Tuesday, January 15, 2013

மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி


இந்த ஆண்டு நாங்கள் குறைவான புத்தகங்களையே கொண்டுவந்துள்ளோம். அவற்றில் சில புத்தகக் காட்சிக்கு ஒரு நாள் முன்னதாகக் கையில் கிடைத்தவையே. அவற்றுக்கான அறிமுகமாக இந்தத் தொடர் பதிவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பதிவுகளில், கடந்த சென்னை புத்தகக் காட்சிக்குப் பிறகு வந்த கிழக்கின் அனைத்து புதுப் புத்தகங்களையும் பதிவு செய்வதாக உள்ளேன்.

‘மோடியின் குஜராத்’ என்ற புத்தகத்தை எழுதியவர் சரவணன் தங்கதுரை. சென்னையில் மென்பொருள் துறையில் வேலை செய்கிறார். இந்தியாவில் அரசுகள் மக்களுக்குத் தேவையான எந்த சேவையையும் முழுமையாகத் தருவதில்லை என்பதை நம் கண்கூடாகப் பார்க்கிறோம். மின்சாரம், சாலைகள், குடிநீர், வாழ்வாதாரப் பாதுகாப்பு, தரமான கல்வி, ஏழைகளுக்கான நலத்திட்டங்கள், சட்டம் ஒழுங்குப் பாதுகாப்பு என்று எதை எடுத்துக்கொண்டாலும் அது நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை. அதற்குமேலாக லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நிர்வாகம் என்பது மழுங்கிப் போய்விட்டது. இதனால் பொதுமக்கள் ஒருவித விரக்தியில் இருக்கிறார்கள். தங்கள் வாழ்நாளில் தரமான சேவையைத் தரக்கூடிய ஓர் அரசைக் காண முடியுமா, சிங்கப்பூர் போன்றோ பல்வேறு மேலை நாடுகள் போன்றோ, வளர்ந்த ஒரு நாடாக இந்தியா என்றாவது மாறக்கூடுமா என்பதே அவர்களின் கவலையாக உள்ளது.

இந்நிலையில் குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மோடி பெருமளவு மாற்றங்களை நிர்வாகத்தில் செய்துள்ளார் என்பதை சரவணன் கேள்விப்படுகிறார். தானே சென்று போய்ப் பார்த்துவிட்டு வருவது என்று முடிவெடுக்கும் சரவணன் சில முறை அங்கு சென்று பார்க்கிறார்; மக்களிடம் பேசுகிறார்; அரசு அதிகாரிகளிடம் பேசுகிறார். அதன் தொடர்ச்சியே இந்தப் புத்தகம்.

மோடியின்மீது இந்தியாவின் பல்வேறு மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் கடுமையான பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். இந்தப் புத்தகம் அவற்றுக்கு பதில் சொல்லக்கூடியதல்ல. குஜராத்தில் சரவணன் பார்த்தவரை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா? அவை மோடியால் நிகழ்ந்துள்ளனவா? உண்மை என்பது அரசு தரும் புள்ளிவிவரங்கள் மட்டும்தான்? தரையளவில் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? இவற்றைத் தொகுத்து முன்வைக்கும் சரவணன், குஜராத்தின் மாதிரியைப் பின்பற்றினால் இந்தியாவின் பிற மாநிலங்களும் மிகத் தரமான சேவையை மக்களுக்குத் தரமுடியும் என்கிறார்.

மோடி பொதுஜனத் தொடர்பில் மட்டும் வல்லவரா அல்லது இந்தியா எதிர்பார்த்துக் காத்திருக்கும் வளர்ச்சியின் மெஸ்ஸையாவா? அவரவர்க்கு அவரவர் கருத்துகள். ஆனால் எதிர்ப்பாளர்கள், இந்தப் புத்தகம் முன்வைக்கும் தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் புறம்தள்ளிவிட்டுப் போகமுடியாது.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

பக்கங்கள்: 152
விலை ரூ. 100/-

3 comments:

  1. Great Work, Narendra Modi must rule India, then only India will become developed nation in the world.

    ReplyDelete
  2. I read your book before 6 months, Nice.Its very useful to know the talent of ModiJi,

    ReplyDelete