Thursday, September 16, 2004

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த

கடந்த இரண்டு நாள்களாக செய்தித்தாள்களில், ரிசர்வ் வங்கி CRRஐ அதிகரித்துள்ளது என்று படித்திருப்பீர்கள். இந்த ரிசர்வ் வங்கியின் முயற்சி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த என்றும் படித்திருப்பீர்கள்.

பணவீக்கம் (inflation) என்றால் என்ன? கொஞ்சமாக இருக்கும் பொருள்களை, அதிக அளவு பணம் துரத்துகிறது, அதனால் அதிக விலை கொடுத்து பொருள்களை வாங்க, பலர் தயாராக இருக்கின்றனர், இதனால் பொருள்களின் விலை கிடுகிடுவென ஏறுகிறது. ஒரு ரூபாய்க்கு அதுவரை கிடைத்து வந்த பொருள் இனியும் அந்த விலைக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. அதாவது மற்றொரு வகையில் பார்த்தால் ஒரு ரூபாயின் மதிப்பு குறைந்து விட்டது. இதுதான் பணவீக்கம். இந்தப் பணவீக்கம் சில மாதங்கள் முன்னர் வரை 5% சமச்சீராக இருந்து வந்தது. கடந்த நான்கு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஏறத்தொடங்கி சென்ற வாரம் 8.33% தொட்டது.

இதனை இரண்டு வகைகளில் சமாளிக்கலாம். அதிக அளவில் இருக்கும் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். அல்லது பொருள்களை இன்னமும் ஏராளமாக உற்பத்தி செய்யவைக்கலாம். ஆனால் ஓர் அரசால் மிகக்குறுகிய காலத்தில் ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்ய வைக்க முடியாது, ஆனால் குறுகிய காலத்தில் வெளியே புழங்கும் பணத்தைக் குறைக்க முடியும். இந்தச் செயலை ஓர் அரசு எப்படிச் செய்கிறது என்று பார்க்கலாம்.

CRR என்றால் Cash Reserve Ratio. வர்த்தக வங்கிகள், தம்மிடம் உள்ள வைப்பு நிதிகளிலிருந்து (உடனடியாக வெளியேற வேண்டிய தொகையை விடுத்து) ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினை ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டும். இந்த விழுக்காடுதான் CRR.

எடுத்துக்காட்டாக ரிசர்வ் வங்கி CRR 4.5% என்று தீர்மானித்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். பாரத ஸ்டேட் வங்கியிடம் உள்ள வைப்பு நிதி (நீங்களும், நானும், பிறரும் போட்டு வைத்திருக்கும் பணம்) ரூ. 50,000 கோடி என்று வைத்துக் கொள்வோம். பாரத ஸ்டேட் வங்கி, இதிலிருந்து 4.5% அதாவது ரூ. 2,250 கோடியை ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள பணத்தை தன்னிஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் - பிறருக்குக் கடனாகக் கொடுத்து அதிலிருந்து லாபம் ஈட்டலாம்.

திடீரென்று ரிசர்வ் வங்கி CRRஐ 5% ஆக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது பாரத ஸ்டேட் வங்கி ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய பணம் எவ்வளவு? 5%(50,000) = ரூ. 2,500 கோடி. அதாவது பாரத ஸ்டேட் வங்கி உடனடியாக, தான் ஏற்கனவே ரிசர்வ் வங்கியில் போட்டுவைத்திருக்கும் பணத்திற்கு மேலாக ரூ. 250 கோடியைப் போடவேண்டியிருக்கும்.

CRR உயர்த்தப்பட்டதனால் வங்கிகள் பொதுமக்களுக்குக் கொடுக்கவிருந்த கடன் அளவு குறைந்து போகிறது. இதனால் வங்கிகள் 'வீடு வாங்கக் கடன்', 'வண்டி வாங்கக் கடன்', காரணமில்லாக் கடன் (பெர்சனல் லோன்) ஆகிய அனைத்தையும் குறைக்க வேண்டி வரும். இதனால் பொதுமக்களுக்கு செலவு செய்யக் கிடைக்கும் பணம் குறைகிறது.

