Monday, October 30, 2006

வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவு

இன்று மாலை 6.00 மணி அளவில் சென்னை, வாலாஜா சாலை, கலைவாணர் அரங்கில் இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் ஏற்பாடு செய்துள்ள வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவு நடக்க உள்ளது. முனைவர் பிரபாத் பட்னாயக் - "The State Under Neo-Liberalism" ("புதிய தாராளவாதத்தின் பிடியில் அரசு") என்ற தலைப்பில் பேச உள்ளார்.

Sunday, October 29, 2006

வங்கதேச அரசியல் குழப்பம்

நம் அண்டைநாடான வங்கதேசம் (பங்களாதேஷ்) இப்பொழுது மிகவும் குழப்பமான ஒரு சூழ்நிலையில் உள்ளது.

தமிழக அரசியலில் எப்படி கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆகாதோ அதைவிட மோசமான அரசியல் உறவு வங்கதேசத்தின் முக்கியமான கட்சிகளின் தலைவர்களான பேகம் காலீதா ஜியா, ஷேக் ஹசீனா ஆகியோரிடையே உள்ளது.

1971-ல் வங்கதேசம் உருவான பிறகு தலைவராக - முதலில் பிரதமராக, பின் அதிபராக - இருந்தவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். இவரும் இவரது குடும்பத்தோரும் சில வருடங்கள் கழித்து ராணுவப் புரட்சியின்போது கொல்லப்பட்டனர். இவரது குடும்பத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் இவரது மகள்களான ஹசீனா, ரெஹானா ஆகியோர். இந்த ஹசீனாதான் முஜிபுர் ரெஹ்மானின் கட்சியான அவாமி லீகின் தலைவர்.

முஜிபுர் ரெஹ்மான் கொலைக்குப் பிறகு சிலர் கைகளில் ஆட்சி சில நாள்கள் இருந்தாலும் சீக்கிரமே ராணுவ ஜெனரலான ஜியா-உர்-ரெஹ்மான் கைக்குக் வந்துவிட்டது. ஜியா நேரடியாக முஜிபின் கொலைக்குக் காரணம் என்று திட்டவட்டமாகத் தெரியாவிட்டாலும், தான் பதவிக்கு வந்தவுடன் முஜிபின் கொலையாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கிவிட்டார். இந்த ஜியாவின் மனைவிதான் பங்களாதேஷ் நேஷனலிஸ்ட் கட்சியின் தற்போதைய தலைவர் காலீதா ஜியா.

ஷேக் ஹசீனா, காலீதா ஜியா இருவருக்கிடையேயான வெறுப்பு எப்படிப்பட்டது என்பதை இப்பொழுது உங்களால் புரிந்துகொள்ளமுடியும்!

ஜெனரல் ஜியா பதவியில் இருந்தபோதே மற்றொரு ராணுவப் புரட்சியில் கொலை செய்யப்பட்டார். அதை அடுத்து கொஞ்ச நாள்கள் பல்வேறு சிவிலியன், மிலிடரி ஆசாமிகள் பதவியில் இருந்தாலும் சீக்கிரமே பதவியைக் கைப்பற்றினார் மற்றொரு ராணுவ ஜெனரலான எர்ஷாத். 1990-ல் ஏற்பட்ட மக்கள்/மாணவர் புரட்சியில் எர்ஷாத் தூக்கி எறியப்பட்டார்.

அப்பொழுதுதான் தற்போதைய அரசியல் அமைப்புச் சட்டம், குடியாட்சி முறை ஆகியவை அமலுக்கு வந்தன. அதனையடுத்து இதுவரை மூன்று முறை தேர்தல்கள் நடந்துள்ளன. இரண்டு முறைகள் காலீதா ஜியாவும், ஒருமுறை ஷேக் ஹசீனாவும் - கருணாநிதி, ஜெயலலிதா போல - மாறி மாறி பிரதமராக இருந்துள்ளனர். கடைசியாக ஆட்சியில் இருந்தவர் காலீதா ஜியா.

இந்தியா போலவே, மேற்படி அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் வங்கதேசத்தில் பிரதமருக்குத்தான் முழு அதிகாரமும். குடியரசுத் தலைவர் டம்மிதான். ஆனால் இந்தியாவில் தற்போது தேர்தல் ஆணையத்துக்கு இருப்பதுபோல வங்கதேச தேர்தல் ஆணையம்மீது கட்சிகளுக்கு முழு நம்பிக்கை கிடையாது. அதனால்தான் அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே ஒரு வழி உள்ளது. ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் ஆட்சி முடியும்போது நடுநிலையான ஒருவரை காபந்து ஆலோசகராக நியமிப்பார்கள். இவரது தலைமையில் மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும். வெற்றிபெறும் கட்சி ஆட்சி அமைத்ததும் இந்த நடுநிலையாளர் பதவியைக் காலி செய்துவிடுவார்.

இப்படிப்பட்ட நடுநிலையாளர் ஒருவர்தான் நியாயமான முறையில் தேர்தலை நடத்தக்கூடியவர் என்று கட்சிகள் நினைக்கின்றன. பொதுவாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவரை இந்தப் பொறுப்பில் அமர்த்திவிடுவார்கள். ஆனால், கடந்த இரண்டு முறைகளைப் போல் அல்லாமல் இந்தமுறை இந்த நடுநிலையாளர் விஷயத்திலேயே பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கே.எம்.ஹஸன் என்பவரை ஆளும் கட்சி BNP ஆலோசகராக நியமிக்க விரும்பியது. ஆனால் அவர் BNP ஆள் என்று சொல்லி, அவாமி லீக் அவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

தன் மீதான அவநம்பிக்கையால் வெறுத்துப்போன ஹஸன், தனக்கு உடம்பு சரியில்லை என்று ஆலோசகர் பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அடுத்த இரண்டு முந்தைய நீதிபதிகளை அவாமி லீக் வலியுறுத்த அவர்களை ஏற்றுக்கொள்ள BNP மறுத்தது. தற்போதைய குடியரசுத் தலைவரான இயாஜுதீன் அஹமதையே ஆலோசகர் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வைக்கலாம் என்று BNP யோசனை கூறியது. ஆனால் அவாமி லீக் அதனை ஏற்க மறுத்தது - ஏனெனில் இயாஜுதீன் அஹமது BNP கட்சியில் இருந்தவர், அந்த வழியில்தான் அவர் குடியரசுத் தலைவராகப் பதவிக்கு வந்தார்.

கடந்த சில தினங்களாக முக்கிய கட்சிகள் இரண்டும் தெருவில் இறங்கி அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். சிலர் இறந்துள்ளனர்.

கடைசியாகக் கிடைத்த செய்திகளின்படி குடியரசுத் தலைவர் இயாஜுதீன் அஹமத் தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தானே ஆலோசகராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அதாவது இப்பொழுதைக்கு குடியரசுத் தலைவரும் அவரே. கேர்டேக்கர் பிரதமரும் அவரே. இது அரசியல் சட்டப்படி செல்லுபடியாகுமா என்று தெரியவில்லை.

இதை நிச்சயம் அவாமி லீக் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதனை எதிர்த்து அவர்கள் தெருவில் இறங்கிப் போராடினால் பதிலுக்கு இயாஜுதீன் ராணுவத்தையும் காவலதுறையையும் ஏவிவிடலாம். விளைவு பல ஆயிரம் உயிர்கள் காலியாகும்.

பொதுவாக பொதுத்தேர்தல் என்றால் வங்கதேசத்தில் 2000 பேர்கள் வரை உயிரிழப்பார்கள்.

இம்முறை என்ன ஆகப்போகிறதோ!

முகமது யூனுஸுக்கு நோபல் பரிசு கிடைத்ததால் மகிழ்ந்திருக்கும் வங்கதேச மக்கள், அரசியல் ரீதியில் தம் நாட்டுக்கு எப்பொழுதுதான் முதிர்ச்சி கிட்டப்போகிறதோ என்று குழம்பிக் போயிருக்கிறார்கள்.

