Friday, March 07, 2008

தி.மு.க. வரலாறு

தி.மு.க. வரலாறு, டி.எம்.பார்த்தசாரதி, பாரதி பதிப்பகம், முதல் பதிப்பு ஜனவரி 1961, இப்போதைய பதிப்பு மார்ச் 2006, விலை ரூ. 100. கிரவுன் 1/8, பக்: 468.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ வரலாறு என்று கருதப்படும் இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பவர் திமுகவின் நிறுவன முன்னோடிகளில் ஒருவர். அதனால் அருகில் இருந்து கண்ணால் பார்த்தவற்றை கவனமாகப் பதிவு செய்துள்ளார்.

இந்திய குடியாட்சி வரலாற்றில் பல அரசியல் கட்சிகள் தோன்றியுள்ளன. பல பிளவுண்டு புதிய கட்சிகளைத் தோற்றுவித்துள்ளன. பல கட்சிகள் முற்றிலுமாக அழிந்துள்ளன. இந்தக் கட்சிகள் உருவான காலகட்டம், அவற்றுக்கான தேவை, இந்தக் கட்சிகளின் லட்சியம், லட்சியத்தை அடைவதில் அவை வெற்றிகண்டனவா இல்லையா ஆகியவற்றை விளக்கும் வண்ணம் கட்சிகளுக்கான முழுமையான வரலாறுகள் தேவை.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, அண்ணாதுரை என்ற தனிமனிதர், எந்த அளவுக்கு டெமாக்ரசி என்பதன் கருத்தை உள்வாங்கி, சிறப்பான முறையில் ஒரு கட்சியை அமைத்து குறுகிய காலத்துக்குள் அந்தக் கட்சியின் லட்சியங்களை அடைந்தார் என்பது பிரமிக்க வைக்கிறது.

பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பிரதான சீடர்களில் ஒருவராக இருந்த அண்ணாதுரைக்கு பெரியாரின் சர்வாதிகாரப் போக்கு சிறிதும் ஒவ்வாததாக இருந்திருக்கிறது. மணியம்மையைத் திருமணம் செய்ய முடிவெடுத்தது முதற்கொண்டு, அதற்காக ராஜாஜியை பெரியார் கலந்தாலோசித்தது, தன்னைச் சுற்றியுள்ளவர்களை பெரியார் சோம்பேறிகள், பணத்தை லவட்டுபவர்கள் என்றெல்லாம் பேசியது அண்ணாதுரையைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது.

கொள்கையில் பெரிதும் பெரியாரை அப்படியே பின்பற்றினாலும், கட்சி அமைப்பை உருவாக்குவதில் அண்ணாதுரை முற்றிலும் புதிய வழியைக் கடைப்பிடித்தார். அண்ணாதுரை எந்தக் கட்டத்திலும் ஒரு துளியேனும் தன் வழியைப் புகுத்துபவராகக் காணப்படவில்லை. செயல்குழு, பொதுக்குழு, மாநாடு, கட்சி அமைப்பு, கட்சிக்கான சட்டதிட்டம், கிளை அமைப்புகள் என்று கட்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்துள்ளார். தொடக்கம் முதலே கட்சியின் தனிப்பெரும் தலைவன் தான்தான், மற்றவரெல்லாம் வெறும் ஜீரோ என்ற எண்ணம் அண்ணாதுரையிடம் இருந்ததாகவே தெரியவில்லை.

இன்று ஆளுக்காள் கட்சி ஆரம்பிக்க முனைகிறார்கள். கட்சி ஆரம்பிப்பது, கட்சியை வளர்ப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள, அண்ணாவைப் படிப்பது அவசியமாகிறது. கட்சிப் பணிக்கு ஆள் சேர்ப்பது, கட்சிக்கு நிதி சேர்ப்பது, பத்திரிகைகள் நடத்தி, அதன்மூலம் கொள்கைகளை விசுவாசிகளிடம் கொண்டுசேர்ப்பது, தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்துவது ஆகியவற்றை எப்படிச் செய்வது என்பதை அண்ணாவின் வாழ்கையைப் படித்தே ஒருவர் தெரிந்துகொள்ளலாம். (விஜயகாந்த், சரத்குமார் கவனிக்க!)

அந்நாளைய காங்கிரஸ் கட்சியின் தமிழகக் கிளை எவ்வளவு அபத்தமாக ஆட்சி செய்துள்ளது என்பது அதிர்ச்சியைத் தருகிறது. சொல்லப்போனால், ஆங்கிலேயர்கள் வெளியேறி, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது, ஆங்கிலேயர் அளவுக்கு அதே மூர்க்கத்தனத்துடன் ஆட்சியை நடத்தியுள்ளனர் காங்கிரஸார். இதில் ராஜாஜி மட்டுமல்ல, காமராஜர், பக்தவத்சலம் ஆகியோரும் அடக்கம்.

உப்புப்பெறாத விஷயங்களுக்கும்கூட இம்மியளவு எதிர்க்கருத்துகளுக்கு இடம் கொடுக்காமல் அடக்குமுறையை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். சில்லறை விஷயங்களுக்கெல்லாம் திமுக தலைவர்கள்மீது நீதிமன்றத்தில் வழக்கு, சிறைத்தண்டனை, அபராதம், திமுக தொண்டர்கள்மீது போலீஸ் தடியடி, கண்ணீர்ப்புகை, துப்பாக்கிச் சூடு என்று நடந்திருக்கிறது.