புதுமையாக இருக்கிறதா? இன்று நாம் செலவு செய்யும் பணம் அனைத்தும் நம் சம்பாத்தியத்தால் - வருமானத்தால் மட்டும் வருவதில்லை. மிக அதிகமான அளவிற்கு, கடன் பணம்தான் உபயோகப்படுகிறது. உதாரணமாக இந்தியாவில் விற்கும் மோட்டார் வண்டிகளில் 80% மேலான வண்டிகள் கடன்கள் மூலமாகத்தான் வாங்கப்படுகின்றன. இன்றைய தேதியில் 90% மேலான வீடுகள் கடன்கள் மூலமாகத்தான் வாங்கப்படுகின்றன. இதைத்தவிர எண்ணற்ற செலவுகள் - வெளியூர் சுற்றிப்பார்ப்பது, புது மியூசிக் சிஸ்டம் வாங்குவது என தள்ளிப்போடக்கூடிய செலவுகளில் பெரும்பாலானவை காரணமில்லாக் கடன்கள் மூலமாக நடைபெறுகின்றன. அதைத்தவிர ஸீரோ விழுக்காடு கடன்கள் என்று நுகர்பொருட்கள் பல - வாஷிங் மெஷின், டிவி, குளிர்பதனப் பெட்டி என அனைத்தும் - கடன்களை ஆதாரமாக வைத்தே வாங்கப்படுகின்றன. இந்த நடப்பு பெருநகரங்களில் மட்டும் நடப்பதல்ல. சிறுநகரங்களிலும் கூடத்தான்.

மொத்தப் பணப்புழக்கம் குறையும்போது வாஷிங் மெஷின் வாங்குவது மட்டுமல்ல, செருப்பு வாங்குவது, வெங்காயம் வாங்குவது என அத்தனையுமே குறைகிறது (cascading effect). 'ஒரு மாதம் தள்ளி முடிவெட்டிக்கொள்ளலாம், மூஞ்சியில் முடி விழுந்தால் பரவாயில்லை' போன்ற முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.

ஆக, வங்கிகள் பொதுமக்களுக்குக் கொடுக்கும் கடன் குறையும்போது பொதுமக்கள் செய்யும் செலவும் குறைகின்றது. இதனால் குறைந்த அளவுள்ள பணமே (எல்லாவிதப்) பொருட்களையும் பின்தொடர்கின்றன. பணம் பொருட்களைத் துரத்துவதற்கு பதில், பொருட்கள் பணத்தைத் துரத்துகின்றன. பொருட்களின் விலை குறையத் தொடங்குகிறது.

இவ்வாறாக ரிசர்வ் வங்கி வெளியே புழக்கத்தில் இருக்கும் பணத்தினை உறிஞ்சித் தன்னகத்தே வைத்துக்கொள்வதால், குறுகிய காலத்தில் பணவீக்கத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும்.

CRR சில வருடங்களுக்கு முன்னால் 7.5% இருந்தது. பின், பொருளாதாரத்தை வளப்படுத்த ரிசர்வ் வங்கி CRRஐச் சிறிது சிறிதாகக் குறைத்து 4.5% ஆக்கியது. இதனால் வர்த்தக வங்கிகளிடம் அதிகமான பணம், பிறருக்குக் கடன் கொடுக்கக் கிடைத்தது. தொடர்ந்து வங்கிகளிடையே ஏற்பட்ட கடுமையான போட்டியில், கடன் மீதான வட்டி விகிதம் குறைந்து கொண்டே வந்தது. வீட்டின் மீதான கடன் வட்டி 12-13% இலிருந்து குறைந்து 7.5% வரை வந்தது. இப்பொழுது சற்றே அதிகரித்து 8% ஆகியுள்ளது. அதுபோல மூன்று வருடங்களுக்கு முன் தனியார் வங்கிகள் காரணமில்லாக் கடன் மீதான வட்டியாக 20% (அதற்கு மேலும்) வரை வசூலித்து வந்தனர். இப்பொழுது அது 12-14% வரை குறைந்துள்ளது.

CRR அதிகமானதோடு மட்டுமில்லாமல், ரிசர்வ் வங்கி தன்னிடம் வர்த்தக வங்கிகள் வைத்திருக்கும் பணத்திற்கான வட்டியையும் அதிரடியாகக் குறைத்துவிட்டது. இதுநாள் வரை ரிசர்வ் வங்கி தன்னிடம் வங்கிகள் கொடுத்து வைத்திருக்கும் பணத்திற்கு 6% வட்டி கொடுத்தது. இப்பொழுது 3.5% மட்டும்தான் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் வங்கிகளின் வருமானம் குறையும் - எனவே பங்குச்சந்தையில் இருக்கும் வங்கிகளின் பங்கு விலை குறையும் - குறைந்துள்ளது. வங்கிகள் தாம் தாராளமாகக் கொடுத்து வந்திருக்கும் கடன்களை சற்றே நிறுத்தி, கடன்கள் மீதான வட்டி விகிதத்தையும் அதிகப்படுத்தலாம். உடனடியாகச் செய்வார்களா என்று தெரியவில்லை.

