Tuesday, May 28, 2013

கல்லூரிகளில் தமிழ்/ஆங்கிலம்

சனிக்கிழமை அன்று தி ஹிந்துவில் வெளியான செய்தியில், இனி கலை/அறிவியல் கல்லூரிகளில் வகுப்புத் தேர்வுகளை மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதவேண்டும் என்று இருந்தது. இந்தச் செய்தியில் சில தகவல்களை நான் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டேன். மேலும் பலரும் இதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. கருணாநிதி, வைகோ முதலாக, தமிழ் உணர்வாளர்கள் பலரும்கூடத் தவறாகப் புரிந்துகொண்டு, தமிழுக்குப் பெரும் ஆபத்து என்பதாக அறிக்கைகள் விடுத்துள்ளனர்.

மேலும் விசாரித்ததில் நான் தெரிந்துகொண்டவை இவை:

(1) இப்போது கலை/அறிவியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் என்று இரு வழியங்கள் உள்ளன. ஆங்கில வழியத்தில் படிப்பவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பரீட்சைகள், வகுப்புத் தேர்வுகள் எழுதுவதில்லை. அவர்கள் தமிழிலும், தமிழ்/ஆங்கிலம் கலந்தும் எழுதலாம். எப்போதிலிருந்து இது நடைமுறையில் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் வழியத்தில் படிப்பவர்கள் அனைவரும் தமிழில்தான் பொதுவாக எழுதிவந்துள்ளனர்.

(2) வரும் ஆண்டில் வரப்போகும் மாற்றம் தமிழ் வழியத்தில் படிப்பவர்களை எவ்விதத்திலும் பாதிக்கப்போவதில்லை. பாதிப்பு, ஆங்கில வழியத்தில் படிப்பவர்களுக்குத்தான்.

(3) ஆங்கில வழியத்தில் படிப்பவர்கள், இனி வகுப்புத் தேர்வுகளையும் வீட்டுப் பாடங்களையும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதவேண்டும். இறுதித் தேர்வை (பல்கலைக்கழகப் பரீட்சை) ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதலாம். ஆனால் மேலே சொன்ன மாற்றத்தை வைத்துப் பார்க்கும்போது இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் இறுதித் தேர்வையும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதமுடியும் என்பதாக ஆக்கிவிடுவார்கள் என்று தோன்றுகிறது.

ஆங்கில வழியத்தில் படிப்பவர்களை மட்டும் எடுத்துக்கொண்டு இப்போது விவாதிப்போம்.

(அ) ஆங்கில வழியத்தில் சேர்ந்துள்ள ஒருவர் எதற்காகத் தமிழில் தேர்வு எழுதவேண்டும் என்று கோருகிறார்? இது சரியல்லதானே? ஆங்கிலத்தை அவர் எப்போது ஒழுங்காகக் கற்கப்போகிறார்? தமிழில்தான் எழுத முடியும் என்றால் அவரை யார் ஆங்கில வழியத்தில் சேரச் சொன்னது? ஏன் இல்லவா இல்லை தமிழ் வழியக் கல்வி நிறுவனங்கள்?

இப்படிக் கேட்கும் முன் நிதர்சனம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இரண்டு உதாரணங்களைத் தருகிறேன்.

திருப்பூரில் உள்ளது சிக்கன்னா அரசினர் கலை அறிவியல் கல்லூரி. இரண்டு ஆண்டுகளுக்குமுன் அந்தக் கல்லூரியின் இயற்பியல் துறை மாணவர்களிடம் சென்று பேசினேன். அங்கு பி.எஸ்சி வகுப்புகள் தமிழ் வழியத்தில் நடக்கின்றன. சுமார் 125 மாணவர்கள் படிக்கிறார்கள். அந்தப் பகுதியிலேயே மிகவும் பெயர் பெற்ற கல்லூரி அது. தருமபுரி, கிருஷ்ணகிரி, ஏன் கோவையிலிருந்துகூட மாணவர்கள் வந்து அங்கு படிக்கிறார்கள். ஆனால் அதே கல்லூரியில் எம்.எஸ்சி பாடங்கள் ஆங்கில வழியத்தில்தான் உள்ளன. சுமார் 30 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? இதே கல்லூரியில் தமிழ் வழியத்தில் அதுநாள்வரை பி.எஸ்சி படித்தவர்கள்தாம். எந்தக் காரணத்தால் இந்தக் கல்லூரி எம்.எஸ்சியை ஆங்கில வழியத்திலும் பி.எஸ்சியை தமிழ் வழியத்திலும் வைத்திருக்கிறது?