SC/ST கிரீமி லேயர்

நேற்றைய 'தி ஹிந்து' கருத்துப் பத்தியில் கே.வி.விஸ்வநாதன் என்னும் தில்லி வழக்கறிஞர், நாகராஜ் வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் 19 அக்டோபர் கொடுத்த தீர்ப்பில் SC/ST பிரிவினருக்குக் கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் விலக்கு இருக்க வேண்டும் என்று கருத்து சொல்லவில்லை என்று விளக்குகிறார்.
A close reading of the judgment shows that the expression "creamy layer" was used while interpreting Article 16(4), 16(4A), and 16(4B) compendiously and in the process of laying down limitations on the amending power of Parliament in the context of social reservations. The expression used in the judgment in the Nagaraj case is confined to Other Backward Classes (OBCs) and it is not in the context of SCs and STs. It should not be forgotten that the court was interpreting Article 16(4) and 16(4B) as much as it was interpreting 16(4A). The first two apply to OBCs also.

The issue of excluding the creamy layer among SCs and STs did not arise for consideration. That issue was already settled in 1992 by a larger bench of nine judges (Indra Sawhney versus Union of India — the `Mandal case,' AIR 1993 SC 447) and also in 2004 by a co-ordinate bench of five judges (E.V. Chinnaiah versus State of Andhra Pradesh and Others, AIR 2005 SC 162) by holding that the concept of creamy layer had no application to SCs and STs. The October 19, 2006 judgment in the Nagaraj case by five judges could not and, in fact, does not derogate from these earlier pronouncements.
நாகராஜ் வழக்கு தீர்ப்பு பற்றிய என் பதிவு. அதில் நான் என்ன சொல்லியிருந்தேன் என்று கொஞ்சம் மேற்கோள்:
இந்த வழக்கின் நோக்கமே மத்திய அரசு கொண்டுவந்திருந்த சில சட்டத்திருத்தங்கள் செல்லுபடியாகுமா ஆகாதா என்பதைக் கண்டறிவது. இதில் மத்திய அரசுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வந்துள்ளது.

ஆனால் இதுநாள்வரையில் நடைமுறையில் SC/ST பிரிவினருக்கு கிரீமி லேயர் தவிர்ப்பு என்ற ஒன்று இருந்ததில்லை. 19 அக்டோபர் 2006 தீர்ப்பு இதைப் புதிதாகப் புகுத்தவும் இல்லை. ஆனால் இனி யாரேனும் வழக்கு தொடர்ந்தால், இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்பு (1992), நாகராஜ் வழக்கின் தீர்ப்பு (19 அக்டோபர் 2006) ஆகியவற்றை வைத்து கிரீமி லேயர் SC/ST பிரிவினருக்கும் செயல்படுத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வருவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.
விஸ்வநாதன் மேற்கோள் காட்டியிருந்த சின்னையா வழக்கின் தீர்ப்பைப் படித்துப் பார்த்தேன். அந்தத் தீர்ப்பு SC பிரிவை மேலும் சிறு சிறு பிரிவுகளாகப் பிரிக்கக்கூடாது என்றுதான் வலியுறுத்துகிறது.

ஆந்திரா அரசு SC பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அனைத்து SC சாதியினருக்கும் சமமாகப் போய்ச்சேரவேண்டும் என்ற கருத்தில் SC சாதிகளை நான்காகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் இத்தனை இத்தனை என்று உள் ஒதுக்கீடு செய்திருந்தது. அதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கின் தீர்ப்பாக ஆந்திர அரசின் சட்டம் செல்லுபடியாகாது, SC பிரிவினர் பலவேறு சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஒரே குழுவாக மட்டுமே கருதக்கூடியவர்கள், அந்த சாதியினருக்குள் பல குழுக்களைப் பிரிக்கக்கூடாது, அவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது, அது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனப்பட்டது.

ஆனால் கிரீமி லேயர் SC பிரிவினருக்குத் தேவையில்லை என்று வெளிப்படையாக சின்னையா வழக்கின் தீர்ப்போ, இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்போ சொல்வதாகத் தெரியவில்லை. அதே சமயம் நாகராஜ் வழக்கும்கூட SC பிரிவினருக்கு கிரீமி லேயர் அவசியம் தேவை என்றும் சொல்லவில்லை.

எனவே இப்பொழுதைய நிலையில் அரசு SC/ST பிரிவினருக்கு கிரீமி லேயர் ஏதும் இல்லாமல் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி வரலாம். நாளை ஏதேனும் வழக்குகள் தொடுக்கப்பட்டால் அப்பொழுது எதிர்வினை ஆற்றலாம் என்று நினைக்கிறேன்.

Saturday, October 28, 2006

தேர்தல் அலசல் பற்றிய கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக Rajaji Centre for Public Affairs என்ற அமைப்பு 24 அக்டோபர், செவ்வாய்க்கிழமை அன்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ராஜாஜி மையத்தின் தலைவராக இருப்பவர் B.S.ராகவன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, 80 வயதுக்கு மேற்பட்டவர். இன்னமும் ஆர்வமுடன் குடிமைச் சமூக மேம்பாட்டுக்காக தமிழகம் முழுவதும் சென்று பேசுவது, தி ஹிந்து, பிசினஸ் லைன் ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதுவது என்று இருப்பவர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேச இருந்தவர்கள் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, முன்னாள் தமிழக காவல்துறை தலைமை ஆணையர் (Director General of Police) வி.ஆர்.லட்சுமிநாராயணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் ஆகியோர்.

செவ்வாய்க்கிழமை மியூசிக் அகாடெமி அரங்கில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு நானும் செல்வதாக இருந்தேன். ஆனால் அன்று இருந்த வேலை நெருக்கடியால் போகமுடியவில்லை. புதன் தினமணியில் இந்தக் கூட்டத்துக்கு அனுமதி மறுத்ததைக் கண்டித்து வைகோ ஓர் அறிக்கை விட்டிருந்தார்.
மண்டபங்களில் நடைபெறும் இப்படிப்பட்ட சிறப்புக் கூட்டங்களுக்கு வழக்கமாக காவல்துறை அனுமதி மறுக்கப்படுவது இல்லை.

...

விமர்சனங்களைச் சகிக்கும் மனநிலையை அடியோடு முதல் அமைச்சர் இழந்துவிட்டதால்தான், புதன்கிழமை பிரசுரமாக உள்ள முரசொலி உடன்பிறப்பு மடலில், நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பற்றி ராஜாஜி மையத்தின் சார்பில் நடத்த அர்ச்சனை ஒத்திகையுடன் தயாராகும் தினமணி கூட்டத்து நண்பர்கள் என்று ஏளனம் புரிந்து எழுதி, ஏடுகளுக்கும் அனுப்பி உள்ளார்.
ஏன் இந்தக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால் அன்றே தினமணி இணைய இதழில் காவல்துறை தரப்பிலிருந்து மறுப்பு அறிக்கை ஒன்று இருந்தது.
மழை மற்றும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த ராஜாஜி பொது விவகார மையத்தினர் ரத்து செய்தனர். ஆனால் போலீஸார் அனுமதி மறுத்துவிட்டதால்தான் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் உண்மைக்குப் பிறம்பானதாகும். இக்கூட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுக்கவில்லை.
சரி, வைகோ ஏதோ அரசியல் செய்கிறார், நாம் இதைப்பற்றி ஏன் எழுதவேண்டும் என்று விட்டுவிட்டேன்.

