Tuesday, October 17, 2006

ஓர்ஹான் பாமூக் நோபல் பரிசு

இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு துருக்கிய மொழியில் எழுதும், துருக்கியைச் சேர்ந்த எழுத்தாளர் ஓர்ஹான் பாமூக் (Orhan Pamuk) என்பவருக்குக் கிடைத்துள்ளது.

ஓர்ஹான் பாமூக் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் என்றாலும்கூட அவர் எழுதுவது துருக்கி மக்களுக்காக இல்லை; வெளிநாட்டவருக்காக என்ற பேச்சும் உள்ளது. அவரது கதைகள் கொஞ்சம்கூடப் புரியாதவை என்றும் கருத்துகள் உள்ளன.

ஆனால் எழுத்தின் வீச்சைவிட, எழுதுபவரின் அரசியல் பின்னணி அவருக்கு பரிசு கிடைக்கும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறதோ என்ற தோற்றமும் ஏற்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் (2004) பரிசுபெற்ற ஆஸ்திரியா நாட்டு எழுத்தாளர் எல்ஃபிரீட் ஜெலினெக் அரசியலில் தீவிரமாக ஈடுபடுபவர். தன் நாட்டை, ஆளும் கட்சிகளை, பிற அரசியல்வாதிகளைக் கடுமையாக எதிர்ப்பவர். அதேபோல 2005 நோபல் பரிசு பெற்ற ஹரால்ட் பிண்ட்டர் தனது நாடான பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைக் கடுமையாகச் சாடுபவர்.

பாமூக் அந்த அளவுக்குத் தீவிரமாகப் போகவில்லை என்றாலும் சென்ற ஆண்டு ஒரு பிரச்னையில் மாட்டிக்கொண்டார்.

முதலாம் உலகப்போரின்போது துருக்கியப் படைகள் ஆர்மீனியர்கள் பலரைப் படுகொலை செய்தது தொடர்பாக பலத்த சர்ச்சை உள்ளது. இந்தப் படுகொலையில் எத்தனை ஆர்மீனியர்கள் இறந்துள்ளனர்; இது இனப்படுகொலையா (genocide) அல்லது போரின்போது நடக்கும் சாதாரணக் கொலைகள்தாமா - இவைதான் சர்ச்சைக்குக் காரணமே. மிகவும் sensitive-ஆன இந்த விஷயத்தில் பாமூக் இந்தக் கொலைகள் இனப்படுகொலைகள் என்று சொன்னதால் துருக்கி அரசு அவர்மீது நாட்டை அவமதித்ததாக வழக்கு தொடுத்தது. பின்னர் சில technical காரணங்களால் வழக்கிலிருந்து விடுபட்டார்.

இப்பொழுது நோபல் பரிசுக்குப்பிறகு துருக்கி பிரதமர், பாமூக்கின் பழைய பிரச்னையைப் பற்றிப் பேசவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றம் துருக்கியில் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டது இனப்படுகொலை அல்ல என்று யாராவது சொன்னால் அது குற்றம் என்று சட்டம் இயற்றியுள்ளது! (இது 'ஜெர்மனியில் யூதர்கள் கொலை செய்யப்பட்டது இனப்படுகொலை அல்ல என்று சொல்வது குற்றம்' என்று பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் சட்டங்களைப் போன்றது.) இந்தச் சட்டத்தை விமரிசித்துள்ள பாமூக், இப்படி ஒரு சட்டம் இயற்றுவதே பேச்சுரிமையை அவமதிப்பது போலாகும் என்று சொல்லியுள்ளார்.

ஆக, எப்பொழுதும்போல அரசியல் முன்னுக்கும் இலக்கியம் பின்னுக்கும்.

2 comments:

  1. தொடர்புள்ள பிபிசி செய்திகள்...

    Turkey’s Orhan Pamuk wins Nobel literature prize « Tamil News: துருக்கிய எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

    Turkey says ties damaged by French approval of Armenia genocide bill « Tamil News: சர்ச்சையை ஏற்படுத்திய பிரான்சின் சட்டம்

    ReplyDelete
  2. //எப்பொழுதும்போல அரசியல் முன்னுக்கும் இலக்கியம் பின்னுக்கும்//

    Ella Nattulayum ipdithana?

    ReplyDelete