Thursday, August 22, 2013

12-வது உலகத் தமிழ் இணைய மாநாடு - கோலாலம்பூர்

ஆகஸ்ட் 15-18 தேதிகளில் மலேசியா நாட்டின் கோலாலம்பூர் நகரில் உத்தமம் (INFITT) அமைப்பின் சார்பில், மலாயா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 12-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது.

1997 முதல் இன்றுவரை 12 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இதில் கடந்த ஐந்து வருடங்களாக, வருடத்துக்கு ஒன்று என்று இம்மாநாடு நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது மாநாடு 1997-ல் சிங்கப்பூரில் நடைபெற்றபோது தமிழ் இணையம் சந்தித்த சவால்கள் வேறு, இன்று தமிழ் இணையம் சந்திக்கும் சவால்கள் வேறு. இதற்கிடையில் உத்தமம் என்ற அமைப்பு சந்தித்த சவால்களும் பலப்பல. அனைத்தையும் தாண்டி, தமிழ்க் கணிமை மற்றும் இணையத்தின் தொழில்நுட்பச் சவால்களைப் பெருமளவு எதிர்கொள்வதற்கு உத்தமம் அமைப்பு உதவியுள்ளது.

ஒரு பெரும் இடைவெளிக்குப் பிறகு 2009-ம் ஆண்டு, 8-வது மாநாடு ஜெர்மனியில் நடைபெற்றது. அடுத்த ஆண்டு 2010-ல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுடன் இணைந்து 9-வது மாநாடு நடைபெற்றது. 2011-ல் அமெரிக்காவில் 10-வது மாநாடு நடைபெற்றது. டிசம்பர் 2012-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 11-வது மாநாடு நடத்தப்பட்டது. இப்போது மலேசியாவில் 12-வது மாநாடு நடந்து முடிந்துள்ளது.

அனைத்திலும் இல்லாவிட்டாலும், முதல் சில மாநாடுகளில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். 1997-ல் நடந்த சிங்கப்பூர் மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அதன்பின் இந்தியாவில் நடந்த மாநாடுகள் அனைத்திலும் தலையைக் காட்டியிருக்கிறேன். ஒரு மலேசியா மாநாட்டுக்கும் ஒரு அமெரிக்க மாநாட்டுக்கும் செல்லவில்லை. பின்னர் சிங்கப்பூரில் நடந்த ஒரு மாநாட்டுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் கடந்த ஐந்து மாநாடுகளிலும் ஏதோ ஒருவிதத்தில் அதிகமான பங்களிப்பைச் செய்திருக்கிறேன். கடந்த ஐந்து மாநாடுகளுக்கும் இதழ்களை அச்சிட்டுக் கொடுத்திருக்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மலாயா பல்கலைக்கழகத்திலும் நடந்த (கடந்த இரு) மாநாடுகளில், மாநாட்டு நிகழ்ச்சிக் குழுவின் தலைவராக இருந்துள்ளேன். கோவையில் நடந்த மாநாட்டில் நிர்வாக வேலைகள் பலவற்றைப் பகிர்ந்துகொண்டுள்ளேன்.

இந்த மாநாடுகளின் பயன் என்ன, இவற்றால் குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை என்பது குறித்து விரிவாக, தனியான பதிவு ஒன்றை எழுதுகிறேன். கடந்த ஐந்து மாநாடுகளை வைத்துப் பார்க்கும்போது கல்விப்புலத்தவர்கள் அதிக அளவில் இந்த மாநாட்டில் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர் என்பது தெளிவுபடுகிறது. ஆனால் மென்பொருள் துறையில் உள்ளவர்கள் பங்கேற்பு அந்த அளவுக்கு அதிகமாகவில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் தங்கள் ஆராய்ச்சிகளைப் பதிப்பிப்பது அவசியமாகிறது. ஆனால் மென்பொருள் துறையினருக்கு, அது பெரிய நிறுவனத்தில் வேலை செய்வோராக இருந்தாலும் சரி அல்லது ஒற்றை நபர் மட்டுமே இருக்கும் சிறு நிறுவனத்தவராக இருந்தாலும் சரி, முறையான ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதுவது கடினம். மேலும், அவ்வாறு பதிப்பித்து என்ன ஆகப்போகிறது என்பதும் அவர்கள் கருத்தாக இருக்கிறது. தொழில் ரகசியத்தை வெளியே விடக்கூடாது என்ற எண்ணமும் உள்ளது. இந்நிலை மாறவேண்டும்.

இம்மாநாட்டில் பொதுவாக கீழ்க்கண்ட துறைகளில் கட்டுரைகள் வருகின்றன: கணினி மொழியியல், இயற்கை மொழி ஆய்வு, மென்பொருள்கள், இணையச் சேவைகள், குறுஞ்செயலிகள், இணைய/கணினி/கைப்பேசி வழி தமிழ்க் கல்வி.

