Saturday, March 28, 2009

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - அ.கி.வெங்கட சுப்ரமணியன்

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம், வரும் திங்கள் கிழமை, 30 மார்ச் 2009 அன்று மாலை 6.00 மணிக்கு நடக்க உள்ளது.

மறக்காமல் உங்களது நாட்குறிப்பில் குறித்து வைத்துக்கொண்டு வந்துவிடுங்கள்.

அ.கி.வெங்கட சுப்ரமணியன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அலுவலர். தமிழகர் அரசின் பல துறைகளில் செயலராக இருந்துள்ளார். ஓய்வுக்குப்பின், உந்துநர் அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்திவருகிறார். அதன் சார்பாக குடிமக்கள் முரசு என்ற தமிழ் மாத இதழை நடத்திவருகிறார். கிராமங்கள் பலவற்றில் மக்கள் மன்றங்கள் என்ற அமைப்புகளை ஏற்படுத்தி, கிராம மக்களுக்கு குடியாட்சி முறையின் அடிப்படைகளைத் தெரியப்படுத்தி, எப்படி அவர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடலாம் என்று தெளிவுறுத்தி வருகிறார்.

உள்ளாட்சி அமைப்புகள் வலுப்படவேண்டும் என்பது இவரது வாதம். மாநிலங்கள் போராடி தங்களுக்கான உரிமைகளை மத்திய அரசிடமிருந்து பெற்றுவிடுகின்றன. ஆனால் தமக்குக் கீழுள்ள பஞ்சாயத்து அமைப்புகளுக்கு எந்தவிதமான உரிமைகளையும் மாநில அரசுகள் தருவதில்லை. முக்கியமாக தமிழக அரசு. இதில் திமுக, அஇஅதிமுக ஆகிய இரு அரசியல் கட்சிகளுமே ஒருமித்த கருத்துடையவை.

ஆனாலும், பஞ்சாயத்துத் தலைவர்களும் உறுப்பினர்களும் மனது வைத்தால் தங்களுக்கு வேண்டிய உரிமைகளைப் பெறப் போராடலாம், ஓரளவுக்கு வெற்றியும் பெறலாம். பஞ்சாயத்துத் தேர்தலில் கட்சிச் சார்பற்ற முறையில் போட்டியிடவேண்டும் என்பதும் இவர் கொள்கை.

தேர்தலில் வாக்களிப்பது இவருக்குப் பிடித்த மற்றொரு விஷயம். நகர்ப்புற மக்கள் தேர்தலில் வாக்களிப்பதில்லை, ஆனால் ‘இந்த அரசியல் கட்சிகளே மோசமப்பா’ என்ற சினிகல் மனோபாவத்துட்ன புலம்புபவர்கள் என்று புள்ளிவிவரங்களுடன் அலசுகிறார் இவர். குறைந்தபட்சம் 49 ஓ பிரிவிலாவது வாக்குச்சாவடிக்குச் சென்று கையெழுத்திட்டு யாருக்கும் வாக்களிக்காமல் வாருங்கள் என்கிறார். [வெங்கட சுப்ரமணியன் பற்றி நான் எழுதிய சில பதிவுகள்: ஒன்று | இரண்டு | மூன்று]

பேசவாருங்கள் என்று நான் அழைத்ததும் அவர் தேர்தல் பற்றியும், 49 ஓ பற்றியும் பேசட்டுமா என்றுதான் கேட்டார். நான்தான் பேச்சைக் கேட்கவரும் அனைவரும் எப்படியும் தேர்தலில் வாக்களிக்கக்கூடியவர்களே என்றும், அதற்குப் பதில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிப் பேசுங்கள் என்றும் சொன்னேன்.

தமிழர்களிடையே கட்சிகள் பற்றி பெரும் பயம் உள்ளது. ‘வூட்டுக்கு ஆட்டோ வந்திரும்பா’ என்று தேவையில்லாமல் பயப்படுகிறார்கள். கட்சிகளில் தில்லுமுல்லுகளை, பொறுக்கித்தனங்களை, நம்மைச் சிறுமைப்படுத்துகிற விஷயங்களைப் பற்றி பயமின்றிப் பேசுவோர் குறைவாக உள்ளனர்.

முன்னர்தான் நம்மிடம் தகவல்கள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்தோம். இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் எல்லாம் தேவைப்பட்டது. இப்போது சிறு மாற்றம். சில தகவல்களையாவது நாம் கேட்டால் மத்திய, மாநில அரசுகள் தந்தாகவேண்டும். சென்ற வாரம் வேறு ஒரு (நேர்மையான) ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி அவர் செய்த சிலவற்றை பொதுக்களத்துக்குக் கொண்டுவந்து புத்தகங்களாகப் பிரசுரிக்கலாம் என்று நினைத்திருப்பதாகச் சொன்னார்.