சென்னையில் மெஸ்டன் கல்வியியல் (தன்னாட்சி) கல்லூரியில் பி.எட் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியத்தில் படிக்கிறார்கள். ஒரே வகுப்புதான். ஆனால் மாணவர்கள் தாங்கள் தமிழ் வழியில் படிப்பதா, ஆங்கில வழியில் படிப்பதா என்று எழுதிக்கொடுத்துவிடலாம். (இங்கு பாடங்கள் எந்த மொழியில் பயிற்றுவிக்கப்படும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.) தேர்வுகளை எழுதும்போது அவரவர் தேர்ந்தெடுத்த மொழியில் எழுதலாம். சுமார் 130 மாணவர்கள் படிக்கிறார்கள். இதே கல்லூரியில் எம்.எட் பாடம், முழுவதும் ஆங்கில வழியத்தில்தான். இந்த மாணவர்களிடையே சென்ற மாதம் கலந்துரையாடினேன். மொத்தம் 35 மாணவர்களில் ஆங்கிலத்தில் எழுதக்கூடியவர்கள் 5 பேர் மட்டுமே. மீதமுள்ள அனைவரும் தமிழில்தான் எழுதுகிறார்கள். அடுத்த ஆண்டு முதல் இவ்வாறு செய்யமுடியாது.

இதுபோல்தான் பல கல்லூரிகளில் ஆங்கில வழியம், காரணம் ஏதுமின்றி நடைமுறையில் உள்ளது. அங்கு படிக்க வரும் மாணவர்களை வேறு ஓர் இடத்துக்குப் போ என்று சும்மா தள்ளிவிட முடியாது. ஆங்கில வழியம் மட்டும்தான் ஒரே வாய்ப்பு என்றால் திருப்பூர் மாணவர்களும் சென்னை மாணவர்களும், எங்கே தில்லி போயா தமிழில் படிக்க முடியும்?

(ஆ) இப்போதுள்ள status quo எவ்வாறு இப்படி உருவானது? அதனை இப்போது மாற்றவேண்டிய காரணம் என்ன?

தமிழகத்தில் உயர் கல்வி, மெக்காலே முறைப்படி, ஆங்கில வழியத்தில்தான் இருந்துவந்தது (பி.ஏ தமிழ் இலக்கியம் தவிர்த்து!). சுதந்தரத்துக்குப் பிறகு, ஏதோ ஒரு கட்டத்தில் தமிழ் வழியிலும் கல்லூரிக் கல்வி நடக்க ஆரம்பித்துள்ளது என்று ஊகிக்கிறேன். இதுபற்றிய தரவுகள் ஏதும் என்னிடம் இல்லை. கல்லூரிக் கல்வி அவசியம் என்பதை அனைத்து மக்களும் புரிந்துகொண்டனர். அதன் விளைவாக, கொஞ்சம் கொஞ்சமாகக் கல்வி பரவலாக ஆகத் தொடங்கியது. பெரும்பான்மை மக்கள் கல்லூரிக்கு வரத் தொடங்கியதும் தமிழ் வழியத்தின் அவசியம் புரிந்து, ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ் வழிக் கல்வி பரவியது.

