Tuesday, September 30, 2014

பொது நூலக ஆணையும் பொது ஊழலும்

குற்றமும் தண்டனையும் என்ற தலைப்பில் நான் எழுதிய வலைப்பதிவு குறித்து ஃபேஸ்புக்கில் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். பொது நூலகத்துறையில் புத்தகம் வாங்கும்போது எழும் ஊழல் குறித்தும்  கல்வித்துறையில் ஊழல் குறித்தும் நான் அந்தப் பதிவில் எழுதியிருந்தேன். இப்போது ஜெயலலிதா சிறைக்குச் சென்றபின் எழுதிய அதனை ஏன் அதற்கு முன் எழுதவில்லை என்பதுதான் சிலரது கேள்வி.

நான் என் வலைப்பதிவில் எழுதுகிறேன். பத்திரிகைகளில் எழுதுகிறேன். ஃபேஸ்புக்கில் எழுதுகிறேன். அனைவரும் அனைத்தையும் படிப்பார்கள் என்று சொல்ல முடியாது.

அலமாரி என்ற ஓர் அச்சு இதழை நாங்கள் நடத்திவருகிறோம். புத்தகங்களுக்காக என்று பிரத்யேகமாக வரும் மாதப் பத்திரிகை அது. டேப்லாய்ட் ஃபார்மட்டில் எட்டு பக்கங்கள் கொண்டது. தற்போது சுமார் 12,000 பிரதிகள் அச்சிடுகிறோம். ஒவ்வொரு இதழிலும் பதிப்பாசிரியராக நான் ஒரு கட்டுரை எழுதுகிறேன். ஜூலை 2013-ல் நான் எழுதிய கட்டுரையைக் கீழே தருகிறேன். பதிப்புத் துறையில் இருக்கும் அனைவரும், அந்தப் பத்திரிகையைப் பெற்ற வாசகர்களும் இந்தக் கட்டுரையைப் படித்திருப்பார்கள்.

****

பொது நூலக ஆணையும் பொது ஊழலும் - ஜூலை 2013

தமிழகத்தில் 4,000-க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள் உள்ளன. இவற்றுக்கு ஆண்டுக்கு ஆண்டு புதிதாகப் பதிப்பிக்கப்படும் புத்தகங்களை வாங்குவது தமிழக அரசின் கடமை.

இதற்கெனத் தமிழக அரசு கையிலிருந்து தனியாகக் காசு செலவு செய்யவேண்டியதில்லை. சொத்து வரியில் நூலக மீவரி (லைப்ரரி செஸ்) என்ற வரி மக்களிடமிருந்தே வசூலிக்கப்படுகிறது. நகராட்சிகளும் மாநாராட்சிகளும் இந்த மீவரியை சொத்து வரி வசூலிக்கும்போது வசூலித்து, மாநில அரசிடம் கொடுக்கவேண்டும். மாநில அரசு இந்தத் தொகையைக் கொண்டு நூலகங்களைப் பராமரித்தல், புதிய புத்தகங்கள் வாங்குதல் ஆகியவற்றைச் செய்யவேண்டும்.

இதுதவிர, ராஜா ராம்மோகன் ராய் நூலக நிதி என்ற மத்திய அரசின் நிதி உதவியும் மாநில அரசுகளுக்குத் தரப்படுகிறது. இது இணை நிதி என்ற பெயரில் வழங்கப்படுவது. அதாவது ஒரு குறிப்பிட்ட தொகை (எடுத்துக்காட்டாக ரூ. 5 கோடி) ஒரு மாநிலத்துக்கு என ஒதுக்கப்படும். அதே அளவு அல்லது அதற்குமேல் மாநில அரசு செலவழித்தால்தான் இந்தத் தொகையை மத்திய அரசு மாநில அரசுக்குத் தரும். இதற்குக் கீழாகச் செலவழித்தால் (அதாவது ரூ. 4 கோடி மட்டும் தன் நிதியிலிருந்து செலவழித்தால்), அதற்கு இணையான தொகையை மட்டுமே மத்திய அரசு மாநில அரசுக்குத் தரும்.