ஆனால் வியாழன் அன்று 'தி ஹிந்து'வில் வந்த செய்தியில் இரா.செழியன் 'அனுமதி மறுப்பை'க் கண்டித்துப் பேசியது வந்திருந்தது.
In his statement issued on Wednesday, Mr. Sezhian said that it was unfortunate that the police had refused permission though it was not required for hall meetings in Chennai. According to him, on the day before the meeting, the police told the organisers that the meeting would be allowed only if they had police permission; the organisers gave the application to the local police station as per the direction of the City Police Commissionerate; but even by Tuesday noon police permission was not forthcoming. As the organisers did not want to conduct the meeting and give room for any law and order problem they announced the cancellation of the meeting, Mr.Sezhian added.
இன்று இட்லிவடை பதிவில் ஜூனியர் விகடன் சோவுடன் நடத்திய பேட்டி வந்துள்ளது. அதிலிருந்து முக்கியமாக இரு மேற்கோள்கள்:
ஜூ.வி: நீங்கள் பேசவிருந்த கூட்டத்தை போலீஸ் ரத்து செய்ததன் பின்னணி என்னவென்று நினைக்கிறீர்கள்?

சோ: ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் அதிகார துஷ்பிரயோகத்தின் வெளிப்பாடுதான். அந்தக் கூட்டத்தில் நாங்கள் பேசவிருந்த சப்ஜெக்ட் 'தமிழ்நாட்டின் உள்ளாட்சித் தேர்தல்' என்பது. ஒருவேளை இந்த அரசாங்கத்தைப் பற்றியும், அண்மையில் சென்னை மாநகரில் நடந்து முடிந்த கேலிக்கூத்தான தேர்தல் முறையைப் பற்றியும் நாங்கள் கடுமையாகப் பேசக்கூடும் என்று நினைத்து அதிகாரத்தில் இருப்பவர்கள் அனுமதி மறுத்திருக்கலாம். 'கூட்டத்துக்கு முறையான அனுமதி பெறவில்லை. குறைந்த கால அவகாசத்தில் அனுமதி கேட்கப்பட்டதால் தர முடியவில்லை' என்று போலீஸ் அதற்குக் காரணங்கள் சொல்லலாம். ஆனால் குறைந்த கால அவகாசத்தில் எத்தனையோ கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் போலீஸ் அனுமதி கொடுத்திருக்கிறது.
தென் சென்னை போலீஸ் இணை கமிஷனர் துரைராஜ் கொடுத்த பதில்:
அந்தக் கூட்டம் ரத்தானதுக்கு எந்த வகையிலும் காவல்துறை பொறுப்பில்லை என்பதைக் கூட்டத்தை ஏற்பாடு செய்த அமைப்பினரே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் 'மழையின் காரணமாக கூட்டம் நடைபெறவில்லை' என்று அறிவித்தார்கள். அடுத்து அந்தக் கூட்டத்துக்கு அவர்கள் முறையாக அனுமதி பெறவில்லை. அனுமதி கேட்டு அவர்கள் கொடுத்த மனு உரிய காலத்தில் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு வந்து சேரவில்லை. அவ்வளவுதான்.
இந்த ஒரு கூட்டம் ரத்தாவது பெரிய விஷயமில்லை. மீண்டும் காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்று நடத்திவிடலாம். ஆனால் ஒரு குடிமகனாக எனக்குப் பல கேள்விகள் எழுகின்றன.

1. நான் பல கூட்டங்களை நடத்துகிறேன். முக்கியமாக புத்தகங்கள் தொடர்பான கூட்டங்கள். இவை எவற்றுக்கும் முன்னதாக அனுமதி ஏதும் யாரிடமும் இதுவரை பெற்றதில்லை. எந்த மாதிரியான கூட்டங்களுக்கு காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்?

2. உள் அரங்குகளில் நடைபெறும் கூட்டங்கள், வெளியிடங்களில் நடைபெறும் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஏதேனும் வித்தியாசங்கள் உள்ளனவா?

3. எந்தெந்தச் சட்டங்களின், அரசாணைகளின் அடிப்படையில் கூட்டங்கள் நடத்துவதற்கான அனுமதி கொடுத்தல்/மறுத்தல் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன?

தகவல் தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லவும். நானும் வெளியே விசாரித்து, தகவல் பெற்றவுடன் அதை வலைப்பதிவில் வெளியிடுகிறேன்.

Thursday, October 26, 2006

இரண்டு புத்தக அறிமுக விழாக்கள்

27 அக்டோபர் 2006, வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு மதன் எழுதிய கி.மு கி.பி என்னும் நூல் வெளியிடப்படுகிறது. எழுத்தாளர் ஜெயகாந்தன் நூலை வெளியிடுகிறார்.

இடம்: ஒடிஸ்ஸி, 45&47, 3வது மாடி, முதல் மெயின் ரோட், காந்தி நகர், அடையார், சென்னை 20




28 அக்டோபர் 2006, சனிக்கிழமை - ஒரு மாலை, ஒரு தேநீர், ஒரு புத்தகம் நிகழ்வின் ஆறாவது வாரமாக மாலை 6.30 மணிக்கு பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி படம் எடுக்கிறார் பற்றி சோம.வள்ளியப்பன் பேசுகிறார். அதையடுத்து அப்புசாமி தாத்தாவின் பிறப்பு ரகசியம் பற்றி ஒரு சிறு உரையாடல் பாக்கியம் ராமசாமியுடன் இருக்கும்.

இடம்: வித்லோகா, பீமசேனா கார்டன் தெரு, மைலாப்பூர், சென்னை 4





சென்னை மாநகராட்சி தேர்தல்

இரா.செழியன் 'தி ஹிந்து'வில் சென்ற வாரம் எழுதியிருந்த கட்டுரை.
Electronic voting machines can help prevent rigging, which Chennai witnessed on a shocking scale on October 13. But to ensure fair and free elections, we need persons in office with credibility and commitment to implement justly the rules of law and order.
நான் ஏற்கெனவே எழுதியிருந்ததுபோல மிகக் குறைந்தது மின்னணு வாக்குப்பதிவையாவது அடுத்த தேர்தலுக்குக் கொண்டுவரவேண்டும். வேறு பல விஷயங்கள் - தமிழகத் தேர்தல் ஆணையகம் நியாயனமானவர்கள் நிரம்பியதாக, தமிழகக் காவல்துறை ஆட்சியாளர்களின் கையாள்களாக இல்லாமல் நடந்துகொள்வது ஆகியவை நடக்க இன்னமும் 20-30 ஆண்டுகள் ஆகலாம்.

பஞ்சாயத் ராஜ் சட்டத்துக்குப் பிறகு இப்பொழுது தமிழகத்தில் நடந்துள்ளது மூன்றாவது உள்ளாட்சித் தேர்தல். மாநிலத் தேர்தல் ஆணையங்கள் இந்த மூன்று தேர்தலிகளின்போதும் சரியாக நடந்துகொள்ளவில்லை. மத்தியிலும் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கையாளாகத்தான் பலமுறை நடந்துவந்துள்ளது. இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், எமர்ஜென்சியை ஒட்டி, பின்னர் என்றுகூடப் பார்த்தால் மிக மோசமான நிலைமை இருந்து வந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தேர்தல் ஆணையத்தின் கலாசாரம் மாறி வந்துள்ளது. பல அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் சில நெருக்கடி உத்தரவுகள் வெறுப்பைத் தந்தாலும் எந்த அரசியல்வாதியுமே இன்றைய நிலையில் மத்திய தேர்தல் ஆணையத்தை பக்கச் சார்புள்ளது என்றோ, ஒருவருக்கு மட்டும் ஊழல் செய்ய வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்றோ சொல்லமாட்டார்கள்.

