Thursday, August 02, 2012

மின் கட்டுமானத்தின் சிதைவு

இந்த வார ஆரம்பத்தில் வட இந்தியாவில் மின் இணைப்புப் பின்னலில் சிக்கல் ஏற்பட்டு சுமார் 20 மாநிலங்களில் இரண்டு நாள்கள் மின்சாரம் முற்றிலுமாக நின்றுபோனது.

மின்சாரம் ஒரு மாநிலத்தின் பொறுப்பு. ஒவ்வொரு மாநிலமும் தனக்கான மின் தேவையை எப்படியோ உற்பத்தி செய்துகொள்ளவேண்டும். ஆனால் மின்சாரத்தின் அருமை கருதி மத்திய அரசு இதில் தலையிட்டு சில வேலைகளைச் செய்கிறது. தன் கட்டுப்பாட்டில் உள்ள என்.டி.பி.சி, என்.எல்.சி போன்ற நிறுவனங்கள்மூலம் மின் உற்பத்தி செய்கிறது. மாநிலங்களை இணைக்கும் பவர் கிரிட் எனப்படும் மின் வலைப்பின்னலை நடத்துகிறது. அணு மின்நிலையங்களை இயக்குகிறது. மாநில அரசுகள் மின் நிர்வாகத்தை மேம்படுத்த மானியம் தருகிறது.

உபரி மின்சாரத்தைச் சேமித்து வைக்க முடியாது. மின்சாரம் என்பது ஓடும் பொருள். சேமக்கலங்களில் (பேட்டரி) அதிகம் சேர்த்து வைக்க முடியாத பொருள். வீடுகளில் இன்வெர்ட்டர் போன்றவற்றில் நாம் கொஞ்சமாகச் சேமித்து வைக்கிறோம். ஆனால் மாநில அளவில் இது சாத்தியமில்லாத ஒன்று. நீர் மின் நிலையங்களில் இது கொஞ்சம் சாத்தியம். உபரி மின்சாரம் இருந்தால் அதனைக்கொண்டு மோட்டார்களை இயக்கி கீழிருந்து மேலே உள்ள அணைக்கு நீரைக் கொண்டுபோய் வைக்கலாம். பின் மீண்டும் மின்சாரம் தேவைப்படும்போது அந்த நீரைக் கீழ் நோக்கிக் கொட்டவைத்து ஜெனெரேட்டர்களை இயக்கி மின்சாரத்தைப் பெறலாம். ஆனால் நீர் மின்சாரம் உற்பத்தி அளவே இன்று மிகக் குறைவானது. கரியை எரித்துப் பெறும் மின்சாரத்தைச் சாம்பலில் செலுத்தி அதனை மீண்டும் கரி ஆக்கமுடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

மின் வலைப்பின்னலின்மூலம் சில மாநிலங்களை ஒன்று சேர்க்கும்போது ஒரு மாநிலத்தின் உபரி மின்சாரம் பிற மாநிலங்களுக்குச் செல்லுமாறு செய்யமுடியும். சில மாநிலங்களுக்குப் பொதுவான ஒரு மின் நிலையம் (உதாரணம்: நெய்வேலி) தயாரிக்கும் மின்சாரத்தை குறிப்பிட்ட அளவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அனுப்பமுடியும்.

வட இந்தியாவில் ஏற்பட்ட பிரச்னைக்குக் காரணம், ஒரு சில மாநிலங்கள், முக்கியமாக உத்தரப் பிரதேசம், ஹரியானா போன்றவை தாம் ஒப்புக்கொண்ட மின்சார அளவைவிட அதிகமாக மின் வலைப்பின்னலிலிருந்து உருவியதுதான். இதன் காரணமாக ஒட்டுமொத்த மின் கட்டுமானம் பாதிக்கப்பட்டு, கிரிட் செயல் இழந்தது. இதனால் அனைத்து மின் நிலையங்களும் தானாகவே வேலை செய்வதை நிறுத்திக்கொண்டன. ஏனெனில் அவை உருவாக்கும் மின்சாரத்தை கிரிட்டுக்குள் செலுத்த முடியாது. இப்படி ஒவ்வொன்றாக மின் நிலையங்கள் வேலை செய்வதை நிறுத்த, ஒட்டுமொத்த வட இந்தியா இருளில் மூழ்கியது.