வெங்கடசுப்ரமணியன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மிகவும் திறம்படப் பயன்படுத்துபவர். அரசுச் செயலராக இருந்ததால் எந்தத் துறை என்ன செய்யும், என்ன செய்யாது என்று நன்கு அறிந்தவர். அவர் கல்வி, சேது சமுத்திரம் ஆகியவை தொடர்பாக த.அ.உ.சட்டத்தைப் பயன்படுத்திக் கேட்ட சிலவற்றை கட்டுரைகளாகக் குடிமக்கள் அரசு பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். மேலும் கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் மன்றத்தையும்கூட இதுபோல் த.அ.உ.சட்டத்தைப் பயன்படுத்தி தகவல்கள் பெற உதவி செய்துள்ளார்.

எனக்கும் த.அ.உ.சட்டத்தைப் பயன்படுத்தி பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆவல். ஆனால் சரியான வழிமுறை தெரியவில்லை. வெறும் விண்ணப்பப்படிவத்தை நிரப்பி அனுப்புவது பெரிய விஷயமில்லை. எந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும் என்பது முக்கியம். வெங்கட சுப்ரமணியன் சொல்வதும் இதைத்தான். சிலர் ‘ஆயிரம் கேள்விகள் கேட்டுட்டேன் சார்’ என்று பெருமையாகச் சொல்கிறார்களாம். ஆயிரம் கேள்விகள் கேட்பதில் பெருமையில்லை. சரியான கேள்விகளைக் கேட்பதன்மூலம், சரியான தகவல்களைப் பெறுவதன்மூலம் அடுத்தகட்டப் போராட்டத்துக்கு நம்மைத் தயார் செய்துகொள்கிறோம். நமக்கு வேண்டியவற்றை நடத்திக்கொள்ள இவை உதவுகின்றன.

இந்த வழிமுறைகளை தனது அனுபவத்தின் வாயிலாக நம்மோடு பகிர்ந்துகொள்ள வருகிறார் அ.கி.வெங்கட சுப்ரமணியன். மீண்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: திங்கள், 30 மார்ச் 2009, மாலை 6.00 மணி, கிழக்கு மொட்டைமாடியில், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18.

***

அ.கி.வெங்கட சுப்ரமணியன் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இரு புத்தகங்களாக கிழக்கு வெளியிட்டுள்ளது.

1. கட்சி, ஆட்சி, மீட்சி
2. மக்களாகிய நாம்

ராமச்சந்திர குஹாவின் 97 லட்ச ரூபாய் டீல்

ராமச்சந்திர குஹா, இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாளர்களில் ஒருவர். சூழலியல், இடதுசாரியம், கிரிக்கெட், அம்பேத்கர், காந்தி என அவரது ஆர்வம் பல திசைகளில் செல்வது. மத்தியப் பிரதேசத்தில் கோண்டு பழங்குடி மக்களிடையே வேலை செய்த வெர்ரியர் எல்வின் என்ற சூழலியலாளர் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்தியாவின் முதல் ‘தீண்டப்படாத’ கிரிக்கெட் வீரர் பல்வாங்கர் பாலு பற்றி விரிவாக எழுதியுள்ளார். தி ஹிந்து பத்திரிகையில் தொடர் பத்திகள், கொல்கத்தா டெலிகிராப், ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைகளிலும் பத்திகள் எழுதிவருபவர்.

கல்வித்துறைக்குள்ளாக மட்டுமே இருந்தவந்த குஹா சமீப காலமாக தொலைக்காட்சிகளில் இந்திய கலாசாரம், வரலாறு போன்ற பலவற்றைப் பற்றிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

கல்வித்துறைக்கு வெளியேயான பொதுமக்களுக்கு என இவர் எழுதிய மாபெரும் புத்தகம் India After Gandhi என்ற சமகால இந்தியாவைப் பற்றிய வரலாற்று நூல். ஆங்கிலத்தில் சக்கைப்போடு போடும் இந்நூல் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்போது குஹா எழுதிவரும் புத்தகம் காந்தியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல். காந்தியைப் பற்றி ராஜ்மோகன் காந்தி நிறையவே எழுதியுள்ளார். ஆனால் குஹாவின் பார்வையும் எழுத்தும் அதை நிச்சயம் மிஞ்சும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. 2004-ல், சென்னையில் குஹா காந்தி பற்றி ஆற்றிய உரையை இரண்டு பாகங்களாக வலைப்பதிவில் எழுதியிருந்தேன் [ஒன்று | இரண்டு].

