Monday, January 12, 2004

தமிழ் இலக்கியம் 2004 - 5

ஒரு நாடகமும், ஒரு அமர்வும்

'நாடகமில்லாத ஒரு நாடகம்', 'நாடு-சக-அகம்' என்றெல்லாம் பெயரிட்டு ஒரு வித்தியாசமான நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. அளவெட்டி சிறீசுக்கந்தராசா, பேரா.சுமதி ஆகியோர் இருவர் மட்டுமே நடித்த இந்த நாடகத்தில் எனக்குப் புரிந்தது கொஞ்சமே.

"நான் யாழ்பாணத் தமிழில் பேசுவன், அது உங்களுக்குப் புரியாமல் போகலாம், புரியாததும் ஒரு வசதியே" என்று ஆரம்பித்தார் சிறீசுக்கந்தராசா. பின்னணி இசை அதிகமாக இரைந்து பேச்சைப் புரிந்துகொள்ள விடாது தடுத்தது. இது ஒரு பின்-நவீனத்துவ நாடக பாணியோ என்னவோ! மேடையில் விளக்குகளின் வண்ணங்கள் ஒவ்வொரு விநாடியும் மாறி மாறிக் கொண்டே இருந்தன.

மற்றவர்கள் யாரேனும் நாடகத்தைப் பார்த்திருந்தால், புரிந்திருந்தால், அதுபற்றி விளக்கமாக எழுத வேண்டுகிறேன்.


சிற்பி பாலசுப்ரமணியம்
நாடகத்தைத் தொடர்ந்து 'கவிதை, நாடகம், திறனாய்வு' ஆகியவற்றைப் பற்றிப் பேசும் ஒரு அமர்வு நடந்தது. தலைமை தாங்கியவர் சிற்பி பாலசுப்ரமணியம். பேசுகையில் திறனாய்வாளர்களை சற்றே சாடினார். கவிதை பற்றிப் பேசிய இந்திரன், இப்பொழுதுள்ள கவிதைகள் அனைத்தும் தமிழ்க் கவிதைகளாக இல்லை. வேறு மொழிகளின் வடிவத்தைப் பெற்று, தமிழ் சொற்களினால் அமைந்துள்ளது போல் உள்ளது.
இந்திரன்
அதனை விடுத்து தமிழ் உணர்வுகள், தமிழ் வடிவம் ஆகியவற்றுள் அடங்கியதாக தமிழ்க் கவிதை இருக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய பஞ்சாங்கம் மிக அழகாக திறனாய்வைப் பற்றி விளக்கினார். அபிப்ராயம், ஆராய்ச்சி, திறனாய்வு - இவை அனைத்தும் வேறு வேறு. ஒரு எழுத்து நன்றாக உள்ளது, நன்றாக இல்லை என்று சொல்வது அபிப்ராயம். ஏன் அது நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை அன்று கருத்துக்களை முன்வைப்பது வெறும் வறட்டு ஆராய்ச்சி. ஆனால் திறனாய்வு என்பது இதற்கும் ஒருபடி மேலே போய் அதுவே இலக்கியமாக, படைப்பாக முன்வருவது என்றார்.
க.பஞ்சாங்கம்
தான் சிலப்பதிகாரம் பற்றி எழுதப்பட்ட நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்டனவற்றை தன் முனைவர் பட்டத்திற்கு ஆராய்ந்ததில், வெறும் இரண்டே நூல்கள்தான் இந்தத் திறனாய்வு என்னும் ஆக்கத்தில் வருபவை என்றார். (அவர் சொன்ன நூல்களுடன் எனக்குப் பரிச்சயம் இல்லாததால் அந்த நூல்களின் பெயர்கள் இப்பொழுது ஞாபகத்தில் இல்லை.)

