Friday, February 22, 2008

பாகிஸ்தான் - தேர்தலுக்குப் பின்

பாகிஸ்தானில் நாடாளுமன்றத்துக்கும் (நேஷனல் அசெம்ப்ளி) நான்கு மாகாணங்களின் சட்டமன்றங்களுக்குமான தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. ஒரு சில இடங்களின் முடிவுகள்தவிர அனைத்தும் வெளியாகியுள்ளன. முடிவுகள்:

நாடாளுமன்றம்:
மொத்தமுள்ள இடங்கள்: 272
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவை: 262
பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPPP) - புட்டோ/சர்தாரி: 87
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (PML-N) - நவாஸ் ஷரீஃப்: 67
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - முஷரஃப்: 40
பிறர்: மீதம்.

சர்தாரி, ஷரீஃப் கூட்டணி அமைத்தால் பெரும்பான்மை கிடைத்துவிடுகிறது. இன்னமும் முடிவாகாமல் இருப்பது யார் பிரதமர் என்பதும் அடுத்து என்ன செயல் திட்டம் என்பதும்.

நான்கு மாகாணத் தேர்தல்களில் என்ன நடந்துள்ளது?

சிந்த் என்பது பாகிஸ்தான் மக்கள் கட்சி (புட்டோ) கோட்டை.

மொத்த இடங்கள்: 130
பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPPP): 71

தனியாகவே சர்தாரி/புட்டோ கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. ஆட்சியை அமைப்பார்கள். இங்கு பெரிய மாறுதல் ஏதும் கிடையாது.

பஞ்சாப், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணம். நவாஸ் ஷரீஃபீன் கோட்டை. இங்குதான் முஷரஃப், ஷரீஃபின் கட்சியை உடைத்து புதிய கட்சியை உருவாக்கியிருந்தார். இந்தத் தேர்தலில் என்ன நடந்துள்ளது?

மொத்த இடங்கள்: 297
முடிவுகள் அறிவிக்கப்பட்ட இடங்கள்: 289
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (PML-N) - ஷரீஃப்: 104
பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPPP) - சர்தாரி/புட்டோ: 79
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - முஷரஃப்: 66

இங்கே ஷரீஃபும் சர்தாரியும் இணைந்தால்தான் பெரும்பான்மை கிடைக்கிறது. இதை வைத்துதான் இரண்டு பேரும் டீல் போடப்போகிறார்கள். பஞ்சாப் ஷரீஃபுக்கு. பாகிஸ்தான் சர்தாரிக்கு. இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் ஆதரிப்பது. சிந்த் தனிப்பட்ட முறையிலேயே சர்தாரியின் கட்சிக்குப் போகிறது.

இதுவரையில் பெரிய மாற்றம் இல்லை. அடுத்து இரண்டு பிரச்னை மாகாணங்கள்.

பலூசிஸ்தான். சின்ன மாகாணம். மொத்த இடங்கள்: 40. இங்கு, முஷரஃப் ஆதரவு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 18 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 11. எனவே அதிலிருந்து மூன்றுபேரை இழுத்தால் போதும். இந்த ஒரு மாகாணம்தான் முஷரஃபுக்குப் போயுள்ளது. ஆனால் இந்த மாகாணத்தை ஆட்சி செய்வது எளிதானதல்ல. பிரிவினை சக்திகள் மத்திய ஆட்சியின்மீது கடும் கோபத்தில் உள்ளனர். மிகவும் பின்தங்கிய பகுதி.

கடைசியாக வடகிழக்கு எல்லை மாகாணம். சென்றமுறை அடிப்படைவாத முஸ்லிம் கட்சியான முத்தாஹிதா மஜ்லீஸ்-இ-அமால் இந்த மாகாணத்தை ஜெயித்தது. ஆனால் இந்த முறை இந்தக் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.

மொத்த இடங்கள்: 99
முடிவு அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்: 91
அவாமி நேஷனல் கட்சி: 31
பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPPP) - புட்டோ/சர்தாரி: 17
முத்தாஹிதா மஜ்லீஸ்-இ-அமால் (MMA): 10
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - ஷரீஃப்: 5
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - முஷரஃப்: 5
மிச்சம் - பலர் + சுயேச்சைகள்.

இங்கே அவாமி நேஷனல் கட்சியும் புட்டோ கட்சியும் சேர்ந்தால் போதும். கிட்டத்தட்ட பெரும்பான்மை கிடைத்தாற்போலத்தான். மிச்சம் மீதி, சுயேச்சைகளிடமிருந்து வந்துவிடும்.

ஆக, இந்தத் தேர்தலில் பெரும் வெற்றி என்று சொன்னால் அது கொல்லப்பட்டு, தியாகியான பேநசீர் புட்டோவின் கட்சிதான். மத்தியில் தனிப்பெரும் கட்சி. ஆட்சியில் முக்கியப் பங்கு. சிந்த் மாகாணத்தில் தனி ஆட்சி. பஞ்சாப், வடகிழக்கு எல்லை மாகாணத்தில் ஆட்சியில் ஜூனியர் பார்ட்னர்.