இது, பள்ளிக் கல்வியிலிருந்து மாறுபட்டது. பள்ளிகளில் ஆரம்பம் முதலே தமிழ் வழிக் கல்வி மட்டும்தான் இருந்தது. 1980-களில்தான் ஆங்கில வழியம் புகுத்தப்பட்டது. பின்னர் மெட்ரிக் பள்ளிகளின் பரவல் காரணமாக ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழியாகக் கொண்ட (தமிழ் பயிற்றுமொழியாகச் சிறிதும் இல்லாத) பள்ளிகள் தமிழ்நாட்டில் தோன்றின. இந்த ஆண்டின் தமிழக அரசின் முடிவை அடுத்து, அடுத்த ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ், ஆங்கிலம் இரு வழியமும் இருக்கும். அதைத் தவிர, தமிழ் வழியமே இல்லாத, முற்றிலும் ஆங்கில வழியம் மட்டுமே இருக்கும் மெட்ரிக் பள்ளிகளும் இருக்கும். (சி.பி.எஸ்.ஈ, ஐ.சி.எஸ்.ஈ பள்ளிகளைக் கணக்கில் நான் எடுத்துக்கொள்ளவில்லை.)

மாறாக, உயர் கல்வி ஆரம்பம் முதலே ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது, தமிழைப் பின்னர் அனுமதித்தது. அதன்பின்னர், ஆங்கில வழியத்தில் படிக்கும் பல மாணவர்களால் ஆங்கிலத்தில் எழுத முடியவில்லை என்ற காரணத்தால், அவர்கள் எம்மொழியில் எழுதினாலும் பரவாயில்லை என்று அனுமதிக்கப்பட்டது.

இதைத்தான் மாற்றுவதற்கு TANSCHE அமைப்பு முடிவெடுக்கிறது. இதன் துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் (பி.எச்.பாண்டியனின் மனைவி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்), ஆசிரியர்களைக் குற்றம் சாட்டுகிறார். அதாவது ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்கு ஆங்கில மொழி கற்பிக்காமல் விட்டுவிடுகிறார்கள் என்றும், இப்போது கொண்டுவந்துள்ள மாற்றம் காரணமாக, ஆசிரியர்கள் இனி வேறு வழியின்றி மாணவர்களை ஆங்கிலத்தில் எழுதவைக்கவேண்டும் என்றும் அவர் கருதுகிறார். இந்த மாற்றத்துக்கு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்கிறார்.

துணைவேந்தர்கள் உண்மையில் இதுபற்றிச் சிந்தித்திருந்தால், அனைத்துக் கல்லூரிகளிலும் குறைந்தபட்சம் தமிழ் வழியத்தையும் கூடவே வைத்திருப்பார்கள். பள்ளிக்கூடமாக இல்லாமல் கல்லூரியாக இருக்கும்போது மாணவர்கள் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு அதிகமாக ஆளாக நேரிடாது. ஆங்கில வழியத்தில் நுழைந்தபிறகு, அது மிகவும் கஷ்டமாக இருந்தால் உடனடியாகத் தமிழ் வழியத்துக்கு மாறுவதில் பிரச்னை இருக்காது.

இவற்றைச் செய்தபிறகு, ஆங்கில வழியத்தில் படிப்பவர்கள் ஆங்கிலத்தில் மட்டும்தான் பரீட்சைகளையும் வீட்டுப் பாடங்களையும் எழுதவேண்டும் என்று சொன்னால் அது ஓரளவுக்கு நியாயமாக இருக்கும். அதனைச் செய்யாமல் இதனைக் கொண்டுவருவது, தமிழில் மட்டுமே படிக்கக்கூடியவர்களைக் கல்விக்கு வெளியே தள்ளும் முரட்டுச் செயலாக மட்டுமே முடியும்.

(இ) நந்தனம் கலைக் கல்லூரியின் முதல்வர் சொல்கிறார்: “தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 1.5 லட்சம் வேலைகள் மட்டும்தான் உள்ளன. ஆனால் ஆண்டுக்கு 7 லட்சம் பேர் கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வெளியேறுகிறார்கள். ஆங்கிலம் தெரிந்தால்தான், மீதி உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும்.” இந்தத் தரவுகள் எல்லாமே சரி என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தியாவில் மிக அதிகமாக வேலைகளை உருவாக்கும் மாநிலங்களில் தமிழகம் கட்டாயம் இருக்கும் என்பதே என் கணிப்பு. சத்தீஸ்கரிலும் ஜார்க்கண்டிலும் வேலை தேடிப் போகும் அளவுக்கா தமிழன் இன்று இருக்கிறான்? அங்கிருந்துதானே எல்லோரும் இங்கு வருகிறார்கள்?

தகவல் தொழில்நுட்ப வேலைகள் சில, அகில இந்திய அளவிலான வேலைகள் சில ஆகியவற்றைத் தாண்டி அனைத்து வேலைகளும் உள்ளூர் மொழியில்தான்.

(ஈ) தமிழ்வழிக் கல்விக்கு இன்று பெரும் பாரமாக இருப்பது தரமான பாடப் புத்தகங்கள் இல்லாதிருப்பதுவே. ஒரு காலத்தில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், உயர் கல்விக்கெனத் தரமான பல புத்தகங்களைத் தமிழில் கொண்டுவந்தது. மிகச் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு சில பாட நூல்களை அது தயாரித்திருந்தது. இன்று அதிலிருந்து முற்றிலுமாகக் கழன்றுகொண்டு, பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களோடு தன்னை முடக்கிக்கொண்டுவிட்டது.

மாறாக, இலங்கையில் அரசின் முயற்சியால், ஆங்கிலத்திலிருந்து தமிழ், சிங்களம் இரு மொழிகளுக்கும் பல்வேறு பாடப் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இந்துக் கல்லூரி வளாகத்தில், பால் சாமுவெல்சனின் பொருளாதாரம், ஏ.எல்.பஷாமின் இந்தியா பற்றிய புத்தகம் முதற்கொண்டு பல பாடப் புத்தகங்களைத் தமிழில் பார்த்தேன்.

தன் கடமைகளிலிருந்து நழுவிவிட்டு, உயர் கல்வியை ஆங்கிலமயமாக்கி, தமிழர்களின் தேவையைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் அரசுகளையும் (இரு கழகங்களையும் சேர்த்துதான்) அரசியல் கட்சிகளையும் நாம் கடுமையாக விமர்சிக்கவேண்டும்.

12 comments:

  1. have i understood u correctly? u have said english medium in schools came about in the 80s? My husband (1972 SSLC batch) went into english medium in his 6th standard. it was the 2nd year of introduction i think. (it was a govt aided school). But there was only one section, rest were tamil mediums. My b-i-l, who had access to tamil medium only until SSLC used to say initial days in PUC were tough (changing vattam, maavattam etc) .. of course next year he went to IIT M.. I think one section English medium was one of the last deeds of the cong govt in the state, before it lost to the dravidian parties forever...

    ReplyDelete
    Replies
    1. When I reached sixth standard (1981), that was the second year Tamil Nadu State Board had introduced English medium in its schools. My school, from what I remember correctly, had introduced the same in 1980 as soon as it was offered. I was the second batch. There were no matriculation schools, as far as I remember. All of them happened around 1984 or after. If I remember correctly, English medium was not available in Tamil Nadu State Board Schools before this time. Others who studied in TN in the 1970s can confirm whether this is true or not. Of course, CBSE schools existed even then and must have provided education in English medium only.

      Delete
    2. Hubby and b-i-l both went to Suburban High School, Coimbatore. English medium was optional. Typically sections A,B, C wd be Tamil medium and D wd be English. Those were the days when it was still SSLC, then students did one year PUC, and went in for under grad courses .. Plus II came much later..
      The point is, generations of students have made the transition from Tamil to English medium. Of course, schools had the resources by way of quality staff-- and the numbers as well. today there is a huge staff shortage as well

      Delete
    3. Appears from Kalyan's mail that English medium was there in 1960s as well. I guess then it became really prolific from 1980s onwards. I need better numbers and will try to get hold of this.

      I don;t think the problem is about quality staff, or one's ability to make a transition from Tamil to English etc. The bigger issue, whether we need it in the first place, and if we need it, what should be primary and what is secondary, English or Tamil, and whose interests are we serving etc.

