Thursday, March 24, 2011

உணவு மானியம்

உணவுப் பொருள்கள் மானிய விலையில் கிடைத்துவருவது உங்களுக்குத் தெரியும். ரேஷன் கடைகள் எனப்படும் Public Distribution System (PDS) கடைகள் மூலமாகக் கிடக்கின்றன இந்தப் பொருள்கள். இவற்றுக்கு மத்திய அரசு அடிப்படை மானியத்தைத் தருகின்றன. மாநில அரசுகள் இந்த மத்திய மானியத்துக்குமேல் அதிகப்படி மானியத்தையும் தரலாம்.

மானியம் என்பதை அதிகம் விளக்கிச் சொல்லவேண்டியதில்லை. அரசு கொள்முதல் செய்யும் உணவுப்பொருள்களுக்கு ஓர் அடக்கவிலை உள்ளது. அந்த விலையையும்விடக் குறைவான விலையில் மக்களுக்கு உணவுப்பொருள்கள் கிடைக்குமாறு அரசு செய்கிறது. இந்த வித்தியாசம்தான் மானியம்.

அடக்கவிலை - விற்பனை விலை = மானியம்.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசிக்கு என்ன வசூலிக்கப்படுகிறதோ, அதைவிட அதிகமாகத்தான் கேரள ரேஷன் கடைகளில் வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவில் கிடைக்கும் மானிய விலை உணவுப்பொருள்கள், தேவைப்படும் அனைவரையும் சென்றடைவதில்லை, அதில் பல ஓட்டைகள் உள்ளன என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இன்று மிண்ட் பத்திரிகையில் இது தொடர்பாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் இப்போதைக்கு மத்திய அரசிடம் இருக்கும் மூன்று திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, ‘National Food Security Act’ சட்ட முன்வரைவு பற்றிய ஆலோசனைகள் தொடர்பானது.

1. தேசிய ஆலோசனைக் குழு - சோனியா காந்தியைத் தலைவராகக் கொண்டு செயல்படும் குழு. இது கொடுத்திருக்கும் திட்டம்:
  • 90% கிராமப்புற மக்கள், 50% நகர்ப்புற மக்கள் - ஆக மொத்தம் இந்திய மக்கள் தொகையில் 75%
  • இந்தக் குழுவிலிருந்து 46% கிராமப்புறத்தவர், 28% நகர்ப்புறத்தவருக்கு ஒரு குடும்பத்துக்கு மாதத்துக்கு 35 கிலோ உணவு தானியங்கள் மானிய விலையில் தரப்படும். அதாவது கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவை கிலோ 1 ரூபாய்க்கு. கோதுமை கிலோ 2 ரூபாய். அரிசி கிலோ 3 ரூபாய்.
  • 75%-ல் விடுபட்ட பிறருக்கு, உணவுப்பொருளின் அடக்கவிலையில் 50%-ல். அதாவது அரிசியை விவசாயிடமிருந்து கொள்முதல் செய்யும் குறைந்தபட்சக் கொள்முதல் விலையின்படிக் கணக்கிட்டால் கிலோவுக்கு அடக்கவிலை ரூ. 10 என்று வந்தால், இந்த மக்களுக்கு அரிசி கிலோவுக்கு ரூ. 5 என்று தரப்படும். ரூ. 12 என்று ஆனால், அரிசி விலை ரூ. 6-க்குத் தரப்படும். (இங்கு கொள்முதல் விலை ஏற ஏற, விற்பனை விலையும் ஏறும். ஆனாலும் மேலே உள்ள குழுவுக்கு விற்பனை விலை ஏறவே ஏறாது.
  • மிச்சமுள்ள 25%-னர், சந்தை விலைக்கு தனியார் கடைகளில் வாங்கிக்கொள்ளவேண்டும்.
2. ரங்கராஜன் குழு
  • சட்டப்படி, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும்தான் மானியம். (சுமார் 25% பேர்?) பிறருக்கு சட்டப்படி மானியம் தருவதாக வைத்துக்கொள்ளக்கூடாது. வேண்டுமென்றால் ஆண்டாண்டுக்கு பட்ஜெட்டில் இடமிருந்தால் அரசாணையின்படி மானியம் தரலாம்.
3. அபிஜித் சென், ஹிமான்ஷு
  • குறிப்பிட்ட ஒரு குழுவைத்தவிர பிறருக்கு உணவு தானியத்தின் விலையை, குறைந்தபட்சக் கொள்முதல் விலையுடன் இணைக்கவேண்டும்.
  • அநாதைகள், கைவிடப்பட்டோர், உடல் ஊனமுற்றோர் போன்றோருக்கு மட்டும் தேசிய ஆலோசனைக் குழு சொல்லியுள்ள மானியம்.
  • மொத்த மக்கள்தொகையில் 25%-பேர் தவிர்த்து அனைவருக்கும் குறைந்தபட்சக் கொள்முதல் விலையில் 75% விலைக்கு தலைக்கு, மாதத்துக்கு, 7 கிலோ உணவு தானியம். (அதாவது 25% மானியம்.)
  • வேண்டுமென்றால், அடிமட்டத்தில் இருக்கும் குழுவினருக்கு, முதல் 3.5 கிலோவில் தேசிய ஆலோசனைக் குழு குறிப்பிட்டுள்ள மானியம்.
***