நாடகம் பற்றிப் பேச வருவதாக இருந்த செ.இராமானுஜம் வரவில்லை. தலைவர் சிற்பி இதுபற்றிப் பேசும்போது தமிழில் நாடகம் எந்த அளவிற்கு வளராத நிலையில் உள்ளது என்பதையே இதுகாட்டுகிறது என்று சொல்லியிருந்தார். சிற்பி மேலும் நாடகம் பற்றிப் பேசும்போது மனோன்மணீயம் எழுதிய சுந்தரம் பிள்ளை, தன் நாடகம் நடிப்பதற்காக அல்ல என்று சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, அதே புத்தகத்துக்கு இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் (விமரிசகர் பெயர் மறந்துவிட்டது...) விமரிசகர் "நடிப்பதற்காக இந்த நாடகம் இல்லை என்று சொல்வது பலகாரம் செய்துள்ளேன், ஆனால் சாப்பிட அல்ல என்று சொல்வதைப் போலுள்ளது என்று எழுதியிருந்தார்" என்றார்.

கடைசியாகப் பேசிய பா.இரவிக்குமார் தமிழ் நாடகம் வளர்ச்சியடையாததற்கு ஒரு காரணம் 'சிவாஜி கணேசன் என்னும் நாடகக் கலைஞனை தமிழகம் ஏற்றுக் கொள்ளாதது' என்றார். இது எனக்கு முழுதும் விளங்கவில்லை.

தமிழ் இலக்கியம் 2004 - 4

புத்தக வெளியீடு



என்.நடேசன் எழுதிய 'வண்ணாத்திகுளம்' புத்தகத்தை சா.கந்தசாமி வெளியிட, எம்.ஜி.சுரேஷ் பெற்றுக்கொண்டார். எஸ்.பொ புத்தகத்தைப் பற்றிப் பேசினார்.



நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் எழுதிய 'காற்று வெளியினிலே' புத்தகத்தை இதயதுல்லா வெளியிட, துக்ளக் பத்திரிக்கையில் எழுதும் சாவித்ரி கண்ணன் பெற்றுக்கொண்டார்.



'ஜெயந்தீசன் கதைகள்' என்னும் புத்தகத்தை பா.இரவிக்குமார் வெளியிட விழி.பா.இதயவேந்தன் பெற்றுக்கொண்டார்.

கொள்கைகளற்ற கூட்டணி

நேற்று வாஜ்பாய், திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கைகளற்ற, சந்தர்ப்பவாதக் கூட்டணி என்று பேசியுள்ளார். என்னவோ, பாஜக மட்டும் கொள்கைகளோடுதான் கூட்டணி அமைப்பது போல இருக்கிறது இந்த கேலிப்பேச்சு. அதாவது, ஒரு காலத்தில் காங்கிரஸ், 'திமுக ராஜீவ் கொலைக்குக் காரணம்' என்று சொன்னார்களாம். இப்பொழுது அதை மறந்து விட்டு, கூட்டணி அமைக்கிறார்கள் என்கிறார்.

திமுக ராஜீவ் கொலைக்குக் காரணமாயிருந்தால், பாஜகவும் அவர்களோடு கூட்டணி அமைத்திருக்கக் கூடாது அல்லவா? அப்படி திமுக, ராஜீவின் கொலைக்குக் காரணமில்லை என்றால், காங்கிரஸ் தன் கூற்றின் தவறை உணர்ந்து, பழசை மறந்துவிட்டு திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் தவறில்லைதானே?

அஜித் ஜோகி, திலிப் சிங் ஜுதேவ் ஊழல்கள் பற்றி கண்ணீர் மல்கப் பேசிய வாஜ்பாய் இப்பொழுது தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்?