நின்றுபோன அனல் மின் நிலையங்களை உடனடியாக மீண்டும் தொடங்கிவிட முடியாது. பெரும்பாலும் வெளியிலிருந்து கொஞ்சமாக மின்சாரம் உள்ளே வந்தால்தான் இவை மீண்டும் இயங்கத் தொடங்கும். ஒவ்வொன்றாக மின் நிலையங்களை இயக்கி, அவை கொஞ்சம் ஓடியபின், அவை தயாரிக்கும் மின்சாரம் சரியான ஃப்ரீக்வன்சிக்கு வந்தபின்னரே அவற்றை மீண்டும் கிரிட்டில் இணைக்க முடியும்.

ஒருமாதிரியாக இது நேற்று நடந்து, மீண்டும் பெரும்பாலான பகுதிகளுக்கு மின் இணைப்பு கிடைத்துள்ளது.

இது எஞ்சினியரிங் பழுது என்பதைவிட, அரசியல் கொள்கை பழுது என்றுதான் சொல்லவேண்டும். வேண்டிய அளவு மின்சாரம் தயாரிக்கும் கட்டுமானங்களில் முதலீடு செய்யாமல் இத்தனை ஆண்டுகளாக ஒவ்வொரு மாநில அரசும் பொதுமக்களை ஏமாற்றிவந்துள்ளன. கருணாநிதி, ஜெயலலிதா இருவரைவிடவும் மோசமான அரசியலைத்தான் மாயாவதி, முலாயம்/அகிலேஷ் யாதவ் கோஷ்டி செய்துள்ளது. நாட்டில் பெரும் மாநிலங்கள் என்று எடுத்துக்கொண்டால் யாருமே வேண்டிய அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதில்லை. கொஞ்சம் அளவு குறைந்த மாநிலங்களில் குஜராத் உபரி மின்சாரம் தயாரிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் உபரி மின்சாரம். அவ்வளவுதான்.

நம் உண்மையான மின் தேவை நன்கு கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய சுமார் 5 கோடி ரூபாய் முதலீடு செய்யவேண்டும். எனவே தேவையான முதலீட்டு அளவும் தெரியும். ஆனால் செயல்படுத்துவது எளிதல்ல. இடம் வேண்டும். இந்தியாவில் இடத்தை மக்களிடமிருந்து பெறுவது எளிதல்ல. அதற்காகத்தான் Ultra Mega Power Projects (UMPP), Special Purpose Vehicles (SPV) ஆகியவற்றை மத்திய அரசு முன்வைத்தது. ஆனால் இது பெருமளவு முன்னேற்றம் காணவில்லை. எஸ்.பி.வியில் அரசே இடத்தைக் கையகப்படுத்தி, ஒரு கம்பெனியை உருவாக்கி, அதனை ஏலம் விடும். தனியார் நிறுவனங்கள் அந்த கம்பெனியை வாங்கி, அந்த இடத்தில் சட் சட்டென்று மின் நிலையங்களை அமைத்து மின்சார உற்பத்தியை மூன்று வருடத்துக்குள் ஆரம்பித்துவிடவேண்டும். ஆனால் ரிலையன்ஸ் பவர், டாடா பவர் போன்றோரே இந்த எஸ்.பி.விக்களை வாங்கி இயக்குவதில் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

மொத்தம் 16 யு.எம்.பி.பிக்கள், ஒவ்வொன்றும் சுமார் 4,000 மெகாவாட் (மொத்தம் 64,000 மெகாவாட்) என்று மிகப் பேராசையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டங்களில் ஒன்றே ஒன்று குஜராத்தில் டாடா பவரின் ஒரு பகுதி மட்டுமே இப்போது இயங்குகிறது. மீதியில் மூன்று திட்டங்கள் ரிலையன்ஸ் பவருக்குக் கிடைத்தன. அவர்கள் இரண்டில் மட்டும் கட்டுமானங்களை ஆரம்பித்துள்ளனர். மீதி எல்லாம் எடுப்பதற்கே ஆள் இல்லாமல் திண்டாட்டம். ரிலையன்ஸ் பவரின் பணக் கையிருப்பையும் அவர்கள் இதுவரையில் வாங்கியுள்ள கடனையும் வைத்துப் பார்த்தால் அவர்கள் எடுத்துக்கொண்ட வேலையே ஒழுங்காக முடியுமா என்று சந்தேகமாக உள்ளது.

