராசன் ஆகியோரால் கட்டப்பட்டவை ஆகும்.

பேச்சுக் கச்சேரி நிகழ்வதற்கான இடத்தைக் கொடுத்து உதவியது தமிழ் இணையக் கல்விக்கழகம். சுமார் 150-160 பேர் உட்காரக்கூடிய அரங்கம் அவர்களுடையது. ஆனால் மேலும் இருக்கைகள் போடப்பட்டு பெரும்பாலும் 200 பேர் பல நேரங்களில் அரங்கினுள் அமர்ந்திருந்தனர் அல்லது நின்றபடி இருந்தனர்.

மாமல்லையைப் பற்றி அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. புரியாத புதிர்களும் பல உள்ளன. இரண்டு நாள்களாகத் திட்டமிடப்பட்ட இந்நிகழ்வில் கீழ்க்கண்ட உரைகள் இடம்பெற்றிருந்தன.

(1) மல்லை - ஓர் அறிமுகம். முனைவர் சித்ரா மாதவன் ஆங்கிலத்தில் உரையாற்றினார். மாமல்லையில் என்னவெல்லாம் உள்ளன என்று அறிமுக உரையாக இது அமைந்தது. அடுத்து வரப்போகும் பல்வேறு உரைகளுக்கான நுழைவாயிலாகவும் இது அமைந்தது. சித்ரா மாதவன் வரலாற்றின் முநைவர் பட்டம் பெற்றவர். கட்டடக்கலை, கல்வெட்டுகள், வரலாறு, பக்தி, வைணவம் போன்ற பல துறைகளில் சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து உரை நிகழ்த்திவருபவர். இத்துறைகளில் ஆங்கிலப் புத்தகங்கள் சிலவற்றை எழுதியுள்ளார். இவருக்கென்று ஒரு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. நிறுத்தி, நிதானமான, தெளிவான ஆங்கில உச்சரிப்பில், ஏற்ற இறக்கங்களுடன் பேசக்கூடியவர். வரலாறு, தொல்மரபு ஆகியவை சார்ந்த விஷயங்களை ஒருவர் முன்பின் தெரிந்திராவிட்டாலும் இவருடைய உரையில் அமர்ந்திருந்தால் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

(2) மாமல்லை சிற்பங்களின் உடல்மொழி. பேரா. சிவராமகிருஷ்ணன் தமிழில் உரையாற்றினார். இவர் சென்னை கவின்கலைக் கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறார். இந்தியக் கோவில் சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அற்புதமாக விளக்கக்கூடியவர். இவருடன் மாமல்லை, புள்ளமங்கை, அஜந்தா போன்ற இடங்களுக்குச் சென்று அங்கே அவர் விளக்கம் சொல்லக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். கவின்கலைக் கல்லூரியில் ஓவியர் சந்ருவிடம் பயின்ற மாணவர். இந்த உரையின்போது மல்லையில் இருக்கும் சில சிற்பங்கள் ஒத்தமாதிரி இருந்தாலும் எவ்வாறு உடல்மொழியில் வேறுபடுகின்றன என்பதைப் படவிளக்கங்களுடன் அற்புதமாக விவரித்துச் சொன்னார். உதாரணமாக ஒன்றைமட்டும் சொல்கிறேன். கோவர்தன சிற்பத் தோகுதியில் பலராமன், பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் இடையன் ஒருவனை அணைத்து ஆறுதல் அளிப்பா ன். தர்மராஜ ரதத்தின் மேல் நிலைகளில் திருமால் அருகில் கருடன் அவரை ஏற்றிக்கொள்ளத் தயாரான நிலையில் இருப்பான். அங்கேயே இன்னொரு சிற்பத்தில் சிவபெருமான் சண்டேசரை அணைத்தபடி இருப்பார். மூன்றிலுமே அருகருகே இருவர் அணைத்தபடி இருந்தாலும், மூன்றும் வெவ்வேறுவகையான அணுக்கங்கள். அவை எப்படி உடல்மொழியாக, நுட்பமாக வெளிப்படுகின்றன என்பதைப் படமாகக் காட்டி விளக்கினார் சிவராமகிருஷ்ணன். இந்தச் சிற்பங்களைப் பலப்பலமுறை நேரிலும் படங்களிலும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தக் கோணத்தில் இவற்றை நான் பார்த்ததில்லை.

(3) மல்லையின் வடமொழிக் கல்வெட்டுகளின் முழுப் பின்னணியை விளக்கிப் பேசினார் பேரா. சங்கரநாராயணன். காஞ்சி சந்திரசேகரேந்திரர் பல்கலையில் சமஸ்கிருதத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுபவர். உண்மையில் மிகச்சிறந்ததொரு கல்விமான். வடமொழி இலக்கணம், காவியங்கள், ஆகமங்கள், கல்வெட்டியல், வரலாறு போன்ற பலதுறைகளில் வல்லவர். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் நன்றாக எழுதுபவர். பல்வேறு புராதன வரிவடிவங்களை (கிரந்தம், பிரமி, வட்டெழுத்து, தமிழெழுத்து, கன்னடம், தெலுங்கு, மலையாளம், நாகரி போன்றவற்றை) எளிதாகப் பார்த்தமாத்திரத்திலேயே படிக்கக்க்கூடியவர். வடமொழி தவிர, தமிழுடன் பிற தென்னிந்திய மொழிகளில் கவிதைகள் எழுதக்கூடியவர். முறையாகப் பரதம் பயின்றவர். கல்வெட்டின் எழுத்தமைதிகொண்டு அதன் காலத்தைச் சட்டென்று கணிக்கக்கூடியவர். சிலைகளின் வடிவமைதி கண்டு அதன் காலத்தைச் சட்டென்று சொல்லக்கூடியவர். ஏதேனும் சிலை என்னவென்று தெரியவில்லை என்றால் இவரைக் கேட்டால் போதும். சட்டென்று அது என்ன என்பதைச் சொல்லக்கூடியவர். மல்லையின் பல்வேறு வடமொழிக் கல்வெட்டுகளையும் முறையாகப் பட்டியலிட்டு, அவை சொல்லும் தகவல்கள், அவற்றில் உள்ள பட்டப்பெயர்களின் பொருள், அவை பிற இலக்கியங்களிலிருந்து எடுத்தாளப்பட்டிருந்தால் அந்த மூலம் எது, மூல வடிவம் என்ன போன்றவற்றை தெள்ளுதமிழில் அற்புதமாக விவரித்தார். ஒரு பெரும் புயல் அடித்தாற்போல் இருந்தது இவர் பேசி முடித்தபோது.

