Wednesday, May 16, 2007

தயாநிதி மாறனின் பங்களிப்பு

பிரகாஷ் தன் பதிவில் தயாநிதி மாறன் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை, அவருக்கு பதில் வேறு யார் இருந்திருந்தாலும் அவரது துறையில் இதுவரை நடந்த அனைத்தும் நடந்திருக்கும் என்று பொருள்பட எழுதியிருந்தார்.

தயாநிதி மாறன் கையில் இரண்டு அமைச்சகங்கள் இருந்தன. தகவல் தொடர்பு (Communications), தகவல் நுட்பம் (Information Technology). இதில் தகவல் தொடர்பில் இரண்டு பெரும் பிரிவுகள்: தபால் (Post), தொலைப்பேசி (Telecom).

இதில் மாபெரும் பாய்ச்சல் தொலைப்பேசித் துறையில் நடந்தது. அதற்கு இந்தத் துறையில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனங்களும் அவர்கள் கொண்டுவந்த முதலீடும் மட்டுமே காரணமல்ல. அந்தந்தத் துறையின் ஐஏஎஸ் செயலர்கள் மட்டுமே காரணமல்ல.

தொலைத்தொடர்புத் துறையின்கீழ் (DOT) இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன: பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல். இந்த நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், DOT செயலர்கள், தனியார் தொலைப்பேசி நிறுவனங்கள், மக்கள் - இந்த நால்வரும் வேவ்வேறு திசைகளில் பயணம் செய்பவர்கள். இதற்கிடையே TRAI எனப்படும் தன்னாட்சி உரிமை உள்ள ஒரு கட்டுப்பாட்டு வாரியம், தானாகவே சில முடிவுகளை எடுத்தது. பல வழக்குகள், தொலைத்தொடர்பு பிரச்னைகளைத் தீர்க்கும் TDSAT எனப்படும் தீர்ப்பாயம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நடந்தன. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே மெர்ஜர்/அக்விசிஷன் நடைபெற்றன.

தயாநிதி மாறன் சொந்தமாக அனைத்தையுமே சிந்தித்திருக்க முடியாது என்றாலும் பல விஷயங்களில் அவர் 'சரி, இதையே செய்யலாம்' என்று தீர்மானித்து அதை வலுவாக நின்று செய்தார். அவரால் தனியார் நிறுவனங்களை நேரடியாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் பி.எஸ்.என்.எல் மூலம் சில திட்டங்களைக் கொண்டுவந்து தனியார் நிறுவனங்களை அதே வழியில் செல்ல வைத்தார்.

2005-ல் நான் தொலை-நோக்குப் பார்வையில் தொலை-தொடர்பு என்று ஒரு பதிவை எழுதியிருந்தேன். அதிலிருந்து மேற்கோள்:
1. இந்தியா முழுமைக்குமாக தொலைபேசிக் கட்டணம் ஒரேமாதிரியாக ஆகும். அதாவது உள்ளூர்க் கட்டணம் என்று ஒன்று. அதற்கடுத்து நீங்கள் சென்னையிலிருந்து தில்லியைக் கூப்பிட்டாலும் சரி, திருச்சியைக் கூப்பிட்டாலும் சரி, நிமிடத்துக்கு ஒரே கட்டணம்தான்.

2. மொபைல் தொலைபேசிச் சேவையை அளிக்கும் நிறுவனங்கள் முதலில் ஆறாகவும், பின் ஐந்தாகவும் சுருங்கும். இவை நாடு முழுவதுமாக மொபைல் சேவையை அளிக்கும். அத்துடன் National Roaming எனப்படும் சேவை தனியாக அளிக்கப்படாமல், தானாகவே எந்த அதிகக் கட்டணமுமின்றி உங்களுக்குக் கிடைக்கும். "நான் 'ரோமிங்ல' இருக்கேன், அப்புறம் கூப்பிடு" என்று யாரும் சொல்லமாட்டார்கள். சொல்லப்போனால் ரோமிங் என்ற வார்த்தையை வெளிநாட்டுக்குப் பயணிக்கும் 3% மக்களைத் தவிர பிறர் அறியவேமாட்டார்கள்.
தயாநிதி மாறன் பி.எஸ்.என்.எல் வழியாகக் கொண்டுவந்த 'One-India Plan' இதில் முதலாவதைச் சாதித்தது. அதைத் தொடர்ந்தே ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இதில் இறங்கின.

