Friday, January 18, 2013

குமரிக்கண்டமா, சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலும்

இந்தியா என்பது ஒற்றை தேசமா இல்லை பல தேசிய இனங்களின் கூட்டா என்ற கேள்வி ஒரு பக்கம் பலராலும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது ஓர் அரசியல் கேள்வி. இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்க இந்தக் கேள்விக்கான பதில் முக்கியம். பல மொழிகள் பேசப்பட்டாலும் கலாசாரம் பெரும்பாலும் ஒன்றே என்று சிலர் பதில் சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு சிறு பிராந்தியப் பகுதியிலும்கூட கலாசாரக் கூறுகளில் எக்கச்சக்கமான வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். மதம் என்று எடுத்துக்கொண்டாலும் சிறுசிறு வித்தியாசங்களின் தொடங்கி மாபெரும் வேற்றுமைகள் உள்ளன. நான்கு வர்ணங்கள், லட்சம் சாதிகள், வர்ணத்துக்கு வெளியிலான தீண்டத்தகாத சாதிகள், தோல் நிறத்தில் வேறுபாடு, உருவ அமைப்பில் வேறுபாடு என்று கருத்துரீதியாகவும் உடற்கூறுரீதியாகவும் இந்தியாவில் எக்கச்சக்க வேற்றுமைகள். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்று சிலர்; ஒற்றுமையே கிடையாது - எல்லாம் வேறு வேறு என்று சிலர்.

வரலாறு, மானுடவியல், சமூகவியல், மொழியியல் துறை நிபுணர்கள் இந்தியாவின் இந்தப் பல்வேறு வண்ணங்களை ஆராய்ந்தபடி இருக்கிறார்கள். இவர்களால் ஒருசில பெரும் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு, கேள்விக்குள்ளாக்கப்பட்டு வந்தபடி உள்ளது.

இந்தியாவின் இரு பெரும் இனங்கள் ஆரியர்களும் திராவிடர்களும்; இதில் ஆரியர்கள் கைபர், போலன் கணவாய் வழியாக பரத கண்டத்துக்குள் நுழைந்து, இங்கு வசித்துவந்த திராவிடர்களுடன் போரிட்டு, அவர்களைத் தெற்கு நோக்கித் துரத்திவிட்டனர் என்பது ஒரு கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின்படி, ஆரியர்கள் வெளுப்புத் தோல் கொண்டவர்கள், உயரம் அதிகமானவர்கள், இந்தோ-ஆரிய குடும்ப மொழியான சமஸ்கிருதம் பேசியவர்கள், குதிரைகளை வைத்திருந்தவர்கள். திராவிடர்கள் குள்ளமானவர்கள், கருத்த நிறத்தவர், தமிழ் அல்லது புரோட்டோ-தமிழ் மொழி பேசியவர்கள்.

தமிழர்கள் (திராவிடர்கள்) என்று எடுத்துக்கொண்டால், கடலில் மூழ்கிப்போன குமரிக் கண்டம் என்று தென்புலத்திலிருந்து வந்தவர்கள், ஆரியர்கள் வருகைக்குமுன் இந்தியா முழுமையிலும் வசித்தவர்கள் என்பது தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஒருசிலரது கருத்து.

சிந்துவெளி நாகரிகத்தின் முத்திரை எழுத்துகள் தொடர்பான ஆராய்ச்சிக்குப் பிறகு, சிந்துவெளிப் பகுதி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதாக சில அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இல்லை இல்லை, சிந்து சரசுவதி நதி நாகரிகம் என்பது முழுமையாக ஆரிய நாகரிகம்; இந்த ஆரியர்கள் இந்தியாவுக்குப் படையெடுத்தெல்லாம் வரவில்லை; அவர்கள் சரசுவதி நதிக்கரையில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள்; சரசுவதி நாகரிகம்தான் வேத நாகரிகம்; அவர்கள்தான் லோத்தால், தோலாவிரா போன்ற நகரங்களை (பின்னர் மொஹஞ்சதாரோ, ஹரப்பாவையும்) கட்டினார்கள்; வேத உபநிடதங்களையும் எழுதினார்கள்; சரசுவதி வற்றிப்போனதால் சிந்துவையும் கங்கையையும் நோக்கி நகர்ந்தார்கள் என்கிறார்கள் சிலர்.