Sunday, January 11, 2004

தமிழ் இலக்கியம் 2004 - 3

தமிழ் உரைநடை இலக்கியத்தின் எதிர்காலம்

நீல.பத்மநாபன்
நீல.பத்மநாபன் தலைமை தாங்க, தமிழில் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் பற்றிய ஒரு அமர்வு துவங்கியது. நீல.பத்மநாபன் மலையாளத் த்வனியோடு தமிழில் பேசினார். தான் ஒரு சிறு தளத்திலேயே இயங்கிக் கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் மொழி, நடை, உத்திகள் ஆகியவற்றில் நிறைய வளர்ச்சி வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ராமகிருஷ்ணன் நாவல்கள் பற்றிப் பேச வந்தார். இரா.முருகன் இந்திரா பார்த்தசாரதியின் 'கிருஷ்ணா கிருஷ்ணா'வைப் பற்றிப் பேசுகையில் குந்தர் கிராஸின் (Gunther Grass) கிராப் வாக் (Crabwalk) நாவலின் நடையோடு ஒப்பிட்டு, இ.பா அந்த நடையை விட மேலேறிச் சென்றுள்ளார் தன் நாவலில் என்று குறிப்பிட்டார். ராமகிருஷ்ணன் இதைப் பிடித்துக் கொண்டு தமிழில் நாவல்களே சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை, அதிலும் குந்தர் கிராஸோடு தமிழ் எழுத்தாளர் ஒருவரை ஒப்பிடுவது மகா பாவம் என்ற முறையில் பேச ஆரம்பித்தார். குந்தர் கிராஸ் எப்படி 16 (??) நாவல்களை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் எழுதி, இந்தியாவைப் பற்றிக் கூட (ஷோ யுவர் டங் - Show your tongue) ஒரு நாவல் எழுதியுள்ளார் என்றார். அதன் பின்னர் பல வேற்றுமொழி நாவலாசிரியர்கள் பற்றி ஒருசில எடுத்துக்காட்டுகள் கொடுத்த பின்னர் இந்தியாவிலேயே வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளுக்கு ஈடாக தமிழில் நாவல்கள் இல்லை என்றார். தமிழில் சிறந்த நாவல்கள் என்றால் உடனடியாக மூன்று நாவல்களைக் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றும் கிடைக்காது என்றும், அந்த ஓரிரண்டு நாவல்களைச் சொல்வதற்கே அருகில் உள்ள இரண்டு பேருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் சொன்னார்.

தமிழன் தன் வாழ்க்கை முறையினைப் பற்றி தமிழ் நாவல்களில் அதிகம் விளக்கவில்லை; அரசியலைப் பின்னணியாகக் கொண்ட நாவல்கள் தமிழில் இல்லை; வாய்வழிக் கதைகள், புராணங்களை தமிழ் நாவலாசிரியர்கள் 'மீள்-பார்வையில்' மீண்டும் சொன்னதில்லை என்று குற்றச்சாட்டுக்களாக அடுக்கினார். நோபல் பரிசு பெற்ற போர்ச்சுகீசிய நாவலாசிரியர் ஹோசெ சரமாகோவின் (Jose Saramago) நாவலான "யேசு கிறிஸ்துவின் பார்வையில் வேதாகமம்" (The gospel according to Jesus Christ), கிரேக்க எழுத்தாளர் நிக்கோஸ் கசன்சாகிஸின் (Nikos Kazantzakis) "யேசு கிறிஸ்துவின் கடைசிச் சபலம்" (The last temptation of Christ) போன்ற நாவல்கள் தமிழில் இல்லை என்றார். துருக்கிய எழுத்தாளர் ஓர்ஹான் பாமுக்கின் (Orhan Pamuk) "என் பெயர் சிகப்பு" ('My name is red'. சில இடங்களில் 'Call me crimson' என்றும் வெளியாகியுள்ளது போல அறிகிறேன்) என்னும் நாவலைப் பற்றி சிலாகித்துப் பேசினார். (பேசும்போது எகிப்திய எழுத்தாளர் என்று தவறாகச் சொன்னார்.)

எஸ்.ராமகிருஷ்ணனின் பேச்சு எதிர்மறையாகவே இருந்தது. அரங்கில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளுமாறு தமிழ் நாவல்களில் என்ன குறைவு, உலக நாவல்களில் என்ன நிறைவு, எப்படி தமிழ் நாவலாசிரியர்கள் இந்த இடைவெளியை நிரப்ப முயற்சிக்கிறார்கள், அல்லது முயற்சிக்க வேண்டும் என்று பேசியிருந்திருக்கலாம். என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் பட்டியல் போடுவது தவறான முயற்சி. ராமகிருஷ்ணனின் பேச்சுக்கு இரா.முருகனின் எதிர்வினை ராயர்காபிகிளப்பில் வந்துள்ளது.

பா.ராகவன்
அடுத்துப் பேச வந்த ரெ.கார்த்திகேசு இப்படி சூடு வைக்கவில்லை. ஆனால் சிறுகதைகள் எங்கே போகப்போகின்றன என்பது பற்றி ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார். தான் கி.ராஜநாராயணனிடம் பேசியபோது அவரிடம் 'சிறுகதைகள் எங்கே போகப்போகின்றன' என்று கேட்டதற்கு அவர் பதிலாக 'எப்படிச் சொல்லமுடியும்?' என்று சொன்னார் என்ற ரெ.கா, தைரியமாக கணிக்க ஆரம்பித்தார். ஒருசில கணிப்புகள் "தமிழில் வெகுஜன இதழ்கள் சிறுகதைகளை தொட்டுக்கொள்ள வைத்திருக்குமே தவிர, வளர்க்காது, ஆனால் ஒரேயடியாக வெட்டிவிடாது. அச்சுத்தொழில் வளர்ச்சியினால், சிற்றிதழ்கள் பெருகும்; புத்தகங்கள் வெளியாவதும் பெருகும்; அதனால் சிறுகதைகள் அவற்றின் மூலம் பெருகும். இணையம் மூலம் பல புதிய சிறுகதை எழுத்தாளர்கள் வருவர். சிறுகதைகளுக்கென்றே இதழ்கள் நிறைய வரும். "

கடைசியாகப் பேசிய ராகவன் கட்டுரை இலக்கியம் பற்றி தன் கருத்துகளைச் சொன்னார். அவற்றை அவரது வலைப்பதிவிலேயே காணலாம்.

தமிழ் இலக்கியம் 2004 - 2

பேரா.சுதந்திரமுத்து
முதலாவது அமர்வு பேராசிரியர்கள் இன்குலாப், சுதந்திரமுத்து, சுமதி ஆகியோர் பங்கேற்றது. தலைமைதாங்க வேண்டிய பேரா.சி.டி.இந்திரா பங்கேற்கவில்லை. ஒரே பேராசிரியர்களாகப் போய்விட்டதால் சுவாரசியம் குறைவாகவே இருந்தது. தலைப்பு 'புதிய திசைகள்' என்று சிறிது குழப்பமானது. எதைப்பற்றி என்று பார்வையாளர்களுக்கு அதிகம் புரிந்திருக்காது. முதலில் பேரா.சுதந்திரமுத்து பேசினார். தமிழ் இலக்கியத்தில் உள்ள பல்வேறு வகைகளைப் பற்றி ஒரு பட்டியல் போட்டது போல் நீண்டு இருந்தது அவரது பேச்சு. கடைசியில் தமிழ் புதுப்புது திசைகளில் செல்லும் என்பதுபோல முடிந்தது.
பேரா.சுமதி
அடுத்துப் பேசிய பேரா.சுமதி (இவர் ஆங்கிலப் பேராசிரியராம்), சுதந்திரமுத்து பேசியபின்னர், தான் அதிகமாக ஒன்றும் சொல்லிவிடப் போவதில்லை என்று சொல்லிவிட்டுப் பேசினார். அதிகமாக ஒன்றும் வித்தியாசமாகவும் இவர் சொல்லிவிடவில்லை. மொத்தத்தில் இந்த அமர்வில் வீட்டுக்கு எடுத்துப் போக ஒன்றுமில்லை.

பேரா.இன்குலாப்
இரு பேச்சுகளையும் இணைத்து முடிவுரை வழங்க வந்த இன்குலாப் பலரது படைப்புகள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்படுவதையும், மறைக்கப்படுவதையும் தொட்டுப் பேசினார். மொத்தத்தில் இந்த அமர்வு எனக்கு சோர்வு தருவதாக இருந்தது. புதிதாக ஒன்றும் மண்டையில் ஏறவில்லை. இன்குலாப் பேச்சு நன்றாக இருந்தது.