(4) காணாமல் போன மல்லையை மீட்டெடுத்த வரலாறு பற்றி ஆர்.கோபு. கோபு அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மென்பொருளாளராகப் பணியாற்றிவிட்டு ஓர் எழுத்தாளர் ஆக விரும்பி இந்தியா திரும்பிவந்தவர். இன்று பேச்சாளர் ஆகிவிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னையில் பாரம்பரியம், கலை பற்றியும் அறிவியல், தொழில்நுட்பம் பற்றியும் பல சொற்பொழிவுகளைச் செய்தவர். இவருடைய ரசிகர் கூட்டமும் பெரியதுதான். அதிகம் படிப்பவர். குறைவாக எழுதுபவர், இப்போது நிறையப் பேச ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சி. பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மல்லைக் கோவில்கள் பலவற்றுக்கும் சோழர் காலத்திலும் பின்னர் விஜயநகர நாயக்கர்கள் காலத்திலும் கொடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் திடீரென்று ஒரு கட்டத்தில் அனைத்தும் மறக்கப்பட்டு, இங்குள்ள சிற்பங்களும் குடைவரைகளும் மண்மூடிக் காணாமல் போயின. பிறகு 18-ம் நூற்றாண்டு தொடங்கி பிரிட்டிஷ்காரர்கள் சிலரால் அவை அகழப்பட்டன. உள்ளூர் மக்கள் ஆளுக்கொரு கதைகளைச் சொன்னார்கள். அவர்களுக்கு அங்குள்ள கல்வெட்டுகள் குறித்து ஒன்றும் தெரியவில்லை. மொத்தத்தில் நாம் நம் வரலாற்றை மறந்துபோனோம். மகேந்திரனையும் தெரியாது, நரசிம்மனையும் தெரியாது. பல்லவர்கள் என்றால் யார் என்றே தெரியாது. அவர்கள் உருவாக்கிய கலைச்செல்வங்களுக்கு ஈடு, இணை ஏதும் இல்லை என்பதும் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாகக் கல்வெட்டுகள் படிக்கப்பட்டன. தவறாகப் பொருள் கொள்ளப்பட்டன. பல ஊகங்கள் முன்வைக்கப்பட்டன. யார் இவற்றைக் கட்டியிருக்கலாம் என்று பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவு பெற்ற்றாலும் இன்றுவரை பல விஷயங்களில் குழப்பமே நிலவுகிறது. இருந்தும் இதுவரை நமக்குத் தெரிந்துள்ளது எப்படித் துப்பறிந்து கண்டுபிடிக்கப்பட்டது என்பதை கோபு சுவைபட விளக்கினார்.

(5) முனைவர் சுவர்ணமால்யா குழுவினரின் 'மத்தவிலாசப் பிரகசணம்' நாட்டிய நாடகம். சுவர்ணமால்யா ஒரு நடனக் கலைஞர். நாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். யுனிவெர்சிடி ஆ கலிஃபோர்னியா, லாஸ் ஏஞ்செல்ஸுக்கு ஃபுல்பிரைட் ஃபெல்லோஷிப் பெற்ற வருகைதரு பேராசிரியராகச் சென்றிருக்கிறார். வடமொழிப் பரிச்சயம் நன்கு உள்ளவர். மகேந்திரவர்மப் பல்லவன் எழுதிய மத்தவிலாசப் பிரகசணம், பகவதஜ்ஜுகம் போன்றவற்றையும் பல்லவ மன்னர்களின் கலைச் சாதனைகளையும் சற்றே கலந்து தமிழும் ஆங்கிலமுமாக ஒரு கேலிநாடக நாட்டிய வடிவத்தைத் தன் குழுவினருடன் செய்துகாட்டினார். ஓரளவுக்கு இந்த நாடகங்களின் பிரதியைப் படித்தவர்களால்தான் இதனைப் புரிந்துகொள்ள முடியும். பார்வையாளர்கள் எந்த அளவுக்கு நாடகப் பாத்திரங்களைப் புரிந்துகொண்டனர் என்று தெரியவில்லை. ஆனாலும் மகேந்திரன் திருச்சி மலைக்கோட்டைக் குடைவரையில் உருவாக்கியுள்ள கங்காதரர் சிற்பம் போன்றவற்றை அபினயித்துக் கண்முன் கொண்டுவந்தது அனைவருக்கும் நன்றாகவே புரிந்திருக்கும்.

(6) மல்லையின் துர்கை/கொற்றவை வடிவங்கள். முனைவர் பாலுசாமி சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த்துறையில் பேராசிரியர். மாமல்லை பற்றி சீரிய ஆய்வுகள் செய்துவருபவர். அருச்சுனன் தபசு, புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் என்ற இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இப்போது மாமல்லையின் துர்கை பற்றி ஒரு நூலை எழுதிவருகிறார். இவருடைய பேச்சு அரங்கில் உள்ளோரைக் கட்டிப்போடக்கூடிய ஒன்று. மல்லையின் மிகப் புகழ்பெற்ற ஒரு சிற்பம் மகிஷனை தேவி சமரில் எதிர்கொள்ளும் மிக அற்புதமான புடைப்புச் சிற்பம். இந்தியாவின் மிகச்சிறந்த சிற்பங்களுள் மேலிடத்தில் இருக்கும். இந்தியாவின் அனைத்து துர்கை சிற்பங்களையும் எடுத்துக்கொண்டால் இதனைவிடச் சிறப்பான ஒரு துர்கை இருக்கமுடியுமா என்பது சந்தேகமே. ஒரு போர்க்காட்சி என்று எடுத்துக்கொண்டால் இதைவிடச் சிறப்பாக ஒரு போர்க்காட்சியை ஒரு செவ்வகத்தில் வடிவமைத்திதிருக்க முடியுமா என்பதும் சந்தேகமே. தேவி மகாத்மியத்தில் தொடங்கி மல்லையில் பதினொரு இடங்களில் தேவிக்கு இருக்கும் கோயில்கள் அல்லது சிற்பங்களைப் பட்டியலிட்டு, அவற்றின் நுட்பங்களைத் தொட்டுப்பேசி, தேவியின் வாகனமான சிம்மத்தையே கோவிலாக வடித்திருக்கும் மல்லைச் சிற்பியின் திறனைப் பேசி, இறுதியில் தனிச் சிற்பங்களாக பூட்டிய இடத்தில் இருக்கும் சாமுண்டிவரை விளக்கிப் பேசி, அரங்கில் உள்ளோரைத் திக்குமுக்காடவைத்தார் பாலுசாமி.