இன்று ஆரியர்களைப் பற்றியும் நமக்குத் தெளிவான தகவல்கள் இல்லை; திராவிடர்களைப் பற்றியும் தெளிவான தகவல்கள் இல்லை. ஆனாலும் இவை குறித்த தகவல்கள் நம்முடைய பாடப்புத்தகங்களில் சர்வ சாதாரணமாக, முற்று முழுதான உண்மைகளைப் போல உலா வருகின்றன.

இவற்றுக்கிடையில், பா. பிரபாகரன் வலுவான ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார். முதலில் தமிழர்களின் தோற்றம் குறித்து தற்போது பரவலாக இருக்கும் கோட்பாடுகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு ஆராய்கிறார். அவை ஏன் தவறானவை என்று தன் கருத்துகளை ஆணித்தரமாக வைக்கிறார்.

குமரிக்கண்டம் என்ற ஒன்று கன்னியாகுமரிக்குத் தெற்கே இருக்கச் சாத்தியமே இல்லை என்று விளக்கியதற்குப் பிறகு, இன்றைய தமிழர்களின் தோற்றுவாய் மத்திய தரைப் பகுதியான (இன்றைய ஈராக்) சுமேரியம்தான் என்கிறார். அதற்கு வலு சேர்க்கும் வகையில் சுமேரிய நாகரிகம் பற்றி விரிவாக விளக்குகிறார். சுமேரியர்கள் சுட்ட களிமண்ணில் எழுதிவைத்துவிட்டுச் சென்ற பல விஷயங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தும் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இன்று படிக்கமுடியும்; பொருள் புரிந்துகொள்ள முடியும். அனைத்தும் இணையத்தில் ஒரு தொகுப்பாகக் கிடைக்கின்றன. அவற்றை ஆராய்வதோடு தமிழ் இலக்கியங்களில், முக்கியமாக இறையனார் அகப்பொருள் உரையில் சொல்லியுள்ள விஷயங்கள், சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளவை, சமஸ்கிருத புராணங்களில் சொல்லப்பட்டுள்ளவை ஆகியவற்றோடு ஒப்புநோக்கி, இந்த முடிவுக்கு வருகிறார் பிரபாகரன்.

சுமேரிய சுடுமண் ஓடுகளில் மெலூஹா, தில்முன் என்று இரு இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தூரத்தில் உள்ள இந்த நாடுகள் (பகுதிகள்) சுமேரியத்துடன் வர்த்தகத்தின் ஈடுபட்டிருந்தன. மெலூஹாதான் சிந்து சரசுவதி நாகரிகம் என்று கிட்டத்தட்ட அனைவருமே சொல்கின்றனர். Immortals of Meluha என்னும் தொடர் வெகுஜனக் கதை வெளியாகி இந்தியாவில் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. தில்முன் என்பது பஹ்ரைன் அல்லது அதற்கு அருகில் உள்ள பகுதி என்பதாகச் சிலர் சொல்கின்றனர். ஆனால் பிரபாகரனின் கருத்து, தில்முன் என்பது தமிழகம்தான் என்பது. அதற்கான ஆதாரங்களை பிரபாகரன் முன்வைக்கிறார்.

பிரபாகரனின் கருத்தின்படி, திராவிடர்கள், ஆரியர்கள் என இருவருமே சுமேரியத்திலிருந்து இந்தியா வந்தவர்கள். திராவிடர்கள் நீர்வழியாகக் கப்பல்களில் வந்து இன்றைய கேரளக் கடற்கரையில் இறங்கினர்; ஆரியர்கள் தரை வழியாகப் பல கலப்புகளைச் சந்தித்தபடி வடமேற்கு எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தனர்.