கடந்த இரண்டு வருடங்களில் வட்டி விகிதம் மிகக்குறைவாக இருந்ததால் பல நிறுவனங்கள் பெருத்த செலவில் தங்கள் தொழிலை விரிவுபடுத்த எண்ணி முதலீடு செய்வதற்காக கடன்கள் வாங்கியிருந்தனர், மேற்கொண்டு வாங்குவதாக இருந்தனர் (for Capital expenditure). வட்டி விகிதம் கூடுவதாக இருந்தால், பல நிறுவனங்கள் தொழில் விரிவாக்கலை நிறுத்தலாம், அல்லது தள்ளிப்போடலாம். இதனாலும் வேலை வாய்ப்புகள் குறையும். பொதுமக்களுக்கான சேவை வசதிகளும் குறையும்.

மோட்டார் வண்டிகள் வாங்கக் கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்தால், பொதுமக்கள் வாங்கும் வாகனங்களின் எண்ணிக்கை குறைவுபடும். இதனால் மோட்டார் நிறுவனங்களின் (மாருதி, டாடா மோடார்ஸ், ஹீரோ ஹோண்டா, டிவிஎஸ், பஜாஜ்) வருமானம், லாபம், பங்கு விலை பாதிக்கப்படும். அந்நிறுவனங்களின் விரிவாக்கப் பணிகளில் தடங்கல்கள் ஏற்படும். வேலை வாய்ப்புகளும் குறைவுபடும். அதுபோலவே மற்ற பெரிய நுகர்பொருள் நிறுவனங்களின் வருமானங்களும், லாபமும் பாதிக்கப்படும்.

ஆனால் தற்போதுள்ள பண வீக்கம் + விலையேற்றம், வெளியே அதிகமான பணப்புழக்கம் இருப்பதனால் மட்டும் வந்தது போலத் தோன்றவில்லை. பெட்ரோல் விலையேற்றம் இதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. ஆனாலும் குறுகிய காலத்தில் பணவீக்கத்தைக் குறைத்து, விலையேற்றத்தைத் தவிர்க்க CRR உபயோகமாக இருக்கும்.

அத்துடன் மற்ற சில முயற்சிகளும் தேவை. பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரம், ரிசர்வ் வங்கியின் ஆளுனர் YV ரெட்டி ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர். வரும் நாள்களில் அரசின் மற்ற முயற்சிகள் என்னவென்று தெரிய வரும்.

9 comments:

  1. Very good explanation, thnx.

    By: ila

    ReplyDelete
  2. அருமையானக் கட்டுரை.

    நன்றி.

    செல்வா

    By: செல்வா

    ReplyDelete
  3. அருமையானக் கட்டுரை.

    நன்றி
    செல்வா

    By: செல்வா

    ReplyDelete
  4. http://etamil.blogspot.com/2004/09/blog-post_109535993735445013.html - கொஞ்சம் பெரிய பின்னூட்டம்.

    ReplyDelete
  5. புதுமையாக இருக்கிறதா? இன்று நாம் செலவு செய்யும் பணம் அனைத்தும் நம் சம்பாத்தியத்தால் - வருமானத்தால் மட்டும் வருவதில்லை. மிக அதிகமான அளவிற்கு, கடன் பணம்தான் உபயோகப்படுகிறது.
    >>A big (w)hole world called 'credit' :)

    அதைத்தவிர ஸீரோ விழுக்காடு கடன்கள்
    >>
    Zero (percent) interest loans?(for limited time, of course)
    'வட்டியில்லாக் கடன்கள்' சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. Couple of things on comments:
    1. Show/Hide option (like Sakaran/Kosappettai)
    2. Instruction to click 'Post' button only ONCE. [Either the script processing is slow, or blogger itself is slow(most likely)]

    ReplyDelete
  7. பத்ரி, அருமையான கட்டுரை. இதே போல் முன்பு கேட்டுக்கொண்ட வரிகள் (Tax) பற்றிய கட்டுரைத்தொடரையும் எதிர்பார்க்கிறேன். நன்றி - மகேஷ்

    By: Mahesh

    ReplyDelete
  8. பத்ரி, அருமையான பதிவு.
    தொடர்ந்து இதுபோன்ற பல விபரங்களை எதிர்பார்க்கின்றோம்.

    ReplyDelete