(7) மல்லையின் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் குறித்து பேரா. சுவாமிநாதன் பேசவேண்டும். சுவாமிநாதன் தில்லி ஐஐடியில் மெக்கானிகல் எஞ்சினியரிங் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். தமிழ்ப் பாரம்பரியக் குழுமம் ஏற்படக் காரணம் இவரே. பேச்சுக் கச்சேரி என்பதையும் சைட் செமினார் என்பதையும் திட்டமிட்டு உருவாக்கியவரும் இவரே. மாமல்லை குறித்து காஃபிடேபிள் புத்தகம் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியாகியுள்ளது. மாமல்லையில் இருக்கும் ஒவ்வொரு கல்லையும் செடியையும் முழுமையாக அறிந்தவர். ஆனால் பாலுசாமி பேசிய பிற்பாடு மகிஷாசுரமர்த்தினி சிற்பத் தொகுதியைப் பற்றிப் பேசப்போவதில்லை என்று சொல்லிவிட்டார்! முதல்நாள் பேசிய சிவராமகிருஷ்ணன்கூட, தன் உரையை எப்போதுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம், ஆனால் பாலுசாமிக்கு அடுத்து மட்டும் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்! சுவாமிநாதன் எடுத்துக்கொண்டது வராகமண்டபத்தில் உள்ள வராகச் சிற்பத்தொகுதி, திரிவிக்கிரமச் சிற்பத்தொகுதி மற்றும் மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தின் அநந்தசயன சிற்பத்தொகுதி மற்றும் மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தொகுதி. இவற்றுள் மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தொகுதியின் கதையை பாலுசாமி ஏற்கெனவே விவரித்திருந்தார். அதுதவிர பிற மூன்று கதைகளையும் பகிர்ந்துகொண்ட சுவாமிநாதன், இந்தச் சிற்பத்தொகுதிகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஆலீஸ் போனர் விவரித்திருக்கும் முறையை விளக்கிக்காட்டினார். ஆலீஸ் போனர் ஸ்விஸ் நாட்டவர். ஓவிய, சிற்பக் கலைஞர். இந்திய நாட்டியத்தின்மீது பேரார்வம் கொண்டு இந்தியா வந்தவர். நாட்டியத்திலிருந்து இந்தியச் சிற்பங்களைப் படிக்க ஆரம்பித்தார். சுமார் 20 ஆண்டுகளாக தென்னிந்தியாவின் சுமார் 20 சிற்பங்களைத் தீவிரமாக ஆராய்ந்து, Principles of Compositions in Hindu Sculpture: Cave Temple Period என்ற புத்தகத்தை எழுதினார். அந்த ஆராய்ச்சியில் நாம் மேலே சொன்ன மல்லையின் நான்கு சிற்பத்தொகுதிகளும் அடங்கும். ஆலீஸ் போனரின் ஆராய்ச்சிகள் குறித்த ஒரு சிறு அறிமுகத்தை மட்டுமே சுவாமிநாதன் அளித்தார்.

(8) மல்லை குறித்து ஆழ்வார்கள். பேரா. மதுசூதனன் கலைச்செல்வன். மதுசூதனன் தொழிலால் கட்டடக்கலை பேராசிரியர். ஆனால் அவர் சென்னையில் அதிகம் அறியப்பட்டிருப்பது அரையர் சேவை, ஆழ்வார்களின் திவ்யப்பிரபந்தங்கள் ஆகியவை குறித்த அவருடைய சொற்பொழிவுகளால். திருவரங்கத்தின் அரையர் சேவை குறித்து அவர் சென்னை மியூசிக் அகாடெமியில் இரு வாரங்களுக்குமுன் நிகழ்த்திய உரை இந்த ஆண்டின் சிறந்த "லெக்-டெம்" என்று தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. முதலாழ்வார்களில் பூதத்தாழ்வார் மல்லையில் உதித்ததாகக் கருதப்படுகிறார். ஆனால் மல்லையைப் பற்றி அதிகம் பாடியிருப்பது திருமங்கை ஆழ்வார்தான். வேறு சில ஆழ்வார்கள் அங்குமிங்கும் தொட்டுச் சென்றுள்ளனர். இந்த ஆழ்வார்கள் மல்லை வந்து அங்கு பல்லவர்கள் செதுக்கிய சிற்பங்களைக் கண்ணுற்றார்களா? நமக்குத் தெரியாது. காலக்கணக்கின்படி திருமங்கை ஆழ்வார் அங்கு வந்தபோது மல்லையின் கற்றளிகள் எல்லாம் எழும்பியிருக்கும். மதுசூதனன் மல்லையின் சிற்பங்களையும் ஆழ்வாரின் வரிகளையும் அருகருகே காட்டி, எவற்றையெல்லாம் ஆழ்வார் குறிப்பிட்டிருக்கக்கூடும் என்ற தன் கருதுகோளை முன்வைத்தார். அவருடைய உரையின் வீரியத்தில் உண்மையிலேயே திருமங்கை ஆழ்வார் இந்தச் சிற்பங்களையெல்லாம் பார்வையிட்டிருக்கத்தான் வேண்டும் என்று நம்மை நம்பவைத்துவிட்டார்.

(9) மல்லையின் தமிழ்க் கல்வெட்டுகள் பற்றி கி. ஶ்ரீதரன். ஶ்ரீதரன் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையில் வேலைசெய்து ஓய்வுபெற்றவர். கல்வெட்டுகள் குறித்தும் கோவில்கள் குறித்தும் தமிழ்ச் செய்தித்தாள்களிலும் இதழ்களிலும் தொடர்ந்து எழுதிவருபவர். மாமல்லையின் உள்ள தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படும் தகவல்களைக் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

(10) இறுதியாக முனைவர் ஆர். நாகசாமி மாமல்லை குறித்த தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். தமிழகத்தில் மாநில அரசின்கீழ் தொல்லியல் துறை ஒன்றை உருவாக்கி அதன் முதல் இயக்குனராகப் பணியாற்றியவர் நாகசாமி. தொல்லியல் துறையில் மூத்த அனுபவசாலி. வடமொழியில் முனைவர் பட்டம் பெற்றவர். வடமொழி, தமிழ் இரண்டிலும் பெருத்த ஞானம் உள்ளவர். அகழ்வாய்வு, நாணயவியல், படிமவியல், சிற்பம், ஆகமம், சாத்திரங்கள், கல்வெட்டுகள் ஆகியவை குறித்த ஆழ்ந்த புலமை கொண்டவர். மாமல்லபுரம் குறித்து இவர் ஐம்பதாண்டுகளுக்கும் முன்னால் எழுதிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை மிகுந்த பெயர் பெற்றது. சர்ச்சைக்கும் உரியது. இவர் தான் ஐம்பதாண்டுகளுக்குமுன் பார்த்த மாமல்லபுரம் எத்தகையது, இப்போது அங்கு வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்டிருக்கும் அழிவுகள், உலகப் பாரம்பரியச் சின்னம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் ஓர் இடம் எப்படிப் பாதுகாக்கப்படவேண்டும், இது எப்படி உலகின் ஒரு பெரும் சொத்து என்று தன் ஆழ்மனத்திலிருந்து வேதனையுடன் பேசினார். அதே நேரம், இதுபோன்ற ஒரு விஷயத்தைக் குறித்து நடக்கும் பேச்சுகளைக் கேட்க சுமார் 200 பேர் வந்திருப்பது ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது என்றும் சொன்னார்.

