Thursday, November 16, 2006

மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் - ராமதாஸ் விருப்பம்

உள்ளாட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் தேவை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதிகூட இதைப் பற்றிப் பேசியதாக இரண்டு நாள்கள் முன்னர் வெளியான ஏதோ ஒரு செய்தியில் படித்ததுபோல ஞாபகம். ஆனால் நான் செய்தியைக் குறித்து வைத்துக்கொள்ள மறந்துவிட்டேன்.

ராமதாஸ், வெற்றிபெற்ற பாமக உறுப்பினர்களுக்கு பயிலரங்கம் நடத்தியுள்ளார். அந்தப் பயிலரங்கத்தில் ராமதாஸ் கூறிய சில கருத்துகள் முக்கியமானவை.

* உள்ளாட்சித் தலைவர்களை நேரடியாகத் தேர்தெடுப்பதற்கான சட்டத் திருத்தம் வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட வேண்டும். (திமுக கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை ஏன் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தீர்கள், ராமதாஸ்? விவாதம் இல்லாது சில விஷயங்கள் நடைபெற்றால் விளைவுகள் மோசமாக ஆவது சகஜம்தானே?)

* அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் பெண்களையே முழுமையாக போட்டியிட வைக்க வேண்டும். (இது கொஞ்சம் ஓவர் சார். 50% பெண்களுக்கு என்று இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம். அது போதும்.)

* அரசுக்கு சொந்தமான ஒரு தூசியைக்கூட வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. (வரவேற்கிறோம். பாமக உறுப்பினர்கள் இவ்வாறு நடந்துகொள்வது மட்டுமன்றி, தோழமைக் கட்சியோ, எதிர்க்கட்சியோ யாராவது இந்தத் தவறைச் செய்தால் அவர்களைக் காட்டிக்கொடுத்து சட்டப்படி நடவடிக்க எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.)

* உள்ளாட்சி மன்றங்களுக்கு கட்சி சார்பில் தேர்தல் நடத்தக் கூடாது. (ஏன் அய்யா அப்படிச் சொல்கிறீர்கள்? பல மிடில் கிளாஸ் 'படித்தவர்கள்' அப்படிச் சொல்கிறார்கள் ஏனோ ஆதங்கத்தால். கட்சிகள் நியாயமாகவும் ஒழுங்காகவும் இருந்தால் போதுமே. கட்சிச் சார்புடன் தேர்தல் நடப்பதில் தவறேதும் இல்லை.)

* தி ஹிந்துவில் இருந்து: "Disapproving of the way the local bodies' elections were held last month, Dr. Ramadoss said he had doubts whether the winners would serve the people, after having spent large sums of money." நேற்று B.S.ராகவன் பேசும்போது (அவரும் ராமதாஸ் கூட்டிய பயிலரங்கில் கலந்துகொண்டிருந்தார்) ராமதாஸ் "இப்பொழுது நடந்தது ஒரு தேர்தலா?" என்று ஆதங்கப்பட்டதாகச் சொன்னார். (சார், கொஞ்சம் சத்தமாக, வெளியே எல்லோரும் கேட்கும் வண்ணம் - முதல்வர் கருணாநிதி காதுபட - சொல்லுங்களேன்!)

ஆக, காங்கிரஸ் தவிர மீதி அனைவரும் இப்பொழுது உள்ளாட்சித் தேர்தலை முழுவதுமாக விமரிசித்து விட்டார்கள்.

தி ஹிந்து செய்தி | தினமணி செய்தி

4 comments:

  1. //* உள்ளாட்சி மன்றங்களுக்கு கட்சி சார்பில் தேர்தல் நடத்தக் கூடாது.//

    மொத்தமா சாதி ரீதியிலான அறுவடைக்கு இது அவசியம்தானே!

    //அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் பெண்களையே முழுமையாக போட்டியிட வைக்க வேண்டும்.//

    முற்போக்குவாதியா காட்ட்டிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாச்சே!

    //அரசுக்கு சொந்தமான ஒரு தூசியைக்கூட வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது.//

    ஆனா "ஜிப்மரை" தைலாபுரத்துக்கு எடுத்துவரலாம் இல்லீங்களா?

    ஐயா குடிதாங்கி மக்களை இடிதாங்கியாவேதான் வச்சிருக்கணுமா? மருந்துக்குக் கூட நல்லது நினைக்கமாட்டீங்களா மருந்து ஐயா!

    ReplyDelete
  2. //அரசுக்கு சொந்தமான ஒரு தூசியைக்கூட வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது.//

    But they allowed to give laks of ruppes to get/ grab the Panchayat Chairman or Municipal Chairman.

    ReplyDelete
  3. சீரியசான ஒரு பதிவை ஹரிஹரன் தன் அறியாமையால் நகைச்சுவை ஆக்கி விட்டார். ஹரிஹரன் போன்றவர்கள் இல்லையென்றால் தமிழ்மணமே காய்ந்து போய்விடும் :-)

    ReplyDelete
  4. மேயரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை ஏன் மாற்றப்பட்டது? இருந்து கொண்டிருக்கும் ஒரு அமைப்பை மாற்ற எண்ணும்பொழுது இருப்பதைவிட சிறந்ததையே எண்ணவேண்டும், நன்மை தீமைகளை நன்கு பரிசீல்த்து நடைமுறைப் படுத்தவேண்டும் என்கிற போக்கு ஏன் நமக்கு பல நேரங்களில் இல்லாமல் போய்விடுகிறது?

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்சி சார்ந்த தேர்தலில் இன்றைய நிலையில் பொது மக்களுக்கு நன்மைகள் வர வாய்பில்லை. ஆளும் கட்சி தேர்தெடுக்கப்பட்டாலும் எதிர்கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டலும் வெறு வேறு விதமான தொல்லைகளே மக்களுக்குக் கிடைக்கும்.

    ReplyDelete