Wednesday, September 28, 2011

பாதுகாப்பான அணு மின்சாரம்

இன்றைய தமிழ்பேப்பரில் நான் எழுதியுள்ள கட்டுரை.

அணு மின்நிலையம் வேண்டுமா, கூடாதா என்பது பற்றி தொடர்ந்து விவாதங்களை எழுப்பும்முகமாகப் பல கட்டுரைகளை தமிழ்பேப்பரில் வெளியிட உள்ளோம். நாளை முக்கியமான இரு கட்டுரைகள் வெளியாகவுள்ளன.

Tuesday, September 27, 2011

2ஜி, சுவாமி, சிதம்பரம், இராசா, கனிமொழி

வெகு நாள்களுக்குப் பிறகு 2ஜி பற்றி எழுதுகிறேன். என் கருத்தில் இப்போதும் மாற்றமில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் இல்லாமல் கொடுத்ததால் நஷ்டம் ஏதும் வந்துவிடவில்லை என்றே தொடர்ந்து சொல்லிவந்துள்ளேன். இப்போதும் அப்படியே.

சுவாமி என்ன வாதிடுகிறார்? இராசா தனியாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் அமைச்சரவை, இரு அமைச்சர்கள் அடங்கிய குழுவை நியமித்து, முடிவை அவர்களே எடுக்குமாறு கூறியது. அந்த இரு அமைச்சர்கள் அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதமபரமும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.இராசாவும். எனவே ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாமல் சும்மா கொடுத்ததால் நஷ்டம் ஏற்பட்டது என்றால் அதற்கு இருவருமே காரணம். எனவே இராசாவைப் போலவே சிதம்பரத்தையும் விசாரித்து ஜெயிலுக்கு அனுப்புங்கள் என்கிறார் சுவாமி.

நியாயமான வாதம்தான். இதனால்தான் அரசு ஆரம்பத்திலிருந்தே, ஒரே குரலில் பேசியிருக்கவேண்டும். ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாததால் நஷ்டம் ஏதும் இல்லை என்று அடித்துச் சொல்லியிருந்தால் இத்தனை கூத்தும் தேவையே இல்லை. கொள்கை முடிவு. அவ்வளவுதான். ஆனால், இந்தக் கொள்கை முடிவை எடுக்க அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் தரப்பட்டது என்று நிரூபணம் ஆனால் அல்லது ஏதோவிதத்தில் பணம் கைமாறியுள்ளது என்றால் அப்போதுதான் குற்றம் நடந்திருக்கிறது என்று ஆகிறது. அந்த நோக்கில் விசாரணை நடந்தால், வழக்கின் நடைமுறையும் வேறுவிதமாகச் சென்றிருக்கும்.

பின்னால் வந்த நிதியமைச்சர் பிரணவ் முகர்ஜி, சிதம்பரம் ஏலம் விடாதது தவறு என்று சொன்னால், அதனால் பெரிய சிக்கல் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. முகர்ஜியின் கருத்து தவறு என்று சிதம்பரத்துக்குத் தோன்றலாம். சிதம்பரத்தின் கருத்து தவறு என்று முகர்ஜிக்குத் தோன்றலாம்.

தினம் தினம் சுவாமி ஏதோ புது ஆவணங்களை எடுத்துக் காண்பித்து அடித்து ஆடுகிறார். அதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அரசுத் தரப்பு விழிக்கிறது. இதில் பாவம், சிக்கிக்கொண்டவர்கள் இராசாவும் கனிமொழியும்தான். அவர்களை இன்னமும் சிறையில் வைத்திருக்க என்ன முகாந்திரம் உள்ளது என்றே தெரியவில்லை. கூப்பிட்டால் தினம் தினம் நீதிமன்றத்துக்கு வந்து வாதாட அவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஊரைவிட்டு ஓடிப் போய்விடுகிறவர்கள் மாதிரித் தெரியவில்லை. பின் எதற்குச் சிறை?

நாளை அவர்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை என்று முடிவானால், சிறை நாள்களைத் திருப்பித் தரமுடியுமா நீதிமன்றத்தால்?