      Delete
    4. Yes, the English medium was there for long. different schools adopted it in different years. Normally few sections would be english and the rest would be vernacular. In my School (hindu higher sec) 3 sec Eng, 1 telgu and rest (10~15) would be in tamil.

      About the second one, I think, we need to delink the exam vs education language. The students should choose what language the exam shoudl be irrespective of the medium of education, albeit with some conditions.
      rgds/Surya

      Delete
  2. Badri,
    When i was studying in B.sc(Physics) - English Medium in 1991-1993 , i have found that many of my classmates who have studied upto +2 in Tamil medium were using Physics Textbooks written in Tamil and writing exams in Tamil. This helped them to get good marks and degree also. Please note that most of them are "First Graduates" in their families. My professors also suggested to students to write in a language where they are comfortable. If writing exam in Tamil option was not available, then most of my friends would not have graduated inspite of their sound subject knowledge.

    Recently i came to know that an M.Sc(Maths), B.Ed graduate has written exams entirely in Tamil and got good marks.

    I don't think Professors/ faculty suggested this compulsory English medium. Students should be given the option of writing exams in a language of their choice (English/Tamil).

    ReplyDelete
  3. In Hindu High School, Triplicane, we had two English medium sections in every class (standard) right from 1960 (or possibly earlier). One section, with Hindi as second language, was preferred by Muslims and North Indians (Sindhis, Marwaris, et al). The second section had Tamil as second language and catered, mainly, to somewhat upmarket TamBrahms from Mylapore and Abhiramapuram :-) By present day standards, I must say that our school was unimaginably inclusive.

    ReplyDelete
  4. பரிச்சையதானே அம்மா இங்கிலீசுல எழுத சொல்லிச்சு? எல்லாப் பின்னூட்டத்துலமையும் எதுக்குப்பா பீட்டர் உட்டு வைச்சிருக்கீங்க!

    1. சிக்கண்ணா மாத்திரமல்ல, எல்லா அரசு கலைக்கல்லூரிகளிலும் இளநிலை மட்டும்தான் தமிழ். முதுநிலை ஆங்கிலம்தான். ஆக +2 மார்க் ரொம்ப கம்மியா வாங்குன பயபுள்ளைக சேருவதுதான் தமிழ்வழி.

    2. கல்யாணப் பத்திரிக்கையில் டிகிரி போட படிப்பவர்கள் மற்றும் கவர்மென்ட் வேலைக்கு பரிச்சை எழுதுபவர்கள் படிக்க ஏற்றது தமிழ்வழி. உயர்படிப்புக்கு போக முயற்சிப்பவர்கள் முடிந்த அளவு தமிழ்வழி சேராமல் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பத்ரி குறிப்பிட்டது போல நல்ல பாடப்புத்தங்கள் இல்லை. இருக்கும் ஒரிரு புத்தங்களும் ஆங்கில பாட புத்தங்களுடன் ஒப்பிட்டால் தரம் மிகவும் குறைவாகவே இருக்கும்.

    3. ஆங்கில வழி படிப்பவர்கள் தமிழில் பரிச்சை எழுத தடை விதித்துள்ளார்கள். ஆனால் ஆங்கில மீடியம் விரும்பி எடுத்து படிப்போர் எதுக்கு தமிழில் எழுதனும்? அங்குதான் இருக்கு சூட்சமம்... பரிச்சை பேப்பர் திருத்தும் பெரும்பாலான கல்லாரி ஆசிரியர்களுக்கு பாடத்தமிழ் தெரியாது (சிறுபான்மையினரான தமிழில் பாடமெடுப்பவர்கள் விதிவிலக்கு). ஆங்கிலவழியில் மட்டும் கற்ற இவர்கள் 'பரப்பு இழுவிசை' என எழுதினால் 'பப்பரபே' என முழிப்பார்கள். ஆகவே பிரச்சனையை தவிர்க்க குறைந்த பட்ச பாஸ் மார்க் போட்டுவிட்டுவார்கள். அதிக மதிப்பெண் வாங்க நினைப்பவர் ஆங்கிலத்தில்தான் எழுவார்கள். ஆக அரியர் விழும் என்கிற பேப்பரை தமிழில் எழுதினால் எஸ்கேப் ஆகிவிடலாம்.