அதன்பிறகு புத்தக வெளியீட்டின்போது சிறிது சலசலப்பு இருந்தது. புத்தக வெளியீடுகளைப் பற்றி முன்னமே எழுதிவிட்டேன். வரிசையாக இந்திரா பார்த்தசாரதி, ரெ.கார்த்திகேசு, பழமலய், யுகபாரதி ஆகியோரின் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் பிந்தையதிலிருந்து முந்தையது வரை யுகபாரதியின் புத்தகத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்து கடைசியில் இந்திரா பார்த்தசாரதி புத்தகத்தில் முடித்தனர். ஈரோடு தமிழன்பன் மிகவும் நகைச்சுவையுடன் "மன்மத ராசா" புகழ் யுகபாரதியின் காதல் பிசாசு பற்றிப் பேசினார். பேரா.அ.மார்க்ஸ் ஏதோ தவறான கூட்டத்துக்கு வந்துவிட்டவர் போல நெளிந்தவாறே உட்கார்ந்திருந்தவர், தன் வாய்ப்பு வந்ததும் பலமலய் புத்தகத்தைப் அற்றிப் பேசும்போது தன் எரிச்சலை வெளிப்படுத்தினார். ஏற்றி வைத்திருந்த குத்துவிளக்கு அவருக்குப் பிடிக்கவில்லையாம். புத்தக வெளியீட்டின்போது பெண்கள் ஒரு தாம்பாளத்தில் எடுத்துக் கொண்டு வந்து கையில் புத்தகத்தைக் கொடுத்தது பிடிக்கவில்லையாம். வரவர எல்லா அரசு விழாக்களும் வேதகோஷம் முழங்க நடைபெறுவதாகச் சொன்னவர் (அப்படியா?), இந்த விழாவை யுகபாரதியின் 'மன்மத ராசா' பாடித் துவங்கியிருக்கலாம் என்று சொன்னார். 'இலக்கியம் என்பதே கலகம்' என்ற கொள்கை மார்க்ஸுடையது. கலகம் என்றால் சாராய வாசனையும், அடிதடியும், வாய் முழுதும் சென்னை வசவுகளும்தான் என்ற கொள்கை எப்பொழுது ஒழியுமோ? பழமலய்க்கும் கொஞ்சம் திட்டு கிடைத்தது. நல்ல கவிதையும் எழுதுவார், வகுப்புவாதிகளான பாட்டாளி மக்கள் கட்சி கேட்டால் அவர்களுக்கும் பாட்டெழுதித் தருவார் என்று ஒரு சாடல். மார்க்ஸை விழாவுக்குக் கூப்பிடுகிறவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 'பாம்புகள்' புத்தகத்தைப் பற்றி 'இது ஒரு குப்பை, தூக்கி உடைப்பில் போடு' என்றெல்லாம் சொல்லாமல் நல்லபடியாக விட்டதில் சந்தோஷமே.

இந்திரா பார்த்தசாரதி
அடுத்துப் பேச வந்த மாலன் மார்க்ஸின் 'மன்மத ராசா' பற்றிய கருத்தை விடுவதாக இல்லை. வீண் சச்சரவுகள் வேண்டாமென்று இருந்தாலும் சிலவற்றைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும் என்று சொன்ன மாலன், "யுகபாரதி 'மன்மத ராசா'வும் எழுதியுள்ளார், 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்'னும் எழுதியுள்ளார். யார் யார் எதைப் பற்றிப் பேசுகின்றனர் என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது என்றார்." பின்னர் ரெ.காவின் கல்கியில் பரிசுபெற்ற 'ஊசியிலைக் காடுகள்', கணையாழியில் வெளியான 'தீக்காற்று' (1 | 2 | 3) போன்ற ஒருசில கதைகளைக் கொண்ட தொகுப்பைப் பற்றிப் பேசினார். மாலன் பாதி பேசிக்கொண்டிருக்கும்போது மின்சாரம் போய்விட்டது. மாலன் அசராது ஒலிபெருக்கியின் தேவை இல்லாமலேயே அரங்கெங்கும் கேட்குமாறு தொடர்ந்து பேசினார். ரெ.கா மலேசியத் தமிழ் எழுத்தாளர். தமிழ் எழுத்துகள் என்று பார்க்கும்போது வெறும் தமிழ்நாட்டு எல்லைக்குள் பார்க்காது, தமிழ் பேசும் உலகம் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்றார். கடைசியாகப் பேசிய இரா.முருகன் தன் பேச்சினை ஏற்கனவே ராயர்காபிகிளப்பில் வெளியிட்டு விட்டார்.

முருகன் இந்திரா பார்த்தசாரதியின் கதை சொல்லும் விதம் குந்தர் கிராஸை (Crab Walk) விட உயர்ந்து விட்டது என்று சொல்லியது அடுத்த அமர்வில் மற்றுமொரு சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.