இவ்வளவெல்லாம் இருந்தாலும் நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்குவது என்பது தமிழகத்தில் என்றுமே ஒழுங்காக நடந்ததில்லை. இந்த ஆண்டுப் புத்தகங்களை அடுத்த ஆண்டு தொடக்கத்திலாவது வாங்கினால் நூலகங்களைப் பயன்படுத்துவோருக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஆண்டுக் கணக்கில் தள்ளிப்போகிற அவலமே இப்போது நடைமுறையில் உள்ளது.

இப்போது நடப்பாண்டு 2013. இன்னும் 2010-11ம் ஆண்டுக்கான புத்தகங்களே வாங்கப்படவில்லை. அதன்பின் 2011-12, பின்னர் 2012-13 என்ற இரு ஆண்டுகளுக்கும் வாங்கவேண்டியிருக்கும். அதற்குள் 2013-14 நிதி ஆண்டே முடிந்துவிடும்.

இது ஒருபுறம் என்றால், புத்தகங்களை வாங்குவதில் எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லை. எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைப் பொருத்து, ஒருசில பதிப்பகங்களுக்கு முன்னுரிமை, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஒருசில பதிப்பகங்களின் புத்தகங்கள் தடையில்லாமல் வாங்கப்படுதல் ஆகியவற்றைப் பார்க்கிறோம்.

கடைசியாகப் பொது நூலக ஆணை வெளியானபோது (2013-ன் தொடக்கத்தில்), ஏகப்பட்ட லஞ்சம் பெறப்பட்டு, அவற்றைக் கொடுத்த பதிப்பகங்களுக்கு மட்டுமே புத்தகங்கள் தரப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்கமான பபாசி ஒரு சந்திப்பை நடத்தியது. நியாயமான முறையில் அனைவரிடமிருந்தும் புத்தகங்கள் பெறப்படவில்லை என்பது அங்கே நிகழ்ந்த விவாதங்களின்போது தெரியவந்தது. மிகக் கடுமையான வாக்குவாதங்கள் நடந்தன. நூலகத் துறை எப்போதும் கல்வி அமைச்சரின்கீழ் வருவதாக இருக்கும். அப்போதுதான் புதிதாகக் கல்வி அமைச்சர் மாற்றப்பட்டிருகிறார் என்பதால் அவரிடம் சென்று முறையிட்டு, நூலக ஆணை கிடைக்காதவர்களுக்குச் சிறிதாவது பணம் ஒதுக்க முடியுமா என்று கேட்க இருப்பதாக பபாசி நிர்வாகிகள் சொன்னார்கள்.

ஆனால், அதனாலெல்லாம் பலன் எதும் இல்லை.

இனி வரும் ஆண்டுகளில் புத்தகங்களை வாங்கும்போது நூலக ஆணைகளை வெளியிடும் நூலகத் துறை நியாயமாக நடந்துகொள்ள வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை.

ஏனெனில், பதிப்பாளர்கள் சிலர் நியாயமாக, வெளிப்படையாக நூல்கள் வாங்கப்படுவதை விரும்புவதில்லை. அவரவர் புத்தகங்களை, ஏதோ ஒருவிதத்தில் நூலகங்களுக்குத் தள்ளிவிட்டு, அதன்மூலம் வருவாய் பெற்றிடலாம் என்பது அவர்கள் விருப்பம்.

வரும் விண்ணப்பங்களைச் சரி பார்த்து, அவற்றிலிருந்து வேண்டிய புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் குழு முதலில் வெளிப்படையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

நூலகங்களால் பயன் பெறுவோர் எனப்படும் மக்கள் இதைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் இருக்கிறார்கள்.

இந்த அளவுக்கு மூடுமந்திரமாக நடப்பது நிர்வாகத்தில் இருப்போருக்கும் வசதியானதுதான். அது லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் வழிவகுக்கிறது. அதனால் சிலருக்கு ஆதாயம் ஏற்படுகிறது.

*

பொத்தாம் பொதுவாக இவ்வாறு குற்றச்சாட்டு வைப்பது எனக்கே வருத்தம் அளிக்கிறது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் ஒரு பதிப்பகத்தை நியாயமான முறையில் நடத்திவருபவனாக நான் கேட்கும், அறியும் தகவல்கள் அவ்வளவு நல்லவையாக இல்லை. நாங்கள் நடத்துவது புலனாய்வு இதழ் அல்ல, அங்கும் இங்கும் தேடித் தரவுகளைச் சேகரித்து, இவர்தான் குற்றம் செய்துள்ளார், இவர் லஞ்சம் வாங்கினார் என்று வெளிப்படுத்த.

நூலகம் என்பதற்கு அதிக முக்கியம் இல்லாத நிலையில், நூலகத் துறைக்குப் பொறுப்பு வைக்கும் அமைச்சரோ, செயலரோ நல்லவராக இருந்து, இந்த ஆண்டு நியாயமான முறையில் புத்தகங்கள் பெறப்படும் என்று முடிவெடுத்தால் மட்டுமே இதற்கு விடிவு காலம் ஏற்படும். மற்றபடி இதைப் பற்றி எழுத, விவாதிக்கக்கூட ஊடகங்கள் நேரம் செலவிடப் போவதில்லை.

*** முடிவு ***

ஜெயலலிதா அரசில் மட்டுமல்ல, அதற்குமுன் கருணாநிதி ஆட்சியில் நடந்ததாகச் சொல்லப்படுவது பற்றியும் பதிவுகள் எழுதியிருக்கிறேன். ஒரு சாம்பிள் இங்கே:

சென்னையில் மாபெரும் நூலகம் - ஆகஸ்ட் 2008

அண்ணா மறுமலர்ச்சி திட்டம் புத்தக ஊழல்?- பிப்ரவரி 2009

 

5 comments:

  1. குற்றம் செய்பவனைக் கேள்வி கேட்காமல், குற்றத்தை வெளிக்கொணர்வைதைத்தான் படித்த தமிழ் சமூகம் செய்கிறது. ஜெ-க்கு எழுப்பப்படும் பரிதாபமும், முன்னர் கனிமொழிக்கு எழுப்பப்பட்ட பரிதாபமும், ஒன்றைத்தான் நமக்கு உணர்த்துகிறது. கோர்ட் தீர்ப்பு தரலைன்னு குறை சொல்வோம். கோர்ட் தீர்ப்பு சொல்லிட்டா குற்றவாளியின் அயோக்கியத்தனத்தை பெரு மனதுடன் மன்னித்து, கோர்ட்டைத் திட்டுவோம். பாவம் கோர்ட்டுக்கே இந்த நிலைமைன்னா உங்க நிலைமையை என்ன சொல்வது?

    ReplyDelete
  2. I AM A MEMBER OF DISTRICT LIBRARY. LOT OF BOOKS HAVE BEEN
    PURCHASED BY LLA. BUT MOST OF THEM ARE USELESS BOOKS
    WRITTEN BY UN KNOWN AUTHORS. NOT A SINGLE COPY OF THESE BOOKS WILL BE SOLD IN BOOK FAIRS. BOOKS PUBLISHED BY POPULAR PUBLISHERS LIKE YOUR KIZAKKU, KALACHUVADU,
    UYIRMAI, TAMIZHINI ETC WILL NOT BE PURCHASED AS THEY ARE
    VERY POPULAR AND PROBABLY YOU PEOPLE WILL NOT PAY ANY COMMISION TO AUTHORITIES. I REQUEST BAPASI TO APPROACH
    THE LIBRARY AUTHORITIES TO BE A PART OF BOOK PURCHASING
    COMMITEE SO THAT SOME GOOD BOOKS PUBLISHED BY YOU
    ARE AVAILABLE TO MIDDLE CLASS READERS WHO CANNOT AFFORD TO BUY GOOD BOOKS.


    SOLD IN BOOK FAIRS

    ReplyDelete
  3. இரு தினங்களுக்கு முன் திருப்பூர் மைய நூலகம் போன போது அங்கிருந்தேதான் மற்ற கிளை நூலகங்களுக்கு நூல் அனுப்பும் பெண் சொன்னார் இந்த வேலைகள் மூட்டை தூக்கி, பிரித்து ,மைய நூலக வரிசை எண் அடித்து துன்ப படுவதாக சொன்னார் .ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சுமை .

    ReplyDelete
  4. yes i fully agree with you , political parties also do not play the required role

    ReplyDelete
  5. yes your remarks are vital , however there is no discussion on public domain

    ReplyDelete