    4. அம்மா அந்த G.O வை தூக்கிவிட்டாராம்.

    ReplyDelete
  5. எனக்குத் தெரிந்து 1970 களிலேயே அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில மீடியம் செக்‌ஷன் ஒன்று இருந்தது.ஒரு செக்‌ஷனுக்கு மேல் இருக்கக்கூடாது என்று விதி இருந்தது.ஆனால் செல்வந்தர்க்ள், மத்திய மானில உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்கள் குழந்தைகளை ஆங்கில மீடியம் வகுப்பிலேயே சேர்க்க விரும்பினர்.ஒரு செக்‌ஷனில் சுமார் 40 இடங்கள் மட்டுமே. ஆகவே கல்வி அதிகாரிகள் அந்த ஆங்கில மீடியம் செக்‌ஷனில் கூடுதலாக மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று அனுமதித்தனர்.அரசியல்வாதிகளுக்கு இது சவுகரியமாக இருந்தது. ஆங்கில மீடியம் செக்‌ஷனில் மாண்வ/ மாணவியர் தொகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாயிற்று. அதாவது அந்த செக்‌ஷனில் மட்டும் மேலும் மேலும் மாணவர்களை சேர்க்க அரசு அனுமதித்தது. ஒரு கட்டத்தில் ஆங்கில மீடியம் செக்‌ஷனில் மாணவ/மாண்வியர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.
    இதன் விளைவாகப் பள்ளிகளில் அந்த ஆங்கில மீடியம் செக்‌ஷனில் படிக்கின்ற மாணவர்களும் ஆசிரியர்களும் திணறினார்கள்.கடைசி வரிசையில் இருந்த மாணவர்களுக்கு கரும்பலகையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே கண்ணுக்குத் தெரியாது.
    இக்கட்டத்தில் இப்பிரச்சினையைத் தீர்க்க புது உபாயம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கில மீடியம் செக்‌ஷனை இரண்டாகப் பிரித்து வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் ஒரே செக்‌ஷன் மட்டுமே இருப்பதாக ஆவணங்கள் காட்டும்.
    அதாவது ஒரு செக்‌ஷன் மட்டுமே இருப்பதாக ஒரு போலி நாடகம் நடந்து வந்தது.கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் தெரிந்தே இது நடந்தது.
    நாடு விடுதலை அடைந்து காங்கிரஸ் அரசு பதவி ஏற்ற போது அப்போதைய கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ் மீடியம் திட்டத்தைக் கொண்டு வந்தார்.எந்தப் பள்ளியிலும் இங்கிலீஷ் மீடியமே கிடையாது. துரதிருஷ்ட வசமாக ஏதோ ஒரு கட்டத்தில் இங்கிலீஷ் மீடியம் நுழைந்தது.அந்த் நாட்களில் இரண்டு ஆண்டு இண்டர்மீடியட் இருந்தது. முற்றிலும் ஆங்கில மீடியம். மாண்வர்கள் முதல் ஆண்டில் ஆங்கிலம் பேசவும் ஆங்கிலத்தில் எழுதவும் கற்பார்கள். இரண்டாம் ஆண்டில் எல்லம் புரியத் தொடங்கும்.
    பிளஸ் டு முடியும் கட்டத்தில் கையில் ஒரு டிப்ளமா அல்லது ஏதோ ஒரு டிகிரியைக் கொடுத்து விட்டால் நிறையப் பேர் அத்துடன் நிறுத்திக் கொள்வார்கள். கல்லூரி வரை போக மாட்டார்கள் முன்னர் இண்டர்மீடியட் இருந்தபோது அதை முடித்தவுடன் ஒரு டிகிரி கொடுத்து வந்தார்கள். ஆக்வே நிறையப் பேர் அதை வாங்கிக் கொண்டு அக்கட்டத்துடன் படிப்பை நிறுத்திக் கொண்டனர்.
    இப்போதுள்ள முறையில் அனைவரும் பிஏ அல்லது பிஎஸ்ஸி வரை படிக்க விரும்புகின்றனர்.ஒரு டிகிரி இருக்க வேண்டும் என்ற ஆசையே காரணம். இப்போதுள்ள முறையில் பயங்க்ர வேஸ்ட் நடக்கிறது.

