Tuesday, September 07, 2004

பிசினஸ் ஸ்டாண்டர்ட் கட்டுரை: A misnomer called 'merit'

இன்றைய பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தித்தாளில் ஆர்.ஜகன்னாதன் எழுதியுள்ள கட்டுரை சிந்தனையைத் தூண்டும்.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்ற பேச்சு இப்பொழுது தொடங்கியுள்ளது. அதுபற்றி சில நாள்கள் முன்னர் வெங்கடேஷ் நேசமுடன் மின்னிதழில் எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து நானும் அதுபற்றி எழுதியிருந்தேன்.

இட ஒதுக்கீடு என்ற பேச்சு வரும்போது 'merit' (திறமை என்று சொல்லலாமா?) என்னும் சொல்லாட்சி வரத்தொடங்குகிறது. அதாவது இட ஒதுக்கீட்டில் உள்ளே வருபவர்கள் திறமை குறைந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் ஏன் இந்த 'பின் கதவு' வழியாக உள்ளே வர வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

இட ஒதுக்கீடு vs Affirmative action (பரிவுச் செயல்பாடு என்று சொல்லலாமா?) எது இருக்க வேண்டும், எது இருக்கக் கூடாது என்று பின்னர் பார்க்கலாம்.

முதலில் இப்பொழுதைக்கு தனியார் துறையில் வேலைக்கு விண்ணப்பித்து வேலையில் சேருபவர்களைப் பார்ப்போம். உங்களுக்கு C++ மொழியில் நிரலி எழுதத் தெரியும் என்று வைத்துக்கொள்வோம். கையில் வேலை ஒன்றும் இல்லை. ஒரு வேலைக்கான விளம்பரத்தைப் பார்க்கிறீர்கள். அந்த அலுவலகம் சென்று உங்கள் விண்ணப்பத்தையும், உங்கள் தகுதிகளையும், திறமைகளையும், கற்றறிந்தவற்றையும் பட்டியலிட்டுக் கொடுக்கிறீர்கள். நேர்முகத் தேர்வு நடக்கிறது. அந்த நிறுவனத்தாருக்குத் தேவையான நுட்பறிவு உங்களுக்கு இருக்கிறது என்று தீர்மானிக்கிறார்கள். உடனே உங்களுக்கு வேலை கொடுக்கிறார்கள்.

ஆனால் அந்த நிறுவனத்தின் வேலையைச் செய்ய உங்களை விடத் திறமையானவர், நீங்கள் வாங்கும் அதே சம்பளத்தில் உழைக்கத் தயாராயிருப்பவர் இந்த உலகத்தில் இருக்கிறாரா? இந்த ஊரிலேயே இருக்கிறாரா? பதில்: நிச்சயமாக இருக்கிறார். அவரைத் தேடிப் பிடிக்க அந்த நிறுவனம் நிறைய அலைந்து திரிய வேண்டும். அதற்கான நேரமோ, ஆள்பலமோ அந்த நிறுவனத்துக்கு இல்லை. அவர்களுடைய தேவை உலகிலேயே மிகச்சிறந்தவர் ஒருவர் அவர்களிடத்தே வந்து வேலை செய்யவேண்டுமென்பதில்லை. மாற்றாக அவர்களது வேலையை செய்து கொடுக்கக்கூடிய தகுதி வாய்ந்தவராக முதலில் கண்ணுக்குத் தென்படுபவர் எவரோ, அவருக்கு வேலை கொடுக்கிறார்கள்.

விளம்பர வீண்செலவு செய்ய விரும்பாதவர்கள் என்ன செய்கிறார்கள்? தங்களுக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம், "எமக்கு குறிப்பிட்ட வேலை செய்யக்கூடிய ஆள் ஒருவர் வேண்டும். உங்களுக்குத் தெரிந்தால் அனுப்பி வையுங்கள்." என்று சொல்கிறார்கள். அப்படி அனுப்பப்படும் ஆட்களில் ஓரிருவரைப் பார்த்துவிட்டு அதில் யார் குறிப்பிட்ட வேலையை திருப்தியாக செய்யக்கூடியவர் என்பதை முடிவு செய்து அவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆக தனியார் நிறுவனங்கள் அனைத்திலுமே தகுதி என்பதற்கு உச்சாணிக்கொம்பு என்று பொருள் எடுத்துக் கொள்வதில்லை. இது ஒலிம்பிக்ஸ் போட்டியில்லை. ஒரு குறிப்பிட்ட உயரத்தில் கட்டையை வைத்து அதை சரியாகத் தாண்டும் முதல் ஐந்து பேர்கள் (அல்லது பத்து பேர்கள்) எமக்குப் போதும் என்றுதான் தனியார் நிறுவனங்கள் வேலை செய்கின்றன. "அப்படித் தாண்டக்கூடியவர்கள் அனைவரும் சில குறிப்பிட்ட ஜாதியினைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான். பிற்படுத்தப்பட்டோரால், ஷெட்யூல்ட் வகுப்பு மற்றும் பழங்குடியினரால் தாண்டவே முடியாது. அவர்களை உள்ளே விட்டால் தகுதி குன்றி, தனியார் நிறுவனங்கள் செயலிழந்து போய்விடும்." என்பது போல பலர் பேசுகின்றனர். இன்று எகனாமிக் டைம்ஸ் விவாதங்கள் பகுதியில் FICCI யின் Secretary-General அமித் மித்ரா தனியார் துறையில் இட ஒதுக்கீட்டினால் தனியார் துறை நிறுவனங்கள் முற்றிலுமாக நசிந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார். ஜகன்னாதன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல என்.டி.டிவி விவாதத்திலும் குர்ச்சரண் தாஸ் இப்படித்தான் பேசியுள்ளார். ஆனால் இது போன்ற கருத்துகளை யாரும் சரியாக எதிர்ப்பதில்லை.

இட ஒதுக்கீட்டை விட குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மீது பரிவுடன் செயல்படுவதுதான் சரியான முறை என்று ஜகன்னாதன் சொல்கிறார். அதற்கென தனியார் நிறுவனங்கள் - அதுவும் எக்கச்சக்க லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் - செயல்படவேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை.

அப்படியே இட ஒதுக்கீட்டை அரசு தனியார் துறைகளில் வலியப்புகுத்தினாலும் ஒருசில பிற்பட்ட சமூகத்திலிருந்து இத்தனை விழுக்காடு மக்களை உள்ளே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறதே தவிர, மூன்றாம் வகுப்பு பெயிலான குப்புசாமியை விளம்பரத்துறை மேலாளராகப் போடு, எழுதப்படிக்கவே தெரியாத லட்சுமியை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகப் போடு என்று சொல்லவில்லையே? எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இன்றைய தேதியில் 90% மேற்பட்டவர்களுக்கு ஒரு நிறுவனம்தான் தொழிலைக் கற்றுக்கொடுத்து அவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டியுள்ளது. அப்படிச் செய்யும்போது பிற்படுத்தப்பட்டவர்களையும் மேலே தூக்கி விடுவது தனியார் நிறுவனங்களின் சமூகக் கடமைதானே?

இன்று 'முன்னேறிய சாதிகளின்' பிள்ளைகள் அனைவருமே அப்படியே நேராக தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலைக்குச் சென்றுவிடுகிறார்களா என்ன? தங்களுக்குத் தெரிந்தவர்கள், அவர்களுக்குத் தெரிந்தவர்கள் ஆகியோரின் சிபாரிசு (பரிந்துரை) வழியாகத்தானே பலரும் வேலை பெறுகிறார்கள்? என்னிடம் எத்தனையோ பேர் "பாவம் அந்தப் பையன்/பெண், வீட்டில் ரொம்பக் கஷ்டம், பாத்து ஏதாவது வேலை போட்டுக் கொடு, இல்லாட்டி வேறெந்த முறையிலாவது உதவி செய்" என்று பலரைக் காண்பித்துள்ளனர். இதே சிபாரிசை அரசே ஒரு சிலருக்குச் செய்வதில் தவறென்ன இருக்கிறது? - அதுவும் இது போன்ற சிபாரிசுகள் அவசியம் தேவைப்படுகிறவர்களுக்கு...

5 comments:

  1. Dear Badri

    I am happy to see this line of thinking. I tried to touch on this here http://aruls.blogspot.com/2004/07/1.html
    (in the last point). May be some more of this and there will be real mobility for the underprivileged even in these times of "liberalisation"

    - arul

    ReplyDelete
  2. //மூன்றாம் வகுப்பு பெயிலான குப்புசாமியை//

    அண்ணாத்தே, குப்ஸாமி அஞ்சாப்பு பாஸு. நீயி இன்னா என்னிய மூணாம்ப்புன்னு சொல்ற :-)).

    ReplyDelete
  3. அருள்: உங்கள் பதிவை முன்னமேயே படித்திருக்கிறேன்.

    படிப்பு என்று வரும்போது அரசு இன்னமும் வேகத்துடன் affirmative actionஐக் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறேன்.

    அதே நேரத்தில் 'முன்னேறிய சமூகத்தின்' பிள்ளைகள் நல்ல படிப்பில்லாமல் திண்டாடக் கூடாது. மொத்தமாக ஐந்து இடங்கள்தான் உள்ளது, அதில் உனக்கு இடம் கிடையாது, எங்கேயாவது போய்த் திண்டாடு என்று முற்படுத்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ, யாருக்கும் ஆகக்கூடாது.

    இத்தனைக்கும் மாணவர்கள் தங்கள் பணத்தைக் கொடுத்துத்தான் கல்வியை வாங்குகிறார்கள். அதனால் இட ஒதுக்கீடு போன்ற பிரச்னைகளே வராவண்ணம் அத்தனை மாணவர்களுக்கும் வேண்டிய கல்வியைக் கொடுக்குமாறு வசதிகள் செய்யவேண்டும்.

    ஆனால் வேலை என்பது வேறு. சும்மா இரண்டு லட்சம் புது வேலை வாய்ப்புகளை உருவாக்கு என்று அரசாங்கம் நினைத்த மாத்திரத்தில் செய்ய முடியாது. அப்படிப்பட்ட 'பற்றாக்குறை'யான விஷயத்தில் சிபாரிசு, பரிவுச் செயல்பாடு, இட ஒதுக்கீடு ஆகிய அனைத்துமே செய்யவேண்டியவைதான்.

    ReplyDelete
  4. it is unfortunate that u have missed the core of the article by amit mitra.had u got it right the debate would be different.

    ReplyDelete
  5. Dear Anonymous: In what way have I missed Amit Mitra's article? Amit Mitra conveniently passes the work on to (a) The Govt. (b) The financial institutions and (c) back to the Govt. asking them, to offer tax breaks to those who offer affirmative action.

    He further talks about there being no quota or reservation in USA. Do we have to consider USA as a model for anything and everything? In USA there is no comparable caste discrimination practised over thousands of years - that country is only few hundred years old and they have done quite a bit (and a lot still to be done) in dealing with the slavery.

    The third point of Mitra is something that I am in agreement with and have already mentioned that in my earlier blog item, if you want to look that up.

    Amit Mitra's point is that private sector needn't be (and he doesn't want it to be) brought into the case, and let Govt. and FIs handle the dropout issue etc.

    My point is, let Govt. handle the drop out issue etc. Let the private sector also handle those who have not dropped out, but have graduated.

    Your cryptic message does not explain exactly what I have missed out in Amit Mitra's article. I hope you can elucidate further on this.

    ReplyDelete