அடிப்படையில் இவை எவையுமே சரியான செயல்களாக எனக்குத் தோன்றவில்லை. எந்த மானிய முறையுமே சிக்கல் இல்லாததாக, நடைமுறைப்படுத்த எளிதானதாக இருக்கவேண்டும். மேலே குறிப்பிட்டவற்றில் இரண்டு மாபெரும் குறைகள் உள்ளன.

1. குறைந்தபட்சக் கொள்முதல் விலை. நம் நாட்டில் சொந்த அரசாலேயே விவசாயிகள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களது விலைபொருளுக்கு சந்தை விலை என்று எதுவும் கிடையாது. அரசு நிர்ணயிக்கும் விலைதான். இதிலிருந்து நாம் முற்றிலும் வெளியேறவேண்டும். விவசாயிகளுக்கு அரசு வம்படியாகக் குறைந்த கூலி தருவதால், உண்மையான மானியம் என்ன என்பது வெளியே தெரிவதில்லை. இந்த விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள் மீண்டும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வந்து, மானிய உணவுப்பொருளை வாங்கிச் சாப்பிட்டு, வறுமையிலேயே உழலுகிறார்கள்.

அரசு குறைந்தபட்சக் கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில் தவறில்லை. அனால் தான் கொள்முதலைச் செய்யும்போது வேறு எந்தத் தனியாரும் கொள்முதல் செய்யக்கூடாது என்று முடிவெடுப்பதில்தான் சிக்கல் உள்ளது. பல சிறு விவசாயிகளால் பல மாதங்களுக்குக் காத்திருக்க முடியாது. எனவே கிடைத்த விலைக்கு அரசுக்கே விற்றுவிடுகின்றனர். அரசும் உடனடியாகப் பணத்தைத் தருவதில்லை. பணம் கைக்குக் கிடைக்க நாளாகிறது. ஆனால் அரசு கொள்முதல் செய்யும் அதேநேரம் தனியாரையும் சந்தையில் இறக்கினால் என்ன ஆகும்? தனியார் குறைந்த கொள்முதல் விலையை முன்வைத்தால் விவசாயி தனியாரிடம் செல்லவேண்டியதில்லை. தனியார் அதிகக் கொள்முதல் விலையைக் காட்டினால், அதுவும் கைக்குமேல் பணம் என்றால் விவசாயி தனியாரிடம் விற்றுவிடலாம். விவசாயி ஒவ்வொரு முறையும் அரசிடம் சென்று கொள்முதல் விலையை ஏற்றிக்கொடுங்கள் ஐயா என்று பிச்சை எடுக்கவேண்டாம். தனியார் நிறுவனங்கள் சந்தை நிலையைப் பொருத்தும் போட்டியைப் பொருத்தும், கொள்முதல் விலையை ஏற்றும். அதற்கு இணையாக அரசும் கொள்முதல் விலையை ஏற்றித்தான் ஆகவேண்டும். அதேபோல தனியார் நிறுவனங்கள் கொள்முதல் விலையை அதலபாதாளத்துக்கு இறக்கவும் முடியாது. அரசின் குறைந்தபட்சக் கொள்முதல் விலை, அதற்குக்கீழ் விலைகள் போகாமல் பார்த்துக்கொள்ளும்.