கலைஞர் தொலைக்காட்சி விவகாரத்தில் சிக்கல் இல்லாமல் இல்லை. பணம் எதற்காகவோ அங்கே உள்ளே வந்துள்ளது. அதனை விசாரிக்கலாம்; கடுமையான அபராதம் போடலாம். ஆனால் லட்சம் கோடிகள் கையாடப்பட்டதாகச் சொல்லி, இருவரைச் சிறையில் வைத்து, கடைசியில் வழக்கே பிசிபிசுத்துப் போகும்போலத் தோன்றுகிறது. இன்றுவரை வலுவான வழக்கு ஏதும் என் கண்ணுக்குத் தெரியவில்லை.

சுவாமி மட்டும் ஆனால் அயராது போராடுகிறார். அந்த ஒரு விடாமுயற்சிக்காக மட்டும் அவரைப் பாராட்டலாம்.

Monday, September 26, 2011

உள்ளாட்சித் தேர்தல்

சமீபத்தில் இரண்டு அரசியல்வாதிகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். இருவரும் அஇஅதிமுக கிடையாது. இந்தமுறை உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை ஏதும் இருக்காது என்றே அவர்கள் கருத்து தெரிவித்தனர். வெற்றிபெறுவதில் அஇஅதிமுகவுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கப்போவதில்லை என்பதால் வன்முறையில் இறங்கமாட்டார் என்றும் அது அவருடைய இமேஜுக்கு இழுக்காகிவிடும் என்று இப்போது ஜெயலலிதா கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் வாக்குப்பதிவு மந்தமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அஇஅதிமுக 1, திமுக 2 என்று முடிவுகள் வரும் என்பது முடிவாகிப்போன விஷயம். தமிழகத்தின் நம்பர் 3 யார் என்பது இந்தத் தேர்தலில் தெரியப்போகிறது. தேமுதிகவும் கம்யூனிஸ்டுகளும் சேர்ந்த கூட்டணி 3 என்று வைத்துக்கொண்டால், காங்கிரஸுக்கு எத்தகைய மரண அடி விழப்போகிறது என்பதைப் பார்க்கவேண்டும்.

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஃபுட்கிங் சரத்பாபு சுயேச்சையாகப் போட்டிபோடுகிறார். சைதை துரைசாமி எளிதில் ஜெயித்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

வார்டு கவுன்சிலர் இடத்துக்கு சுயேச்சையாக நிற்பது பற்றிச் சில மாதங்களுக்குமுன் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், இடையில் வீடு மாற்றி வேறு இடத்துக்குக் குடிபோக முடிவெடுத்தேன். இந்த மாதக் கடைசியில் வீடு மாறியிருப்பேன். புது வீடு இருக்கும் வார்டில் தேர்தலுக்கு நின்றால்தான் உபயோகமாக இருக்கும். ஆனால் அந்தப் பகுதியில் இன்னும் யாரையுமே தெரியாது. இரண்டு வாக்குக்குமேல் தேறாது! எனவே இம்முறை தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். அடுத்த உள்ளாட்சித் தேர்தல் இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து. அப்போது பார்க்கலாம்.

Saturday, September 24, 2011

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே

என் மொபைல் போன் கேமராவால் இன்று பிடித்த சில சுவரொட்டிகள்:




கேமரா போன் இருக்கிறது. கழகத் தொண்டர்கள் இருக்கிறார்கள். எனவே அவ்வப்போது அம்மா சுவரொட்டிகள் இந்தப் பதிவில் காணக் கிடைக்கும்.

தூக்கு தண்டனை எதிர்ப்புக் கூட்டம் இன்று


கிழக்கு பதிப்பக அலுவலகத்துக்கு எதிரே உள்ள ஹேமமாலினி திருமண மண்டபத்தில் இன்று ‘தூக்கு தண்டனை எதிர்ப்புக் கூட்டம்’ என்ற தட்டியைப் பார்த்தேன். வைகோ, திருமாவளவன், நல்லகண்ணு, ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்ற அரசியல்வாதிகளும் பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி போன்ற தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொள்கிறார்கள். பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கலந்துகொள்கிறார். 4.00 மணிக்கு.

அடுத்ததாகத்தான் அஇஅதிமுக தலைமை அலுவலகம் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு இடம் கேட்டு நிற்கும் வெள்ளை-வெள்ளை சீருடைக் கூட்டம் ஒன்றும் நிற்கிறது.