குடியாட்சி முறையில் தேர்தல்மீது மக்களுக்கு முழு நம்பிக்கை இருக்கவேண்டும். அது உள்ளாட்சித் தேர்தலில் இல்லை. இத்தனைக்கும் ஆளும் கட்சிக் கூட்டணி மிகவும் வலுவான கூட்டணி. எந்தத் தில்லுமுல்லும் செய்யாமலேயே உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களைப் பிடித்திருக்க முடியும். அப்படியும் அவ்வாறு செய்ய விரும்பவில்லை அந்தக் கூட்டணி. அஇஅதிமுகவின் அராஜகத்துக்குச் சற்றும் சளைத்ததல்ல எங்களுடையது என்றே செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்.

அடுத்தமுறை அஇஅதிமுகவுக்கு வாய்ப்பிருந்தால் இதே மாதிரியான ரவுடித்தனம்தான் தலை தூக்கும். இது ஓரளவுக்கு ஒழுங்கு வரத்தொடங்கியிருக்கும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களையும் பாதிக்கும்.

மாநிலத் தேர்தல் ஆணையர் நியமனத்திலேயே சில பிரச்னைகள் உள்ளன.
Under the Tamil Nadu Panchayats Act, 1994, the State Election Commissioner shall hold office for a term of two years and shall be eligible for re-appointment for two successive terms provided that no person shall hold office of the State Election Commissioner for more than six years in the aggregate; provided further that a person appointed as State Election Commissioner shall retire from office if he completes the age of 62 years during the term of his office.
இதை மத்திய தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையர்கள் நியமனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.
The President appoints Chief Election Commissioner and Election Commissioners. They have tenure of six years, or up to the age of 65 years, whichever is earlier. They enjoy the same status and receive salary and perks as available to Judges of the Supreme Court of India. The Chief Election Commissioner can be removed from office only through impeachment by Parliament.
மாநிலத் தேர்தல் ஆணையரின் நியமனத்தில் சில மாறுதல்களைச் செய்யவேண்டும். மாநிலத் தேர்தல் ஆணையரது பதவிக்காலம் இரண்டாடுகளுக்கு ஒருமுறை என்பதற்குபதில், நேரடியாக ஆறு ஆண்டுகள் என்று மாற்றப்படவேண்டும். ஒருமுறை அவரை நியமித்தபின் இம்ப்பீச்மெண்ட் முறையில் மட்டும்தான் அவரை வெளியேற்றலாம், இஷ்டத்துக்கு துரத்தமுடியாது என்ற நிலை வரவேண்டும். ஓய்வு பெறும் நிலையில் உள்ள - அதாவது 56 வயதைக் கடந்தவராகப் பார்த்து நியமிக்கலாம். மேலும் மாநிலத் தலைமை ஆணையருக்கு தேர்தல் நேரத்தில் காவல்துறையினைக் கட்டுப்படுத்த, மாவட்ட ஆட்சியர்களை மாற்றக்கூடிய அதிகாரமும் வழங்கப்படவேண்டும் (இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளதுபோல).

இப்படியான அதிகாரங்கள் இருந்தால் ஓரளவுக்கு, நாளடைவில், தமிழகத் தேர்தல் ஆணையகத்திலும் தரமானவர்கள் அமர்வார்கள் என்று நினைக்கிறேன். உள்ளாட்சித் தேர்தலும் நியாயமான முறையில் நடக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இவையெல்லாம் ஒரு பக்கம் நடக்கும்வரையில் மின்னணு வாக்குப்பதிவு என்பதைக் கட்டாயமாக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

Wednesday, October 25, 2006

இட ஒதுக்கீடு - கிரீமி லேயர்

சமீபத்திய இட ஒதுக்கீடு மீதான ஒரு வழக்கின் தீர்ப்பு பற்றி அரசியல் கட்சிகள் சில பல கருத்துகளை முன்வைத்துள்ளன.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் சட்டமாக்கியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு ஒன்று 'இந்திரா சாஹ்னி' வழக்கு (Indira Sawhney and others v. Union of India) என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. இந்த வழக்கில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமைப்புச் சட்ட பெஞ்ச் 16 நவம்பர் 1992-ல் தீர்ப்பு வழங்கியது. எட்டு நீதிபதிகள் ஒருமித்தும், ஒருவர் எதிர்த்தும் தீர்ப்பு வழங்கினர். இந்தத் தீர்ப்பில், அரசுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் உள்ளது என்றும் ஆனால் அப்படிப்பட்ட அதிகாரத்தைச் சில கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தவேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அந்தக் கட்டுப்பாடுகள்: (1) மொத்த இட ஒதுக்கீடு 50%த் தாண்டக்கூடாது. (2) கிரீமி லேயர் எனப்படுவோர் இட ஒதுக்கீடு பெறுவோர் பட்டியலில் இருக்கக்கூடாது. (அதாவது கிரீமி லேயருக்குள் தான் இல்லை என்று ஒருவர் சான்றிதழ் வாங்கி வைத்திருந்தால்தான் இட ஒதுக்கீடு அவருக்குக் கிடைக்கும். கிரீமி லேயர் என்றால் என்ன என்பதை வரையறுக்க மத்திய, மாநில அரசுகள் குழுக்களை அமைக்கவேண்டும்.)

அத்துடன் இந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்ட மற்றும் ஒரு விஷயம் - இட ஒதுக்கீடு என்பது ஒருவர் படிப்பில் சேரும்போதோ அல்லது வேலையில் சேரும்போதோ கொடுக்கப்படவேண்டும்; அதற்குப் பிறகு மேற்கொண்டு பதவி உயர்வு ஆகியவற்றில் கொடுக்கப்படக்கூடாது.

இந்தத் தீர்ப்பு வரும் வரையில் SC/ST பிரிவினருக்கு கல்வி, வேலை, பதவி உயர்வு ஆகியவற்றுக்கு இட ஒதுக்கீடு இருந்து வந்தது. பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கின் தீர்ப்பு, SC/ST பிரிவினருக்குக் கொடுக்கப்பட்டு வந்த பதவி உயர்வை பாதிப்பதாக இருந்ததால் இந்திய அரசு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 77வது சட்டத் திருத்தம் மூலம் Article 16 (4A) என்ற சேர்க்கையைக் கொண்டுவந்தது (1995). இதன்மூலம் SC/ST பிரிவினருக்கு வேலையில் பதவி உயர்வையும் இட ஒதுக்கீடு மூலம் கொடுக்கலாம்.
Amendment of Article 16. - In Article 16 of the Constitution, after clause (4), the following clause shall be inserted, namely:-

(4A) Nothing in this Article shall prevent the State from making any provision for reservation in matters of promotion to any class or classes of posts in the services under the State in favour of the Scheduled Castes and the Scheduled Tribes which, in the opinion of the State, are not adequately represented in the services under the State.
ஆனால் இதைத் தொடர்ந்து, பதவி உயர்வு கொடுத்தபின்னர் சீனியாரிட்டியை எவ்வாறு கணக்கிடுவது என்ற ஒரு குழப்பம் ஏற்பட்டது. அதாவது அரசுப் பணியில் ஆரம்ப நிலையில் 1000 பேர் பலப் பல நேரங்களில் சேர்கிறார்கள். அதில் 170 பேர் SC/ST, 830 பேர் பிறர். அடுத்து 100 பேருக்குப் பதவி உயர்வு கிடைக்கிறது. இதில் SC/ST வகுப்பினர் 17 பேர், பிறர் 83 பேர். 77வது சட்டத் திருத்தத்தின்படி ஜூனியரான ஒரு SC/ST வகுப்பினரும், அவரைவிட வருட அனுபவர் அதிகம் இருக்கும் பல பொதுவகுப்பினர் இருந்தாலும் பதவி உயர்வு பெறுகிறார். ஆனால் அடுத்த நிலையில் உள்ள 100 பேருக்கு அதற்கடுத்த நிலைக்கான பதவி உயர்வு வரும்போது மீண்டும் அந்நிலையில் உள்ள சீனியாரிட்டி மட்டுமே கவனிக்கப்படுமா அல்லது fast track முறையில் வந்த SC/ST வகுப்பினருக்கு எந்த சீனியாரிட்டி கொடுக்கப்படும் என்று கேள்வி எழுந்தது.