இப்போது மத்திய அரசு கிட்டத்தட்ட கிழக்கிந்தியக் கம்பெனி போலத்தான் மக்களை ஏய்த்துப் பிழைப்பு நடத்துகிறது. கிழக்கிந்தியக் கம்பெனி, நெசவுத்தொழில் புரிவோர் அனைவரும் தம்மிடம்தான் துணிகளை விற்கவேண்டும் என்று வலியுறுத்தியது. அதற்கு கம்பெனி கொடுக்கும் பணத்தைத்தான் அவர்கள் வாங்கிகொள்ளவேண்டும். விவாதமே கிடையாது. மறுப்போரின் விரல்கள் வெட்டப்படும். (கையைக் காலை வெட்டுவதை மட்டும்தான் நம் அரசுகள் செய்வதில்லை.)

முதலில் நாம் விடுவிக்கவேண்டியது விவசாயிகளை.

2. இப்போது மானியத்துக்கு வருவோம்.

ஒரு நாட்டில் 75% பேர் மானியத்தால் உணவை வாங்கி உண்கிறார்கள் என்றால் அதைவிட அசிங்கம் வேறெதுவும் இல்லை. இந்தியாவில் 25% ஆசாமிகள் தவிர மீது எல்லாரும் பிச்சைக்காரர்கள், மாதாமாதம் உணவு தானியம் வாங்க குடும்பத்துக்கு 560 ரூபாய்கூடச் செலவழிக்கமுடியாமல் வாடுபவர்கள் என்றால், பிரச்னை வேறு எங்கோ உள்ளது! (குடும்பத்துக்கு 4 பேர். ஆளுக்கு மாதம் 7 கிலோ. கிலோவுக்கு சந்தை விலை ரூ. 20. மொத்தம் = 4*7*20 = ரூ. 560.)

முதலில், மானியம் என்பது கடைசி 25% பேருக்கு மட்டும்தான் இருக்கவேண்டும். அதுவும், கன்னாபின்னாவென்று, இவனுக்கு 30%, அவனுக்கு 17.5%, இவனுக்கு பிங்க் வண்ண ரேஷன் கார்டு, அவனுக்கு பச்சை வண்ண ரேஷன் கார்டு என்றெல்லாம் இருக்கவேண்டிய அவசியமே இல்லை.

இன்னும் அதிரடியாக யோசிப்பதென்றால் உணவு கார்பரேஷன், குறைந்தபட்சக் கொள்முதல் விலை ஆகிய அனைத்தையுமே ஒழித்துவிடலாம். உணவு கார்பரேஷன் என்றில்லாமல், Stretegic Food Storage என்ற அமைப்பு, Stretegic Fuel Storage என்ற அமைப்பு ஆகியவை வேண்டிய அளவு பெட்ரோலியம், வேண்டிய அளவு உணவு தானியம் ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். தனியார் நிறுவனங்கள் தனியார் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வார்கள். இங்கு குறைந்தபட்சக் கொள்முதல் விலை என்ற ஒன்றை நிர்ணயம் செய்து, கொள்முதல் அதற்குக்கீழ் போகக்கூடாது என்று வலியுறுத்தவேண்டும். எப்படி minimum wage என்ற கருத்து இருக்கிறதோ, அதைப்போல. இந்த உணவுக் கிடங்கும் எரிபொருள் கிடங்கும், சந்தை விலை விழுகிற நேரத்தில் வாங்கிச் சேகரிக்கவேண்டும். விலை ஏறுகிற நேரத்தில் விற்று சந்தை விலையைக் குறைக்கவேண்டும். இது ஒன்றும் புதிதல்ல. அர்த்தசாஸ்திரத்திலேயே சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம்தான்.

25% அல்லது அதற்கும் குறைவான ஏழைகளுக்கு நேரடி மானியம் என்ற முறையில் மாதாமாதம் உதவித்தொகையை அளித்துவிடலாம். உணவுக்கு அவர்களே பொதுச்சந்தையில் செலவு செய்துகொள்வார்கள்.

