Thursday, November 16, 2006

தமிழக நூலகங்கள்

தேசிய நூலக வாரம் என்று ஏதோ ஒன்று கொண்டாடப்படுகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இது 39வது ஆண்டாம். தமிழகத்தில் சென்னை கன்னிமரா நூலகத்தில் இது நடக்கிறது போலும்.

இந்த வாரம் நடக்கும் இந்த விழாவில் தினம் ஒரு பேச்சாளர் பேசுகிறார் என்று அறிகிறேன். இன்று ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன்.

செவ்வாய் அன்று விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக கிராமப்புறங்களில் மேலும் 262 நூலகங்கள் உருவாக்கப்பட உள்ளன என்றார். பல நூலகக் கட்டடங்கள் புதுப்பிக்கப் படுகின்றனவாம்.

நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்க அமைக்கப்படும் குழு விரைவில் முதல்வரால் அமைக்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

(இதுபோன்ற சிறு விஷயங்களில் ஒரு முதல்வர் ஈடுபடவேண்டுமா என்று புரியவில்லை. அமைச்சர் தங்கம் தென்னரசே இதைச் செய்யலாமே?)

செயலர் கணேசன் பேசும்போது சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார் - ஆனால் அதை அவர் குறிப்பிடத் தகுந்த இடம் இதுவா என்று புரியவில்லை.

விஷயம் 1: "The statistics that showed 5.27 crore persons visit the 3751 libraries in the State needed to be taken with a pinch of salt. Since most of these were repeat visits, the total number of visitors is probably a fifth of the number."

நூலகத் துறை என்பது உயர்கல்வித் துறையுடன் கூடவே வருகிறது. எனவே இந்தத் துறையின் செயலர் என்ன செய்ய வேண்டும்? புள்ளிவிவரங்கள் நமக்கு மிகவும் தேவையானவை. நாம் செய்யும் செலவு சரியாக அனைவரையும் போய்ச்சேருகிறதா என்பதைக் கண்காணிக்க இவை உதவும். பொது நூலகங்களை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க, தேவையான கணக்கெடுத்தல் முறையை நூலகங்கள் கொண்டுவரவேண்டும். ஒவ்வொரு பயனருக்கும் அடையாள அட்டை (உள்ளே வந்து சும்மா புத்தகத்தைப் புரட்ட வேண்டுமென்றாலும் அடையாள அட்டை வேண்டும் என்று வைக்க வேண்டும்) கொடுத்தால் அதுவே போதும்.

இதை வைத்து எத்தனை 'unique' வாசகர்கள் பொது நூலகங்களுக்கு வருகின்றனர் என்பதைக் கண்டறிந்துவிடலாம். அதைவிடுத்து guesswork செய்வது அவரது பதவிக்கு இழுக்கு.

விஷயம் 2: "There were more than 50 vacancies of librarians in government colleges, he said and urged the Government to take steps to improve facilities in libraries."

இதை தன் அமைச்சரிடம் அவர் நேரடியாகப் பேசவேண்டும். வெளியே நடக்கும் விழாவில், ஒரு துறையின் அமைச்சரும் செயலரும் பங்கெடுக்கும்போதா பேசுவது? இவர் என்னவோ நிர்வாகத்தின் வெளியே இருக்கும் ஒருவரைப் போல அல்லவா பேசுகிறார்?

-*-

நூலகத் துறைக்கு நிறையப் பணம் வருகிறது - ரியல் எஸ்டேட் வளர்ச்சியால் - என்று முன்னர் நான் எழுதியிருந்தேன். அந்தப் பணம் சரியான முறையில் இன்னமும் நூலகங்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை. அதை அமைச்சர் தங்கம் தென்னரசு போக்குவார் என்று எதிர்பார்ப்போம்!

1 comment:

  1. //விஷயம் 2: "There were more than 50 vacancies of librarians in government colleges, he said and urged the Government to take steps to improve facilities in libraries."இதை தன் அமைச்சரிடம் அவர் நேரடியாகப் பேசவேண்டும்.//

    அவர் கூறும் Government என்பது Finance Department. புதிதாக பணியாளர்களை நியமிக்க ஒவ்வொரு துறையில் (கல்வித்துறை உட்பட )இருந்தும் கருத்துருக்களை அனுப்பி வைத்து விட்டு காத்திருக்கிறார்கள்

    ReplyDelete