மத்திய அரசு முழுமூச்சுடன் இறங்கியுள்ள இந்தத் திட்டத்தின் நிலையே இதுதான். முழுமையான நிலை பற்றி அறிந்துகொள்ள இங்கே செல்லவும்.

அணு மின்சாரம் பற்றிப் பேசவே வேண்டாம். அதற்கு எதிர்ப்பாளர்கள் எங்கு பார்த்தாலும் உள்ளனர். சூரிய ஒளி மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் அப்படியே நம்மைக் காப்பாற்றிவிடப் போவதாக இவர்கள் நினைக்கிறார்கள்.

மக்களின் மின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போகிறது. மின் விசிறி இல்லாமல் தூங்க முடிவதில்லை. இன்னும் கொஞ்ச நாளில் ஏசி இல்லாமல் தூங்க முடியாது என்றாகிவிடும். ஃப்ரிட்ஜ் இல்லாமல் குளிர்ந்த நீர் குடிக்கக் கிடைக்காது. தோசை மாவு கெட்டுவிடும். தயிர் புளித்துவிடும். பாக்கெட் பால் வீணாகிவிடும். செல்பேசி, கம்ப்யூட்டர், டிவி என்று பிறவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதுதவிர, பொதுச் சேவைகள் - ரயில், டிராஃபிக் விளக்குகள் - என அனைத்துக்கும் மின்சாரம் தேவை. இந்த மின்சாரம் எங்கிருந்து கிடைக்கப்போகிறது?

அடுத்த கவலை, மேலே சொன்ன 64,000 மெகாவாட் யு.எம்.பி.பி வந்தால், அதற்குத் தேவையான கரி எங்கிருந்து வரப்போகிறது? அந்தக் கரியின் விலை தொடர்ந்து குறைவாகக் கிடைக்குமா? இல்லை கரி அலாட்மெண்டில் பிரதமர் 2 லட்சம் கோடி ரூபாய் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திவிட்டார் என்று அபத்தமாகக் குற்றம் சாட்டிக்கொண்டிருப்போமா?

27 comments:

  1. /சூரியஒளி மின்சாரமும்......காப்பாற்றிவிடப்போவதாக....நினைக்கிறார்கள் /

    கடந்த இரண்டு மாதமாக காற்றாலை மின்சாரத்தால்தானே நமக்கு தூக்கம் வந்தது!!

    சூரியஒளி மின்சாரம் மக்களே தயாரித்து பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு மானியங்கள் வழங்குகிறது. 9 மாதங்கள் வெயிலடிக்கும் தென்னிந்தியாவில் தாராளமாக இதை பயன்படுத்தலாம். மழை, குளிர் காலங்களில்மட்டும் அனல், புனல் மினசாரம் பயன்படுத்தலாம். சூரியஒளி மின்சாரத்தை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் குறைவு என்பதே உண்மை.

    மற்றொறு பிரச்சனை Transmission Loss. உலகளவில் TL அதிகமாக இருக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இதை எப்போதுதான் சரி செய்வார்கள் என தெரியவில்லை??

    ReplyDelete
    Replies
    1. டிரான்ஸ்மிஷன் லாஸ் பற்றி நாம் கவலைப்படவேண்டியதுதான். ஆனால் அதற்காகும் செலவும் அதிகமே. கம்பிகளை மாற்றவேண்டும். டிரான்ஸ்ஃபார்மர்களை மாற்றவேண்டும். வேறு சில கருவிகளை நிறுவவேண்டும். இதனை நாடெங்கும் செய்யவேண்டும். இதற்கான முதலீட்டைச் செய்யமுடியாத நிலையில்தான் அரசின்கீழ் உள்ள விநியோக நிறுவனங்கள் உள்ளன. இதில் ஈடுபட எந்தத் தனியாரும் வரப்போவதில்லை. அவர்கள் வரக்கூடாது என்பதுதான் நம் அன்பான இடதுசாரிகளின் கருத்தும். ஒரு யூனிட் விலையை ஏற்றினால் மக்கள் கொதித்துப் போகிறார்கள். இந்நிலையில் ஒரு விநியோக நிறுவனம் எப்படி டிரான்ஸ்மிஷன் கட்டுமானத்தை சீர் செய்யப்போகிறது?