DOT செயலரோ, பி.எஸ்.என்.எல் தலைமை நிர்வாகியோ இதைத் தாங்களாகவே செய்திருக்க மாட்டார்கள். சொல்லப்போனால் அவர்களது எதிர்ப்பையும் மீறியே தயாநிதி மாறன் இதைச் செய்திருக்க முடியும். அதேபோல பதவியிலிருந்து விலகியதும், ரோமிங் கட்டணத்தை அடுத்த மாதம் (கருணாநிதி பிறந்தநாள் அன்று) நீக்குவதற்கான அறிவிப்பைச் செய்ய இருந்ததாகவும் அடுத்து வருபவரும் அதைச் செய்வார் என்று தான் நம்புவதாகவும் தயாநிதி மாறன் அறிவித்தார். இதனையும் எதிர்ப்பை மீறியே செயல்படுத்த வேண்டியிருந்திருக்கும். ராஜா செய்வாரா என்று பார்ப்போம். பி.எஸ்.என்.எல் செய்தால்தான் பிற தனியார் நிறுவனங்கள் இதைச் செய்வார்கள்.

இதைத்தவிர என் 2005 பதிவில் குறிப்பிட்டிருந்த சில விஷயங்கள் இன்னமும் செய்யப்படவில்லை. இவை அனைத்துமே மக்களுக்கு நன்மை தரக்கூடியவை. வலுவான, முன்னோக்குப் பார்வை உள்ள அமைச்சரால் மட்டுமே இவற்றைச் செய்யமுடியும். துறைச் செயலர்களுக்கு இவற்றைச் செய்வதால் எந்த நன்மையும் இல்லை. அவர்கள் அவ்வாறு செய்யக்கூடியவர்கள் அல்லர்.

தொலைத்தொடர்பில் நடந்த அளவுக்கு முன்னேற்றம் தபால் துறையில் நடக்கவில்லை. தயாநிதி மாறன் நிறைய ஸ்டாம்புகளை வெளியிட்டார். தனியார் கூரியர் கம்பெனிகளை பயமுறுத்தினார். தபால்துறை நஷ்டத்தில் இயங்குவதால் கூரியர் கம்பெனிகள் கப்பம் கட்டவேண்டும் போன்ற ஆபத்தான சட்டங்களைக் கொண்டுவர முயற்சி செய்தார். (அந்த சட்டம் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை.)

ஐடியைப் பொறுத்தவரை தயாநிதி மாறன் பெரிதாக ஒன்றையும் செய்யவில்லை. தனியார் ஐடி நிறுவனங்கள் வளர்வதற்கு அரசு சிறப்பாக எதனையும் செய்யவில்லை. (செய்யவும் வேண்டியிருக்கவில்லை.) தயாநிதி மாறன் CDAC உருவாக்கிய மென்பொருள்களை நிறையச் செலவுசெய்து வெளியிட்டார். ஆனால் அவையெல்லாம் உருப்படாத, உதவாக்கரை மென்பொருள்கள், எழுத்துருக்கள். விளம்பரம் தேடும் நோக்கம்தான் இருந்ததே தவிர மக்களுக்குப் பயன்படும் என்ற நோக்கில் தயாரிக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் சில மென்பொருள் நிறுவனங்கள் பணம் சம்பாதித்தனர். வேறு சிலர் வயிறு எரிந்தனர். [தமிழ் | ஹிந்தி | தெலுகு]

இந்தியர்களுக்கு என்று மென்பொருள் தயாரிக்கும் சிறு சிறு நிறுவனங்களுக்கு நிறையவே செய்திருக்கலாம். அப்படி எதையும் தயாநிதி மாறன் செய்ததாகத் தகவல் வரவில்லை. ஒரே அமைச்சரிடம் இதுபோன்ற பல முக்கியமான துறைகளைக் கொடுப்பதே தவறு என்று நினைக்கிறேன்.

தயாநிதி மாறன் மூலம் பல தொழிற்சாலைகள் இந்தியாவுக்கு வந்தன. (நோக்கியா போன்றவை.) நிறைய அந்நிய மூலதனம் கிடைத்தது. இவை வேறு அமைச்சர் இருந்தாலும் வந்திருக்ககூடும் என்றும் சொல்லலாம். ஆனாலும் தயாநிதி மாறனுக்கு இதற்கான கிரெடிட் போய்ச் சேரவேண்டும்.

தயாநிதி மாறன் இறுதி ரிப்போர்ட் கார்ட்:

தொலைத்தொடர்பு: 90/100
தபால்: 35/100
தகவல் நுட்பம்: 40/100

1 comment:

  1. //தொலைத்தொடர்பு: 90/100
    தபால்: 35/100
    தகவல் நுட்பம்: 40/100//

    :)

    ஜஸ்ட் பாஸ்.

    ReplyDelete