இதன்மூலம் பெருகும் அரசுச் செலவுகளைக் குறைக்கலாம். ஊழலை நிச்சயமாகக் குறைக்கலாம். பணம் நேரடியாக, தேவைப்படுவோருக்குப் போய்ச் சேர்ந்துவிடும். விவசாயிகளுக்கு நிச்சயமாக சரியான கூலி கிடைக்கும். அவர்கள் விவசாயக் கூலிகளுக்கு அதிகச் சமபளம் தருவர். இதனாலேயே பலர் வறுமைக்கோட்டுக்கு மேலே வருவர்.

மாறாக நமது முறையில், மாபெரும் குழுவான விவசாயிகள், விவசாயக் கூலிகளை அழுத்தி தரையில் வைத்துள்ளோம். பின் அவர்களுக்கு இலவசங்கள், மானியங்கள் ஆகியவற்றைத் தருகிறோம். இதனால் அரசுக்கு நிதிப் பற்றாக்குறை வருகிறது என்று புலம்புகிறோம். இவற்றை எல்லாம் முற்றிலுமாகத் தவிர்க்கலாம்.

8 comments:

  1. I had experience of 15 + years in Govt Sector as a Senior Level Officer there that too with Lot of Subsidy programs implementation experience.

    In almost all the schemes the beneficiaries will be prompted by political party was in power then. Large Sector of the beneficiaries would be well off farmers who would not require support of subsidy in turn the poor farmers for whom the scheme was meant for would be deprived of their eligibility

    நில உச்சவரம்பு சட்டம் காரணமாக தனது பல ஏக்கர் நிலங்களை பல ஏழைகளை பினாமி ஆக்கி அவர்கள் பெயரில் நிலம் வைத்துக் கொண்டு அந்த ஏழைகள் பெறுவதாக மான்யத்தினை பெற்றுக் கொண்ட பணக்காரர்களே அதிகம்

    ReplyDelete
  2. நீங்க சொல்றது முழுக்கச் சரியே. ஆனால் அரசியல்வாதிகள் status quo- வை மாற்ற மாட்டார்கள். இரண்டாம் உலகப்போர் கால ரேஷன் ஏற்பாடு அன்றைய பஞ்ச காலத்துக்கானது. அதையே இன்று தன்னிறைவு அடைந்த பின்பும் பின்பற்றுகிறார்கள்...

    சரவணன்

    ReplyDelete
  3. //25% அல்லது அதற்கும் குறைவான ஏழைகளுக்கு நேரடி மானியம் என்ற முறையில் மாதாமாதம் உதவித்தொகையை அளித்துவிடலாம். உணவுக்கு அவர்களே பொதுச்சந்தையில் செலவு செய்துகொள்வார்கள்.

    இதன்மூலம் பெருகும் அரசுச் செலவுகளைக் குறைக்கலாம். ஊழலை நிச்சயமாகக் குறைக்கலாம். பணம் நேரடியாக, தேவைப்படுவோருக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.//

    பரிசோதிக்கப் படாத இந்தப் பட்டுவாடா முறை மீது எப்படி எல்லாருக்கும் இத்தனை நம்பிக்கை?

    பல இடங்களில் சீராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் PDS முறையை 'வேலைக்கே ஆகாது' என்கிற ரீதியில் write-off செய்வதாகத் தோன்றுகிறது.

    இதில் முக்கியமான பிரச்சனை sidestep பண்ணப்பார்ப்பதாகவே தோன்றுகிறது: காசாக கிடைப்பதை உணவுக்குத் தான் செலவிடப் படுகிறது என்று எப்படி உறுதி செய்வது.

    இப்போது மட்டும் PDSஇல் வாங்கும் பண்டங்களை விற்று காசாக்கி கந்துவட்டி கட்ட முடியாதா என்று கேட்கலாம். ஆனால் அதற்கான முயற்சி ஏற்படுத்தும் தடையை விலக்குவதாக இத்திட்டம் அமையும்.

    (கந்துவட்டி என்று சொல்லக்காரணம் - 'குடி' என்று சொன்னால் ஒரு judgmental aspect வந்து விவாதம் மடைமாறும் என்பதால்)

    இந்த social cost கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்று நினைக்கிறேன். இதை கணக்கில் எடுத்துக்கொண்டால்தான் (எப்படி?) PDSஐத் தொடரலாமா கூடாதா என்று முடிவெடுக்க முடியும்.