      Delete
  2. Sir, Awesome Article !!!
    Plenty of Information about power generation. Superb way of travelling in the writing.
    Its Classic no other words .
    Thanks for the Article.

    ReplyDelete
  3. இந்தப் பதிவிற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

    வண்ணநிலவன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு வாங்கினேன்.ஆனால் புத்தகத்தின் தரம் சற்று ஏமாற்றமளித்தது.400 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் Hardbound அட்டையில் இல்லை,இன்னொன்று பக்கங்களின் தரம் ஆதவன் சிறுகதைகள் போல அவ்வளவு நேர்த்தியில்லை.

    ReplyDelete
    Replies
    1. இனி ஹார்ட்பவுண்ட் எந்தப் புத்தகத்துக்கும் நாங்கள் போடப்போவதில்லை. விலை அதிகமாகிறது. கட்டுப்படியாகவில்லை. பணவீக்கம் அதிகமாகும்போது, இடுபொருள்களின் விலை அதிகமாகும்போது புத்தக விலையைக் கூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. இனி வரப்போகும் ஆதவன் சிறுகதைத் தொகுதியின் விலையும் அதிகமாகும்.

      உங்கள் பிரதியின் பக்கங்களின் தரம் சரியில்லை என்பதற்கு வருந்துகிறேன். உங்கள் பிரதியைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு எங்கள் கடையிலிருந்து வேறு நல்ல பிரதியை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இல்லை என்றால் நீங்கள் விரும்பும் வேறு எந்தப் புத்தகத்தையும் அதே விலைக்குச் சரிசமமாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நேரில் வரமுடியவில்லை என்றால் தபால் மூலமும் இதனைச் செய்யலாம். உங்கள் தொலைப்பேசி எண்ணைக் கொடுத்தால் அழைத்துப் பேசுகிறேன். உங்கள் தொடர்புத் தகவல்களை என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். நன்றி.

      Delete
  4. Badri,

    As a consumer, we must be ready to pay the right price for the product. In India, prices of power is artificially kept low for a long time and this discouraged private investment getting chanellized into power sector.

    The mindless competition among companies such as Tata and Reliance while bagging the project resulted in companies quoting risky low prices based on risky assumptions. with the change in environment factors such as increase in global coal price, Government must have pragmatically allowed the companies to revise the price. This is not happening.

    On seeing the huge demand for coal from India, global companies too hiked the price of Coal and Indonesian Government policy affected the calculations of power companies.

    Solid steps are required to reduce the transmission and distribution losses which is almost 45%. This requires investment from distribution companies. with most of the Electricity board incurring heavy loses, who will bring this investment?

    India need leaders with vision but unfortunately we have very few guys and those guys also lack popularity. We need to face a crisis and then only tough political decisions will be taken.But more debates are required at least to educate the common people to understand the magnitude and nature of the problem.Incomplete understanding of this problem will do more harm.

    Rajkumar

    ReplyDelete
  5. //**அணு மின்சாரம் பற்றிப் பேசவே வேண்டாம். அதற்கு எதிர்ப்பாளர்கள் எங்கு பார்த்தாலும் உள்ளனர். சூரிய ஒளி மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் அப்படியே நம்மைக் காப்பாற்றிவிடப் போவதாக இவர்கள் நினைக்கிறார்கள்.**//

    பத்ரி அவர்களே இயற்கையோடு ஒன்றி வாழாத வாழ்கைதான் மனிதனும் பூமியும் அழிவதற்கு காரணம்..

    ReplyDelete
    Replies
    1. //பத்ரி அவர்களே இயற்கையோடு ஒன்றி வாழாத வாழ்கைதான் மனிதனும் பூமியும் அழிவதற்கு காரணம்..//

      First come out of your house then start living in a "kudil" without modernazation. Even dressing is against nature, so please remove them and use leaves if you have to cover yourself, oh wait!!! even that is against nature, leaf is supposed to be only on trees and not on you