பிரபாகரன் முன்வைக்கும் கோட்பாட்டை நீங்கள் உங்கள் அரசியல் சமூகக் கருத்துகளுக்கு ஏற்ப ஆதரிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் அவருடைய சுவாரசியமான எழுத்தை நிராகரிக்க முடியாது. சுமேரிய நாகரிகம், கிரீட் தீவில் நிலவிய மினோயன் நாகரிகம், தமிழகக் கதையாடல்கள், சிந்துவெளி நாகரிகம், இந்த எல்லா இடங்களிலும் நிலவிய நம்பிக்கைகள், கடவுள்கள், வழக்கங்கள் ஆகியவற்றை மிக சுவாரசியமாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார் பிரபாகரன். அவற்றிலிருந்து அவற்றுக்கு இடையேயான தொடர்புகள் எப்படி இருந்திருக்கலாம் என்ற தன் ஊகத்தையும் அழகாக முன்வைக்கிறார். நிறைய படங்கள் கொண்டுள்ளது இந்தப் புத்தகம்.

தொழில்முறை வரலாற்று ஆராய்ச்சியாளர் அல்லர் பிரபாகரன். கப்பல் போக்குவரத்து லாஜிஸ்டிக்ஸ் துறையில் பல ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர். லாஜிஸ்டிக்ஸ்: ஓர் எளிய அறிமுகம் என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகத்துக்காக எழுதியவர். தமிழர்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை முதலில் இவர் செம்மொழி மாநாட்டில் சமர்ப்பித்தார். அந்தக் கட்டுரை சிறிது சிறிதாக வளர்ந்து இன்று ஒரு புத்தகமாக மாறியுள்ளது.

புத்தகத்தை வாங்க

விலை ரூ. 125

10 comments:

  1. Please classify it under fiction category so that readers know what to expect from the book.

    ReplyDelete
  2. என் தனிப்பட்ட கருத்து, அமெச்சூர் வரலாற்று ஆர்வலர்கள் ஆர்வக்கோளாறில் செய்யும் 'ஆய்வுகளை' வரலாற்றுப் புத்தகமாக (என்னதான் டிஸ்கி கொடுத்துவிட்டாலும்) வெளியிடக்கூடாது என்பதே.

    சிந்துவெளி நாகரிக எழுத்துகள் இதுவரை படிக்கப்படவில்லையே தவிர அது திராவிட மொழி என்று தீர்மானமாக நிருவப்பட்டுவிட்டது. (அல்லது அல்மோஸ்ட் தீர்மானமாக). ஏன், அது ஆரம்பகாலத் தமிழ்மொழி என்றே தற்போது (நிஜ) ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எனவே சிந்துவெளி மக்கள் கண்டிப்பாக ஆரியர்கள் அல்ல. முன்பு ஒருவர் யூனிகார்ன் முத்திரையைக் குதிரை என்று நிருவப்பார்த்து அம்பலப்படுத்தப்பட்டார். ஹரப்பன் ஹார்ஸ் என்று அப்போது ஃபிரண்ட்லைன் கூட இந்த விவகாரம் பற்றிக் கவர்ஸ்டோரி வெளியிட்டது.

    மேலும் சரஸ்வதி என்ற ஆறு நிஜத்தில் இருந்ததாக நிரூபிக்கப்பட்டுவிட்டதாக நான் நம்பவில்லை.

    சிந்துவெளி எழுத்து வரும்காலத்தில் என்றேனும் டிசைஃபர் பண்ணப்படும்வரை இஷ்டத்துக்கு ஆளாளுக்கு ஒரு தியரியை முன்வைக்காமல் இருக்கலாம்.

    சரவணன்

    ReplyDelete
    Replies
    1. || ஏன், அது ஆரம்பகாலத் தமிழ்மொழி என்றே தற்போது (நிஜ) ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எனவே சிந்துவெளி மக்கள் கண்டிப்பாக ஆரியர்கள் அல்ல. முன்பு ஒருவர் யூனிகார்ன் முத்திரையைக் குதிரை என்று நிருவப்பார்த்து அம்பலப்படுத்தப்பட்டார். ஹரப்பன் ஹார்ஸ் என்று அப்போது ஃபிரண்ட்லைன் கூட இந்த விவகாரம் பற்றிக் கவர்ஸ்டோரி வெளியிட்டது.||

      ||மேலும் சரஸ்வதி என்ற ஆறு நிஜத்தில் இருந்ததாக நிரூபிக்கப்பட்டுவிட்டதாக நான் நம்பவில்லை. ||



      வெல் செட் சரவணன்..