    சிங்கப்பூரில் மருத்துவம், கல்வி, உணவு ஆகியவைகளுக்கு debit cardஇல் (இதற்கு தமிழில் என்ன?) direct deposit செய்யப்படுவதாகவும். தேர்ந்தெடுத்த ஸ்தாபனங்கள் சிலவற்றிலே மட்டுமே அதை உபயோகிக்க முடியும் என்று கேள்விப்பட்டேன். மானியப்பணத்தை 'மாற்றி' செலவழிக்கவே இயலாது. அப்படி எல்லாம் மிகத்தெளிவாக mechanism தயார் செய்துவிட்டு தான் PDSஐ மாற்றுவதைப் பற்றி யோசிக்கவேண்டும்.

    ழான் ட்ரேஸ் (அவர் பெயரை எப்படி உச்சரிப்பது? சிலர் த்ரா(ன்) என்கிறார்கள்) சட்டீஸ்கர்டில் (கூட) PDS செயல்பட்டுக்கொண்டிருப்பதைப் பற்றி ஹிந்துவில் எழுதிய எழுதிய கட்டுரை

    ReplyDelete
  4. நான் முன்னமே சொன்னதுதான். நேரடி மானியம் நம்ம ஊரில் வேலைக்காவாது. வளர்ந்த நாடுகளில் நேரடி மானியத்தை மக்களுக்குச் சென்று சேர்க்கும் வழிமுறைகள் , மற்றும் பயனாளிகள் அடையாளப்படுத்தல் ஆகியவை மிக்க ஒழுங்குமுறைக்குட்பட்டது.
    நம்ம ஊரில் இன்னும் சமூக அடையாளப்படுத்துதல் ஒரு கட்டுக்குள் வரவில்லை. இத்தன % வறுமைக்கோட்டுக்குக் கீழே என்பதே ஒரு குன்சா தான் சொல்ல முடிகிறது. அதனால் PDS ஐ தவிர்ப்பது உசிதமல்ல. விவசாய விளைபொருட்களை சந்தைப் படுத்தும் பிரச்சனை PDS storage ஐ முறைப்படுத்தும் போது தானே கட்டுக்குள் வந்துவிடும். இப்ப அரசாங்க கொள்முதல் ஒரு வரைமுறையின்றி செய்யப்படுகிறது. இவ்வளவு % மக்களுக்கு subsidised food தேவை , அதற்குமேல் ஒரு 10% அதிகம் ஒரு reserve strategy க்கு என்று கணக்கு போட்டு அது மட்டும் கொள்முதல் செய்யும்போது மொத்த உற்பத்தியில் இது 25% கூட இருக்காது. அப்ப பாக்கி சந்தைக்குத்தானே வரனும்? Btw, India does have strategic fuel reserves. This was initiated during the BJP regime and we currently have about 45 days of use as reserve. The US has one year use as reserve. Thats the difference.

    ReplyDelete
  5. ரேசன் கடை வைத்திருப்பது பொது மக்களுக்கு அல்ல. அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் வியாபாரிகளும் சம்பாதிப்பதற்காகத்தான்.

    ReplyDelete
  6. Dear Badri,

    It is sad that many knowledgeable persons like you are wasting your time in blog and media by addressing the "what" and "why" sides of the issues facing our nation today (like "what should be done" and "why it should be done")whereas the real problem is in "HOW" side!(How it should be done)

    We are caught in a very big Constitutional crisis with the state and central Govt colluding and looting the exchequer,with a dummy PM and President simply watching.So the first and prime most duty for us is to bring an honest & strong Govt.Rest are only latter.

    Hope you would agree with me

    Regards,

    ReplyDelete
  7. http://www.sandeepweb.com/2011/03/27/delusions-of-intellect/

    ReplyDelete
  8. The biggest enemy for implementation of such measures will be the congress and commies and all socialist nut cases. If policy makers take this idea and try to implement it in a test case also they will shout from the roof tops...

    Get rid of commies and socialists...india will be a better place to live.

    ReplyDelete