===

இதுவரை நாங்கள் நடத்தியுள்ள பேச்சுக் கச்சேரிகளிலேயே இதுதான் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. தமிழ் இளையக் கல்விக்கழக வளாகத்தில் வண்டிகளை நிறுத்திவைக்கப் போதிய இடம் இருந்தது. நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் 180 பேர்வரை எளிதில் உட்காரமுடியும். வேண்டுமென்றால் 200 பேர்களைத் திணித்துவிடலாம். மதிய நேரத்தில் உணவு உண்ண இடம், தேநீர் அருந்த இடம், புத்தகங்களை வைத்து விற்க இடம், கழிவறை வசதிகள் என்று அனைத்துக்கும் ஏற்றது. நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்து நேரடியாக இணையம்மூலம் ஒளிபரப்ப அவர்களிடம் வசதி உள்ளது. ஒவ்வொருமுறை இதுபோன்ற சிறப்பு நிகழ்ச்சிகளை நாங்கள் ஏற்பாடு செய்யும்போதும் கூட்டம் வருமா அல்லது அரங்கில் கால் பாதிகூட நிறையாமல் பேச்சாளர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்துமா என்று நடுங்கிக்கொண்டிருப்பேன். அதற்கு வாய்ப்பே இல்லாமல் பெருங்கூட்டம். அதற்கு ஒரு காரணம், இணையம் மூலமாகவும் அச்சுப் பத்திரிகைகள் மூலமாகவும் இந்நிகச்சிக்குக் கிடைத்த பரவலான கவனம். பத்திரிகையாளர்கள் நிகழ்ச்சிக்கு வந்து நிகழ்ச்சி குறித்து அடுத்தடுத்த நாட்களிலேயே குறிப்புகளையும் புகைப்படங்களையும் வெளியிட்டனர். மல்லை குறித்து நாங்கள் விற்பனைக்கு வைத்திருந்த காலச்சுவடு, கிழக்கு பதிப்பகப் புத்தகங்கள் நன்கு விற்பனையாயின. தமிழ்ப் பாரம்பரிய அற்க்கட்டளையின் தன்னார்வலர்களுடன் காந்தி படிப்பு மையத்தின் இளம் மாணவர்கள் சிலர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை நன்கு கையாண்டனர்.

இனிவரும் ஆண்டுகளில் இந்த நிகழ்ச்சியை விஞ்சும் விதமாக எப்படித் தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம், பேச்சாளர்களைக் கண்டுபிடிக்கப்போகிறோம் என்பது மலைப்பாக உள்ளது.

Monday, August 22, 2016

தெருவிளக்கும் மரத்தடியும் - ச.மாடசாமி

வெறும் 88 பக்கங்கள். 30-45 நிமிடங்களில் படித்துமுடித்துவிடக்கூடிய சிறிய புத்தகம்தான். ஆனால் கல்வியில் ஆர்வம் கொண்டிருக்கும் அனைவரையும் காலம் முழுதும் சிந்திக்க வைக்கும் சக்தி இப்புத்தகத்துக்கு உண்டு.

மாடசாமி நன்கு அறியப்பட்ட கல்வியாளர். இப்புத்தகத்தின் ஒரு குறை மாடசாமியைப் பற்றிய முறையான அறிமுகம் இல்லாமல் இருப்பதுதான். மாடசாமி 'புதிய தலைமுறை கல்வி' இதழில் 17 வாரங்களாக எழுதிவந்த கட்டுரைத் தொடரின் தொகுப்புதான் இந்நூல். சனிக்கிழமை அன்று திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அன்புடன் கொடுத்தார். நேற்று இரவு பாதியும் இன்று அதிகாலை பாதியுமாகப் படித்து முடித்தேன்.

மாடசாமியிடம் இருக்கும் மாணவர்கள் மீதுள்ள பரிவும் கல்வித்துறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஆதங்கமும் புத்தகம் நெடுக விரிந்துகொண்டே இருப்பதைக் காணலாம். அவருக்கே உரித்தான மொழியில், போதனை இல்லாத குரலில் ஆங்காங்கே தொட்டுக் காட்டிச் செல்வது, அவரை நமக்கு அணுக்கமாக்குகிறது. அவருடைய சொந்த அனுபவங்களும் அவர் படித்த புத்தகங்களிலிருந்து பெற்ற புரிதல்களும் கட்டுரைகளுக்கு மிகுந்த வலு சேர்க்கின்றன. நாண் மேற்கொண்டு படிக்க குறைந்தது பத்து புத்தகங்களை இந்தக் கட்டுரைத் தொடரிலிருந்து பெற்றுள்ளேன். எல்லாமே கல்வி தொடர்பானவை. கூடவே அறிவொளி இயக்கத்தின்போது அவர் சந்தித்த மனிதர்களும் அவர்களுடைய எளிமையான நாட்டுப்புறக் கதைகளும் பழமொழிகளும் விடுகதைகளும் புத்தகத்துக்கு மண்ணின் மணத்தைக் கொடுக்கின்றன.

கணவன் இல்லாத அறிவொளித் தொண்டர் ரத்தினம்மாளின் ஒரே மகன் கெட்ட சகவாசம் கொண்டவனாக இருக்கிறான். மகன் தேறுவானா என்று கேட்கிறார் மாடசாமி. "புளிய மரத்துல ஏறினவன் பல் கூசுனதும் தானா எறங்குவான்" என்கிறார் தாய். வழிக்கு வராதவர்கள் என்போரைக் கழித்துக் கட்டவே ஆசிரியர்கள் விரும்புகிறோம்; அவர்கள் மாறுவார்கள் என்று காத்திருக்க விரும்புவதில்லை என்கிறார் மாடசாமி.

சமச்சீர்க் கல்வி பாடத்தில் "நோ (மாட்டேன், இல்லை, கூடாது)" என்ற சொல்லைச் சொல்வதற்கான பயிற்சிகளை இணைக்க மாடசாமி விரும்புகிறார். "நோ" சொல்வது அடங்காப்பிடாரிகளை உருவாக்கும் என்று எதிர்ப்பு கிளம்புகிறது. "மறுப்பது அடங்காமையா" என்ற கேள்வியை எழுப்புகிறார் மாடசாமி. "'கண்ட சாதிப் பயல்களோடு விளையாடாதே' என்று அப்பா போடும் உத்தரவுக்கு 'நோ' சொல்வது அடங்காமையா? பள்ளிக்கூடம் விட்டு நடந்துவரும் சிறுமியிடம் முன்பின் தெரியாத அயலான் வந்து 'பாப்பா! வா! உன்னை வீட்ல விடுறேன். சைக்கிள்ல ஏறு' என்று அழைக்கும்போது அவனுடைய அழைப்புக்கு 'நோ' சொல்வது அடங்காமையா?" என்று வினா எழுப்புகிறார் மாடசாமி. சிறிது வெற்றி. பாடத்திட்டத்தில் கொஞ்சமாக சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் சிறுமிகள் 'நோ' சொல்லவேண்டிய பயிற்சிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லையாம்!