மற்றொரு பிரச்னையும் எழுந்தது. ஒரு குறிப்பிட்ட வருடத்தில் SC/ST, பிற்படுத்தப்பட்டோர் இடங்களை நிரப்புவதில் தேவையான ஆள்கள் கிடைக்காவிட்டால் அந்த இடங்கள் அடுத்த வருடத்தில் சேர்க்கப்பட்டன. இப்படிச் சேர்க்கும்போது அடுத்த ஆண்டில் SC/ST, பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் மொத்த இடங்களில் 50% தாண்டின. இந்திரா சாஹ்னி வழக்கு தீர்ப்பில் எந்த ஓர் ஆண்டிலும் இட ஒதுக்கீடு 50%த் தாண்டக்கூடாது என்றதன் காரணமாக SC/ST இட ஒதுக்கீடு பாதிக்கப்பட்டது.

எனவே அரசியல் அமைப்புச் சட்டத்தில் மற்றொரு திருத்தம் - 81வது சட்டத் திருத்தம் - செய்யப்பட்டது (2000). இது Article 16 (4A)-ல் ஒரு மாற்றத்தையும், Article 16 (4B) என்ற புதிய சேர்க்கையைக் கொண்டுவந்தது.
Amendment of Article 16.-

In Article 16 of the Constitution, in clause (4A), for the words "in matters of promotion to any class", the words "in matters of promotion, with consequential seniority, to any class" shall be substituted.

...

In Article 16 of the Constitution, after clause (4A), the following clause shall be inserted, namely: -

(4B) Nothing in this Article shall prevent the State from considering any unfilled vacancies of a year which are reserved for being filled up in that year in accordance with any provision for reservation made under clause (4) or clause (4A) as a separate class of vacancies to be filled up in any succeeding year or years and such class of vacancies shall not be considered together with the vacancies of the year in which they are being filled up for determining the ceiling of fifty per cent reservation on total number of vacancies of that year.
மற்றுமொரு வழக்கில் (வினோத் குமார் வழக்கு) இட ஒதுக்கீடு தொடர்பான தரக்கட்டுப்பாட்டில் SC/ST பிரிவினருக்கு தகுதி மதிப்பெண் குறைவாக இருந்தாலே போதும் என்பது செல்லாது என்றும், இது Article 335-க்கு எதிரானது என்று தீர்ப்பு கிடைத்தது. Article 335 என்ன சொன்னது?
335. Claims of Scheduled Castes and Scheduled Tribes to services and posts.-

The claims of the members of the Scheduled Castes and Scheduled Tribes shall be taken into consideration, consistently with the maintenance of efficiency of administration, in the making of appointments to services and posts in connection with the affairs of the Union or of a State.
அதாவது SC/ST பிரிவினருக்குக் கொடுக்கப்படும் எந்த இட ஒதுக்கீடும் அரசு வேலைகளில் எந்தத் தரக்குறைவும் செயல்நேர்த்திக் குறைவும் இல்லாமல் செய்யப்பட வேண்டும். இதைச் சரிக்கட்ட அரசியல் அமைப்பில் 82-வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது (2000).
By the Constitution (Eighty-Second Amendment) Act, 2000, a proviso was inserted at the end of Article 335 of the Constitution which reads as under:

"Provided that nothing in this article shall prevent in making of any provision in favour of the members of the Scheduled Castes and the Scheduled Tribes for relaxation in qualifying marks in any examination or lowering the standards of evaluation, for reservation in matters of promotion to any class or classes of services or posts in connection with the affairs of the Union or of a State."
இப்படியான மூன்று சட்டத் திருத்தங்களும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே அசைக்கின்றனவா, இம்மாதிரியாக அரசியலமைப்புச் சட்டங்களை மாற்ற நாடாளுமன்றத்துக்கு உரிமை உள்ளதா இல்லையா என்பதுதான் நாகராஜ் மற்றும் பிறர் Vs இந்திய யூனியன் வழக்கு, 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கான தீர்ப்புதான் 19 அக்டோபர் 2006 அன்று வெளியானது.

இந்தத் தீர்ப்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமைப்புச் சட்ட பெஞ்ச், நாடாளுமன்றத்துக்கு மேற்படி அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர உரிமை உண்டு, இந்தச் சட்டத் திருத்தங்கள் செல்லும் என்றது.

முக்கியமாக, இந்தச் சட்டத் திருத்தங்கள் கீழ்க்கண்ட எவற்றையாவது பாதிக்கிறதா என்று நீதிபதிகள் கேள்வி கேட்டனர்:

(1) the ceiling-limit of 50% (the numerical benchmark)
(2) the principle of creamy layer
(3) the compelling reasons, namely, backwardness, inadequacy of representation
(4) overall administrative efficiency

இந்த நான்கும் மேற்குறிப்பிட்ட சட்டத் திருத்தங்களால் பாதிக்கப்படவில்லை என்பதால் சட்டத் திருத்தங்கள் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தனர். ஆனால் அத்துடன், அவர்கள் கீழ்க்கண்டதையும் சொல்லியுள்ளனர்.
Social justice is concerned with the distribution of benefits and burdens. The basis of distribution is the area of conflict between rights, needs and means. These three criteria can be put under two concepts of equality, namely, "formal equality" and "proportional equality". Formal equality means that law treats everyone equal. Concept of egalitarian equality is the concept of proportional equality and it expects the States to take affirmative action in favour of disadvantaged sections of society within the framework of democratic polity. In Indra Sawhney all the judges except Pandian, J. held that the "means test" should be adopted to exclude the creamy layer from the protected group earmarked for reservation. In Indra Sawhney this Court has, therefore, accepted caste as determinant of backwardness and yet it has struck a balance with the principle of secularism which is the basic feature of the Constitution by bringing in the concept of creamy layer. Views have often been expressed in this Court that caste should not be the determinant of backwardness and that the economic criteria alone should be the determinant of backwardness. As stated above, we are bound by the decision in Indra Sawhney. The question as to the "determinant" of backwardness cannot be gone into by us in view of the binding decision.
பின்தங்கிய வகுப்பு என்பதைத் தீர்மானிக்க ஜாதியை அளவுகோலாக வைக்கலாம் என்பதை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டன. ஆனால் இந்திரா சாஹ்னி வழக்கில் பிற்படுத்தப்பட்டவர் என்றாலும் கிரீமி லேயர் (பிற்படுத்தப்பட்ட ஜாதியில் இருந்தாலும் முன்னேறிய வகுப்பில் உள்ளவர்களுக்கு சமமான சமூக, பொருளாதார நிலையை அடைந்துள்ளவர்) எனப்படுவோர் இட ஒதுக்கீடு பெற முடியாது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வழக்கின் தீர்ப்பாக அனைத்து இட ஒதுக்கீடுகளிலும் 50% உச்சவரம்பு, கிரீமி லேயர் விலக்கு ஆகியவை இருக்கவேண்டும் என்று சொல்லியுள்ளனர். இதுகூட இந்த வழக்கின் தீர்ப்பு அல்ல. ஏற்கெனவே 1992-ல் கொடுக்கப்பட்டுள்ள இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்பின் மேற்கோள்தான். இந்த வழக்கின் நோக்கமே மத்திய அரசு கொண்டுவந்திருந்த சில சட்டத்திருத்தங்கள் செல்லுபடியாகுமா ஆகாதா என்பதைக் கண்டறிவது. இதில் மத்திய அரசுக்குச் சாதகமாகத்தாண் தீர்ப்பு வந்துள்ளது.