இந்தக் கண்மூடித்தனமான அடக்குமுறையே தமிழகத்தில் காங்கிரஸ்மீதான வெறுப்பாக மாறி, காங்கிரஸை முற்றிலுமாக அழித்துவிட்டது. அவ்வப்போது முதல்வர் கருணாநிதி எழுதும் கவிதைகளில் வரும் ஒரு வரி 'கொள்கை மறவர் கொட்டிய குருதியில் குழைத்துக் கட்டிய கோட்டை'. இதைப் படிக்கும்போது அபத்தமாகத் தோன்றும். ஆனால் திமுக வரலாற்றைப் படிக்கும்போது நிஜமாகவே அந்தக் கட்சியைக் கட்டமைக்க, ஏகப்பட்ட ரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது என்று புரிகிறது.

திமுக உருவான கட்டத்திலிருந்து அண்ணாதுரை ஆட்சியில் ஏறுவதுவரை விளக்கும் இந்தப் புத்தகத்தில் ஈ.வி.கே.சம்பத் கட்சியிலிருந்து பிரிவது விரிவாகக் காணப்படுகிறது. இந்தக் கட்டம் மிக முக்கியமானது. அண்ணாதுரை கடைசிவரை இந்தப் பிளவு ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள பல முயற்சிகள் எடுக்கிறார். ஆனால் முடியவில்லை. இதைப்பற்றி சம்பத் தரப்பில் இருந்த கவிஞர் கண்ணதாசன் என்ன சொல்லியிருக்கிறார் என்று நான் தேடிப்பிடித்து படிக்கவேண்டும்.

திமுக கட்டமைப்பில் அண்ணாதுரைக்கு அடுத்தபடியாக மதியழகன், சம்பத் (பின்னர் விலகிவிடுகிறார்), நெடுஞ்செழியன் போன்ற பலர் இருந்துள்ளனர். கருணாநிதியும் முக்கியமான தலைவர்கள் வரிசையில் உள்ளார். ஆனால் அண்ணாதுரையின் மறைவுக்குப் பின் கருணாநிதி எப்படி கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை பார்த்தசாரதி விளக்கவில்லை. புத்தகம் 1984-ல் நான்காம் பதிப்பாக விரிவாக்கி எழுதப்பட்டாலும், இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறது.

இந்தப் புத்தகத்தின் குறைகள் சில:

* சீனப்போருக்குப் பிறகு, தனித் திராவிட நாடு கொள்கையிலிருந்து, இந்திய நாட்டுக்குள்ளாக ஒரு கூட்டாட்சி (ஃபெடரல்) அமைப்பை நோக்கிச் செல்வதாக அண்ணாதுரை முடிவெடுப்பது, அதற்கு கட்சிக்குள் எந்த மாதிரியான வரவேற்பு இருந்தது ஆகியவற்றை சற்றே அதிகமாக விளக்கியிருக்கலாம்.

* பெரியார் என்ற நபர் புத்தகத்தின் ஆரம்பத்தில் வருகிறார். ஆனால் திமுக தொடங்கப்பட்டதும், அவர் வேறெங்குமே காணப்படுவதேயில்லை!

* திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்த 1967 தேர்தல் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவு. அதற்கு முந்தைய தேர்தல்களில் கட்சி எந்தெந்தத் தொகுதிகளில் யாரை நிற்கவைத்தது என்பதுவரை தகவல் கொடுத்தவர், இதற்கும் நிறைய பக்கங்களை ஒதுக்கியிருக்கலாம்.

* புத்தக மொழி முழுவதுமே மேடைப்பேச்சு மொழியாகவே அமைந்துள்ளது. இதனால் பல இடங்களில் வாக்கியங்கள் முற்றுப்பெறுவதே இல்லை. குழப்பமான வாக்கியங்கள் பல உள்ளன. கடுமையான எடிடிங் தேவை.

* பின்னணித் தகவல்கள் போதவில்லை. இந்தி திணிப்புக்கான போராட்டம் பல கட்டங்களில் நடக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு அடிப்படைக் காரணத்துக்காக. தூண்டுகோல் பற்றிய விளக்கம் குறைவாக உள்ளது. அதேபோலவே குலக்கல்வித் திட்டம் பற்றியும் விளக்கம் குறைவுதான்.

5 comments:

  1. பத்ரி

    மிக அழகாக திறணாய்வு செய்துள்ளீர்கள், //விஜயகாந்தும் சரத்குமாரும் கவனிக்க// மிக முக்கியமான விஷயம், அண்ணா என்றால் ஒரு மரியாதை உண்டு அதன் காரணம் இப்போது புரிகிறது, கலைஞரின் தலைமை ஏற்பு பற்றி ஆசிரியர் குறிப்பிடாததன் காரணம் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

    செல்வி

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி. இதுவரை இப்புத்தகத்தை நான் வாசிக்கவில்லை :-(

    ReplyDelete
  3. Read Manavasam and Vanavsasam by Kannadasan.

    ReplyDelete
  4. http://thoughtsintamil.blogspot.com/2006/03/blog-post_28.html

    பாலகங்கா அதிமுக ராஜ்யசபை வேட்பாளராமே ? ஒங்க ஓட்டு இல்லாமலேயே எம்.பி ஆகப்போறாரே ?

    இப்போ என்ன பண்ணுவீங்க ? இப்போ என்ன பண்ணுவீங்க?

    ReplyDelete