Monday, December 02, 2013

மதுரையின் முற்றுகை: கடவுள்கள், அரசர்கள், அடிமைகள்

Gods, Kings & Slaves: The Siege of Madurai, R.Venkatesh, Hachette India, Rs. 395 (Paperback).

கொஞ்சம் கனமான புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கையில் இடையில் சற்றே இளைப்பாறப் படிக்க எடுத்தது இந்த வரலாற்றுப் புதினத்தை. தமிழில் சில வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ள ஆர். வெங்கடேஷ், ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் முதல் நாவல்.

மதுரையின் இரண்டாம் பாண்டியப் பேரரசின் வீழ்ச்சியையும் மாலிக் காஃபுர் தலைமையில் மதுரைமீதான இஸ்லாமியப் படையெடுப்பையும் இணைக்கும் கதை. மிக மிகச் சுவாரசியமாகச் சொல்லிச் சென்றுள்ளார். உண்மையில் முதல் 19 அத்தியாயங்கள் அவ்வளவு வேகமான இருந்ததால் அந்த வேகம் குறையத் தொடங்கும் 20-வது அத்தியாயம் ஒருவிதத்தில் கவுண்டர்-கிளைமாக்ஸ் ஆகிவிடுகிறது.

குலசேகர பாண்டியனின் மகன்கள் வீரபாண்டியன், சுந்தரபாண்டியன். இதில் இளையவன் சுந்தரபாண்டியன் பட்டத்து ராணிக்குப் பிறந்தவன். மூத்தவன் வீரபாண்டியன் ‘துணைவி’ ஒருத்திக்குப் பிறந்தவன். வீரபாண்டியனுக்குத்தான் முதலில் இளவரசுப் பட்டம் கட்டப்படுகிறது. சுந்தரபாண்டியனுக்கும் சில ஆண்டுகள் கழித்து இளவரசுப் பட்டம் கட்டப்படுகிறது. வீரபாண்டியனுக்கு அரசு கிடைத்துவிடுமோ என்று சந்தேகத்தில் தன் தந்தையைக் கொன்றுவிட்டு மதுரையைக் கைப்பற்றிக்கொள்கிறான் சுந்தரபாண்டியன். அவனை எதிர்த்துத் துரத்தி ஓடச் செய்து மதுரையைத் தான் பிடித்துக்கொள்கிறான் வீரபாண்டியன். வெறுப்பில் நாடு முழுதும் அலையும் சுந்தரபாண்டியன், வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் படையெடுத்துவரும் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக் காஃபுரிடம் உதவி கோருகிறான். இறுதியில் இஸ்லாமியப் படைகள் மதுரையைத் தாக்கிக் கொள்ளையடித்துச் செல்கின்றன.

அதன்பின்னும் சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் தங்கள் சண்டையைத் தொடர்கின்றனர். அடுத்த பத்தாண்டுகளில் மேலும் இருமுறை கில்ஜியின் தளபதிகள் மதுரையைத் தாக்குகின்றனர். 1323-ல் நடந்த கடைசித் தாக்குதலில் மதுரையின் ஆட்சி முஸ்லிம்கள் வசம் செல்கிறது. மதுரை சுல்தான்கள் சில பத்தாண்டுக் காலம் ஆட்சி நடத்துகின்றனர். 1371-ல் விஜயநகரப் பேரரசின் குமார கம்பண்ண உடையார் மீண்டும் மதுரையைக் கைப்பற்றும்வரையில் மதுரை, முஸ்லிம் சுல்தான்கள் கையில் இருக்கிறது.

இது உண்மை வரலாறு. நான் மேலே எழுதியதுபோல எழுதினால் அது போரடிக்கும்.

ஆனால் ஆர்.வெங்கடேஷின் கையில் இந்தக் கதை பேருருவம் அடைகிறது. முக்கியமாக மாலிக் காஃபுரின் வாழ்க்கை, ஒரு ஹாலிவுட் சினிமாவுக்குரிய பிரம்மாண்டத்தை அடைகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் வீரபாண்டியனும் மாலிக் காஃபுரும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டே வருகிறார்கள். ஓர் இந்து பனியா, அலியாக்கப்பட்டு, அடிமையாக்கப்பட்டு, பின்னர் அலாவுதீன் கில்ஜியையே அடக்கி ஆளக்கூடிய படைத் தளபதியாக ஆவது அச்சு அசல் சினிவாக்கான திரைக்கதை. அதன் காரணமாக, மாலிக் காஃபுரின் கொடூரச் செயல்களை ஆசிரியர் கொஞ்சம் நீர்க்கடிக்கிறார். இந்துத்துவர்கள் இதைக்கண்டு கொதித்தெழலாம். மாலிக் காஃபுரின் வெறிச் செயல்களுக்கு அடிப்படைக் காரணம் உள்ளது, அது கொஞ்சம் நியாயமானதும்கூட என்பதாக உள்ளது ஆசிரியரின் சில கூற்றுகள். ஆனால் இது வரலாற்றுப் புத்தகம் அல்ல, வரலாற்றுப் புனைகதைதான்.