      சரஸ்வதி ஆறு பற்றி பத்ரியின் தீர்மானமான சொந்தக் கருத்தை நானும் அறிய ஆவலாயிருக்கிறேன்.
      :))

      Delete
    2. சரவணன்: உங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேனா என்று ஞாபகம் இல்லை. உங்கள் அதிரடி, ஆழமான கருத்துகள் என்னை பயங்கொள்ள வைக்கின்றன. சிந்துவெளி எழுத்துகள் என்ன என்று இன்று யாராலும் சொல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை. நிஜ ஆய்வாளர்களையும் சேர்த்து. சிந்துவெளியினர் திராவிடர்களே என்று நீங்கள் நம்பிக்கொள்வதில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. என்னைப் பொருத்தமட்டில் அது விடை தெரியாத புதிர், அவ்வளவே. ஆனால் ஆரியரோ, திராவிடரோ, சரசுவதி என்ற ஓர் ஆறு அல்லது காக்ரா-ஹக்கார் என்ற ஆறு இமயத்திலிருந்து தொடங்கு குஜராத் வழியாக அரபிக் கடலில் கலந்ததற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அதன் இரு மருங்கிலும் பல சிந்துவெளி நாகரிகக் குடியிருப்புகள் கிடைத்துள்ளன. சொல்லப்போனால் சிந்து நதி ஓடும் பாகிஸ்தானில் கிடைத்துள்ளதைவிட மிக அதிகமான எண்ணிக்கையில் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் நூற்றுக்கணக்கில் சிந்துவெளிக் குடியிருப்புகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தோலாவிரா, லோத்தல் போன்றவை ஹரப்பா, மொஹஞ்சதாரோவுக்கு முந்தையவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். காலக் கணிப்பை வைத்து early harappan, late harappan என்று குடியிருப்புகளை வகைப்படுத்துகிறார்கள். கொஞ்சம் தயவுசெய்து படியுங்களேன்.

      மற்றபடி குமரி இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சிந்து நாகரிகம் திராவிட நாகரிகமாக இருந்து, அங்கிருந்துதான் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்று தெரியவந்தாலும் எனக்குப் பிரச்னை இல்லை.

      ஆனால் தமிழ்நாட்டின் வரலாற்றில் பதில் சொல்லமுடியாத கேள்விகள் பல உள்ளன. சிந்துவின் உச்சத்தை அடைந்த திராவிடர்கள், தெற்காகத் துரத்தப்பட்டபின் ஏன் ஒரு செங்கல் கட்டடத்தையும் கட்டவில்லை? அப்படியே சிந்துவிலேயே மறந்து விட்டுவிட்டு வந்துவிட்டார்களா? சிந்துவை ஒத்த முத்திரைகள் எவையும் ஏன் தமிழகத்தில் கிடைக்கவில்லை? நாகரிக உச்சத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் தமிழகத்தில் பல்லவர் காலத்துக்கு முந்தைய எந்தக் கல் சிற்பத்தையுமே காண முடியவில்லையே? பாறை ஓவியங்கள் படர்ந்து இருக்கின்றன. பெருங்கற்காலப் புதைகுழிகள் உள்ளன. அதே காலம் என்று சொல்லப்படும் சங்க இலக்கியங்கள் கிடைத்துள்ளன. ஆனால் நாகரிக காலத்துக்கான வேறு எந்தத் தடையமும் தெரியவில்லையே? பிரமி எழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. அரசர்கள் பேசப்படுகிறார்கள். ஆனால் சிந்துவெளி போன்ற கட்டடங்களும் இல்லை; எகிப்து, சுமேரியா மாதிரியிலான கட்டடங்களும் இல்லை.

      தமிழர்களின் தொன்மம் பற்றிய கதைகள் நமக்கு என்ன சொல்கின்றன என்பதை நோக்கிய ஒரு புத்தகம் இது. தேவநேயப் பாவாணர், அப்பாதுரையார் ஆகியோருக்குப் பின் குமரிக்கண்டம் பற்றிப் பேச தமிழகத்தில் ஆளே இல்லை. இவர்கள் எழுதியவையும் மேலோட்டமான ஊகங்களைக் கொண்டே. தமிழகத்திலிருந்து யாரும் தொல்லியல் நோக்கில் கடலுக்கு அடியில் ஒன்றையும் தேடவில்லை. ஆனால் இந்தப் புனைவுகள் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வாயிலாக முற்றுமுழுதான உண்மைகளாகக் குழந்தைகளுக்குப் போதிக்கப்படுகிறது. அறிவியல் ஆதாரம் எதுவுமே இல்லாத இவற்றை நம்பும் நீங்கள் பிறவற்றைக் கேலி பேசுவது தமாஷாக உள்ளது.

      Delete
    3. "ஆனால் தமிழ்நாட்டின் வரலாற்றில் பதில் சொல்லமுடியாத கேள்விகள் பல உள்ளன. சிந்துவின் உச்சத்தை அடைந்த திராவிடர்கள், தெற்காகத் துரத்தப்பட்டபின் ஏன் ஒரு செங்கல் கட்டடத்தையும் கட்டவில்லை? "

      குமரி கண்டத்தில் தோன்றிய தமிழர்கள் தான் (திராவிடர்) வட பகுதிக்கு சென்று ஒரு நாகரீகத்தை அமைத்திருக்கலாம் என்றும் அதை பின் ஆரியர் அழித்திருக்கலாம் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது.

      திரு.அறவாணன் அவர்களின் நூலான பண்டைய தமிழர் வரலாறு என்ற நூலை படிக்கவும்.

      அது சரி ஆரியருக்கு உரித்தான முக்கிய பல விடயங்கள் சிந்து வெளி நாகாரீகத்திலோ அல்லது இந்தியாவிலோ காணப்படவில்லை. (வேதத்தில் கூறப்படும் பல விடயங்கள்)உதாரணமாக குதிரை
      இது பற்றி எல்லாம் சிந்திக்க மாட்டீர்களா ????

      Delete
    4. "எகிப்து, சுமேரியா மாதிரியிலான கட்டடங்களும் இல்லை."

      தமிழர் சுமேரியாவில் இருந்து வந்தால் தான் அவ்வாறு இருக்கும் இங்கிருந்து அங்கெ சென்றிருந்தால் ????

      Delete
    5. "தேவநேயப் பாவாணர், அப்பாதுரையார் ஆகியோருக்குப் பின் குமரிக்கண்டம் பற்றிப் பேச தமிழகத்தில் ஆளே இல்லை."
      திரு.அறவாணன் அவர்கள் நூலான பண்டைய தமிழர் வரலாறு என்ற நூலை படிக்கவும்.

      Delete
    6. || சிந்துவின் உச்சத்தை அடைந்த திராவிடர்கள், தெற்காகத் துரத்தப்பட்டபின் ஏன் ஒரு செங்கல் கட்டடத்தையும் கட்டவில்லை? அப்படியே சிந்துவிலேயே மறந்து விட்டுவிட்டு வந்துவிட்டார்களா? சிந்துவை ஒத்த முத்திரைகள் எவையும் ஏன் தமிழகத்தில் கிடைக்கவில்லை? ||

      ஏன் ஆதிச்ச நல்லூர் அகழ்வு முடிவுகள் பற்றி நீங்கள் இங்கு சிந்திக்க வில்லை? சிந்து வின் செங்கல் கட்டிடங்கள் ஒரு வடிவம் தானே, தொழில்நுட்பம் சுட்ட மண் கொண்டு ஆக்கங்கள் செய்வது..இது தமிழகத்தின் பல அகழ்வுகளில் மெய்ப் படுத்தப் பட்டுக் கொண்டுதானே இருக்கிறது?!


