Tuesday, May 17, 2011

குறுங்கடன் - 4

குறுங்கடன் பற்றி ஆரம்பித்த தொடர் மார்ச் மாதத்தில் அந்தரத்தில் நின்றுபோனது. அதன் தொடர்ச்சி...

சுய உதவிக் குழுக்கள் இந்தியாவில் குறுங்கடனை முன்னெடுத்துச் சென்ற அதே நேரம், 1990-களில் லாப நோக்குள்ள குறுங்கடன் கம்பெனிகள் இந்தியாவில் தோன்ற ஆரம்பித்தன என்று கடைசிப் பாகத்தில் எழுதியிருந்தேன்.

இந்தச் சோதனை பெரிய அளவில் ஆரம்பித்தது ஆந்திரப் பிரதேசத்தில். யார் முதலாவது கம்பெனி, யார் இரண்டாவது என்பது முக்கியமில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் குறுங்கடன் என்றாலே எல்லொரும் ஆந்திராவிலிருந்துதான் ஆரம்பித்தார்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாடு, கர்நாடகம் என்று ஆரம்பித்து, மஹாராஷ்டிரம், குஜராத் என்று விரிந்தது. ஆனாலும் ஆந்திராவில்தான் பெருமளவு பரவல் இருந்தது.

லாப நோக்குள்ள குறுங்கடன் நிறுவனங்களைப் பொருத்தமட்டில் அவர்கள் நேரடியாகத் தாக்கியது கந்து வட்டி லேவாதேவிக் காரர்களை. பொதுவாக தெருவோரத்தில் இருக்கும் வட்டிக்கடை முதலாளிகள் மாதத்துக்கு 3 வட்டி (36%) என்று ஆரம்பித்து 5 வட்டி (60%) வரை போவார்கள். சில ஸ்பெஷல் தருணங்களில் 10 வட்டியெல்லாம் உண்டு. முதலைவிட வட்டி அதிகமாகி, அடகு வைத்த பொருள் அம்போவாவதும் நடக்கும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இந்த வட்டிக்கடைகளை விட்டால் வேறு வழியே இல்லை. வீட்டில் திடீர் மருத்துவச் செலவு, கல்யாணம், ஊருக்குப் போகவேண்டும் என்றெல்லாம் வந்தால் வேறு எதுதான் போக்கிடம்?

லாப நோக்குள்ள குறுங்கடன் நிறுவனங்கள் 24% (2 வட்டி) என்று ஆரம்பித்து 36% என்றெல்லாம் வசூலிக்க ஆரம்பித்தனர். அடிப்படையில் லாப நோக்குள்ள குறுங்கடன் நிறுவனம் என்ன செய்கிறது? அவர்கள் முதலில் கொஞ்சம் மூலதனத்தை ஈக்விட்டி என்ற பெயரில் கொண்டுவருகிறார்கள். அந்த ஈக்விட்டியைக் கொண்டு இடத்தை வாடகைக்கு எடுத்து, ஆட்களை வேலைக்கு எடுத்து, ஒரு கடன் விநியோக நெட்வொர்க்கை உருவாக்குகிறார்கள். தம்மிடம் இருக்கும் ஈக்விட்டியைப் போல ஐந்து மடங்குவரை அவர்கள் வங்கிகளிடமிருந்து பணத்தைக் கடனாகப் பெறுகிறார்கள். இந்தப் பணத்தை குறுங்கடனாக ஏழைகளுக்குத் தருகிறார்கள். வங்கி என்ன வட்டிக்குக் கடன் தருகிறதோ அதற்கு மேல் இவர்கள் மக்களிடமிருந்து வசூலித்தால்தான் இவர்கள் கையில் பணம் மிஞ்சும். லாபமும் கிடைக்கும்.

ஆந்திராவில்தான் முதலில் சிக்கல் ஆரம்பித்தது. 2006-வாக்கில், இரண்டு குறுங்கடன் கம்பெனிகள் தம்மிடம் கடன் வாங்கியவர்களை மிரட்டிப் பணத்தைத் திருப்பித் தரச்சொல்லி நெருக்கடி தருவதாகவும் இதன் விளைவாகச் சில தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என்றும் செய்திகள் வெளியாயின. உடனே ஆந்திர அரசு அந்த இரண்டு குறுங்கடன் கம்பெனிகளையும் தடை செய்ததுடன், பிற குறுங்கடன் கம்பெனிகளையும் அடக்க முற்பட்டது. குறுங்கடன் கம்பெனிகள் மிக அதிக வட்டி கேட்பதாக ஆந்திர அரசு குற்றம் சாட்டியது. ஆனால் உண்மையில் கிரெடிட் கார்ட் வட்டி அல்லது தெருவோர கந்து வட்டியுடன் ஒப்பிட்டால் குறுங்கட்ன வட்டி குறைவுதான்.

ஆனால் குறுங்கடன் நிறுவனங்கள் தவறே செய்யவில்லை என்று சொல்லமுடியாது. மூன்று தவறுகளைச் செய்தனர். ஒன்று, அமெரிக்காவில் நடந்த சப் பிரைம் பிரச்னைபோல. கடன் வாங்கினால் திருப்பித் தரமுடியாதவர்களையும் நெருங்கிச் சென்று கடன் வாங்கிகொள்ள வற்புறுத்தினர். திருப்பிக் கட்ட முடியாவிட்டால் மற்றொரு கடனை வாங்கி முதல் கடனைக் கட்டுமாறு ஆலோசனை கொடுத்தனர். இதெல்லாம் கடைமட்ட ஊழியர்கள் செய்த வேலை. அவர்கள் தம் டார்கெட்டை மட்டுமே மனத்தில் வைத்து இதில் ஈடுபட்டனர். இரண்டாவது, வட்டி என்று வசூல் செய்வது ஒருபக்கம் இருக்க, பிற செலவுகள் என்ற பெயரில் மேலும் கொஞ்சம் வசூலித்தது. (டாகுமெண்ட் சார்ஜ் என்ற ஒன்று இருக்கும். காப்பீட்டுத் தொகை என்று ஒன்று இருக்கும். இதைப் பற்றி எளிய மக்களுக்கு ஒன்றும் தெரியாது.) மூன்றாவது, கடன் தொகை திரும்ப வரவில்லை என்றால் முரட்டுத்தனத்தைப் பிரயோகிப்பது. அசிங்கமாகப் பேசுவது. மிரட்டுவது. இவற்றின் விளைவாகவே தற்கொலைகள் நிகழ்ந்தன.

ஆனால் இந்தக் குறைபாடுகளுக்காக இந்த நிறுவனங்களைத் தடை செய்வது நியாயமற்றது. கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கி, இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ளவே கட்டுப்பாட்டு அமைப்புகள் முயற்சி செய்திருக்கவேண்டும்.

ஆனால் இந்த நிறுவனங்களை யார்தான் கட்டுப்படுத்துகிறார்கள்?

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3

(தொடரும்)

1 comment:

  1. Sir!Nice one!Informative for dummies and experts alike!!

    A query related to self-help groups:
    Do they get funding from govt alone or banks also.Can private people also fund them for returns?How did political parties used these groups for vote-bribing?

    ReplyDelete