ஐம்பத்தோராவது ராட்சதப் பூச்சி (Fity First Dragon) என்ற கதை, Evan Hunter எழுதிய The Blackboard Jungle என்ற நாவலில் வருகிறதாம். பொய்யான நம்பிக்கையையும் போலியான ஊன்றுகோலையும் மாணவர்களுக்குத் தரும்போது ஏற்படும் விளைவுகளைக் குறிக்கிறது கதை. இம்மாதிரியான கதைகளை நம் வகுப்பறைகளில் மாணவர்களுடன் சேர்ந்து விவாதிக்கவேண்டும் என்கிறார்.

ஆசிரியரையோ பள்ளியையோ மாணவர்களுக்குப் பிடிக்கவில்லை எனும்போது ஓராண்டு பள்ளியிலிருந்து விலகியிருந்தால் நன்மை கிடைக்கலாம் என்னும் தைரியமான கருத்தை முன்வைக்கிறார். நம் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் கருத்து இது. மாணவர்களின் தனித்திறமையை வளர்த்தெடுக்காமல் அனைவரும் அனைத்திலும் ஒரு தரத்தை எட்டவேண்டும் என்று போராடும் ஆசிரியர்களையும் பள்ளி முறையையும் எதிர்க்கிறார். இதன் விளைவு, வாத்துகள் பறக்க முயன்று அதிலும் தோல்வி, கால் ஜவ்வு கிழிந்து நீந்துவதும் போச்சு. அவரவர் திறமையைச் சடுதியில் கண்டுபிடித்து அந்தத் திறமைகளை அதிகம் வளர்த்தெடுப்பதுதான் கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும். “இறுகிய பாடத்திட்டங்களுக்கு ஏற்றபடி குழந்தைகளை வளைக்காதீர்கள்; குழந்தைகளுக்கு ஏற்றபடி பாடத்திட்டத்தை வளையுங்கள்."

வசந்தி தேவி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது ‘என் கிராமத்தின் கதை’ என்ற போட்டியை மாணவர்களுக்காக அறிவித்தார். இதனையடுத்து மாணவர்களிடமிருந்து சுவையான பல கட்டுரைகள் பிறந்தன. அடுத்து துணைவேந்தராக வந்த அறவாணன், மாணவர்களுக்கிடையே போட்டி என்றால் பேச்சு, பாட்டு, நடனம் ஆகியவை மட்டும்தானா, பிரச்னைகளை ஆராய்ந்து அறியும் அறிவு திறமைகளில் பட்டியலில் இல்லையா என்று கேள்வி எழுப்பினாராம். அதன் விளைவாக ‘சமூகமும் கல்விக்கூடமும் சந்திக்கட்டும்’ என்ற கருத்தை மையமாக வைத்து இளைஞர் விழா ஒன்று நடத்தப்பட்டது. மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து கிராமங்களுக்குச் சென்று மக்கள் பிரச்னைகளை ஆய்ந்து அறிக்கை சமர்ப்பித்தனராம். அதில் கிடைத்த சில புரிதல்களை மாடசாமி விவரிக்கிறார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் இவற்றை ஆவணப்படுத்தவேண்டும். அற்புதமான முயற்சிகள் ஏன் கண்காணாமல் போய்விடுகின்றன என்று புரியவில்லை. மதுரை சமூக அறிவியல் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் ரெங்கசாமியுடன் நான் இதுபற்றி நிறையப் பேசியிருக்கிறேன். ஓரிரு கிராமங்களில் நாங்கள் முயற்சிகளையும் மேற்கொண்டோம். பெரிய பலன் ஏதும் கிடைக்கவில்லை. வேறு வடிவில் வேறு இடங்களில் இவற்றை மீண்டும் செயல்படுத்த முனையவேண்டும்.

ஒரு கட்டுரையில் மாடசாமி சொல்லும் ஒரு விஷயம் எனக்கு மிகவும் பரிச்சயமானது. அதனை அப்படியே இங்கே தருகிறேன்:
தமிழகப் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் அமெரிக்கப் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றிய கல்வியாளர் ஒருவர், பின்வரும் கருத்தைப் பதிவுசெய்கிறார்.

"தமிழகத்து மாணவர்கள், இடையூறு செய்யாமல் நான் பேசியதைக் கேட்டார்கள். ஆனால், பேசி முடித்ததும் என் உரையின்மீது ஒரு வினாவும் எழுப்பவில்லை, பேசும்போதும் கப்சிப்! பேசிமுடித்ததும் கப்சிப்! அமெரிக்கப் பள்ளி மாணவர்கள், நான் பேசுகையில் பலவிதமான குறுக்கீடுகளை - இடையூறுகளைச் செய்தார்கள். அரங்கைவிட்டு இஷ்தப்படி வெளியேறினார்கள். ஆனால் பேசி முடித்ததும் சுயசிந்தனையுடன் பல கேள்விகளை எழுப்பினார்கள்."
சென்ற வாரம் வரை நான் சென்றுவந்துள்ள பள்ளி, கல்லூரிகளில் பெரும்பாலும் இதுதான் நிலைமை. ஓரோர் இடத்தில் சற்றே விலகல் இருக்கலாம். நான் மிகவும் தோண்டித் துருவினால் மட்டுமே ஒரு சிலர் பேசுவார்கள். ஆனால் பேச்சை முடித்து கீழே இறங்கியதும் சிலர் வந்து சூழ்ந்துகொள்வார்கள். நிறையக் கேள்விகளைக் கேட்பார்கள். சிலர் நின்றுகொண்டே இருப்பார்கள். அவர்கள் முகத்தில் கேள்விகள் தெரியும். ஆனால் கேட்கத் தயக்கம். கடைசிவரை கேட்காமலேயே போய்விடுவார்கள். பக்கத்து நபரிடம் தங்கள் கேள்விகளைச் சொல்லிக் கேட்கச் சொல்வார்கள். இதிலிருந்து மீண்டாலொழிய நம் மாணவர்களால் முன்னேற முடியாது.

அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவருவது, அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு அழிந்துவருவது ஆகியவை பற்றி மாடசாமி அங்கலாய்க்கிறார். ஆனால் அரசுப்பள்ளிகளில்தான் இன்னமும் ஆன்மா இருக்கிறது என்கிறார். அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் குறித்த கருத்து இவரிடம் மட்டுமல்ல, இன்னும் பலரிடமும் அப்படியே மாறாமல் இருக்கிறது. இரண்டிலும் தங்களுக்கு விருப்பமான வகைமாதிரிகளை எடுத்துக்கொள்கிறார்கள். தனியார் பள்ளி என்றால் அதற்கு உள்ளதிலேயே மோசமான ஒரு எடுத்துக்காட்டை எடுத்துக்கொள்வது. அரசுப் பள்ளி என்றால் அதற்கு நம் மனம் விரும்பிய எடுத்துக்காட்டு, பிறகு இரண்டையும் ஒப்பிடுவது. இந்தக் கட்டுரையில் நான் என் எதிர்வாதத்தை வைக்கப்போவதில்லை. ஆனால் மாடசாமியின் இந்தச் சிந்தனையை மட்டும் முன்வைப்பேன்:
அரசுப் பள்ளிகள் இன்று காணும் தளர்ச்சி, ஒரே நாள் இரவில் நடந்தது அல்ல. முப்பது ஆண்டுகளாக நடந்துவரும் மாற்றம் இது. மாற்றம் இன்று கொதிநிலையை அடைந்திருக்கிறது. இனியும் கவனிக்காமல் இருக்க முடியாது.  … நாம் புது வடிவம் எடுக்காமல் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள முடியுமா? ஆசிரியர் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், பண்பாட்டு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஒன்றுகூடிப் பேசிச் சிந்தித்துச் செயலபடவேண்டாமா? அரசுப் பள்ளி வகுப்பறைகளில் புதிய வெளிச்சம் வேண்டாமா? அரசுப் பள்ளி ஆசிரியர்கள் புதிய ரூபங்கள் எடுக்கவேண்டாமா? புதிய முயற்சிகளுக்கு அரசு அதிகாரிகள் பக்கபலமாய் வரவேண்டாமா?
கேள்விகள் நியாயமானவை. என்னைப் பொருத்தமட்டில், கல்வியாளர்கள், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி இரண்டும் முன்னேற்றப் பாதையை நோக்கிப் பயணம் செய்வது எப்படி என்று சிந்திக்கவேண்டும். இரண்டும் மாணவர்களுக்குக் கல்வியைத் தரும் முக்கியமான பணியைச் செய்துகொண்டிருக்கின்றன. இரண்டிலும் கற்பித்தல் பிரச்னை ஒன்றுதான். கட்டுமானம், பணவசதி, இன்னபிறவற்றில்தான் வேற்றுமை. 

பல விவாதங்களை முன்வைக்கும் இந்தப் புத்தகம் அவசியம் படிக்கப்படவேண்டியது. 

தெருவிளக்கும் மரத்தடியும், சு. மாடசாமி, புதிய தலைமுறை வெளியீடு, பக் 88, விலை ரூ. 80

Monday, August 15, 2016

கண்டுபிடி!

$$\frac{200^2+199^2+198^2+197^2+\dots+2^2+1^2}{200^2-199^2+198^2-197^2+\dots+2^2-1^2}$$

Tuesday, June 14, 2016

பசித்திருக்கும் உலகத்துக்கு உணவு

ஆர்கானிக் விவசாயம் (இயற்கை விவசாயம்) பற்றி மட்டும்தான் இன்று அனைவரும் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். ஆனால் நிஜத்தில் இன்று மிகப் பெரும்பான்மையான விவசாயம் ரசாயன உரத்தின் ஆதரவால்தான் நிகழ்ந்துவருகிறது. ரசாயன உரங்களை எடுத்துவிட்டால் உலகில் பட்டினியும் பஞ்சமும்தான் ஏற்படும்.

இண்டென்சிவ் விவசாயம் - அதாவது குறிப்பிட்ட ஒரு சதுர அடியில் கிடைக்கும் அதிகப் பயிர் மகசூல் வேண்டும் என்றால் தேவையான அளவு நீர், உரம் ஆகியவை வேண்டும். இந்த உரம் இயற்கை உரமாக இருக்கலாம் அல்லது பெரும் தொழிற்சாலையில் உருவான ரசாயன உரமாக இருக்கலாம். அதுதவிர, தேவைப்பட்டால் பூச்சிகளாலும், பேக்டீரிய, வைரஸ்களாலும் உருவாகும் நோய்களைக் கட்டுப்படுத்த பூச்சிமருந்து தெளிக்கவேண்டுமா அல்லது இயற்கை மருந்துகள் பயன்படுத்தலாம என்பது இன்னொரு விஷயம்.

தாமஸ் ஹேகர்
புத்தகத்திலிருந்து
ஒரு ஸ்க்ரீன் ஷாட்.
இயற்கை உரங்களாகப் பயன்பட்டவை பறவைகளின் எச்சங்கள், விலங்கின் கழிவுகள், ஏன் மனிதனின் கழிவுகள்கூட. இவை பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜனை மண்ணுக்குள் அனுப்பின. பயிர்களின் வேர்கள் இவற்றை மண்ணிலிருந்து எடுத்துக்கொண்டன. இயற்கையில் இந்த அளவுக்கு உயிரினக் கழிவுகள் கிடைக்காத நிலையில் அம்மோனியா (NH3) என்ற வேதிப்பொருளைத் தொழிற்சாலையில் உருவாக்கி, அதனைத் திடவடிவிலான வேதிப்பொருளாக ஆக்கி மண்ணில் சேர்க்கமுடியுமா என்ற ஆராய்ச்சியின் விளைவாக உருவானதுதான் யூரியா என்ற உரம். இன்று உலகெங்கும் உணவைப் பெற்றுத்தருவது யூரியாதான். இனி நம் நாட்டில் யூரியாவைப் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லிப் பாருங்கள். தெரியும் எம்மாதிரியான அரசியல் பிரச்னை ஏற்படும் என்று. 

இந்த யூரியா சிறுசிறு துகள்களாக இருக்கும். சர்க்கரைத் துகள்களைவிடப் பெரிதாக, கல்லுப்புத் துகள்களைவிடச் சிறிதாக. இவற்றை நெல் வயல்களில் தூவுவார்கள். ஆனால் இதனால் பெரும் லாபமல்ல. நீரில் கரைந்து பெருமளவு யூரியா வெளியேறிவிடும். காற்றில் பரவி மாசை விளைவிக்கும். பயிருக்கும் போய்ச் சேராது. 

சீனா போன்ற நாடுகளில் பாரம்பரிய (இயற்கை) உரங்களைப் பயன்படுத்த ஒரு முறையைக் கையாண்டுவந்தார்களாம். களிமண்ணைக் கையில் பந்தாகக் குழைத்து எடுத்துக்கொள்வார்கள். அப்படியே ஆங்காங்கே விரலை அதில் வைத்து அழுத்தி, குழியை உருவாக்கிக்கொள்வார்கள். அந்தக் குழிக்குள் இயற்கை உரத்தை அப்பிவிடுவார்கள். பின் நெல் நட்டுள்ள வயலில் ஆங்காங்கே இடையிடையே சற்றே ஆழத்தில் இந்த உரக் களிமண் உருண்டைகளை நட்டுவிடுவார்கள். இதனால் உரச் சத்து கொஞ்சம் கொஞ்சமாக வேண்டிய அளவில் மண்ணூடாக பயிருக்குப் போகிறது. வீணாவதில்லை.