ஆனால் இதுநாள்வரையில் நடைமுறையில் SC/ST பிரிவினருக்கு கிரீமி லேயர் தவிர்ப்பு என்ற ஒன்று இருந்ததில்லை. 19 அக்டோபர் 2006 தீர்ப்பு இதைப் புதிதாகப் புகுத்தவும் இல்லை. ஆனால் இனி யாரேனும் வழக்கு தொடர்ந்தால், இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்பு (1992), நாகராஜ் வழக்கின் தீர்ப்பு (19 அக்டோபர் 2006) ஆகியவற்றை வைத்து கிரீமி லேயர் SC/ST பிரிவினருக்கும் செயல்படுத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வருவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.

இந்த ஒரு கேள்வியை மட்டும் 5 நீதிபதிகள் அடங்கிய மற்றுமொரு அரசியல் அமைப்புச் சட்ட பெஞ்ச் ஒன்றுக்கு மத்திய அரசு அனுப்பலாம். அல்லது இந்திரா சாஹ்னி வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அமர்ந்திருந்ததால் 9 ஜட்ஜ்கள் அடங்கிய பெஞ்ச் ஒன்றைக் கூட்டலாம். அல்லது மத்திய அரசு, அரசியல் அமைப்புச் சட்டத்தில் மற்றுமொரு சட்டத்திருத்தம் கொண்டுவரலாம். Article 16 (4A), Article 16 (4B) ஆகியவற்றில் "without a need for creamy layer" என்பதைச் சேர்க்கலாம்.

இதை விடுத்து உச்ச நீதிமன்றம்மீது தேவையின்றிப் பழிகூறுவது, அரசியல் அறிக்கைகளை விடுவது, விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் செய்ய விரும்புவது ஆகியவை தேவையற்றவை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் முழுமையாக இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் படித்துப் புரிந்துகொள்ளக் கஷ்டமாக இருந்தால் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் கேட்டால் விளக்கிவிடுவார்கள்.

Sunday, October 22, 2006

தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2006

தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடந்த சமயத்தில் நான் சென்னையில்/இந்தியாவில் இருக்கவில்லை. கடந்த சில நாள்களில் பலரிடம் பேசியதன்மூலம் தெரிந்துகொண்டதை வைத்து இதனை எழுதுகிறேன்.

சென்ற 2001-ல் நடந்ததைப் போலவே இம்முறையும் வன்முறை, கள்ள வாக்கு, வாக்குச்சாவடியைக் கைப்பற்றல், காவல்துறை உதவியுடன் ஆளுங்கட்சி அராஜகம் ஆகியன நடந்தேறியுள்ளன.

முறையான உள்ளாட்சித் தேர்தல்கள்மூலம் மட்டுமே நாளடைவில் சரியான குடியாட்சி நாட்டில் நடைபெறும் என்றால் அது இன்னமும் 20-30 வருடங்களில் சாத்தியமே இல்லை என்று தோன்றுகிறது.

சிறிது சிறிதாக இந்திய தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து வெளியே வந்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ் தேர்தல் ஆணையத்துக்கு நிறைய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அதிகாரத்தைச் சரியான முறையில் பயன்படுத்தக்கூடியவர்கள் இல்லாதிருந்தனர். டி.என்.சேஷன் முதற்கொண்டு வரிசையாக அனைத்து தலைமை தேர்தல் ஆணையர்களுமே பக்கச்சார்புகளின்றிப் பணியாற்றுபவர்களாகக் கிடைத்துள்ளனர். இதே நிலை தொடரவும் தேர்தல் ஆணையம் மேலும் வலுப்பெறவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே மாநில சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்க்கும் நடக்கும் தேர்தல்கள் வன்முறைகள் குறைந்ததாகவும் பெருத்த நம்பிக்கை தரக்கூடியதாகவும் தோற்றமளிக்கின்றன.

ஆனால் மாநில தேர்தல் ஆணையங்களைப் பொருத்தமட்டில் இதே நம்பிக்கை இல்லை. தம்மளவில் அதிகாரப் பகிர்தலைக் கோருபவர்களாகவும் தமக்குக்கீழே அதிகாரத்தை மறுப்பவர்களாகவுமே நமது அரசியல்வாதிகள் நடந்துகொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தைப் பொருத்தமட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைக் குலைக்கும்வண்ணம் நேரடி மேயர்/நகராட்சித் தலைவர் பதவிகள் சட்டத்திருத்தம் மூலம் நீக்கப்பட்டன. சென்ற சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் ஸ்டாலின் வெற்றிபெறக்கூடாது என்று அஇஅதிமுக திட்டமிட்டு கராத்தே தியாகராஜன், சேகர் பாபு போன்ற ரவுடிகளின் தலைமையில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல், கள்ள வாக்கு, வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடங்களைக் கைப்பற்றுதல் ஆகியவற்றில் இறங்கினர். இம்முறை திமுக அதற்குச் சற்றும் சளைக்காமல் நடந்துகொண்டுள்ளது. வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்களை நுழையவிடாமல் செய்தது, குண்டர்கள் வந்து வாக்குச்சீட்டுகளை தம்மிஷ்டத்துக்கு எடுத்து சீல் அடித்துத் திணித்தது ஆகியவை நடந்துள்ளன. முக்கியமாகச் சென்னையில். ஆளும் கட்சியின் குண்டர்களுக்கு மட்டும் காவல்துறையின் ஆதரவு கிடைத்துள்ளது!

வாய்ப்பு கிடைத்தால் வன்முறையில் இறங்கி அதன்மூலமாவது பதவியைக் கைப்பற்றுதல் என்பது வழக்கமாகிப் போன நிலையில் குடியாட்சி முறையில் நம்பிக்கை உள்ள நாம் என்ன செய்யவேண்டும்? அரசியல்வாதிகள், முக்கியமாக ஆளுங்கட்சியினர் ஆதரிக்க மாட்டார்கள் என்ற போதிலும் சிலவற்றுக்காக நாம் போராடவேண்டும்.

1. மாநிலத் தேர்தல் ஆணையம் - இந்த அமைப்பின்மீது நாம் நம்பிக்கை வைக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தல்களையும் மத்திய தேர்தல் ஆணையமே நடத்தவேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டுவருமாறு நாம் போராடவேண்டும்.

2. மின்னணு வாக்குப்பதிவு - மேற்படி மாறுதல் நடக்கிறதோ இல்லையோ, சட்டத்திருத்தம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு நடத்தவேண்டும், அதற்கு செலவுகள் அதிகம் ஆனாலும் பரவாயில்லை என்பதை முன்வைத்துப் போராடவேண்டும். இதன்மூலம் வாக்குச்சீட்டு களவாடுதல், கொத்து கொத்தாகக் கள்ள வாக்கு போடுதல், எதிர்க்கட்சி வாக்குகளை செல்லாததாகச் செய்தல் போன்ற குற்றங்கள் குறையும்.

3. மீண்டும் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் முறையைக் கொண்டுவரப் போராடவேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் செய்யப்பட்டுள்ள செலவுகள் பயமுறுத்துகின்றன. 700 குடும்பங்களை மட்டுமே கொண்டுள்ள ஒரு பஞ்சாயத்தில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கிட்டத்தட்ட ரூ. 25 லட்சம் செலவு செய்துள்ளாராம். பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒருவர் ரூ. 7 லட்சம் செலவு செய்துள்ளார் (தன் சொத்துக்களை விற்று). தோல்வியுற்றவர் ரூ. 5 லட்சம் செலவு செய்துள்ளார். இவர்கள் அனைவருமே எப்படியாவது - அராஜக வழிகளின்மூலம் - செலவைவிட அதிக வருமானம் பார்க்க முயற்சி செய்வார்கள்.

உள்ளாட்சி அமைப்புகள் எந்த வகையில் மக்களை பாதிக்கின்றன, எவ்வாறு மக்களுக்கு இந்த அமைப்புகளால் நன்மை செய்யமுடியும் என்பது புரிந்தால்தான் மக்களும் அதற்கேற்றவாறு சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முனைவார்கள்.