இவர் எழுதிவரும் காந்தி புத்தகம் இரண்டு பாகங்களாக வெளியாகுமாம். முதல் பாகம் 2012-ல், இரண்டாம் பாகம் 2015-ல்! அதை யார் பதிப்பிப்பது என்பதில் கடுமையான போட்டி. இவருடைய பழைய புத்தகங்களையும் சேர்த்து, மொத்தமாகப் பதிப்பிப்பதற்கு ஹார்ப்பர் கால்லின்ஸ் இந்தியா, ராண்டம் ஹவுஸ் இந்தியா ஆகியவை ரூ. ஒரு கோடிக்கு மேல் முன்பணம் தருவதாகச் சொல்லியுள்ளனர். பெங்குவின் இந்தியா ரூ. 97 லட்சம் கொடுப்பதாகச் சொன்னது. ஆனால் அவர்கள் பழைய புத்தகங்களையும் சிறப்பாகப் பதிப்பிப்பார்கள் என்பதால் பெங்குவினுடன் செல்வதாக குஹா முடிவெடுத்துள்ளார்.

***

குஹா போன்ற சிறப்பான எழுத்துக்குச் சொந்தக்காரர்களுக்கு நல்ல பணம் கிடைப்பது இந்தியாவுக்கு நல்ல விஷயம்.

ஒரு சந்தோஷமான விஷயம். குஹாவின் ‘காந்திக்குப் பிந்தைய இந்தியா’ புத்தகம் இரண்டு பாகங்களாக தமிழில் வெளியாகும். கிழக்கு பதிப்பகம் இதற்கான உரிமையைப் பெற்று மொழிமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளது. முதல் பாகம் மே 2009-ல் வெளியாகும். இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 2009-ல் வெளியாகும். கோடிகளில் இல்லாவிட்டாலும் லட்சங்களிலாவது விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கிறோம்:-)

தொடர்ந்து, குஹாவின் முந்தைய சில புத்தகங்களையும் தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்குவோம்.

Thursday, March 26, 2009

தமிழகக் கூட்டணிகள்

பாமக, எதிர்பார்த்தபடியே, அஇஅதிமுக கூட்டணிக்கு வந்துள்ளது. என் கணிப்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளை இப்படித்தான் பிரித்துக்கொள்வார்கள்:

அஇஅதிமுக: 21
கம்யூனிஸ்டுகள்: 8 (5+3)
பாமக: 7
மதிமுக: 4

விஜயகாந்த், திமுக+காங்கிரஸ் கூட்டணியில் சேருவாரா என்று பார்க்கவேண்டும். அப்படிச் சேர்ந்தால், இப்படிப் பிரித்துக்கொள்ளலாம்.

திமுக: 19
காங்கிரஸ்: 13
தேமுதிக: 6 அல்லது 7
விடுதலைச் சிறுத்தைகள்: 2 அல்லது 1

தேமுதிக, திமுக கூட்டணியில் சேராவிட்டால் தொகுதிப் பங்கீடு இப்படி இருக்கலாம்.

திமுக + ஊர் பேர் தெரியாத கருணாநிதியின் நண்பர்கள் (ஜெகத்ரட்சகன் போல): 23
காங்கிரஸ்: 15
விடுதலைச் சிறுத்தைகள்: 2

===

தேமுதிக, திமுக அணியில் இருந்தால் தமிழக, புதுச்சேரி முடிவுகள் இப்படி இருக்கும்:

அஇஅதிமுக கூட்டணி: 25
திமுக கூட்டணி: 15

தேமுதிக தனியாகப் போட்டியிட்டால், முடிவுகள் இப்படி இருக்கும்:

அஇஅதிமுக கூட்டணி: 30
திமுக கூட்டணி: 10

கலக்கும் கம்ப்யூட்டர் கேடிகள் - குங்குமம்

எனது பதிவு ஒன்றில் மாயவரத்தான் ஒரு பின்னூட்டம் விட்டுச் சென்றிருந்தார்:
போன வார குங்குமம் இதழில் இணைய தளங்களின் மூலம் எப்படி ஏமாற்றி காசு பிடுங்குகிறார்கள் என்ற ஒரு கட்டுரை வந்திருக்கிறது. ஆனால் அதற்கு போடப்பட்டுள்ள புகைப்படம் உங்களுடைய இந்த வலைத்தளம். கொஞ்சம் என்னன்னு விசாரிங்க.
அந்தப் பக்கம் இங்கே:



இதில் பக்கத்தில் மேல் கோடியில், லே அவுட்டுக்காக - இணையப்பக்கம் என்று காண்பிக்க - சந்திரயான் பற்றி நான் எழுதிய ஒரு பதிவின் படம் வருகிறது.