      - Maayavi

      Delete
    2. மாயாவி அவர்களே நான் கூறியதை தவறாக புரிந்து கொண்டீர்கள் நான் இயற்கையோடு ஒன்றி வாழ்வதை பற்றி சொன்னால் நீங்கள் கற்கால வாழ்க்கை பற்றி சொல்லுகிறீகள். இதிலிருந்து நீங்கள் இயற்கைக்கு எதிரானவர் என்று தோன்றுகிறது..நாம் தற்காலத்தில் வாழும் வாழ்க்கை என்பது காலத்தின் கட்டாயம் சிலவற்றில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இருக்கிறது அவற்றை நாம் மாற்ற முடியாது..நீங்கள் தற்போது இந்த பூமியில் வாழ்கிறீகள் என்றால் அதற்கு காரணம் நம் முன்னோர்கள் இயற்கையை பாதுகாத்து நம்மிடம் கொடுத்து விட்டு சென்றதுதான்..நாமும் அதோ போல் இயற்கையை பாதுகாத்து நம் சந்ததிகளிடம் கொடுக்க வேண்டும் என்றால் இயற்கையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை..ஆனால் நாம் கடமையை மீறி விட்டோம்...

      Delete
    3. Relative to other sources அணு மின்சாரம் எதனால் இயற்கைக்கு புறம்பானது என்று விவரிக்க முடியுமா? Please don't cite Udayakumar or Gnani's articles. There is a difference between genuine concern and being a paranoid

      - Maayavi

      Delete
    4. இயற்கைக்கு புறம்பானதா அணு மின்சாரம் என்ற உங்கள் கேள்விக்கு எனது பதிலாக கேள்வி ஒன்று. அணுக் கழிவுகளை என்ன செய்வார்கள்? இதற்கு உங்களிடம் என்ன பதில். யாரோ ஒரு அணு விஞ்ஞானி கூறிய மாதிரி "மறு சுழற்சி செய்து ஒரு சிறிய பந்து போல் ஆக்கி விடுவோம்" என்ற அறிவார்ந்த பதிலை எதிர்பார்க்கவில்லை தெளிவாக விளக்கவும். இயற்கையாக படைக்கப்பட்ட எந்த ஒரு படைப்புக்கும் ஆரம்பம் மற்றும் முடிவு உண்டு. அது ஒரு வட்டம் மாதிரி அதுதான் இயற்கை. ஆனால் மனிதன் படைத்த செயற்கை படைப்புகள் எல்லாம் தற்காலிகமானவை ஒவ்வொரு தேவைக்கும் ஏற்ற மாதிரி தயாரானவை. ஆரம்பம் வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் முடிவு என்பது சிலவற்றுக்கு கிடையாது. மனிதனால் இயற்கையாக உருவாகிய மாதிரி எதையும் உருவாக்க முடியாது என்பதே உண்மை அதற்க்கு பல எடுத்துகாட்டுகள் இவ்வுலகத்தில் உண்டு. உடனே ஆரம்பித்து விடாதீர்கள் செயற்கையாக உருவான எவற்றையும் உபயோகபடுத்தாதே என்று சிலவற்றை அவற்றில் தவிர்கலாம் பூமியின் இயற்கை நலனுக்காக என்பதே எனது கருத்து.

      Delete
  6. Modi is not an Electrical Engineer but its being possible for him to bring down the Transmission Losses and able to produce excess Power. Is that impossible for Centre and Other states? Their inactivity is people's mistake?!?

    மத்திய மின்தொகுப்பிற்கு மி்ன்சாரம் தர தயார்: குஜராத் அரசு அறிவிப்பு! - vikatan.com

    Look to Software Not Hardware to Fix India's Grid - Forbes.com

    Power grid failure: Amid gloom, Gujarat sets an example - TOI

    ReplyDelete
  7. Article in TOI on Kujrat's effort on electricity generation is very good and could be an eye opener for other states as well as center.

    ReplyDelete
  8. எல்லாம் சரி.. ஆனால் இந்த வரிகள் ஏன்?

    //இல்லை கரி அலாட்மெண்டில் பிரதமர் 2 லட்சம் கோடி ரூபாய் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திவிட்டார் என்று அபத்தமாகக் குற்றம் சாட்டிக்கொண்டிருப்போமா?//

    ஊழல் இருப்பின் சுட்டிக்காட்ட வேண்டியது முறையல்லவா? நமது தேவைக்கு மத்திய அரசாங்கம் செய்யும் செயல்தானே முறையாக பொருட்களை வாங்குவது. ஊழல் இல்லாமல் / நாட்டிற்கு நஷ்டம் இன்றி என்பதைச் சொல்லியா தரவேண்டும். மிக அவசரமான, அவசியமான ஒரு பொருளை வாங்குவதாலேயே எந்த ஊழலையும் சகித்துக்கொள்ளலாம் எனச் சொல்வதுபோல இருக்கிறது.


    மற்றபடி மின் பிரச்சினைகளை அலசும் நல்ல கட்டுரை.

    ReplyDelete
    Replies
    1. கரி ஒதுக்கீட்டில் ஊழல் ஏதும் இல்லை என்பது என் கருத்து. அதனால்தான் அந்த வரி. முதலில் மின் உற்பத்தி நிலையங்களைக் கட்டுவதற்கே யாரும் வரமாட்டேன் என்கிறார்கள். அதிலும் நாம் மிகவும் நம்பியிருந்த யு.எம்.பி.பியில் 16-ல் நான்குதான் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் ஒன்றிலிருந்து மட்டும்தான் கொஞ்சமாவது மின் உற்பத்தி நடந்துள்ளது. (அது குஜராத்தில் உள்ளது, டாடா கட்டுவது என்பதை இங்கு கூட வைத்துப் பார்ப்பது நல்லது.) மூன்று இடங்களில் ஏலம் எடுத்திருந்த ரிலையன்ஸ் பவர், இரண்டு இடத்தில் மட்டுமே கட்டுமானத்தை உருவாக்கிவருகிறது. அதற்குள்ளாகவே அது ஒப்புக்கொண்ட விலை குறைவானது, அதனை அதிகரிக்கவேண்டும் என்ற பேச்சு வந்துள்ளது. பிற இடங்களில் எடுத்துக்கொள்ள யாருமே காணோம்.

      உதாரணமாக தமிழகக் கடற்கரையோரம் ஒரு 4000 மெகாவாட் மின் நிலையத்தை அமைக்க இன்னும் டெண்டர் கூட விடப்படவில்லை. அதற்குள் அதனைக் கட்டாயமாக எதிர்ப்போம் என்று மீனவ அமைப்புகளை முன்னிறுத்தி ஒருசிலர் பேச ஆரம்பித்துவிட்டனர்.

      ஆக, அனல் மின் நிலையமும் வரவில்லை; அணு மின் நிலையமும் கூடாது.

      மின் நிலையங்களுக்கு உத்தரவாதமாக கரி தரப்படவேண்டும் என்று பிரதமர் கோல் இந்தியா லிமிடெடுக்கு உத்தரவிட்டார். ஒப்புக்கொண்ட கரியைத் தரமுடியாவிட்டால் மின் நிறுவனங்களுக்கு அபராதம் தரவேண்டும் என்றும் உத்தரவிட்டார். உடனே அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. கரியை முன்னுரிமை கொடுத்துத் தராவிட்டால் அனல் மின் நிலையத்தை ஒரு தனியார் நிறுவனம் எப்படி நடத்தமுடியும்? அதைப் பற்றிக் கவலைப்படாமல் 2 லட்சம் கோடி ஊழல் என்று எதிர்க்கட்சிகள் கத்துகின்றன.

      மொத்தத்தில் ஒன்றுக்கும் உருப்படாத நாடாக, அரசியல் அமைப்பாக நாம் மாறிவருகிறோம்.

      Delete
  9. About the solar subsidies, I think its just an eyewash. I got a quote from a company in Chennai for a solar installation in our home. The price is prohibitively exorbitant. I am not able to do an exact research. I live in Denver US, and did the same thing, everything is transparent, and when I got the quote, it was very clear to me that I can have an installation which will take care of 85% of my need, and I can recover my investment in 7.5 years. But the quote from Chennai company is all wishy washy. Something is fundamentally wrong in India. I dont think the government is sincere in seeing every home to have a solar installation. Its a pity, that country like ours with so much sunshine, is not able to tap into it, even at times like this.

    ReplyDelete
    Replies
    1. I am not yet sure about the solar subsidy to individual houses. I will agree with you that things are not transparent in India. That is how we have been, unfortunately. Let us hope things change here.