எனக்கு இந்த வரலாறு ஓரளவு தெரியும் (பேராசிரியர் கே.வி.இராமனின் ‘பாண்டியர் வரலாறு’ மேசையில் உள்ளது) என்றாலும், கதையில் மூழ்கிப்போய் வீரபாண்டியனும் மாலிக் காஃபுரும் ஒரு மாபெரும் யுத்தத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளக்கூடாதா என்று மனம் நினைக்கும் அளவுக்கு கதையின் போக்கை வடித்திருக்கும் ஆர்.வெங்கடேஷைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஒரு பாபுலர் புனைகதைக்கு ஏற்றவகையில் ஆங்காங்கே செக்ஸ் சீன்கள் வருகின்றன. கல்கியை விடுங்கள், சாண்டில்யன்கூடக் கொஞ்சம் வெட்கப்படுவார். நீங்கள் மகிழ்ச்சி அடையலாம். ஏனெனில் இது 21-ம் நூற்றாண்டு. வீரபாண்டியனின் பாலியல் திருவிளையாடல்கள் முழுவதும் புனைகதையாக மட்டுமே இருக்க வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன். வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.

கில்ஜிகள் பற்றியும் மாலிக் காஃபுர் பற்றியும் எனக்கு மிக மிகக் குறைவாகவே தெரியும். காஃபுர் குறித்து மேலும் படிக்க ஆவலைத் தூண்டியிருக்கிறது இந்தப் புத்தகம்.

கொஞ்சம் செக்ஸ், நிறைய வீரம், மிலிட்டரி ஸ்ட்ரேட்டஜி, கொஞ்சம் அமானுஷ்யம், தேவையான அளவு ஆழமான அடிப்படை ஆராய்ச்சி, ஒரு த்ரில்லர் கதையைப் படுவேகமாக சொல்லிச்செல்லும் எளிமையான ஆங்கில மொழி, அத்தியாயங்களை அடுக்கிவைத்துள்ள பாங்கு, புத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழே வைக்கவிடாத கதையமைப்பு. அருமையான புத்தகம் என்ற பாராட்டைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

எழுத்தாளர் தமிழிலும் எழுதக்கூடியவர் என்பதால் இந்தக் கதை தமிழிலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆங்கிலம் படிக்க முடியாதவர்கள் காத்திருங்கள்.

11 comments:

  1. அருமையான நூல் மதிப்பீடு.

    ReplyDelete
  2. "கவுண்டர்"-கிளைமாக்ஸ் ஆகிவிடுகிற>> பண்ணித்தமிழ் வேடிக்கையாக உள்ளது; எரிச்சலையும் தருகிறது. உங்களால், தமிழ் நூல்களை விற்கும் ஒரு நபரால், இரு நிமிடம் யோசித்து பொறுத்தமான தமிழ்ச் சொல்லை பயன்படுத்த முடியவில்லையா..? - கவுண்டர் கிளைமாக்ஸ், நாடார் கிளைமாக்ஸ், முதலியார் கிளைமாக்ஸ்.

    கவுண்டருக்கு பின்னால் படிக்கவில்லை நூல் விமர்சனத்தை.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் என் பதிவுகளைப் படிக்கவேண்டும் என்று நான் கெஞ்சிக் கேட்கவே இல்லை. என் பதிவில் எம்மாதிரியான மொழியையும் பயன்படுத்த எனக்கு உரிமையுள்ளது என்பதைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். மற்றபடி நீங்கள் எதைப் படிக்கவேண்டும், படிக்கக்கூடாது என்பதை நான் வலியுறுத்த மாட்டேன். நன்றி.

      Delete
    2. Mr.Vassan,
      With respect, certainly it would have been a surprise if you had gone beyond the counter-climax.

      Delete
  3. Reply to Vassan:

    As per your profile you are a blogger since December 2007 with a Tamil blog name "Kollidam" apparently with no Tamil post except the following:

    Saturday, October 11, 2003
    TESTING

    wONDER IF i CAN GET THIS TAMIL BLOG TO WORK CORRECTLY..?

    posted by Vassan at Saturday, October 11, 2003

    You are commenting on Badri's post who is doing an exceptional service by disseminating useful information using simple, understandable language, which is atrocious. Try to do some thing useful instead of passing cheap comments.

    ReplyDelete
  4. ///பேராசிரியர் கே.வி.இராமனின் ‘பாண்டியர் வரலாறு’ மேசையில் உள்ளது///

    டயல் ஃபார் புக்ஸிலும் உள்ளதா?

    ReplyDelete
  5. what is meant by "unmai varalaaru" ?

    ReplyDelete
  6. கல்கி இதழின் ஆசிரியர் ஆர். வெங்கடேஷ் எழுதியதா இது? எனக்குத் தெரிந்து அவர் தமிழில் வரலாற்று நாவல் எதையும் எழுதவில்லை என்பதால் உங்கள் முதல் பத்தியில் குழப்பம்.

    ReplyDelete
  7. கிழக்கிலிருந்து - தமிழில் சீக்கிரம் போட்டு
    விடுங்களேன் -
    எனக்குத் தமிழில் படிக்கத்தான் பிடிக்கிறது.
    (நீங்கள் தமிழில் - உங்கள் ஸ்டைலில் -
    எழுதுவதும் நன்றாகத்தான் இருக்கிறது..)

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    ReplyDelete
  8. I hope the author Sri. Venkatesh has done excellent work. Recently I read Vikatan Madan's books on our history and they were full of mistakes. I checked his references and needless to say they were all from sub-standard authors.

    ReplyDelete