Sunday, May 31, 2009

கல்வி, சீருடை, காலணி, புத்தகம், நோட்டுகள் இலவசம்

கல்விக்குக் கட்டணம் கிடையாது. சீருடை, காலணி, புத்தகங்கள், நோட்டுகள் இலவசம். தமிழ் மீடியம், ஆங்கில மீடியம் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். கம்ப்யூட்டர், யோகா, ஆங்கிலத்தில் பேசுதல் ஆகியவை இலவசமாகக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை. பெண்களுக்கு மட்டும்.


எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி இது. ஒரு காலத்தில் மிகவும் பெயர்பெற்றிருந்த பள்ளி. நாளடவில் தனியார் கல்விக்கூடங்கள் மீதான மோகம் அதிகமாக, அதிகமாக, இந்தப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் பின்னணியில் பெருத்த மாற்றம். விளைவாக இன்று இந்தப் பள்ளியை யாரும் கண்டுகொள்வதில்லை. அதனால்தான், இலவசம், இலவசம் என்று தெருவெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள்.

அதே நேரம், பல ஏழைகளும்கூட, இந்தப் பள்ளியைவிடத் தரம் குறைந்த பல தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் ஆண்டுக்கு 15,000 முதல் 20,000 ரூபாய் வரை பணம் செலவழித்து, தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைக்கிறார்கள்.

கணபதி ஐயர் உயர்நிலைப் பள்ளி போன்ற பல அரசுப் பள்ளிகளுக்கும் ஒரு இமேஜ் மேக்-ஓவர் தேவை. இந்தப் பள்ளிகளும் தரமான கல்வியை வழங்குபவை, சொல்லப்போனால், பல தனியார் பள்ளிகளைவிடச் சிறந்தவை என்ற உண்மை பொதுமக்களுக்கு உரைக்குமாறு செய்திடல் வேண்டும். அதற்கு ‘இலவசம்’ என்ற போஸ்டர் தேவை இல்லை. அதற்குத் தேவை வேறு சில விஷயங்கள்.

அதைப்பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

Friday, May 29, 2009

அரஸ்(களின்) ஓவியக் கண்காட்சி

இன்று ஓவியர் அரஸ் அழைப்பின்பேரில் அவரது மகன்கள் (ஹர்ஷ், அரவிந்த்) வரைந்துள்ள ஓவியங்களைக் காண விஞ்யாசா ஆர்ட் கேலரிக்குச் சென்றிருந்தேன். அங்கே அரஸின் சில ஓவியங்களும் இருந்தன. இரு பையன்களும்கூட நன்றாகவே வரைந்திருந்தனர். சில படங்கள் மட்டும் இங்கே - அவசரமாக மொபைல் போனில் பிடித்தது. முதல் இரண்டு படங்கள் அரவிந்த் வரைந்தவை.

Mad rush to jump into the water

Clash of the titans

இந்த இரண்டு படங்கள் அரஸ் வரைந்தவை.

Flowing movement

Folksy movement

இன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய்

நேற்று, 28 மே 2009, கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் மருத்துவர் புருனோ மஸ்கரனாஸ் “இன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய்” (Influenza A(H1N1) Pandemic) என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து கலந்துரையாடலும் இருந்தது.

அதன் ஒலிவடிவம் இங்கே.
.

இனி காங்கிரஸும் கேட்கும்!

காலை நடையின்போது கண்ணில் பட்டது.

Congress wants a share in power in Tamil Nadu

Wednesday, May 27, 2009

வேலை தேடுதல்

சென்ற வாரம், பி.எஸ்சி வேதியியல் படிக்கும் ஒரு மாணவனைச் சந்தித்தேன். இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிவிட்டு, மூன்றாம் ஆண்டு போகிறான். மேற்கொண்டு என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டேன். ஐ.ஏ.எஸ் படிக்க விருப்பம் என்றான். சரி, ஐ.ஏ.எஸ் படிக்கவேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்று தெரியுமா என்று கெட்டேன். தெரியாது என்றான். ஆனால், மூன்றாம் ஆண்டு தேர்வுகள் முடிந்ததும், ஏதாவது கோச்சிங் வகுப்பில் சேர்ந்தால் போதும் என்று நினைப்பதாகச் சொன்னான்.

ஐ.ஏ.எஸ் பரீட்சைக்குத் தயார் செய்யும் அதே நேரம், வேலை எதிலாவது சேர முற்படுவாயா என்று கேட்டேன். ஆமாம், வேலை என்பது மிகவும் அவசியம் என்றான். அவனது பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள். சம்பாத்தியம் மிகவும் குறைவு. மிகவும் பின்தங்கிய வகுப்பிலிருந்து வருபவன். குடும்ப உறவுகள் என்று யாரும் அவனுக்கு வேலை வாங்கித் தரப்போவதில்லை. இப்போது அவன் படிப்பதற்கும் ஹாஸ்டலில் தங்குவதற்குமான செலவை அவனது கல்லூரி நிர்வாகமே ஏற்றுக்கொண்டுள்ளது.

அப்படியானால், ஐ.ஏ.எஸ் என்பதைவிட, வேலை என்பது முக்கியம் அல்லவா என்று கேட்டேன். ஆமாம் என்று ஒப்புக்கொண்டான். சரி, வேலை என்றால் எங்கெல்லாம் வேலை கிடைக்கும், எந்த மாதிரியான வேலை கிடைக்கும் என்று தெரியுமா என்றேன். தெரியாது என்றான். அவன்தான் கல்லூரியில் அவனது வகுப்பில் முதல் மாணவன். ஆனால் அது போதாதே வேலை கிடைக்க. அவனது கல்லூரியில் கேம்பஸ் நேர்முகம் நடக்கிறதா என்று கேட்டேன். ஐடி சரிவால், யாரும் வருவதில்லை என்றான்.

சரி, ஐடி வேலையை கண்டுகொள்ளாதே; ஆனால் வேதியியல் வேலைகள் ஏதேனும் கிடைக்குமே என்றேன். எந்த மாதிரியான வேதியியல் நிறுவனங்கள் புதுமுக பயிற்சி நிலை மாணவர்களை எடுத்துக்கொள்ளும் என்று தெரியுமா என்று கேட்டேன். தெரியாது என்றான்.

நம் மாணவர்கள் வேலை பற்றி மிகவும் அசட்டையாக, கவனக்குறைவாக இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. முதல் வேலை என்பதை நாம்தான் தேடிப் பெறவேண்டும். அது தானாகக் கையில் கிடைக்காது. ஒரு வேலையில் எப்படியோ தட்டி முட்டிச் சேர்ந்துவிட்டால், அடுத்து அடுத்து என்று வேலைகள் கற்றுக்கொண்டு, நிறுவனங்கள் மாறி, ஒரு நல்ல நிலையை அடையலாம்.

கல்லூரிப் படிப்பின்போதே ஒரு மாணவன் மேற்படிப்பு, வேலை ஆகியவை தொடர்பாக என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது பற்றி சற்றே விரிவாக, சில பதிவுகளை எழுதலாம் என்றுள்ளேன். அதற்கான பீடிகை இந்தப் பதிவு.