இதில், கணினி/இணையம்/கைப்பேசி வழியாகப் போதிப்பது குறித்து வரும் பெரும்பாலான கட்டுரைகள் நுட்பத்தை அதிகமாக முன்னெடுத்துச் செல்பவையாக இல்லை. சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளின் முதன்மைத் தேவை, கணினியையும் இணையத்தையும் பயன்படுத்தித் தமிழைப் போதிப்பதுதான். ஆனால் தமிழகத்திலோ (இலங்கையிலும்கூட) தமிழ் வழியத்தில் அனைத்துப் பாடங்களையும் போதிப்பது அவசியமாகிறது. ஆனால் இதுகுறித்து நல்ல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதும் அளவுக்கு தமிழ்நாட்டில் நிலைமை இல்லை என்பதுதான் உண்மை.

மாநாட்டுக்கு வந்த ஒரு சிலரது கருத்து, இந்த ‘கல்வி’ குறித்த கட்டுரைகளை இம்மாநாட்டில் ஓர் அங்கமாகச் சேர்க்கவேண்டுமா என்பதே. இதுவும் விவாதிக்கப்படவேண்டிய ஒன்றுதான்.

மற்ற தலைப்புகளை எடுத்துக்கொள்வோம். கணினி மொழியியல், இயற்கை மொழி ஆய்வு ஆகியவற்றில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைய முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அவை ஒரு பயனரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய அளவு ஒரு மென்பொருளின் உருவாக்கத்தில் இன்னும் போய் முடியவில்லை. உதாரணமாக, ஒரு செம்மையான இலக்கணப் பிழைதிருத்திக்காக நாம் இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறோம். மறுபக்கம், மென்பொருள்களைப் பொருத்தமட்டில் பல பயனுள்ளவை நம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. தமிழில் எழுதுவது, எழுத்துக் குறியீடுகளை மாற்றுவது, கைப்பேசிகளில் தட்டும்போது வார்த்தைகளை ஊகித்துச் சிறுசிறு பிழைகளைத் திருத்துவது போன்றவையெல்லாம் இன்று பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால் இவ்வளவு மாநாடுகளுக்கும்பிறகு இவை மட்டும்தானா என்ற கேள்வியும் எஞ்சி நிற்கிறது. எழுத்துணரி, பேச்சிலிருந்து எழுத்து, கையெழுத்தைப் புரிந்துகொண்டு இலக்க எழுத்துகளாக மாற்றுதல், எழுத்திலிருந்து பேச்சு, ஓரளவுக்குச் செம்மையான மொழிமாற்றி, ஏற்கெனவே நான் குறிப்பிட்ட பிழைதிருத்தி போன்றவையெல்லாம் இன்னும் எட்டாக்கனிகளாகவே உள்ளன. கூடவே, பத்திச் சுருக்கம், ஒரு பத்தியிலிருந்து அது சொல்லவரும் உணர்வைப் பெறுதல் போன்ற பலவற்றைக் குறித்தும் நிறையச் செய்யவேண்டியுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான கருவிகள் பலவும் செய்யப்படவேண்டியுள்ளது. சென்ற ஆண்டு இதில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாண்டு நான் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை. தமிழிலேயே ‘நிரலிகள் எழுதும் முறை’ பற்றி இவ்வாண்டு ஓரிரு கட்டுரைகள் வந்துள்ளன; ஆனால் எதிர்பார்த்த வேகம் இல்லை. ஆனால் இன்றைய நிலையில் இவையெல்லாம் கையெட்டும் தூரத்தில்தான் உள்ளன. அடையவே முடியாத கடின இலக்குகளல்ல.

ஒரு பக்கம், புதிய புதிய கருவிகளில் தமிழைப் படிக்க முடியுமா, தமிழில் எழுத முடியுமா என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டே, அங்கு ஏற்படும் சிக்கல்களை எதிர்கொண்டபடியே, மறு பக்கம் மேலே சொன்ன அனைத்து நுட்பியல் பிரச்னைகளையும் நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய நிலையில் இருக்கிறோம். இதனைச் சாத்தியப்படுத்த உத்தமத்தின் மாநாடுகள் மிக மிக அவசியமாகின்றன.

அடுத்த ஆண்டு (2014), 13-வது மாநாடு இந்தியாவில் நடக்க உள்ளது. இதுவரை இல்லாத அளவு பெரும் பாய்ச்சல் இந்த மாநாட்டின்போது நிகழும் என்று நம்புவோம்.

1 comment: