Saturday, March 15, 2008

நாடாளுமன்ற மேலவைத் தேர்தல்

இதற்குமுன் ராஜ்ய சபா (மேலவை) தேர்தலை அவ்வளவாகக் கண்டுகொண்டதில்லை. இப்போது பாமக புண்ணியத்தில் தமிழகத்தில் இந்தத் தேர்தலில் கொஞ்சம் சூடு பிடித்தது. ஆனால் மீண்டும் சூடு அடங்கிவிட்டது.

தமிழகத்துக்கு மொத்தம் 18 மேலவை உறுப்பினர்கள். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை, 6 பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தமிழக சட்டமன்றத்தில் இருக்கும் 234 உறுப்பினர்களும் சேர்ந்து இந்த 6 பேரைத் தேர்ந்தெடுப்பார்கள். உறுப்பினராகத் தேர்வாக ஒரு வேட்பாளருக்கு 34 வாக்குகள் தேவை என்று படித்தேன். இந்த 34 என்ற எண் எங்கிருந்து வந்தது என்று குழப்பமாக இருந்தது. எந்த அடிப்படையில் ஒருவருக்கு 34 வாக்குகள் வேண்டியுள்ளது?

கொஞ்சம் தேடிப் பார்த்ததில் விக்கிபீடியா உதவிக்கு வந்தது. இதற்குப் பெயர் Single transferable vote என்பதாம்.

அதாவது பலர் தேர்தலுக்கு நிற்கிறார்கள். ஆனால் 6 பேரைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்குதான். எப்படி, குறைந்த காலத்துக்குள், சரியாக 6 பேரை மட்டும் தேர்ந்தெடுப்பது?

6 இடங்கள். 7 பேர் நிற்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் தேர்தலே தேவைப்படும். 6 பேர் மட்டுமே நின்றால் அனைவரும் ஜெயித்தவர்கள் ஆகிவிடுவார்கள் அல்லவா? சரி, இப்போது 7 பேர் நிற்கிறார்கள். இப்போது ஒருவர் ஜெயிக்க குறைந்தபட்சம் எவ்வளவு வாக்குகள் தேவைப்படும்? வாக்குகள் அனைவருக்கும் சமமாகச் சிதறிச் செல்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் ஒவ்வொருவருக்கும் 234/7 வாக்குகள் கிடைக்கும். இதற்குமேல் ஒரு வாக்கு அதிகமாகப் பெற்றாலும், அவரை ஜெயித்ததாகச் சொல்லிவிடலாம். அதாவது கட்டாயமாக ஜெயிக்க ஒருவருக்குத் தேவை (234/7)+1 வாக்குகள் = 34.43 வாக்குகள். இதை ரவுண்ட் ஆஃப் செய்தால் கிடைப்பதுதான் 34 வாக்குகள்!

சரி, 7 பேர் நிற்கிறார்கள். ஆனால் ஒருவருக்கு 34 வாக்குகள் கிடைத்தாலே போதும், அவர் ஜெயித்தவராகிவிடுகிறார். ஆனால் அவருக்கு 35, 36 அல்லது அதற்கும்மேல் வாக்குகள் கிடைத்தால் என்ன செய்வது? மீதமுள்ள 5 இடங்களுக்கு 6 பேரிலிருந்து தேர்வு செய்யவேண்டியுள்ளதே?

இங்குதான் வாக்குச்சீட்டில் இரண்டாம், மூன்றாம் சாய்ஸ்கள் உள்ளன. வாக்காளர் தனது முதல் விருப்பத் தேர்வாக ஒரு வேட்பாளரைக் குறிப்பிடுகிறார். இரண்டாவது, மூன்றாவது விருப்பத் தேர்வாக வேறு வேட்பாளர்களைக் குறிப்பிடுகிறார். இப்போது முதல் விருப்பத் தேர்வில் உள்ள ஒருவர் ஏற்கெனவே பிறரது வாக்குகளால் ஜெயித்துவிட்டார் என்றால், அவருக்கு 34-க்கும் மேற்பட்ட வாக்குகளைக் கொடுக்காமல் அந்த வாக்குகளை இரண்டாவது விருப்பத் தேர்வு வேட்பாளருக்குக் கொடுத்துவிடுவார்கள்.

அந்த வகையில்தான், திமுக கூட்டணி, அணி மாறாமல் வாக்களித்தால், ஐந்து இடங்களைக் கைப்பற்றமுடியும்.

அஇஅதிமுக-விடம் 60 இடங்கள், மதிமுக-விடம் 6 இடங்கள். இவர்கள் கையில் இன்னமும் 2 இடங்கள் இருந்தால் இந்தக் கூட்டணியால் 2 ராஜ்ய சபா இடங்களைக் கைப்பற்றியிருக்கமுடியும். ஆனால் தொலைநோக்கு என்பதே சிறிதும் இல்லாத ஜெயலலிதாவால் இவ்வளவு தூரம் யோசிக்க முடியாது. விடுதலைச் சிறுத்தைகளுடன் பஞ்சாயத்துத் தேர்தல் சமயத்தில் ஒழுங்கான உடன்படிக்கை செய்திருந்தால் இன்று இந்தக் கூட்டணிக்கு மற்றுமொரு ராஜ்ய சபா இடம் கிடைத்திருக்கும்.

திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடம் ஒதுக்காததில் வியப்பில்லை. ராமதாஸ் தடாலடியாகப் பேசி எப்படியெல்லாம் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க முடியுமோ அப்படியெல்லாம் செய்துவருகிறார். அதில் பல கருத்துகள் நேர்மையானவையே என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் கூட்டணியில் இருக்கும்போது இதனை வேறுவிதமாக எதிர்கொள்ளவேண்டும். ராமதாஸ் அவ்வாறு செய்வதில்லை.

இருந்தும், பாமகவின் எண்ணிக்கையை மனத்தில் வைத்து, கம்யூனிஸ்டுகளுக்கு பதில் பாமகவுக்கு ஓரிடத்தை திமுக கொடுத்திருக்கலாம்.

நிற்க. வசந்தி ஸ்டான்லி என்ற திமுக ராஜ்ய சபா வேட்பாளர்மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் என்று பத்திரிகைகளில் தகவல் வந்துள்ளது. நில ஆவண மோசடி, பல இடங்களில் கடன்கள் வாங்கி சுவாஹா செய்தார் என்று. இப்படிப்பட்ட வேட்பாளரைத்தான் திமுக நிறுத்தவேண்டுமா?

3 comments:

  1. ---நில ஆவண மோசடி, பல இடங்களில் கடன்கள் வாங்கி சுவாஹா செய்தார் என்று. இப்படிப்பட்ட வேட்பாளரைத்தான் திமுக நிறுத்தவேண்டுமா?---

    :)

    ReplyDelete
  2. //நில ஆவண மோசடி, பல இடங்களில் கடன்கள் வாங்கி சுவாஹா செய்தார் என்று. இப்படிப்பட்ட வேட்பாளரைத்தான் திமுக நிறுத்தவேண்டுமா?//
    அதனால்தான் நிறுத்துகிறார்கள். இதைவிட என்ன தகுதி வேண்டும்? :-)

    ReplyDelete
  3. Saar,
    Rajay Sabha MP aavadhaal,oru arasiyal vaadhikku payan enna?(panam adikkum vaaippugal?)

    ReplyDelete