Wednesday, October 18, 2006

முகமது யூனுஸ் - அமைதிக்கான நோபல் பரிசு

முகமது யூனுஸ் என்னும் பங்களாதேசத்தவர் பற்றியும் குறுங்கடன் (Micro credit) என்பது பற்றியும் நான் சில நாள்களாகப் படித்து வருகிறேன். அதையொட்டி வலைப்பதிவு ஒன்றையும் தொடங்கியுள்ளேன்.

இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு முகமது யூனுஸ் மற்றும் அவரது கிராமீன் வங்கிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

யூனுஸ் தொடங்கிய கிராமீன் வங்கி இன்று பங்களாதேசத்தில் ஏழைப் பெண்களுக்குக் குறுங்கடன்கள் கொடுப்பதில் முன்னணியில் இருக்கும் ஒரு வங்கி.

வெறும் கடன்கள்மூலம் மட்டுமே ஏழைமையைத் தீர்த்துவிடலாம் என்று நம்பினால் அது தவறுதான். கடன்கள் அவசியம். எந்தவிதப் பிணையும் இல்லாமல் கொடுக்கப்படும் குறுங்கடன்கள் மிகவும் அவசியம். ஆனால் ஏழைமை ஒழிப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு வெறும் கடன்கள் போதா. Microcredit may be necessary but not sufficient.

ஏழைமையை ஒழிக்க பல்வேறு நாட்டு அரசுகளும் தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. வளர்ந்த நாடுகள் பலவும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பலவற்றைச் செயல்படுத்துகின்றன. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி (பிற ஐரோப்பிய நாடுகள்) ஆகியவையும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளும் தம் குடிமக்களுக்கு பல்வேறு நலன்களை வழங்குகிறார்கள். வேலையில்லாதோருக்கு மாதாந்திர உதவித்தொகை, முதியோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை, அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை, சகாய வாடகையில் வீடுகள், பொதுப் போக்குவரத்தில் இலவசப் பயணம், பள்ளிக்கல்வி வரை இலவசம், உயர் கல்விக்கு குறைந்த வட்டியில் கடன் என்று பல விஷயங்கள் இந்த நாடுகளில் உண்டு. இவை எல்லாமே எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை. ஆனால் குறைந்தது மாதாந்திர உதவித்தொகையாவது கிடைத்து விடுகிறது.

இந்தியா, பங்களாதேசம் போன்ற நாடுகளில் மாதாந்திர உதவித்தொகை கிடையாது. அரசு மருத்துவமனைகளில் அடிப்படை மருத்துவ வசதி இலவசம் என்று பெயரளவில் இருந்தாலும் நடைமுறையில் மத்தியதர மக்களும் மேல்தட்டு மக்களும் தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர். பொருளாதார அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு சரியான மருத்துவ வசதி கிடைப்பதில்லை. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்கள் கண்ணியமான முறையில் வாழ்வதற்கு வழியே இல்லை. சத்தான உணவு என்றில்லை; பசியை அடைக்கத் தேவையான உணவு கிடையாது. அதனால் குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுவதிலிருந்து, பெண்களுக்கான வாழ்வுரிமை பறிக்கப்படுவதிலிருந்து ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.

சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் இருக்கும் நாடுகளில்கூட ஏழைகளால் தங்களது ஏழைமையிலிருந்து எளிதாக வெளியே வரமுடிவதில்லை. குறைவான சம்பளம் உள்ள வேலை கிடைத்தால் உடனடியாக உதவித்தொகை நிறுத்தப்படும் என்பதால் பலர் வேலையே தேடுவதில்லை. சுயமாகத் தொழில் புரிந்தால் உதவித்தொகை நிறுத்தப்படும். இப்படியான நிலையில் பலரும் உதவித்தொகை என்னும் சிறையில் மாட்டிக்கொண்டு தங்கள் நிலையை மேம்படுத்த முடியாமல் உள்ளனர். வலதுசாரி அரசியல்வாதிகள் (அமெரிக்காவில்) இம்மாதிரி உதவித்தொகை பெறுபவர்களை 'Welfare Queens' என்று புறம் பேசுகிறார்கள்.

ஜனத்தொகை மிகுதியால் திண்டாடும், அரசு உதவி என்ற வாய்ப்பே இல்லாத மூன்றாம் உலக நாடான பங்களாதேசத்தில் யூனுஸ் செயல்படுத்திய குறுங்கடன் திட்டம் ஓரளவுக்கு ஏழைகள் முன்னேற வகைசெய்துள்ளது. ஆனால் இதே திட்டம் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் சாத்தியப்படுமா?

நிச்சயம் சாத்தியமாகும் என்கிறார் யூனுஸ். ஆனால் இன்றுவரை பங்களாதேசம் தவிர்த்து வேறெந்த நாட்டிலும் பெரிய அளவில் குறுங்கடன் திட்டம் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. பங்களாதேசத்துக்குப் பிறகு இந்தியாவில்தான் ஓரளவுக்கு கண்ணுக்குத் தென்படுகிறார்போல குறுங்கடன் திட்டத்தின் வளர்ச்சி தெரிகிறது - முக்கியமாக ஆந்திரப் பிரதேசத்தில்.

தமிழகம் போன்ற மாநிலங்களில் நடக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் எதுவுமே இந்த கிராமீன் வங்கியின் குறுங்கடன் திட்டத்தைப் போன்றதில்லை. இந்தியாவில் குறுங்கடன் முறை வெகுவாக வளர்ச்சி அடைய வேண்டியுள்ளது.

குறுங்கடன் திட்டத்திலும் குறைகள் சில உள்ளன.

பலர் குறுங்கடன் வட்டிகள் (கிட்டத்தட்ட 24%) மிக அதிகமாக உள்ளதாகச் சொல்கின்றனர். ஆனால் 24% என்பது கந்து வட்டியையோ அல்லது கடனட்டை வட்டியையோ ஒப்பிட்டுப் பார்க்கும்போது குறைவுதான். இந்த அளவுக்காவது வட்டி வாங்கினால்தான் குறுங்கடன் வங்கிகளது நிர்வாகச் செலவை ஈடுகட்ட முடியும்.

கடன்களைத் திருப்பிச் செலுத்த குறுங்கடன் குழுக்கள்மீது அளவு கடந்த அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது வங்கிக்கு வங்கி மாறுபடலாம். ஆனாலும் யூனுஸ் தனது வங்கி மனிதாபிமான அடிப்படையிலேயே இயங்கி வருகின்றது என்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆந்திரப் பிரதேசத்தில் குறுங்கடன் வங்கிகள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக சில தற்கொலைகள் நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள்மீது ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்கப்போவதாகச் சொல்லியிருந்தது. இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க வங்கிகளும் அரசும் சேர்ந்து சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

பங்களாதேசத்தில் கிராமீன் வங்கியில் குறுங்கடன் வாங்கியவர்களில் பாதிப்பேர் இன்னமும் தங்கள் நிலையில் முன்னேறவில்லை என்று ஓர் ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார். இது 'பாதி தம்ளர் காலி' என்ற வகையைச் சார்ந்தது. மீதிப்பேர் தங்கள் நிலையிலிருந்து முன்னேறி விட்டார்களே என்று நாம் அந்த ஆராய்ச்சியாளரிடம் கேட்கலாம். அத்தனை ஏழைகளையும் ஒரே நாளில் மாற்றிவிடக்கூடிய மந்திரக்கோல் இல்லை குறுங்கடன்.

