டெண்டர் முடிந்து மூன்று நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட எண்ணிக்கையில் அவை தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கும்.
வீடியோகான் - 15,000
கிச்சன் அப்ளையன்சஸ் இந்தியா - 7,500
டிக்சன் டெக்னாலஜிஸ் இந்தியா - 7,500
ஒரு பெட்டிக்கு ரூ. 2,965 விலை என அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நான் ஒரு பெட்டி ரூ. 3,333 ஆகும் என்று கணித்திருந்தேன். எனவே இப்பொழுது கிடைத்திருப்பது நல்ல விலைதான்.
ஆக 30,000 பெட்டிகள் வாங்க ஆகும் செலவு = ரூ. 8.895 கோடி
அடுத்த கட்டத்தில் சர்வதேச அளவில் டெண்டர் என்று வரும்போது மேலே குறிப்பிட்ட தொகையைவிடக் குறைவாகவே கிடைக்கலாம். ஒரு பெட்டிக்கு ரூ. 2,800 என்று வைத்துக்கொள்வோம். அதற்குக்கீழே போவது கடினமாக இருக்கும். அப்படியானால் மீதமுள்ள ரூ. 741.105 கோடியில் நிச்சயம் 26.4 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் கிடைக்கும்.
கலர் டிவியினால் உபயோகமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, நாளையே ரூ. 5,000-ல் கணினி ஒன்றை வடிவமைத்தால் கிட்டத்தட்ட ரூ. 2,000 கோடி செலவில் 40 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம்.
கலர் டிவி விஷயத்திலேயே பல பிரச்னைகளை இந்த அரசு சமாளிக்கவேண்டிவரும். கலர் டிவி ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் சப்ளையரே தனது வாரண்டி காலத்தில் தனது செலவில் சரிசெய்து தரவேண்டும். அடுத்து டிவி சரியாக இயங்க தரமான மின்சாரம் வேண்டும். ஸ்பைக் பஸ்டர் வேண்டும். கேபிள் இணைப்பு இருந்தால்தான் கொஞ்சமாவது உருப்படியான content கிடைக்கும். மக்களுக்கு கலர் டிவி தரும் கேளிக்கை வேண்டும் என்பதால் அதற்குத் தேவையானவற்றைத் தாங்களே செய்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களில் கலர் டிவி விநியோகம் எந்த அளவுக்கு வெற்றி என்று ஓரளவுக்குத் தெரிந்துகொள்ளலாம்.
அதேபோல நாளைக்கு குறைந்தவிலைக் கணினியை ஏழை மக்களிடையே கொண்டுசேர்க்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசிக்கலாம்.
எனக்கு இந்த 'கலர் டிவி' விவகாரத்தில் வெறுப்பு இருந்தாலும் இப்பொழுது என் நிலையைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டுள்ளேன்.