    ReplyDelete
  6. நந்தவனதான் அவர்கள் கூறிய உண்மையை புரிந்து கொண்டால் இந்த ஆங்கிலத்தில்/தமிழில் எழுதும் உரிமை எதனால் தேவை எனபது புரியும்,
    நர்செரி முதல் ஆங்கில மீடியம்,மெட்ரிக் பள்ளியில் படித்த என் உறவினர் கூட மதிப்பெண் குறைந்ததால் சென்னை அரசு கல்லூரியில் தமிழ் வழி உயிரியல் படிப்பு சேர்ந்தார். சேர்ந்த சில மாதம் பிறகு ஆங்கில வழியில் சேர்ந்தவர்கள் பொறியியல் கிடைத்து விட்டு விட்டு சென்றால் அந்த இடத்திற்கு இவரை அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கை
    அதே போல அவர் ஆங்கில வழி படிப்புக்கு மாறியும் விட்டார். கல்லூரிகளுக்கு சென்று ஆங்கில வழி பள்ளி படிப்பு படித்து விட்டு எவ்வளவு பேர் ஆங்கில வழி உயர்படிப்பு படிக்கிறார்கள்,அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் வழி பள்ளி படிப்பு முடித்தவர்கள் ஆங்கில வழி படிப்பில் சேருகிறார்கள் என்பதை பார்த்தால் பல உண்மைகள் விளங்கும்
    தமிழ் வழி பள்ளி கல்வி படித்தவர் அதிக மதிப்பெண் எடுத்து இருந்தால் ஆங்கில வழி படிப்பில்தான் சேருகிறார்.தமிழ் வழியில் படித்தவர் தமிழ் வழியில் படிக்க விரும்பாமல் ஆங்கில வழியில் படிக்க சேருவதால் ஆங்கிலத்திற்கும்,தமிழ் வழி மேல்படிப்பிர்க்கும் CUTOFF வித்தியாசம் அதிகம்.
    அரசு கல்லூரிகளில் CUTOFF தான் எந்த வழி கல்வி என்பதை தீர்மானிக்கிறது