      Delete
  10. Dear Badri,

    From outside perspective I have one doubt. When there is a national grid and if some states are drawing excess power, is it not possible to keep some kind of MCB installed and stop the rogue states from drawing excess power? This looks like a simple solution to me ? Or am I an idiot not to understand some fundamentals?
    Regards
    Ganesh

    ReplyDelete
    Replies
    1. Power is a fluid. It is changing second to second. The rogue states also produce excess power at times of the day. It is only the peak drawing which is high. It is important for the state administration to not violate the agreements. Even in the South, Karnataka was violating the agreed drawing - I guess this happened last year. I do not remember the exact time. Tamil Nadu and other states protested. However it was not so bad to completely demolish the grid. In the North, things must have reached pits.

      However today's paper says the problem is not probably over-drawing and it may be something else. So let us wait for a few more days to understand what the actual issues are.

      Delete
  11. //இல்லை கரி அலாட்மெண்டில் பிரதமர் 2 லட்சம் கோடி ரூபாய் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திவிட்டார் என்று அபத்தமாகக் குற்றம் சாட்டிக்கொண்டிருப்போமா?//

    if the media and hazare kind of people keep telling allegations with no scientific backing and people react to it then there will be no motivation for ministers to execute projects. They can very well enjoy their 5 year stint doing nothing and hence not facing any allegations...

    Wait for few more months... these comedians will come up with some allegations like scams worth 1 crore crore( 50 times of 2 லட்சம் கோடி ரூபாய் ).

    ReplyDelete
  12. பொன்.முத்துக்குமார்Thu Aug 02, 10:49:00 PM GMT+5:30

    அன்புள்ள பத்ரி,

    மின்னுற்பத்தி தேவை - உற்பத்தி - பற்றாக்குறை குறித்து எனது ஆதங்கம் இது.

    இந்தியாவில் மின்பரிமாற்ற இழப்பு (transmission loss) மத்திய அரசின் அறிக்கை படியே 30%. (உண்மை நிலவரம் அதிகமாகவே இருக்கும் என்பது என் ஊகம்) பெரும்பாலான நாடுகளில் இது 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாகவும் (சீனாவில் 8%) சொல்கிறார்கள். இவ்விழப்பை சர்வதேச அளவுக்கு குறைத்தாலே கிட்டத்தட்ட 30 GW மின்சாரம் சேமிக்க இயலும்.

    இந்திய அரசு நிறுவனமான மத்திய மின்சார ஆணையத்தின் (Central Electricity Authority) இணைய தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2010-11-க்கான ஒட்டுமொத்த இந்திய தேவை 122,287 MW. (122 GW) இது peak demand என்று அழைக்கப்படும் உச்ச தேவை. உற்பத்தியானது 110,256 MW. (110 GW) பற்றாக்குறை 12,031 MW.. (12 GW). 2011-12-ல் தேவை 136 GW ஆகவும், உற்பத்தி 119 GW ஆகவும் பற்றாக்குறை 17.5 GW ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    நாம் இந்த மின்பரிமாற்ற இழப்பை பாதியாக குறைத்திருந்தாலே (15%) இடைவெளியை ஈடுகட்டியிருந்திருக்க இயலும் (அதாவது சேமிக்க இயலும் என்று சொல்லப்படும் 30 GW-ல் பாதியை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால்.) 2011-12-லும் கூட கிட்டத்தட்ட இதேதான் நிலைமை.

    இதற்கான தொழில்நுட்பத்துக்காகும் செலவும் காலமும் அணு உலைகளுக்கான செலவைவிட குறைவாகவே இருக்கும் என்பது எனது ஊகம்.

    ஆனால் அரசு என்ன சொல்கிறது ? இந்த இழப்பையே இந்த ஆண்டுதான் 22 %-க்கே குறைக்க ஆவன செய்யப்போகிறதாம். இதை 16% - ஆக குறைக்க 2021-22-ல்தான் திட்டமிட்டுள்ளதாம். இழப்பை 10 சதம் குறைக்க 10 ஆண்டுகள். ஆஹா … மக்கள் நலம் நாடும் அரசு.

