Wednesday, August 07, 2013

பத்தாவது பொதுத்தேர்வு தேவையா?

சமீபத்தில் ஒரு பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர், சமச்சீர் கல்வியைப் பொருத்தமட்டில் இந்த ஆண்டு நடப்பதுதான் கடைசி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு என்றார். ஏற்கெனவே சிபிஎஸ்ஈ பத்தாம் ஆண்டு பொதுத்தேர்வை ஆப்ஷனலாக மாற்றிவிட்டது. விரும்புவோர் பொதுத்தேர்வை எழுதலாம். மீதம் உள்ளோர் பள்ளிக்கூடமே நடத்தும் தேர்வை எழுதலாம். பத்தாம் வகுப்புக்குப் பிறகு வேறு போர்டுக்கு மாற்றிக்கொள்ள விரும்புவோர் மட்டும் பொதுத்தேர்வு எழுதினால் போதும். அதே பாணியைத் தமிழகம் பின்பற்றப் போகிறது என்று வதந்திகள் கசிகின்றன.

சிபிஎஸ்ஈ, சமச்சீர் இரண்டுக்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. சிபிஎஸ்ஈ படிப்போர் கிட்டத்தட்ட அனைவருமே மேற்கொண்டு 11, 12 படித்து, அதற்குமேற்பட்ட படிப்புகளைப் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள். தமிழ்நாட்டில் சிபிஎஸ்ஈ படிப்பில் பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 99%-க்கும் மேல்.

ஆனால் சமச்சீர் பொதுத்தேர்வில் படிப்போர் பலதரப்பட்டவர்கள். இதில் பலர் பத்தாவதுடன் படிப்பை நிறுத்திவிட நினைப்பவர்கள். உடனே வேலை தேடிக்கொண்டு செல்ல விரும்புபவர்கள். அரசு வேலைகளின் அடிமட்டத்தில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும். பாலிடெக்னிக்கில் சேர விரும்புவோர், பத்தாவது படித்திருந்தால் போதும். அதேபோலத்தான் ஐடிஐ படிப்பும். இப்போது பத்தாவது முடித்துவிட்டு ஓரிரு ஆண்டுகள் வேலை செய்தபின் பிரைவேட்டாக 12-ம் வகுப்புத் தேர்வு எழுதலாம் என்று முடிவெடுப்போர் பலர்.

இதற்கெல்லாம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடந்தால்தான் சரியாக இருக்கும். அதனை ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவது சரியான செயலாகத் தெரியவில்லை.

மேலும் இதுபோன்ற முக்கியமான நிகழ்வுகள் குறித்துப் பொது விவாதம் ஒன்று தேவையல்லவா? அப்படி ஏதும் நடப்பதாகவும் தெரியவில்லை. ஆனால் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இது குறித்து ஏதோ தகவல் சென்றுள்ளது என்று தெரிகிறது. தமிழக கல்வித்துறையில் வேலை செய்வோர் யாராவது இதுகுறித்து விளக்கம் அளிக்க முடியுமா?

No comments:

Post a Comment