    ReplyDelete
  7. தாய் மொழி தான் நல்லது என்பதற்கும் தாய்மதம் தான் நல்லது/தந்தை தொழில் என்ற குல தொழில் தான் நல்லது என்ற வெறிக்கும்வித்தியாசம் கிடையாது.இந்தியாவில் மட்டும் சில ஆயிரம் மொழிகள்
    அதில் பெரும்பான்மை மொழிகள் வெறும்பேச்சு மொழிகள் தான் எழுத்துக்கள் கிடையாது
    எழுத்து இருக்கும் மொழிகளும் வேறு மொழியின் லிபியை கடன்வாங்கியவை தான்
    அதிகம் பேசப்படும் மொழிகள் பல மொழிகளை அழித்து,உள்வாங்கியதால் தான் அதிக மக்களால் பேசப்படுகின்றன
    தாய்மொழி கல்வி தான் சிறந்தது என்று கூறுவதன் காரணம் அவர்கள் வசிக்கும் பகுதியில் பயன்படுத்தும் வார்த்தைகளை ,வீட்டில்பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து கற்று கொள்வது எளிது என்பதால் தான்
    தமிழை தாய்மொழியாக கொண்ட வெளிநாட்டில்,வெளிமாநிலத்தில் பிறந்த குழந்தை அவளை தவிர மற்ற அனைத்து குழந்தைகளும் ஆங்கில வழியில் படிக்கும் போது இவள் மட்டும் தமிழில் படித்தால் தான் கல்வியில்சிறந்து விளங்குவாள் என்ற வாதம் ஒரு புரட்டு தான்
    மொழிகளின் ஆயுளும் வெகு குறைவு தான்.பல ஆயிரம் மொழிகள் அழிந்து விட்டன.இப்போது நாம் தாய்மொழி என்று சொல்லி கொள்ளும் மொழிகளும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் நம் தாய்மொழியாக இல்லாமல் இருந்திருக்கும்.வசிக்கும் இடங்களில் உள்ள பெரும்பான்மை மொழி மற்ற மொழி பேசுபவர்களை சிறிது சிறிதாக உள்வாங்கி விடும்.
    மொழிகளை பாதுகாக்க வேண்டும் எனபது சரி.ஆனால் எந்த மதம் வேண்டும்,எந்த மொழியில் படிக்க வேண்டும்,எந்த இடத்தில வேலை செய்ய வேண்டும் எனபது எல்லாம் தனி மனித முடிவுகள்.அவனவனுக்கு பிடித்த மொழி அவனவனுக்கு
    தமிழில் அனைத்து அறிவியியல்,மருத்துவம்,பொறியியல் புத்தகங்கள் மிகுந்தால் சீனாகாரன் கூட தமிழை அவர்கள் ஊரில் கட்டாயம் ஆக்குவான்.அப்படி இல்லாமல் ஒருவன் இங்கு பிறந்ததால்,அதுவும் அரசை நம்பி அது நடத்தும் பள்ளி,கல்லூரியில் படித்தால் அரசு அவன் மேல் பெரும்பான்மை மொழியை திணிக்கும் என்பதில் என்ன ஞாயம் இருக்கிறது

    ReplyDelete
  8. பூவண்ணன்,

    பின்னிப் பெடலெடுக்கிறீங்க. உங்களின் பல கருத்துக்களில் எனக்குப் பொதுவாக உடன்பாடு இருப்பதில்லை. ஆனால் இவ்விஷயத்தில் உங்கள் கருத்தோடு எனக்கு 100% உடன்பாடு. நந்தவனத்தான் கூறியது போல அரசு கல்லூரிகளில் இளங்கலை தமிழ்வழி ஆனால் முதுகலை ஆங்கிலவழி. இதற்கு முக்கியக் காரணம் எண்ணிக்கை. பொதுவாக ஒரு வட்டாரத்தில் ஐந்து அரசு கல்லூரிகள் இருந்தால் அதில் இரண்டில்தான் முதுகலை அறிவியல் படிப்பு இருக்கும். உ-ம்; இளங்கலை இயற்பியல் 5*40=200, முதுகலை 2*20=40. 1960களின் இறுதியில் இளங்கலை படிப்புகளைத் தமிழ்வழியிலும் தருவது என்பது முடிவானபோது, பல கல்வியாளர்கள் அதன் தொடர்ச்சியாக முதுகலையிலும் தமிழ்வழியைப் பற்றி ஆலோசித்தார்கள். அப்போது அவர்கள் எடுத்த முடிவு, முதுகலையில் ஆங்கிலமே தொடரலாம் என்பது. காரணம் குறைந்த எண்ணிக்கையில் உள்ள முதுகலையில் (குறிப்பாக அறிவியல் துறைகளில்) உண்மையாகவே ஆர்வமுள்ள மாணவர்கள்தான் சேருவர். அந்நிலையில் அவர்களின் துறை சார்ந்த வாய்ப்புகள் அவர்கள் ஆங்கிலத்திலே படித்தால் மிகுதியாகும் என்ற எண்ணத்தின் விளைவு. நெ.து.சுந்தரவடிவேலு போன்ற ஜாம்பவான்கள் இந்த கருத்திலே உடன்பட்டு ஆதரித்ததால் அரசும் இதை ஒப்புக்கொண்டது. இதுதான் இந்நிலைக்குக் காரணம்.

    ReplyDelete