Monday, January 12, 2004

தமிழ் இலக்கியம் 2004 - 5

ஒரு நாடகமும், ஒரு அமர்வும்

'நாடகமில்லாத ஒரு நாடகம்', 'நாடு-சக-அகம்' என்றெல்லாம் பெயரிட்டு ஒரு வித்தியாசமான நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. அளவெட்டி சிறீசுக்கந்தராசா, பேரா.சுமதி ஆகியோர் இருவர் மட்டுமே நடித்த இந்த நாடகத்தில் எனக்குப் புரிந்தது கொஞ்சமே.

"நான் யாழ்பாணத் தமிழில் பேசுவன், அது உங்களுக்குப் புரியாமல் போகலாம், புரியாததும் ஒரு வசதியே" என்று ஆரம்பித்தார் சிறீசுக்கந்தராசா. பின்னணி இசை அதிகமாக இரைந்து பேச்சைப் புரிந்துகொள்ள விடாது தடுத்தது. இது ஒரு பின்-நவீனத்துவ நாடக பாணியோ என்னவோ! மேடையில் விளக்குகளின் வண்ணங்கள் ஒவ்வொரு விநாடியும் மாறி மாறிக் கொண்டே இருந்தன.

மற்றவர்கள் யாரேனும் நாடகத்தைப் பார்த்திருந்தால், புரிந்திருந்தால், அதுபற்றி விளக்கமாக எழுத வேண்டுகிறேன்.


சிற்பி பாலசுப்ரமணியம்
நாடகத்தைத் தொடர்ந்து 'கவிதை, நாடகம், திறனாய்வு' ஆகியவற்றைப் பற்றிப் பேசும் ஒரு அமர்வு நடந்தது. தலைமை தாங்கியவர் சிற்பி பாலசுப்ரமணியம். பேசுகையில் திறனாய்வாளர்களை சற்றே சாடினார். கவிதை பற்றிப் பேசிய இந்திரன், இப்பொழுதுள்ள கவிதைகள் அனைத்தும் தமிழ்க் கவிதைகளாக இல்லை. வேறு மொழிகளின் வடிவத்தைப் பெற்று, தமிழ் சொற்களினால் அமைந்துள்ளது போல் உள்ளது.
இந்திரன்
அதனை விடுத்து தமிழ் உணர்வுகள், தமிழ் வடிவம் ஆகியவற்றுள் அடங்கியதாக தமிழ்க் கவிதை இருக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய பஞ்சாங்கம் மிக அழகாக திறனாய்வைப் பற்றி விளக்கினார். அபிப்ராயம், ஆராய்ச்சி, திறனாய்வு - இவை அனைத்தும் வேறு வேறு. ஒரு எழுத்து நன்றாக உள்ளது, நன்றாக இல்லை என்று சொல்வது அபிப்ராயம். ஏன் அது நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை அன்று கருத்துக்களை முன்வைப்பது வெறும் வறட்டு ஆராய்ச்சி. ஆனால் திறனாய்வு என்பது இதற்கும் ஒருபடி மேலே போய் அதுவே இலக்கியமாக, படைப்பாக முன்வருவது என்றார்.
க.பஞ்சாங்கம்
தான் சிலப்பதிகாரம் பற்றி எழுதப்பட்ட நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்டனவற்றை தன் முனைவர் பட்டத்திற்கு ஆராய்ந்ததில், வெறும் இரண்டே நூல்கள்தான் இந்தத் திறனாய்வு என்னும் ஆக்கத்தில் வருபவை என்றார். (அவர் சொன்ன நூல்களுடன் எனக்குப் பரிச்சயம் இல்லாததால் அந்த நூல்களின் பெயர்கள் இப்பொழுது ஞாபகத்தில் இல்லை.)

நாடகம் பற்றிப் பேச வருவதாக இருந்த செ.இராமானுஜம் வரவில்லை. தலைவர் சிற்பி இதுபற்றிப் பேசும்போது தமிழில் நாடகம் எந்த அளவிற்கு வளராத நிலையில் உள்ளது என்பதையே இதுகாட்டுகிறது என்று சொல்லியிருந்தார். சிற்பி மேலும் நாடகம் பற்றிப் பேசும்போது மனோன்மணீயம் எழுதிய சுந்தரம் பிள்ளை, தன் நாடகம் நடிப்பதற்காக அல்ல என்று சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, அதே புத்தகத்துக்கு இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் (விமரிசகர் பெயர் மறந்துவிட்டது...) விமரிசகர் "நடிப்பதற்காக இந்த நாடகம் இல்லை என்று சொல்வது பலகாரம் செய்துள்ளேன், ஆனால் சாப்பிட அல்ல என்று சொல்வதைப் போலுள்ளது என்று எழுதியிருந்தார்" என்றார்.

கடைசியாகப் பேசிய பா.இரவிக்குமார் தமிழ் நாடகம் வளர்ச்சியடையாததற்கு ஒரு காரணம் 'சிவாஜி கணேசன் என்னும் நாடகக் கலைஞனை தமிழகம் ஏற்றுக் கொள்ளாதது' என்றார். இது எனக்கு முழுதும் விளங்கவில்லை.

No comments:

Post a Comment