Wednesday, January 24, 2007

அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுத வேண்டுமா?

ஆளுநர் உரை என்பது அரசியல் கொள்கைகளை விளக்கும் மேடையாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

முதலில், ஆளுநர் உரை என்பது பெயரளவில்தான். அதை எழுதுவது முதல்வரின் செயலகம். அதை அப்படியே படிக்கவேண்டியது மட்டும்தான் ஆளுநரின் பொறுப்பு.

ஆளுநர் பாராட்டுவதுபோல தனது அரசைத் தானே பாராட்டி முடித்ததும், அடுத்து அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுத வேண்டும் என்று ஒரு கோரிக்கை.

இந்தக் கோரிக்கைக்குப் பின்னால் உள்ள காரணங்கள் எவை?

1. மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வேண்டும். அப்பொழுதுதான் சரியான கூட்டாட்சி முறை நிலவும். முக்கியமாக மாநிலங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரங்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும்.

2. சமூக நீதி. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 9வது ஷரத்தில் இஷ்டத்துக்கு சட்டங்கள் செருகப்படுவதை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காததற்கு எதிர்வினை.

ஏற்கெனவே பல சட்டத் திருத்தங்கள் மூலம் அரசியல் அமைப்பில் தேவையான மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இத்தகைய சட்டத்திருத்தங்கள், அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமைகளை பாதிக்காதவண்ணம் இருக்கவேண்டும். அவ்வாறு பாதிக்கும் என்று உச்ச நீதிமன்றம் நினைத்தால் சட்டத்திருத்தங்கள் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளிக்க முடியும்.

மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வேண்டுமென்றால் அவற்றை சட்டத்திருத்தத்தின் மூலமாகவே செய்யமுடியும். அரசியல் அமைப்புச் சட்டத்தை முற்றிலுமாக மாற்றி எழுத வேண்டியதில்லை. எனவே உச்ச நீதிமன்றத்தையும் அது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை எவ்வாறு பார்க்கிறது என்பதையும் கட்டுப்படுத்தவே அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதவேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்துள்ளது என்று தோன்றுகிறது.

பல நாடுகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பலமுறை மாற்றி எழுதியுள்ளன என்று ஆளுநர் அறிக்கையில் வந்துள்ளது. நிலையான குடியாட்சி நாடுகளை எடுத்துக்கொள்வோம். எங்கு இவ்வாறு அரசியல் அமைப்பு பலமுறை மாற்றி எழுதப்பட்டுள்ளது? அமெரிக்காவில்? மேற்கு ஐரோப்பிய நாடுகளில்? ஆஸ்திரேலியாவில்? ஜப்பானில்?

எழுதப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு என்ன தருகிறது?

1. மக்களுக்கு அடிப்படை உரிமைகள்.
2. ஆட்சி முறை. தேர்தல் முறை. எந்த விதமான ஆட்சிமுறை வந்தாலும் அடிப்படை உரிமைகள் மீறப்படாமல் இருக்க வேண்டும்.
3. ஆட்சி நடத்துவோர் எவ்வாறு வருமானத்தைப் பெறுவது, எந்தெந்தப் பணிகளை எந்தெந்த அரசுகள் செய்ய வேண்டும். மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையேயான உறவுகள்.
4. மக்களைக் கட்டுப்படுத்தும் அடிப்படைச் சட்டங்கள், மேற்கொண்டு சட்டம் இயற்றும் வழிமுறைகள், நீதிமன்றங்கள் எவ்வாறு உருவாக்கப்படும் ஆகியவற்றுக்கான விதிமுறைகள்.

பொதுவாக அரசியல் அமைப்புச் சட்டம் மாற்றப்படுவது ஆட்சிமுறை மாற்றத்தைச் செயல்படுத்தத்தான். சட்டத்திருத்தங்கள் மூலமாக மட்டுமே இதனைச் செய்வது சாத்தியப்படாது என்ற பட்சத்தில் இவ்வாறு செய்யப்படும்.

பாகிஸ்தானில் பல அரசியல் அமைப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1956, 1973, 1988 சட்டத்திருத்தம், அவ்வப்போது ராணுவ ஆட்சியாளர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை தொங்க விடுவது என்று ஏகப்பட்ட குழப்பங்கள். பிரதமர் ஆட்சியா, ஜனாதிபதி ஆட்சியா? ஒற்றையாட்சி முறையா, கூட்டாட்சி முறையா? உள்ளாட்சிக்கு அதிகாரங்கள் உண்டா, இல்லையா? இவைதான் பெரும்பாலும் அரசியல் அமைப்புச் சட்டங்களை மாற்றி அமைக்கத் தூண்டுகின்றன.

இலங்கையில் அரசியல் அமைப்புச் சட்டம் 1972-லும் பின்னர் 1978-லும் மாற்றி எழுதப்பட்டது. இங்கு ஆட்சி முறை மாறியதுடன் சிறுபான்மை மக்களது உரிமையும் மறுக்கப்பட்டது கவனத்தில் கொள்ள வேண்டியது.

பல நாடுகள் உடையும்போது, புது நாடுகள் உருவாகும்போது, புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டியிருக்கும். சேர்ந்து இருக்கும்போது தேவையான சில சட்டங்கள், அமைப்பு முறைகள் இப்பொழுது தேவையில்லை என்பதால்.

சில வருடங்களுக்கு முன் பாஜகவின் அத்வானி ஜனாதிபதி ஆட்சிமுறை வேண்டும் என்றும் அதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதவேண்டும் என்றும் சொல்லியது பலத்த சர்ச்சையைக் கிளப்பியது ஞாபகமிருக்கலாம்.

இப்போதைய நிலையில் அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டிய தேவை எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

====

பங்களாதேச அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டுமென்றால் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன், மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி (Referendum) அதிலும் பாதிக்கு மேல் வாக்குகள் பெறவேண்டும்.

அதே முறையை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தினால்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தன்னிஷ்டத்துக்கு சட்டத்திருத்தங்கள் கொண்டுவருவதைத் தடுக்க முடியும். மேலும் சில சமயம் சில கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மையான பலம் கிடைக்கும்போது சர்வாதிகாரத்தனம் மேலோங்காமல் இருக்க வகை செய்யும்.

1 comment:

  1. பத்ரி,

    உங்களுக்கு என் வேண்டுகோள் ஒன்றை என் வலைப்பதிவில் - இங்கே
    தந்திருக்கிறேன்.

    நன்றி.

    நியோ.

    ReplyDelete