குறுங்கடன் வசதி மிக மிக ஏழைகளுக்குப் போய்ச்சேருவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது உண்மை என்றே அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். குறுங்கடன் பெற குழுக்கள் உருவாகும்போது பணத்தைத் திருப்பித் தர முடியாத நிலையில் இருப்பவர்களை யாரும் தங்களது குழுவில் சேர்க்க விரும்புவதில்லை. கடன் வாங்கி அந்தப் பணத்தில் தொழில் செய்ய முடியாமல் அந்தப் பணத்தை உணவாக மாற்றிச் சாப்பிட்டு விடுபவர்கள் கடன் பெறுவதை குறுங்கடன் நிறுவனங்களும் விரும்புவதில்லை. கடன் பெற்றாலும் எந்தத் தொழிலும் செய்யத்தெரியாத சோம்பேறிகள், செய்ய இயலாத முதியோர், ஊனமுற்றோர் ஆகியோர்களுக்கு குறுங்கடன் நிறுவனங்கள் உதவி செய்ய விரும்புவதில்லை.

முதியோர், ஊனமுற்றோர் ஆகியோருக்கு அரசுதான் உதவி செய்யவேண்டியிருக்கும். சோம்பேறிகளுக்குக் கடவுளால்கூட உதவ முடியாது.

அரசு நிறுவனம் குறுங்கடன் கொடுக்கும் வேலையில் இறங்கலாமா என்றால் கூடாது என்பதுதான் என் பதிலாக இருக்கும். எப்பொழுது பார்த்தாலும் கடன் தள்ளுபடி என்று சொல்லி வாக்குவங்கிகளைக் குறிவைப்பதும், efficiency அல்லாத முறையில் இயங்குவதும்தான் அரசு நிறுவனங்களில் செயல்பாடாக இதுவரை இருந்துள்ளது. (கடன் தள்ளுபடி பற்றிய முகமது யூனுஸின் கருத்தை நான் முன்னர் என் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.)

குறுங்கடன் நிறுவனங்கள் சந்தைப் பொருளாதார முறையில் முற்றிலுமாக இயங்க முடியுமா? சந்தை மூலம் தனக்குத் தேவையான மூலதனத்தையும் கடன் கொடுக்கத் தேவையான நிதியை முற்றிலுமாகக் கடனாகவும் பெற முடியுமா? கிராமீன் வங்கிகூட ஆரம்பத்தில் பல்வேறு மான்யங்களை வைத்துத்தான் வாழ்க்கை நடத்தியது. எனவே அரசு விரும்பினால் பல்வேறு குறுங்கடன் நிறுவனங்களைத் தொடங்குவதற்கு மான்யம், நீண்டகால குறைந்த வட்டிக் கடன் ஆகியவற்றைத் தரலாம். அத்துடன் இந்த நிறுவனங்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதைக் கண்காணிக்க கட்டுப்பாட்டு வாரியங்களை நிறுவினால் போதுமானது.

குறுங்கடன் நிறுவனங்கள் சிலவற்றை ஆரம்பிக்க உதவி செய்துவிட்டு ஏழைகளுக்கு நல்லது செய்துவிட்டதாகச் சொல்லி ஓர் அரசு ஒதுங்கிக் கொள்ளலாமா என்றால் நிச்சயம் கூடாது. குறுங்கடன் மட்டும் போதா. அடிப்படை வசதிகள் பலவற்றை அரசுதான் செய்துதர வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களுக்கு என்று குறைந்த வாடகை வீடுகள், உணவுக்கான மான்யம் (ரேஷன் கடைகள் மூலமாக), இலவசக் கல்வி, இலவச/தரமான மருத்துவ வசதி ஆகியவற்றை ஓர் அரசு செய்துதர வேண்டும். அதற்கு மேலாக குறுங்கடன் நிறுவனங்கள் கொடுக்கும் கடன்களை வைத்து மக்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்பதைத் தாங்களாகவேதான் முயற்சி செய்யவேண்டியிருக்கும்.

ஏழைமையை முற்றிலும் ஒழிக்க குறுங்கடன் போதாது என்றாலும்கூட பெரும்பாலான உலக ஏழைகளின் நிலையை ஓரளவுக்கு உயர்த்தும் எனலாம். அந்த வகையில் குறுங்கடன் முன்னோடியான முகமது யூனுஸுக்கும் அவரது நிறுவனமான கிராமீன் வங்கிக்கும் நோபல் பரிசு கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

Tuesday, October 17, 2006

ஓர்ஹான் பாமூக் நோபல் பரிசு

இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு துருக்கிய மொழியில் எழுதும், துருக்கியைச் சேர்ந்த எழுத்தாளர் ஓர்ஹான் பாமூக் (Orhan Pamuk) என்பவருக்குக் கிடைத்துள்ளது.

ஓர்ஹான் பாமூக் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் என்றாலும்கூட அவர் எழுதுவது துருக்கி மக்களுக்காக இல்லை; வெளிநாட்டவருக்காக என்ற பேச்சும் உள்ளது. அவரது கதைகள் கொஞ்சம்கூடப் புரியாதவை என்றும் கருத்துகள் உள்ளன.

ஆனால் எழுத்தின் வீச்சைவிட, எழுதுபவரின் அரசியல் பின்னணி அவருக்கு பரிசு கிடைக்கும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறதோ என்ற தோற்றமும் ஏற்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் (2004) பரிசுபெற்ற ஆஸ்திரியா நாட்டு எழுத்தாளர் எல்ஃபிரீட் ஜெலினெக் அரசியலில் தீவிரமாக ஈடுபடுபவர். தன் நாட்டை, ஆளும் கட்சிகளை, பிற அரசியல்வாதிகளைக் கடுமையாக எதிர்ப்பவர். அதேபோல 2005 நோபல் பரிசு பெற்ற ஹரால்ட் பிண்ட்டர் தனது நாடான பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைக் கடுமையாகச் சாடுபவர்.

பாமூக் அந்த அளவுக்குத் தீவிரமாகப் போகவில்லை என்றாலும் சென்ற ஆண்டு ஒரு பிரச்னையில் மாட்டிக்கொண்டார்.

முதலாம் உலகப்போரின்போது துருக்கியப் படைகள் ஆர்மீனியர்கள் பலரைப் படுகொலை செய்தது தொடர்பாக பலத்த சர்ச்சை உள்ளது. இந்தப் படுகொலையில் எத்தனை ஆர்மீனியர்கள் இறந்துள்ளனர்; இது இனப்படுகொலையா (genocide) அல்லது போரின்போது நடக்கும் சாதாரணக் கொலைகள்தாமா - இவைதான் சர்ச்சைக்குக் காரணமே. மிகவும் sensitive-ஆன இந்த விஷயத்தில் பாமூக் இந்தக் கொலைகள் இனப்படுகொலைகள் என்று சொன்னதால் துருக்கி அரசு அவர்மீது நாட்டை அவமதித்ததாக வழக்கு தொடுத்தது. பின்னர் சில technical காரணங்களால் வழக்கிலிருந்து விடுபட்டார்.

இப்பொழுது நோபல் பரிசுக்குப்பிறகு துருக்கி பிரதமர், பாமூக்கின் பழைய பிரச்னையைப் பற்றிப் பேசவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றம் துருக்கியில் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டது இனப்படுகொலை அல்ல என்று யாராவது சொன்னால் அது குற்றம் என்று சட்டம் இயற்றியுள்ளது! (இது 'ஜெர்மனியில் யூதர்கள் கொலை செய்யப்பட்டது இனப்படுகொலை அல்ல என்று சொல்வது குற்றம்' என்று பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் சட்டங்களைப் போன்றது.) இந்தச் சட்டத்தை விமரிசித்துள்ள பாமூக், இப்படி ஒரு சட்டம் இயற்றுவதே பேச்சுரிமையை அவமதிப்பது போலாகும் என்று சொல்லியுள்ளார்.

ஆக, எப்பொழுதும்போல அரசியல் முன்னுக்கும் இலக்கியம் பின்னுக்கும்.