பங்களாதேஷில் யூரியாவை வைத்து இதே முறைப்படிப் பயன்படுத்தினால் பலன் அதிகமாக இருக்குமா என்று முயற்சி செய்தார்கள். யூரியா துகள்களை கைக்கடக்கமான உருண்டைகளாக ஆக்கி, சரியான ஆழத்தில் நெல் வயலில் சீரான இடைவெளியில் புதைத்துவைத்து முயற்சி செய்தார்கள். UDP என்று இதற்குப் பெயர். Urea Deep Placement. இது மிகச் சிறப்பான பயன் அளித்தது. 1990களில் இம்முறையை அறிமுகப்படுத்தி, விரிவாக்கியதால், பங்களாதேஷ் உணவு உற்பத்தியில் தன்னிறைவடைந்தது.

அதன்பின், Fertilizer Deep Placement (FDP) என்ற பெயரில், யூரியாவை மட்டுமின்றி பொட்டாஷ், பாஸ்பேட் உரங்களையும் வேறுசில நுண்சத்துகளையும் சரியான விகிதத்தில் சேர்த்து சரியான ஆழத்தில் வைத்து பயிர்களுக்குச் சத்தளிப்பது என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் பின்னணியில் இருந்தது IFDC - International Feritilizer Development Center என்ற அமெரிக்காவிலிருந்து இயங்கும் அமைப்பு. உலகமெங்கும் உணவுப் பற்றாக்குறை இருந்த காலகட்டத்தில் உரப் பயன்பாட்டை உலகமெங்கும் பரப்ப ஆராய்ச்சிகளைச் செய்து, அத்துடன் நிற்காமல் விநியோகக் கட்டமைப்பை ஏற்படுத்த உதவிய அமைப்பு இது. ஐரோப்பியக் கண்டத்தில் கம்யூனிசம் வீழ்ந்தபின் இரும்புத் திரையிலிருந்து வெளியேறிய கம்யூனிச நாடுகள் பலவற்றிலும் உரங்களை உற்பத்தி செய்ய உதவி, உணவுத் தன்னிறைவை உருவாக்கிக்கொள்ள வழிவகுத்தவர்கள். ஆசியாவில் பங்களாதேஷ் அவர்களுடைய செயலுக்கு முக்கியமான எடுத்துக்காட்டு. ஐரோப்பாவில் அல்பேனியா ஒரு எடுத்துக்காட்டு. ஆப்பிரிக்காவில் வளமற்ற மண்ணுக்கு உரங்கள்மூலம் வளம் சேர்த்து விளைச்சலை அதிகப்படுத்தியதில் பெரும் பங்கு IFDC-க்கு உண்டு.

ஹேபர்-பாஷ் முறைமூலம் அம்மோனியா (அதிலிருந்து யூரியா) உருவாக்கப்பட்ட கதையை மிக அற்புதமாக எழுதிய தாமஸ் ஹேகர், IFDC-யின் 40 ஆண்டுகளைப் படம் பிடித்து எழுதிய புத்தகம்தான் "Feeding a Hungry World".

இதன் தலைமை அதிகாரியாகப் பல ஆண்டுகள் இருந்து மிகச் சமீபத்தில் ஓய்வு பெற்றவர் அமிதாவா ராய். ஐஐடியில் படித்தபின் அமெரிக்காவில் கெமிகல் எஞ்சினியரிங் துறையில், உரங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பொதுவாக இவரைப் போன்றவர் குறித்து நம் நாட்டில் அதிகம் பேசப்படுவதில்லை. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் நான் இந்தப் பெயரையே முதன்முதலில் கேள்விப்பட்டேன். இவரைக் குறித்து மேலும் தகவல்களைத் திரட்டவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.


இயற்கை விவசாயம் நன்கு வளர்ந்து செழிக்கட்டும். அதே நேரம், நம் அனைவருக்கும் உணவளிக்கும் ரசாயன உரங்களைப் போற்றுவோம். அவற்றைச் சரியான முறையில், சரியான அளவில் நம் விவசாயிகள் பயன்படுத்திப் பலனைப் பெறட்டும்.

Tuesday, May 31, 2016

ரசாயன வண்ணச் சாயங்கள்

1856-ம் ஆண்டுதான் முதன்முதலாக நூல் இழைகள்மீது ஏற்றப்படும் வண்ணச் சாயங்கள் இயற்கையான உயிரினங்கள்மூலமாகத் தயாரிக்கப்படாமல் சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்படத் தொடங்கியது.

1856-க்குமுன்பாக மிகச் சில வண்ணங்கள்தான் ஆடைகள் தயாரிப்பில் பயன்பட்டன. அவுரி  (Indigofera Tinctoria) செடியிலிருந்து ஆழ்நீல வண்ணம். வோட் (Isatis Tinctoria) செடியிலிருந்து இளநீல வண்ணம், மஞ்சள் (Curcuma Longa) செடியிலிருந்து, அதேநிற வண்ணம், மேடர் (Rubia Tinctorum) என்ற செடியிலிருந்து சிவப்பு வண்ணம். கொச்சினீல் (Dactylopius Coccus) என்ற பூச்சியிலிருந்து சிவப்பு வண்ணம். இப்படிச் சில வண்ணங்களை மட்டுமே கொண்டு, பருத்தி, பட்டு, கம்பளி இழைகளுக்குச் சேர்த்து, நெய்து துணிகளை உருவாக்குவார்கள்.

1856-க்கு முன்னதாகவே ஆய்வகங்களில் ஒருசில வண்ணங்கள் உருவாக்கப்பட்டாலும் பெரும் தொழிற்சாலைகளில் அவற்றை யாரும் உருவாக்க முனையவில்லை. தொழில்ரீதியாக அது சாத்தியப்படும் என்று யாரும் நினைக்கவில்லை.

ஆனால் 1856-ல் வில்லியம் பெர்கின் என்ற பிரிட்டனைச் சேர்ந்த 18 வயதான, வேதியியல் மாணவர் ‘மாவ்’ என்று அழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு வண்ணத்தை ஆய்வகத்தில் உருவாக்கினார். இதனை உருவாக்க அவர் எடுத்துக்கொண்டது நிலக்கரித் தார்க் கழிவை. கிட்டத்தட்ட அந்தச் சந்தர்ப்பத்தில்தான் உயிரிகள் அனைத்தும் கரிம வேதிப்பொருள்களால் ஆனவை என்பதும், பெட்ரோலியம், நிலக்கரி ஆகியவை, உயிரிகள் பூமிக்கடியில் புதைந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகி, உருமாறியவை என்பதும் தெரியவந்திருந்தது. ஆனால் வேதிவினைகள் குறித்து ஆழ்ந்த கருத்துகள் இன்னமும் தோன்றியிருக்காத காலம். மெண்டலீவ் இன்னமும் தன் வேதி அட்டவணையை உருவாக்கியிருக்கவில்லை. அணு பற்றிய கொள்கைகள் தெளிவாகியிருக்கவில்லை. ஆனால் தாவரத்திலிருந்தோ, விலங்கிலிருந்தோ பெறப்படும் பொருள்களை, நிலக்கரி அல்லது பெட்ரோலியக் கழிவிலிருந்து தொடங்கி, சில வேதிவினைகள்மூலம் பெற்றுவிடக்கூடும் என்ற கருத்து உருவாகியிருந்தது.

பெர்கின், வண்ணச்சாயம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. மலேரியா நோய்க்கு மருந்தான க்வினைன் என்பது சிஞ்சோனா என்ற மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்டுவந்தது. இதனை ஆய்வகத்தில் தயாரிக்க முடியுமா என்ற முயற்சியில் பெர்கின் ஈடுபட்டபோது, அகஸ்மாத்தாக உருவானதுதான் இந்தச் சிவப்புநிறப் பொடி. இந்தப் பொடியைச் சுத்திகரித்து வண்ணச் சாயமாக மாற்றி சாயத்தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவரிடம் கொடுத்துப் பார்த்ததில் அவர், இது ‘பத்தரை மாற்றுத் தங்கம்’ என்று சொல்லிவிட்டார்.

ஆனாலும் ஒரு 18 வயதுப் பையன் தைரியமாக இதனைக் கையில் எடுத்துக்கொண்டு, தொழிலில் இறங்க முடிவுசெய்தது மகா ஆச்சரியம். யாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை. ஆனால் அந்தப் பையனின் தந்தை - கப்பல் கட்டும் தொழிலில் இருந்தவர் - முதலீடு செய்ய முன்வந்தார். அண்ணனும் தொழிலில் கூட்டு சேர்ந்தார். மிகப் பெரிய லாபம் ஈட்டினார்கள். 

வில்லியம் பெர்கினின் இந்த வண்ணச் சாயக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ரசாயன வண்ணங்களைத் தயாரிக்கக் கடும் போட்டி நடைபெற்றது. ஜெர்மனி ஆழ்நீல வண்ணத்தை உருவாக்கியது. அது இந்தியாவின் அவுரிப் பயிர்களையும் வர்த்தகத்தையும் ஒட்டுமொத்தமாக அழித்தது. காந்தியடிகள் இந்தியாவில் ஈடுபட்ட முதல் பெரும் பிரச்னை, அவுரி பயிரிட்ட இந்திய விவசாயிகளுக்கும் அதனை வாங்கி வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் செய்துகொண்டு, பின்னர் ஜெர்மனியின் கண்டுபிடிப்பினால் பின்வாங்கிய பிரிட்டிஷ் வர்த்தகர்களுக்கும் இடையேயான பிரச்னையில் சமரசம் ஏற்படுத்த முயற்சித்தது. நாளடைவில் இயற்கை வண்ணச் சாயம் என்ற ஒன்று முற்றிலுமாகக் காணாமல் போனது.

நிலக்கரி, பெட்ரோலியக் கழிவிலிருந்து வண்ணச் சாயங்கள் மட்டுமல்ல, ஆண்டிபயாடிக் என்ற நோய்க்கொல்லி மருந்துகளையும் கண்டுபிடிக்கலாம் என்பதை நோக்கி அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் இறங்கின. சல்ஃபா வகை மருந்துகளைக் கண்டுபிடித்ததன்மூலம் கெர்ஹார்ட் டோமாக் (Gerhard Domagk) இந்தத் துறையைத் தொடங்கிவைத்தார். இன்னொரு பக்கம் அம்மோனியாவைத் தயாரிக்கும் முயற்சியில் ஹேபர் ஆய்வகத்தில் வெற்றிபெற, பாஷ் அதனைப் பெருமளவில் தொழிற்சாலையில் தயாரிக்கும் முறையை உருவாக்கினார். இவ்வாறாக செயற்கை உரங்கள் உருவாக்கப்படலாயின. லேக்கர் என்னும் இயற்கைப் பிசின், மின்கடத்தாப் பொருளாகப் பயன்பட்டது. அதற்கு மாற்றாக பேகிலைட் என்னும் செயற்கைப் பொருள் உருவாக்கப்பட்டது. அதன்பின் பிளாஸ்டிக் வகைகள் உருவாக்கப்பட்டன. நைலான், பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழைகள் உருவாக்கப்பட்டன. 

இப்படியாக எதிர்பாராத வகையில் உருவான வண்ணச் சாயம் ஒன்றிலிருந்து மாபெரும் ரசாயனத் தொழிற்சாலைகள் உருவாகின. இவை சுற்றுச் சூழலுக்குக் கேடுகளை விளைவித்தன. உணவுப் பொருள்களில்கூட இவ்வகைச் சாயங்கள் கலக்கப்பட்டன. மக்களின் எதிர்ப்பை அடுத்து தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டன. உணவு மற்றும் மருந்து ஆகியவற்றில் நிறையக் கட்டுப்பாடுகள் உருவாகின. ஆனாலும் இன்றும் இத்தொழிற்சாலைகள் பிரச்னைகளுக்கு உரியவையாக இருப்பதைப் பார்க்கிறோம். இப்பொருள்கள் பலவற்றுக்கும் பக்கவிளைவுகள் இருப்பதையும் காண்கிறோம்.

உலகின் பல பாகங்களிலும், செயற்கையிலிருந்து விலகி மீண்டும் இயற்கையான பொருள்களை நாடிச் செல்லும் பயணம் தொடங்கியுள்ளது. இயற்கை விவசாயம், இயற்கை உணவு, இயற்கை இழைகள், இயற்கை வண்ணங்கள் போன்றவைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

நான் ஏற்கெனவே ஹேபர்-பாஷ் + உரங்கள் பற்றியும் டோமாக் + மருந்துகள் பற்றியுமான இரண்டு அற்புதமான புத்தகங்களைப் படித்திருந்தேன். இரண்டுமே தாமஸ் ஹேகர் எழுதியவை. The Alchemy of Air: A Jewish Genius, a Doomed Tycoon, and the Scientific Discovery that Fed the World but Fueled the Rise of Hitler என்பது ஹேபர், பாஷ் கதையைச் சொல்வது. The Demon Under the Microscope: From Battlefield Hospitals to Nazi Labs, One Doctor's Heroic Search for the World's First Miracle Drug என்பது டோமாக்கின் கதையைச் சொல்வது.

இந்தப் புத்தகங்கள் அளவுக்கு அறிவியலையும் வாழ்க்கையையும் எளிதாகவும் அருமையாகவும் சொல்லிச் செல்வது கடினம் என்று எண்ணியிருந்தேன். சைமன் கார்ஃபீல்ட் எழுதியுள்ள Mauve: How One Man Invented a Colour that Changed the World அந்தத் தரத்தில் நின்று வில்லியம் பெர்கினின் கதையையும் வண்ணங்களின் ரசாயனத்தையும் சொல்லிச் செல்கிறது.

அறிவியல் ஆர்வம் உள்ள பள்ளி மாணவர்கள் இந்த மூன்று புத்தகங்களையும் படிக்கப் பரிந்துரைப்பேன்.