Sunday, January 11, 2004

தமிழ் இலக்கியம் 2004 - 2

பேரா.சுதந்திரமுத்து
முதலாவது அமர்வு பேராசிரியர்கள் இன்குலாப், சுதந்திரமுத்து, சுமதி ஆகியோர் பங்கேற்றது. தலைமைதாங்க வேண்டிய பேரா.சி.டி.இந்திரா பங்கேற்கவில்லை. ஒரே பேராசிரியர்களாகப் போய்விட்டதால் சுவாரசியம் குறைவாகவே இருந்தது. தலைப்பு 'புதிய திசைகள்' என்று சிறிது குழப்பமானது. எதைப்பற்றி என்று பார்வையாளர்களுக்கு அதிகம் புரிந்திருக்காது. முதலில் பேரா.சுதந்திரமுத்து பேசினார். தமிழ் இலக்கியத்தில் உள்ள பல்வேறு வகைகளைப் பற்றி ஒரு பட்டியல் போட்டது போல் நீண்டு இருந்தது அவரது பேச்சு. கடைசியில் தமிழ் புதுப்புது திசைகளில் செல்லும் என்பதுபோல முடிந்தது.
பேரா.சுமதி
அடுத்துப் பேசிய பேரா.சுமதி (இவர் ஆங்கிலப் பேராசிரியராம்), சுதந்திரமுத்து பேசியபின்னர், தான் அதிகமாக ஒன்றும் சொல்லிவிடப் போவதில்லை என்று சொல்லிவிட்டுப் பேசினார். அதிகமாக ஒன்றும் வித்தியாசமாகவும் இவர் சொல்லிவிடவில்லை. மொத்தத்தில் இந்த அமர்வில் வீட்டுக்கு எடுத்துப் போக ஒன்றுமில்லை.

பேரா.இன்குலாப்
இரு பேச்சுகளையும் இணைத்து முடிவுரை வழங்க வந்த இன்குலாப் பலரது படைப்புகள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்படுவதையும், மறைக்கப்படுவதையும் தொட்டுப் பேசினார். மொத்தத்தில் இந்த அமர்வு எனக்கு சோர்வு தருவதாக இருந்தது. புதிதாக ஒன்றும் மண்டையில் ஏறவில்லை. இன்குலாப் பேச்சு நன்றாக இருந்தது.

அதன்பிறகு புத்தக வெளியீட்டின்போது சிறிது சலசலப்பு இருந்தது. புத்தக வெளியீடுகளைப் பற்றி முன்னமே எழுதிவிட்டேன். வரிசையாக இந்திரா பார்த்தசாரதி, ரெ.கார்த்திகேசு, பழமலய், யுகபாரதி ஆகியோரின் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் பிந்தையதிலிருந்து முந்தையது வரை யுகபாரதியின் புத்தகத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்து கடைசியில் இந்திரா பார்த்தசாரதி புத்தகத்தில் முடித்தனர். ஈரோடு தமிழன்பன் மிகவும் நகைச்சுவையுடன் "மன்மத ராசா" புகழ் யுகபாரதியின் காதல் பிசாசு பற்றிப் பேசினார். பேரா.அ.மார்க்ஸ் ஏதோ தவறான கூட்டத்துக்கு வந்துவிட்டவர் போல நெளிந்தவாறே உட்கார்ந்திருந்தவர், தன் வாய்ப்பு வந்ததும் பலமலய் புத்தகத்தைப் அற்றிப் பேசும்போது தன் எரிச்சலை வெளிப்படுத்தினார். ஏற்றி வைத்திருந்த குத்துவிளக்கு அவருக்குப் பிடிக்கவில்லையாம். புத்தக வெளியீட்டின்போது பெண்கள் ஒரு தாம்பாளத்தில் எடுத்துக் கொண்டு வந்து கையில் புத்தகத்தைக் கொடுத்தது பிடிக்கவில்லையாம். வரவர எல்லா அரசு விழாக்களும் வேதகோஷம் முழங்க நடைபெறுவதாகச் சொன்னவர் (அப்படியா?), இந்த விழாவை யுகபாரதியின் 'மன்மத ராசா' பாடித் துவங்கியிருக்கலாம் என்று சொன்னார். 'இலக்கியம் என்பதே கலகம்' என்ற கொள்கை மார்க்ஸுடையது. கலகம் என்றால் சாராய வாசனையும், அடிதடியும், வாய் முழுதும் சென்னை வசவுகளும்தான் என்ற கொள்கை எப்பொழுது ஒழியுமோ? பழமலய்க்கும் கொஞ்சம் திட்டு கிடைத்தது. நல்ல கவிதையும் எழுதுவார், வகுப்புவாதிகளான பாட்டாளி மக்கள் கட்சி கேட்டால் அவர்களுக்கும் பாட்டெழுதித் தருவார் என்று ஒரு சாடல். மார்க்ஸை விழாவுக்குக் கூப்பிடுகிறவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 'பாம்புகள்' புத்தகத்தைப் பற்றி 'இது ஒரு குப்பை, தூக்கி உடைப்பில் போடு' என்றெல்லாம் சொல்லாமல் நல்லபடியாக விட்டதில் சந்தோஷமே.

இந்திரா பார்த்தசாரதி
அடுத்துப் பேச வந்த மாலன் மார்க்ஸின் 'மன்மத ராசா' பற்றிய கருத்தை விடுவதாக இல்லை. வீண் சச்சரவுகள் வேண்டாமென்று இருந்தாலும் சிலவற்றைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும் என்று சொன்ன மாலன், "யுகபாரதி 'மன்மத ராசா'வும் எழுதியுள்ளார், 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்'னும் எழுதியுள்ளார். யார் யார் எதைப் பற்றிப் பேசுகின்றனர் என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது என்றார்." பின்னர் ரெ.காவின் கல்கியில் பரிசுபெற்ற 'ஊசியிலைக் காடுகள்', கணையாழியில் வெளியான 'தீக்காற்று' (1 | 2 | 3) போன்ற ஒருசில கதைகளைக் கொண்ட தொகுப்பைப் பற்றிப் பேசினார். மாலன் பாதி பேசிக்கொண்டிருக்கும்போது மின்சாரம் போய்விட்டது. மாலன் அசராது ஒலிபெருக்கியின் தேவை இல்லாமலேயே அரங்கெங்கும் கேட்குமாறு தொடர்ந்து பேசினார். ரெ.கா மலேசியத் தமிழ் எழுத்தாளர். தமிழ் எழுத்துகள் என்று பார்க்கும்போது வெறும் தமிழ்நாட்டு எல்லைக்குள் பார்க்காது, தமிழ் பேசும் உலகம் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்றார். கடைசியாகப் பேசிய இரா.முருகன் தன் பேச்சினை ஏற்கனவே ராயர்காபிகிளப்பில் வெளியிட்டு விட்டார்.

முருகன் இந்திரா பார்த்தசாரதியின் கதை சொல்லும் விதம் குந்தர் கிராஸை (Crab Walk) விட உயர்ந்து விட்டது என்று சொல்லியது அடுத்த அமர்வில் மற்றுமொரு சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.

No comments:

Post a Comment