Tuesday, March 15, 2011

குறுங்கடன் - 1

பொதுவாக வலைப்பதிவுகளில் அதிகம் பேசப்படாத ஒரு செய்தி குறுங்கடன் (microfinance).

பின்தங்கியுள்ள ஒரு நாட்டில் நவீன பொருளாதார வளர்ச்சி ஏற்பட ஆரம்பிக்கும்போது, அந்த வளர்ச்சி சீராக அனைத்து மக்களுக்கும் போய்ச் சேராது.

நிலத்தையும் கைவினைப் பொருள்களையும் மட்டுமே நம்பியிருந்த, இயந்திரமயமாதலுக்கு முந்தைய, சமுதாயத்தில் தனி ஒருவர் தன் வருமானத்தைத் தடாலடியாகப் பெருக்கச் சாத்தியங்கள் குறைவாக இருந்தது. அவர் முரட்டுத்தனமாகப் பிறரது நிலங்களைக் கையகப்படுத்தினாலோ அல்லது பல அடிமைகளைக் கொண்டு அவர்களது உழைப்பில் தன் செல்வத்தைப் பெருக்கினாலோதான் சாத்தியம். இயந்திரமயமானதும், மூலதனம்தான் முக்கியமான செல்வம் என்றானது. பொருள்களுக்கான பெரும் தேவை இருந்தது. பொருள்களும் எளிதானவை. எனவே மூலதனம் இருந்தால், அதனைக் கொண்டு ஆலை ஒன்றை ஏற்படுத்தி, அதில் பலரை வேலைக்கு வைத்து, அவர்கள் உருவாக்கும் உற்பத்தியைக் கொண்டு லாபம் ஈட்டலாம்.

ஆனால் இன்றைய நவீன பொருளாதாரம் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. வெறும் மூலதனம் மட்டும் போதாது. மூளை நிறைய வேண்டும். ஒரு தொழிலை ஆரம்பித்தால் லாபம் கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. இதை கம்யூனிஸ்டு சித்தாந்திகள் புரிந்துகொள்வதே இல்லை. சொல்லப்போனால், இன்று மூளை மட்டும் இருந்தாலே போதும். மூலதனத்தைக் கொடுக்க வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களும் தனிப்பட்ட பணக்காரர்களும் உள்ளனர். மூளை என்றால் என்ன? ஒரு நல்ல ஐடியா. இந்தக் குறிப்பிட்ட சந்தையில், இந்தவிதமான பொருளை, இந்தத் தரத்தில் உற்பத்தி செய்து, இந்த விலைக்கு விற்றால் லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஐடியா. மூலதனத்தைவிட இதுபோன்ற ஐடியாக்களே முக்கியமானவை என்பதை நிதியுடையோர் புரிந்துகொண்ட காரணத்தால் உருவானவையே வென்ச்சர் கேபிடல் அமைப்புகள். இந்தத் தொழில்கள் பொருள் உற்பத்தியாக இருக்கலாம், சேவை வழங்குதலாக இருக்கலாம்.

நவீன பொருளாதாரத்தில் இப்படி எண்ணற்ற நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை உருவாக்குபவர்களால் நிறைய லாபம் சம்பாதிக்க முடிகிறது; இந்த நிறுவனங்களில் வேலை செய்வோரும் நிறையச் சம்பளம் பெற முடிகிறது. ஆனால் இந்த வாய்ப்புகளை அனைவரையும் சென்றடைவதில்லை.

முதலில் வேலை வாய்ப்புகளை மட்டும் பார்ப்போம். பெரும்பாலான அதிக சம்பளம் தரக்கூடிய நவீன வேலைகளை எடுத்துச் செய்ய ஒருவர் அதி புத்திசாலியாக எல்லாம் இருக்கவேண்டியதே இல்லை. அடிப்படையான சில திறன்கள் பெற்றவராக இருந்தாலேயே போதும். நுகர்வோர் சேவையை வழங்க, நன்கு பேசத் தெரிந்தவராக இருக்கவேண்டும். ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் நன்கு உரையாடத் தெரிந்தவராக இருக்கவேண்டும். விற்பனைத் துறையில் இருந்தால் நைச்சியமாகப் பேசி, எதிராளியை நிறையப் பொருள்களையோ சேவைகளையோ வாங்குமாறு செய்யவேண்டும். நன்கு பேச்சுவார்த்தை நடத்தத் தெரிந்தவராக இருக்கவேண்டும். எதிராளி பேசுவதைச் சட்டென்று புரிந்துகொள்ளக்கூடியவராக இருக்கவேண்டும். கணினிப் பயன்பாட்டுத் திறன் அவசியம். இன்னும் பலப் பல திறன்கள் உள்ளன. இந்தத் திறன்களுக்கும் பள்ளி, கல்லூரி பாடங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

பெரும்பாலும் நகர்வாழ் மாணவர்கள், மத்தியதரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் இந்த வேலைகளைப் பெறுகிறார்கள். அவர்களது குடும்பங்கள் வேகமாக முன்னேறவும் செய்கின்றன.

இந்த வாய்ப்பு இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இவர்களுக்கு குறைந்த சம்பளத்திலேயே வேலைகள் கிடைக்கின்றன. உள்ளார்ந்த திறன்கள் எவை என்பதை அறிந்துகொள்ளாமல், தவறாக, ஆங்கிலப் படிப்பு மட்டுமே போதும் அல்லது எஞ்சினியரிங் படிப்பு மட்டுமே போதும் என்று நினைத்துக்கொண்டு நிறையப் பணம் செலவுசெய்து தரமற்ற கல்வி நிலையங்களில் சேர்ந்து, எதையும் கற்றுக்கொள்ளாமல் வேலை தேட வந்து, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

தீர்வுதான் என்ன? அடிப்படையில் நம் கல்வி முறையைப் பெரிதும் மாற்றவேண்டும். என் கணிப்பில் பாடத்திட்டம் என்பது முக்கியமே அல்ல. சிலபஸ் என்ற பெயரில் ஏகப்பட்ட விஷயங்களைப் புகுத்தி, அதைச் சரியாகச் சொல்லித்தரத் தெரியாத ஆசிரியர்கள் கையில் மாட்டிக்கொண்டு பெரும்பாலான மாணவர்கள் நாசமாகப் போகிறார்கள். கல்விமீதே அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. என்னைப் பொருத்தமட்டில், 90% மாணவர்களின் தேவை, படிக்க, புரிந்துகொள்ள, எழுத, பேசக் கற்றுத்தருவதே. ஆங்கிலமும் தாய்மொழியும் அவசியம். முடியாவிட்டால் தாய் மொழியிலாவது மேலே சொன்ன நான்கையும் நன்றாகச் செய்யத் தெரியவேண்டும். அவை தாண்டி, ஏதேனும் ஒரு துறையை அவரவர் விருப்பம் சார்ந்து படித்துக்கொள்ளலாம். கணக்கு, அறிவியல், கணினி புரோகிராமிங், வரலாறு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதற்குமுன் தமிழிலும் ஆங்கிலத்திலும் சரியான திறன் வருமாறு செய்தல் வேண்டும். இதைப்பற்றி இங்கே மேலும் எழுதுவது இந்தக் கட்டுரைத் தொடரை வேறு திசையில் இழுத்துச் செல்லும் என்பதால் இத்தோடு விட்டுவிடுகிறேன்.

***

வேலைகளுக்கு வெளியே, சுயதொழில் புரிவதில் வேறொரு பிரச்னை உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோருக்கு வங்கிக் கணக்கே கிடையாது. வங்கிகளைப் பொருத்தமட்டில் அவர்கள் அனைவரும் தீண்டத்தகாதவர்கள். வளரும் நாட்டில் எண்ணற்ற சிறுதொழில் வாய்ப்புகள் தென்படுகின்றன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஒவ்வொருவருக்கும் இரண்டு விஷயங்கள் தேவை. முதலாவது: ஓரளவுக்கான படிப்பு அல்லது சுய சிந்தனை. இரண்டாவது: கொஞ்சம் சொந்த மூலதனம், மீதம் கடன்.

நீங்கள் தெருவோரத்தில் ஒரு பெட்டிக்கடை வைக்க விரும்பலாம். அல்லது சில கோழிகளை வாங்கி முட்டை போடச் செய்து அவற்றை விற்க விரும்பலாம். இறால் வளர்க்க விரும்பலாம். தையல் தைத்துச் சம்பாதிக்க விரும்பலாம். கையேந்தி பவன் திறந்து சுடச்சுட சோறு விற்க விரும்பலாம். பரோட்டாக் கடை திறக்கலாம். சாண்ட்விச் விற்கலாம். பூ விற்கலாம். மொபைல் சிம் கார்டு விற்கும் பிசினஸ் செய்யலாம். ஒரு கார் வாங்கி, கால் டாக்ஸி நெட்வொர்க்கில் இணைந்துகொள்ளலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை மேலே சொன்ன இரண்டும். அடிப்படை வரவு செலவுக் கணக்கு தெரிந்திருக்கவேண்டும். லாபம் எது, நஷ்டம் எது என்று தெரிந்திருக்கவேண்டும். பணத்தை இழந்துவிடக்கூடாது. மற்றொரு பக்கம், மூலதனம் தேவை.

இந்த மூலதனம் எங்கிருந்து வரும்? தேவையான மூலதனம் அனைத்தையும் சொந்தமாகவே சேர்த்துவிட முடியுமா? பெரும்பாலானோருக்கு இது முடியாது. சொந்தக்காரர்களிடம் பெறமுடியுமா? அவர்களுக்கே சோற்றுக்கு வழி இல்லை. அப்போது ஓர் ஏழைக்கு வழிதான் என்ன?

அதுதான் தெருவுக்குத் தெரு வங்கிகள் உள்ளனவே?

ஆனால் இந்த வங்கிகளுக்குத் தினம் செல்வோர் யார் என்று பாருங்கள். நகரின் மக்கள் தொகையில் கீழே இருக்கும் 80% பேர் வங்கிக்குச் செல்லவே மாட்டார்கள். அவர்கள் சீட்டு கட்டிப் பணம் சேர்த்து, ஏலம் எடுப்பார்கள். பயங்கர வட்டிக்குக் கடன் வாங்கி அதில் மூழ்குவார்கள். மொத்தத்தில் அவர்களது தேவைக்கு ஏற்ப பணம் அவர்களுக்குக் கிடைக்காது. மறுபக்கம், பிசினஸ் செய்தித்தாள்களில் குறிப்பிட்ட நிறுவனம் கடன் பத்திரங்களை வெளியிட்டு 15,000 கோடி ரூபாய் கடன் பணம் திரட்டியது என்று செய்தி வரும். இங்கே இவர்களுக்கோ 15,000 ரூபாயைப் புரட்டுவது கடினம்.

இவர்கள் வளம் பெற வழியே இல்லையா?

(தொடரும்)

1 comment:

  1. http://www.kiva.org/ is a popular site to micro finance in third world countries.

    ReplyDelete