மற்றபடி குங்குமம் எடிட்டோரியலில் உள்ள அனைவரும் என் நண்பர்கள்தான்:-) என்னை கேடி லிஸ்டில் சேர்க்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

தகவலுக்காக மட்டுமே.

ஐ.பி.எல் கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட் (பொதுவாக 20/20) எனக்கு அவ்வளவு உவப்பில்லாதது. கிழ போல்ட்டுகள் “எங்க காலத்துல பிரசன்னா வந்து ஆஃப் ஸ்பின் போட்டா...” என்று பேசுவதுபோல அரைக்கிழமான நான் இன்றைய இளைஞர்களின் விருப்பத்துக்கு உகந்த 20/20-ஐக் கேவலமாகப் பேசுவதாக நினைக்கவேண்டாம். 20/20 வேகம் இருந்தாலும் விவேகம் குறைவான, அறிவு அதிகம் தேவைப்படாத, முரட்டுத்தனம் மட்டுமே போதும் என்கிற ஆட்டம் என்பது என்னுடைய இன்றைய கருத்து. இது நாளை மாறலாம்.

யூசுஃப் பதான் 20/20-ல் ராஜாவாக இருக்கமுடியும். ஏதோ நூற்றில் ஒரு ஒருநாள் ஆட்டத்தில்தான் பிழைப்பார். டெஸ்ட் பக்கம் அவர் போக வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

சென்ற ஆண்டு ஐ.பி.எல் இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஊத்திவிடும் என்றே நினைத்தேன். நிச்சயம் டிக்கெட் வாங்கிக்கொண்டு நான் பார்த்திருக்கமாட்டேன். அரங்கம் சென்று டெஸ்ட் மேட்ச்கள் மட்டுமே பார்ப்பவன் நான். ஒருநாள் போட்டிகள் என்றால் டிவியே போதும் என்று நினைப்பவன்.

20/20 பார்க்க என்று செட் மேக்ஸ் சப்ஸ்கிரைப் செய்தேன். சில ஆட்டங்கள் பார்த்தேன். கடைசியில் நிறைய ஆட்டங்கள் பார்த்தேன். இறுதி ஆட்டம் எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் பல ஆட்டங்கள் நன்றாகவே இருந்தன. கடைசியில் ஐ.பி.எல் எனக்கு ஓரளவுக்குப் பிடித்துப்போனது.

***

இரண்டாம் சீசன் ஐ.பி.எல் ஆரம்பமே கொஞ்சம் தகராறில்தான் இருந்தது. முதலாவது பிரச்னை பொருளாதார வீழ்ச்சி. அதன் பாதிப்பு. இரண்டாவது மும்பை தாக்குதல். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்மீதான தாக்குதல். மூன்றாவது லலித் மோடிக்கும் ராஜஸ்தானில் புதிதாக ஜெயித்த காங்கிரஸ் அரசுக்கும் இடையேயான பிரச்னை. நான்காவது இந்திய நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல்.

இந்தியாவில் தேர்தல் மிகப்பெரிய விஷயம். அடிப்படையில் இந்தியா இன்னமும் வன்முறையை விட்டு வெளியே வரவில்லை. இந்தியத் தேர்தல்கள் ஊழல் நிறைந்தவை. வாக்காளர்களுக்குக் காசு கொடுப்பது, திமுக, அஇஅதிமுக மட்டுமல்ல, முலாயம், பாஜக, லாலு என்று அனைவரும்தான். கள்ள வாக்களிப்பதில் பிஎச்.டி வாங்க ஒவ்வொரு கட்சியும் முயன்று வருகிறது. வாக்காளர்களை அடித்து உதைத்துத் துரத்துவது பீகாரிலும் உத்தரப் பிரதேசத்திலும்தான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும்போது, உள்ளாட்சித் தேர்தல்களில் கருணாநிதியின் திமுக, “நானும் இருக்கேண்டா” என்று தமிழகத்தை உத்தரப் பிரதேசம், பீகார் அளவுக்குக் கொண்டுசெல்கிறது.