      || நாகரிக உச்சத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் தமிழகத்தில் பல்லவர் காலத்துக்கு முந்தைய எந்தக் கல் சிற்பத்தையுமே காண முடியவில்லையே? பாறை ஓவியங்கள் படர்ந்து இருக்கின்றன. பெருங்கற்காலப் புதைகுழிகள் உள்ளன. அதே காலம் என்று சொல்லப்படும் சங்க இலக்கியங்கள் கிடைத்துள்ளன. ஆனால் நாகரிக காலத்துக்கான வேறு எந்தத் தடையமும் தெரியவில்லையே? பிரமி எழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. அரசர்கள் பேசப்படுகிறார்கள். ||

      பல்லவர் காலம் கடந்த 20 நூற்றாண்டுகளில் தமிழகத்தின் பொற்காலங்களுள் ஒன்று. நாகரிகத்தின் உச்சத்தை அடையும் நேரத்தில் பல புதிய முயற்சிகள் தோன்றுவது இயல்பு.

      பல்லவர்களின் சிறப்பு பாறைகளைக் குடைந்து அமைக்கும் கோயில்கள் சிற்பங்கள் மட்டுமே.மற்றபடி கற் சிற்பமே தென்இந்தியாவில் இல்லை என்று சொல்கிறீர்களா? எண்ணற்ற பாடல் பெற்ற தலங்களில் இருக்கும் கோயில்களில் இருக்கும் சிற்பங்கள் எதனால் ஆனவை?
      குற்றாலநாதரின் கோயிலின் காலம் என்ன? அந்த சிற்பங்கள் எதனால் ஆனவை.

      ஒரு புதிய ஆக்க வடிவத்தையும், ஆக்கத் தொழில் நுட்பத்தையும் நீங்கள் முடிச்சிடுகிறீர்கள்.(do not take a pattern of technology as technology itself).

      சரஸ்வதி ஆற்றுக்கான நம்பிக்கைக்கு ஒரு சரியான ஆதார | ஆய்வுப் புத்தகத்தைச் சொல்லவும். படிக்க ஆவலாயிருக்கிறேன்.

      Delete
  3. n
    தன் கிழக்கு பதிப்பகம் வெளியிடும் நூல்களை இணையத்தில் விளம்பரம் செய்ய பத்ரி சேஷாத்ரி பின்பற்றும் உத்தி சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு புது நூலைப் பற்றியும் சளைக்காமல் தன் தளத்தில் ஒரு குறிப்பு எழுதுகிறார். நூல் எதைப் பற்றியது, என்ன சொல்ல வருகிறது, ஏன் அதை நாம் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதை ஒரு மினி கட்டுரையாக எழுதுகிறார். நிஜமாகவே கவர்ச்சியாக் இருக்கிறது அதில் கவரப்பட்டு நான் இன்று வாங்கவிருக்கும் புத்தகம் குமரிக்கண்டமா, சுமேரியமா?

    ஒரு பின்குறிப்பு: பத்ரி, நீங்கள் ஏன் விநியோக உரிமை பெற்றிருக்கும் (என்) நூல்கள் பற்றியும் இப்படி எழுதக் கூடாது ? லாபத்தில் சரி பாதிக்கு மேல் உங்களுக்குக் கொடுத்து வருகிறேனே....?! :)

    ReplyDelete
  4. An interesting supplement, might be the book "The Dravidian Element in India" by Gilbert Slater, who thinks India is more Dravidian than Aryan, but that the Dravidians came from Sumeria/Egypt. Book republished by Asian Educational Services. He believes in the Aryan invasion, but his original theory is that Brahmins were not Aryans, but a separate older Dravidian caste. And the caste is the natural system of the Dravidians, which has overwhelmed the varna system of the Aryans. In fact, that Dravidian culture overwhelms every conquering culture - the Aryans, the Huns, the Tartars, the Muslims, the Europeans - but imbibes several of their best features!!

    What I find original about his book is that he has approached it from an economics standpoint, involving simple things like rice, cotton, bow & arrow, metals, gold, gems etc. His hypotheses are interesting and original, but he makes no serious attempts to prove them. Fyi.

    Kuttaiyai kuzhappal...
    R. Gopu

    ReplyDelete