    சிறு கணக்கு போட்டுப்பார்த்தேன். அரசு அறிக்கைபடியே, தேவையும் உற்பத்தியும் ஆண்டுதோறும் இதே 8% அளவில் உயர்ந்துகொண்டே போனால், 2019-20-ல்தான் பற்றாக்குறை, மின்னிழப்பை குறைப்பதன்மூலம் சேமிக்க இயலும் 30 GW-ஐவிட அதிகமாக இருக்கிறது. அதுவரை பற்றாக்குறை 30 GW-ஐவிட குறைவுதான். இதையே தேவை மற்றும் உற்பத்தி உயர்வானது 15% என்று கொண்டால் (கிட்டத்தட்ட இப்போதிருப்பதுபோல இரண்டு மடங்கு) 2015-16-லேயே பற்றாக்குறை 30 GW-ஐவிட அதிகமாகிப்போகிறது.

    இதன்மூலம் தெரிவது என்ன ? மின்னிழப்பை கிட்டத்தட்ட 10% அளவுக்கு குறைப்பதன் மூலமாக மிச்சப்படும் மின்சாரமே கிட்டத்தட்ட இன்னும் நான்கிலிருந்து எட்டாண்டுகள் வரை பற்றாக்குறையை ஈடுகட்ட போதுமானது.

    நாம் என்ன செய்யப்போகிறோம் ?

    ReplyDelete
    Replies
    1. நான் மேலே ஓரிடத்தில் குறிப்பிட்டபடி, டிரான்ஸ்மிஷன் நட்டத்தைக் குறைக்கவும் நிறைய முதலீடு வேண்டும். அதனை ஸ்டேட் டிஸ்ட்ரிபூஷன் கம்பெனி செய்யவேண்டும். அந்த அளவுக்கு அவை எவற்றிடமும் பணம் இல்லை.

      Delete
    2. மேலும், இப்போது நாம் முன்வைத்திருக்கும் டிமாண்ட் என்பது உண்மையான டிமாண்டே இல்லை. நாட்டின் 10% மக்கள் மிடில் கிளாஸிலிருந்து அப்பர் மிடில் கிளாஸுக்கும், 15% மக்கள் ஏழைமையிலிருந்து மிடில் கிளாஸுக்கும் வரும்போது, நம் மின் தேவை கடுமையாக அதிகரிக்கும். மேலும் 5 கோடி புது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தர எக்கச்சக்கமான மின் தேவை வந்து சேரும். இவற்றையெல்லாம் சேர்த்தால் நம் பற்றாக்குறை இன்னும் பூதாகாரமாகப் பெருகும்.

      Delete
  13. ஆச்சரிய மனிதராக இருக்கீங்க. சின்ன சின்ன நிகழ்வுகளை அதன் தாக்கத்தை வலைபதிவில் எழுத வேண்டும் என்று நினைப்பேன். நேரம் அமைவதற்குள் அது அடுத்து அடுத்து என்று நகர்ந்து போய்விடும். பழசாகிவிடும். ஆனால் நீங்க கவனமாக ஒவ்வொன்றையும் எடுத்து எளிமையாக புரியும்படி எழுதி வைத்து விடுறீங்க...

    சிறப்பு.

    ReplyDelete
  14. //I am not yet sure about the solar subsidy to individual houses. I will agree with you that things are not transparent in India. //

    Badri,

    Check this out.

    http://lawforus.blogspot.com/2012/06/blog-post.html

    http://lawforus.blogspot.com/2012/06/blog-post_24.html

    http://lawforus.blogspot.com/2012/06/blog-post_28.html

    ReplyDelete
  15. இதெல்லாம் ஓவர் டுபாக்க்கூர். இந்தியர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள பல்பு ஃபேன் பொன்றவற்றை அணைப்பதாலும், இந்துக்கள் கல்யாணம், கருமாரி, கோயில் பொங்கல் திருவிழா என்று சொல்லி சீரியல் செட், ஸ்பீக்கர் வைத்து அலரவிடுவதைக் கட்டுப்படுத்தினலும் இந்தியாவின் மின் தேவையில் 10ல் ஒரு பங்கை சேமிக்கலாம் என்று மெக்டொனால்ட்ஸின் லேடஸ்ட் ஹாம்பர்கர் ஆய்வு அறிக்கை சொல்லுது.

    -ஆல் இன் ஆல் அருணாச்சலம்.
    முற்போக்குச் சிந்தனையாளர் சங்கம்,
    டி.கல்லுப்பட்டி.

    ReplyDelete
  16. Good article. Demand side conservation is going to be the next step to save the power reaching home / office after transmission losses. Currently, power generation sector is also facing several environmental issues which will add more fuel to power deficit in coming years.

    ReplyDelete