Wednesday, July 30, 2003

ஸ்டார் நியூஸும், ஊடகங்களில் அன்னிய நாட்டவர் முதலீடும்

ஸ்டார் நியூஸ் ஹிந்தி செய்தித் தொலைக்காட்சி சானல் பற்றி அண்மையில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் இந்திய அரசு உள்நாட்டிலிருந்து செய்தித் தொலைக்காட்சி சேவையை அளிக்க விரும்புபவர்கள் நேரடியாக ஒளிக்காட்சிகளை (video) செயற்கைக்கோள் மேலேற்றலுக்கான (satellite uplinking) அனுமதி தருவதற்கான விதிமுறைகளை உருவாக்கியது. அதன்படி எதாவது ஒரு நிறுவனம் உள்நாட்டிலிருந்து செயற்கைக்கோள் மேலேற்றம் செய்ய விரும்பினால், அந்த நிறுவனத்தில் 26% க்கு மேல் வெளிநாட்டவர் முதலீடு செய்திருக்கக் கூடாது என்று வரையறுத்தது.

ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி சானல், ஆஸ்திரேலியாவில் பிறந்து தற்பொழுது அமெரிக்கக் குடியுரிமை பெற்றவரான ரூப்பர்ட் மர்டாக் என்பவரில் கட்டுக்குள் இருக்கும் நியூஸ் கார்ப்பொரேஷன் என்னும் நிறுவனத்தினுடையது. இந்த தொலைக்காட்சி சானல் ஆரம்பித்தது முதல் மார்ச் 2003 வரை இதற்கு நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது நியூ டெல்லி டெலிவிஷன் (NDTV) என்னும் பிரணாய் ராய் என்ற புகழ் பெற்ற தொலைக்காட்சியாளரின் நிறுவனம் ஆகும். ஆனால் ஏப்ரல் முதல் ஸ்டார் நிறுவனமே தனது வேலையாட்கள் மூலம் இந்தத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்ப ஆரம்பித்தனர். இதற்கு பின்னர் தான் அரசின் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த விதிமுறை வெளியானவுடன், மத்திய அரசு இந்த விதிமுறைகளுகளோடு ஒத்திசையுமாறு ஸ்டார் நிறுவனத்துக்கு மூன்று மாத அவகாசம் கொடுத்தது.

உள்நாட்டிலிருந்து செயற்கைக்கோள் மேலேற்றுதல் என்பது செய்தித் தொலைக்காட்சிகளுக்கு மிகவும் அவசியமானது. இதன்மூலம்தான் உடனுக்குடன் நேரடி செய்தி வாசிப்பு (Live News) நடத்த முடியும். இல்லாவிட்டால் ஒளிநாடாக்களாக வெளிநாட்டுக்கு (சிங்கப்பூர் அல்லது ஹாங்-காங்) அனுப்பி 2-3 மணி நேரத்திற்கு அப்பால்தான் செய்திகளை வாசிக்க முடியும். உள்நாட்டிலிருந்து ஒளிபரப்பும் போட்டி நிறுவனங்கள் பார்வையாளர்களையும், அதனால் வரும் விளம்பரப் பணங்களையும் அள்ளிக்கொண்டு போய்விடும்.

அரசு ஏன் 26% என்ற உச்ச வரம்பை வைத்தது? செய்தித் தொலைக்காட்சிகள் இந்தியரது கையில் இல்லாவிட்டால் இந்திய அரசுக்கு எதிராகவும், வெளிநாட்டு அரசுக்கு ஆதரவாகவும் செய்திகள் வழங்கப்படும், மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளையும் என்றெல்லாம் அரசு கருதியிருக்கலாம். பொதுமக்களுக்கு இதுவரை சரியான காரணம் எடுத்துக் கூறப்படவில்லை. மேலும் செய்தித்தாள் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களின் கையில்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீடு இங்கு இதுவரை மறுக்கப்பட்டு வந்தது. இப்பொழுதுதான் இதில் 26% வரை வெளிநாட்டவர் பங்கு பெறலாம் என்று அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனால் செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களை செய்தித்தாள் நிறுவனங்களோடு ஒப்பிட்டு இரண்டிலும் 26% சதவீதம்தான் வெளிநாட்டவரது பங்குரிமை இருக்க வேண்டும் (தற்போதைக்கு) என்று அரசு கருதியிருக்கலாம்.

இந்த அரசு விதிமுறையோடு மூன்று மாத கால அவகாசம் வந்தவுடன் ஸ்டார் நிறுவனம் ஒரு சில இந்தியர்களுடன் பேசி அவர்களைத் தன் செய்தித் தொலைக்காட்சி நிறுவனத்துக்குப் பங்குதாரர்களாக ஆக்கி, தனது பங்கை 26%க்கு குறைக்க முயற்சி செய்தது. இது நடக்கும் வரை அரசிடம் ஒவ்வொரு வாரமாக கால அவகாசம் கேட்டு நீட்டித்து வந்தது.

கடைசியாக, குமார மங்கலம் பிர்லா (பெரிய தொழிலதிபர்), சுஹேல் சேத் (விளம்பர நிறுவனமான ஈக்வஸ் உரிமையாளர்), மாயா அலக் (ப்ரிட்டானியா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரின் மனைவி, மற்றும் நாடக ஈடுபாட்டாளர்) போன்றோரைப் பங்குதாரராகக் கொண்டு வந்தனர். ஆனால் போட்டி நிறுவனங்கள் இது ஓர் கண்துடைப்பு வேலை என்றும், எந்த ஒரு பங்குதாரரும் ஸ்டார் நிறுவனத்தை விட அதிக அளவு பங்கு வாங்காததால், ஸ்டார் நிறுவனமே முழு ஆளுகையைத் தன் கையில் வைத்துள்ளது என்றும், மற்றவர்கள் ஸ்டாரின் கைப்பாவை என்றும் குற்றம் சொல்லின.

இதைப் பற்றிய மீதியைப் பின்னர் பார்க்கலாம்.

No comments:

Post a Comment