-*-

சர்தாரியின் நோக்கம் என்னவாக இருக்கும்? ஷரீஃபின் நோக்கம் என்னவாக இருக்கும்?

ஷரீஃபின் நோக்கம் ஒன்றுதான். முஷரஃபை அழிப்பது. தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எப்போதும் மனத்தில் தேக்கி வைத்திருக்கிறார் ஷரீஃப். ஷரீஃப், நீதித்துறையின்மீது பெரும் மதிப்பு வைத்திருப்பவர் அல்லர். அவரது குண்டர்கள் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் புகுந்து நீதிபதிகளை அடிக்க முற்பட்டவர்கள்தாம். ஆனால் இப்போது பாகிஸ்தானின் நீதித்துறையைக் காக்க வந்தவர்போலக் காண்பித்துக்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் முஷரஃபை அவமானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பமுடியும்.

சர்தாரி பெரும் திருடன். இப்போது நியாயவான்போலக் காட்சி அளிக்க முற்பட்டாலும் தன் மனைவியின் ஆட்சிக்காலத்தில் எத்தனை எத்தனையோ கம்பெனிகளைச் சூறையாடி அவற்றைத் தன் பெயருக்கு மாற்றிக்கொண்டவர். ஏகப்பட்ட நில அபகரிப்புகள், லஞ்சம் என்று சொத்து சேர்த்தவர். இப்போது முஷரஃபை நேரடியாக ஒழித்துக்கட்ட அவருக்கு விருப்பம் கிடையாது. அதனால் சர்தாரி ஒரே நேரத்தில், ஷரீஃப், முஷரஃப் என்று இருவரிடமும் டீல் போடலாம்.

பதவி நீக்கப்பட்ட நீதிபதிகள் - இஃப்திகார் சவுதுரி, ரானா பகவன் தாஸ் ஆகியோர் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார்களா என்பதுதான் அடுத்த சில மாதங்களில் நாம் ஆவலுடன் எதிர்நோக்கும் ஒரு விஷயமாக இருக்கும்.

பாகிஸ்தான் ராணுவம் வாயே திறக்காமல் இருப்பது சந்தோஷமாக உள்ளது. அப்படியே பாகிஸ்தான் அரசியலில் தலையிடுவதற்கு ஒரு முழுக்கு போட்டால் அந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் செய்யும் ஒரு பேருதவியாக இருக்கும்.

பலர், MMA தோல்வியுற்றதை சந்தோஷத்துடன் கொண்டாடுகிறார்கள். இதனால் பாகிஸ்தானில் தீவிரவாதம் ஒழிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அது உன்மையன்று. அடுத்த சில மாதங்களில் வளர்ச்சியின்மீது எந்தக் கட்சியும் ஈடுபாட்டைக் காண்பிக்கப் போவதில்லை. யார் யாரை எப்படி ஒழிப்பது என்பதிலேயே காலம் கடக்கும். இதனால் பாகிஸ்தானின் பொருளாதாரம் முன்னேறப்போவதில்லை. எங்கெல்லாம் வளர்ச்சி இல்லையோ அங்கு தீவிரவாதம் பெருகும். மக்கள் வாக்குகளை தீவிரவாதிகள் பொருட்படுத்தப்போவதில்லை. தாலிபன் தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் முஷரஃப், ஷரீஃப், சர்தாரி ஆகியோருக்கு தெளிவான கருத்துகளும் ஒற்றுமையும் கிடையாது. இந்த மூவரும் சேர்ந்து மனது வைத்தால்தான் அந்தத் தீவிரவாதத்தை எதிர்கொள்ளமுடியும்.

அடுத்து இந்தியாவுடனான உறவு. இதில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது. உள்நாட்டுப் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கே அவர்களுக்கு அடுத்த சில ஆண்டுகள் தேவைப்படும். காஷ்மீர் போராளிகளுக்கு தனியாக எந்த உதவியும் வரப்போவதில்லை. இதையே சரியான தருணமாக எடுத்துக்கொண்டு, இந்தியா காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவர என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையையும் செய்யவேண்டும்.

பாகிஸ்தானில் அமெரிக்காவின் தலையீடு: பேநசீர் புட்டோவின் கொலைக்குப்பிறகு, அமெரிக்கா கடும் குழப்பத்தில் உள்ளது. பாகிஸ்தானில் யார் தன்னுடைய நண்பன் என்று தெரியாமல் அமெரிக்கா திண்டாடப்போகிறது. முஷரஃப் ஆதரவை அதிகமாகக் காட்டியதால், ஷரீஃப் அமெரிக்காவுடன் ஒத்துப்போகமாட்டார். மேலும் உள்நாட்டுத் தேர்தல் காரணமாக, அமெரிக்கா சிறிதுகாலம் பாகிஸ்தானில் தலையை நுழைக்காமல் இருந்தால் அது நல்லது.

பாகிஸ்தானின் அமைதிக்குப் பெரும் இடையூறாக இருக்கப்போவது தாலிபன் தீவிரவாதமே. அதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களது எதிர்காலம் அமையும்.

No comments:

Post a Comment