உள்ளூர் போலீஸ் என்றாலே ஆளும் கட்சியின் ஜிஞ்சா என்று அனைவரும் ஒப்புக்கொண்டுவிட்டனர். உளவுத்துறையின் வேலை எதிர்க்கட்சிகளை உடைப்பது, ஒட்டுக் கேட்பது.

***

இப்படி இருக்கும்போது தேர்தலை எப்படி நியாயமாக நடத்துவது? இதற்குத்தான் தேர்தல் ஆணையம், ஒரு போருக்குத் தேவையான அளவுக்கு பாராமிலிட்டரி, ராணுவம் ஆகியவற்றின் துணையை நாடுகிறது.

ஒழுக்கம் கெட்ட நாட்டில், தேர்தல் மட்டுமாவது ஓரளவுக்கு ஒழுக்கமாக நடக்கவேண்டும் என்றால் ராணுவ மொபிலைசேஷன் தேவை என்று கடந்த 17 வருடங்களாக தேர்தல் ஆணையம் நினைக்கிறது. நவீன் சாவ்லா இதனை ஒருவேளை மாற்றக்கூடும்.

இந்தத் தேர்தல் ஆணைய நிலைப்பாடுதான், கடைசியாக ஐ.பி.எல் இந்தியாவில் நடப்பதற்கு சங்கூதியது. ஐ.பி.எல், பிசிசிஐ ஆசாமிகள் கேவலமானவர்கள்தான் என்றாலும் ஊடகங்கள், கார்ட்டூன்கள் சொல்வதுபோல அவ்வளவு மோசமானவர்கள் அல்ல. தேர்தலை வேறு நாட்டுக்கு நகர்த்தினால் என்ன அல்லது தேர்தலைத் தள்ளிவைத்தால் என்ன என்று இவர்கள் எந்தக் காலத்திலும் கேட்க மாட்டார்கள். ஆனாலும் கார்ட்டூன்கள் அப்படித்தான் சித்திரித்தன.

ஐ.பி.எல் என்பது பல கோடி ரூபாய்கள் புழங்கும் தொழில். ஓர் ஆண்டு தொலைக்காட்சி வருமானம் 820 கோடி ரூபாய்! அதை நகர்த்துவது, மாற்றுவது என்பது கடினமான காரியம். உள்துறை அமைச்சகம், பாதுகாப்புக்கு என்று நல்ல பணத்தை வாங்கிக்கொண்டு, இந்தியாவிலேயே ஆட்டங்களை நடத்த ஒத்துழைப்பு கொடுத்திருக்கலாம். சும்மா இருக்கும் சில ராணுவ டிவிஷன்களை இதற்கென வேலைக்கு அமர்த்தி, ஓர் ஆட்டத்துக்கு இத்தனை ரூபாய் என்று கேட்டு வாங்கியிருக்கலாம்.

ஆனால், காங்கிரஸ் மேலிடத்துக்கு லலித் மோடியிடம் என்ன குறையோ தெரியவில்லை. மூன்று முறை ஷெட்யூலை மாற்றியும் மஹாராஷ்டிரம் (காங்கிரஸ் அரசு), ஆந்திரம் (காங்கிரஸ் அரசு) ஆகியவை தங்கள் நிலையை மாற்றிக்கொண்டே இருந்தன. விளைவு: ஐ.பி.எல் வேறு நாட்டுக்குப் போகவேண்டியதாயிற்று.

இதனால் யாருக்கும் நஷ்டம் இல்லை. போ, ஒழியட்டும் ஐ.பி.எல் என்று சில விமரிசகர்கள் சொல்கிறார்கள். இது நியாயமற்றது. பணம் பண்ணும் முரட்டு ஆசாமிகளைக் கண்டு சிலருக்கு வரும் நியாயமற்ற கோபம்தான் இது.

இதில் என்ன வேடிக்கை என்றால், ஐ.பி.எல் தென்னாப்பிரிக்கா செல்கிறது. அங்கும்... ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல்! அதுவும் மிக இளைய குடியாட்சிதான். இந்தியா அளவுக்கு அங்கு தீவிரவாத பயம் இல்லை என்றாலும், அங்கும் வன்முறை உண்டு.

ஒரே நேரத்தில் தேர்தலையும் நடத்தி, விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேவையான பாதுகாப்பையும் தர இந்தியா வக்கற்றது என்றுதான் உள்துறை அமைச்சர் சிதம்பரம் சொல்கிறார். பாஜகவின் அருண் ஜெயிட்லி இப்படிக் குற்றம் சாட்டுவதில் உள்ள நியாயத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.

எப்படி இந்தியா ஒரு வல்லரசாக முடியும்?